Skip to main content

அரசியலில் எல்லாருக்கும் தேவை எம்.ஜி.ஆர்.! - பாக்யராஜ், விஜயகாந்த் வரிசையில் கமல்ஹாசன்!

Published on 24/12/2020 | Edited on 24/12/2020

 

Everyone in politics needs MGR! - Bhagyaraj, Kamal Haasan in Vijaykanth order!

 

அறிஞர் அண்ணாவுக்கும், கலைஞருக்கும் அரசியலில் பக்கபலமாக இருந்தவர் எம்.ஜி.ஆர். அமரராகி 33 வருடங்கள் ஆனபிறகும், தமிழக மக்களின் மனதில் குடியிருந்து வருகிறார். அவர் உருவாக்கிய கட்சியான அதிமுக, போஸ்டரிலோ, பேனரிலோ, நாளிதழ் விளம்பரத்திலோ, சில நேரங்களில் ‘ஸ்டாம்ப் சைஸ்’ இடம்கூட அவருக்குத் தருவதில்லை. அதே நேரத்தில்,  எம்.ஜி.ஆர். என்ற அந்த மூன்றெழுத்து மந்திரத்தின் மகிமை அறிந்தவர்கள், அவரைப் பொதுவாக்கி, தனதாக்கிக்கொள்வது தாராளமாக நடந்துவருகிறது. அந்த வகையில், கே.பாக்யராஜ், விஜயகாந்த் போன்ற திரை நாயகர்கள் வரிசையில், லேட்டஸ்ட் வரவு கமல்ஹாசன்.

 

தனது ஆதரவாளரான கே.பாக்யராஜை, திரையுலக வாரிசு என்றே அறிவித்தார் எம்.ஜி.ஆர். இந்த அங்கீகாரம் போதாதா? பின்னாளில் ‘எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில், புதிதாகக் கட்சியே தொடங்கினார் பாக்யராஜ். 


எம்.ஜி.ஆர். அளவுக்கு இல்லையென்றாலும், ‘வள்ளல் இமேஜ்’ விஜயகாந்துக்கும் இருந்தது. ‘இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே’ என்பதை கொள்கை முழக்கமாக்கி, 2005-ல் ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ என்ற பெயரில். புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கினார். அவருக்கும் எம்.ஜி.ஆர். லேபில் தேவைப்பட, ‘கருப்பு எம்.ஜி.ஆர்.’ என்று அழைக்கலானார்கள். 

 

Everyone in politics needs MGR! - Bhagyaraj, Kamal Haasan in Vijaykanth order!

 

பாக்யராஜ், விஜயகாந்த் போன்ற நடிகர்களுக்கெல்லாம் சீனியராக, இந்தியத் திரையுலகில் தனிமுத்திரை பதித்து வருபவர் கமல்ஹாசன். ஆளவந்தானாகட்டும்.. அவ்வை சண்முகியாகட்டும்.. தசாவாதாரம் ஆகட்டும்.. கேரக்டருக்காக, தன்னை வருத்திக்கொள்வதோடு, ரொம்பவே மெனக்கெடுபவர் கமல். தன்னை ‘வித்தியாசமான’ தோற்றத்தில் ரசிகர்கள் பார்க்கவேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி வருபவர். அவரும், 2018-ல் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கினார்.  

 

கட்சி ஆரம்பித்த புதிதில், கமலுக்கு ஏனோ ‘எம்.ஜி.ஆர். பிராண்ட்’ தேவைப்பட்டதில்லை. அதற்குக் காரணம்கூட உண்டு. கடவுள் மீதான பக்தியை எம்.ஜி.ஆர். என்றும் மறைத்ததில்லை. கர்நாடகா மாநிலம் – கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்குப் பலமுறை சென்றிருக்கிறார். ‘மூகாம்பிகை வடிவில் என் தாயைப் பார்க்கிறேன்’ என்று சொன்ன எம்.ஜி.ஆர்., அக்கோவிலுக்கு முக்கால் கிலோ எடையுள்ள தங்கவாள் அளித்துள்ளார். கடவுளுக்கும் கமல்ஹாசனுக்கும் வெகுதூரமாயிற்றே! பகிரங்கமாக, தன்னை  ‘பகுத்தறிவுவாதி’ எனச் சொல்லிவரும் கமல்ஹாசன், கடவுள் விஷயத்தில், எம்.ஜி.ஆருடன் முரண்படுகிறார். அதனாலேயே, பொதுவாழ்க்கையில் எம்.ஜி.ஆரை தனது வாத்தியாராக, கமல் காட்டிக்கொள்வதில்லை.


தேர்தலை எதிர்கொள்ளும் அரசியல் கட்சியின் தலைவராகி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பிரச்சாரம் செய்துவரும் அனுபவத்தாலோ என்னவோ, கமல்ஹாசனுக்கும் எம்.ஜி.ஆர். முகமூடி அவசரமாகத் தேவைப்பட்டுள்ளது. 

 

Everyone in politics needs MGR! - Bhagyaraj, Kamal Haasan in Vijaykanth order!

 

தனது ட்விட்டர் பக்கத்தில், ‘புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது, திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு, அதிமுக திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம். எம்.ஜி.ஆர். முகத்தைக்கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும்.’ என, எம்.ஜி.ஆர். தனக்கு முத்தமிடும் வீடியோவை வெளியிட்டு, இன்றைய அதிமுக தலைவர்களுக்கு எதிராக அறைகூவலே விடுத்திருக்கிறார்.


இன்றைய அதிமுக தலைவர்களை ஒரு பிடிபிடிப்பதற்கும், எம்.ஜி.ஆரின் சினிமா பாடலையே பயன்படுத்தியிருக்கிறார் கமல்ஹாசன் -  

சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் 
ஊரார் கால் பிடிப்பார்; 
ஒரு மானமில்லை; அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால் பிடிப்பார்
எதிர்காலம் வரும் என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்!
 

cnc


இன்று, எம்.ஜி.ஆர். நினைவு தினம் என்பதால், வாட்ஸ்-ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற வலைத்தளங்களில், எம்.ஜி.ஆர். ரசிகர்களும், கமல்ஹாசன் ரசிகர்களும், போட்டி போட்டுக்கொண்டு, அவருக்குப் புகழஞ்சலி செலுத்துகின்றனர். 


மிகவும் நேர்மையான கமல் ரசிகர்களோ ‘அரசியலில் தனித்தன்மையுடன் பயணிக்கலாமே!’ என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.