Skip to main content

"கைது செய்யப்பட்டாலும் மோடிக்கு கருப்புக் கொடி உறுதி..." - கருணாஸ் (EXCLUSIVE)

Published on 11/04/2018 | Edited on 11/04/2018


 

Karunas


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்தக் கூடாது என்று நேற்று பிற்பகல் அணி அணியாக பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அண்ணா சாலையில் திரண்டனர். இதனால், சென்னை அண்ணா சாலை ஸ்தம்பித்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சீமான், கருணாஸ், தமிமுன் அன்சாரி, பாரதி ராஜா, அமீர், தங்கர் பச்சான், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட 780 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், திருவாடானை எம்எல்ஏவுமான கருணாஸ்.
 

நேற்றைய போராட்டத்தில் ஈடுபட்டதாக 780 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்களே?
 

காவிரி ஒவ்வொரு தமிழனுக்கான உரிமை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க குரல் கொடுக்க வேண்டும் என்பது ஒவ்வொரு தமிழனின் கடைமை. தமிழக மக்களின் உரிமைக்காக போராடினோம். குரல் கொடுத்து வருகிறோம். மத்திய அரசை கண்டித்து போராடியதால் வழக்கு போடுகிறார்கள். வழக்கு போடுவார்கள் என்று எதிர்பார்த்ததுதான். இந்த வழக்கு போடுவதால் போராட்டம் பின்வாங்கப் போவதில்லை. மேலும் மேலும் வலுப்பெறும்.
 

இந்தப் போராட்டத்தின்போது சீருடையில் இருந்த காவலர் ஒருவரை தாக்கும் வீடியோ காட்சி வைரலாக பரவுகிறதே?
 

போராட்டத்தில் நமது கோரிக்கைகளை முன் வைத்து முழக்கங்களை எழுப்பலாம். ஆனால் பாதுகாப்புக்காக நின்றிருந்த, சீருடையில் இருந்த போலீஸ்காரரை தாக்கியது தவறு. அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? யாரை கண்டித்து போராட்டம் நடத்துகிறோமோ அவர்களுக்கும் போலீசார் பாதுகாப்பு அளிக்கின்றனர். போராட்டம் நடத்துபவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கின்றனர். யாரோ ஒருவர் செய்த தவறுக்கு போராட்டக் குழுவினருக்கே களங்கம் ஏற்படுத்துகிறது. இதை கண்டிக்கிறோம். இதுபோல் செய்யக்கூடாது.
 

பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார்...
 

கருப்பு கொடி காட்டுவோம்.

 

Karunas


 

கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ள தலைவர்கள் முன்கூட்டியே கைது செய்யப்படுவார்கள் என்ற தகவல் பரவுகிறதே?
 

ராணுவ தளவாடங்கள் கண்காட்சிக்கு பிரதமர் வருகிறார். வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்களும் வர வாய்ப்பு உள்ளது. தலைவர்களை முன்கூட்டியே கைது செய்ய வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். எங்களை கைது செய்தாலும் மக்கள் இந்தப்  போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். பெண்களும், குழந்தைகளும் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். மக்கள் தானாகவே வீடுகளில் கருப்புக் கொடியை கட்டியுள்ளனர்.
 

தமிழக மக்களை மத்திய அரசு இந்தியர்களாக பார்க்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாக எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. எங்களையும் தாண்டி இந்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, மீத்தேன் திட்டத்திற்கான எதிர்ப்பு, ஸ்டெர்லைட் ஆலைக்கான எதிர்ப்பு போன்றவற்றை மக்கள் கையில் எடுத்துள்ளனர். மத்திய அரசு தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனை என்பதை கருத்தில் கொண்டு நன்மை செய்ய வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்.
 

போராட்டத்தால் உணர்ச்சிக் கொந்தளிப்பை கொண்டு வர முடியும், ஆனால் காவிரியை கொண்டு வர முடியாது. பா.ஜ.,வும் மத்திய அரசும் தான் காவிரியை கொண்டு வர முடியும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளாரே?
 

பாஜக சார்பில் பதில் சொல்ல நியமிக்கப்பட்ட ஒரு நிர்வாகி தமிழிசை சவுந்தரராஜன். நாளை அவர்களை வரலாறு மன்னிக்காது. மக்களுக்கான குடிநீரிலும், விவசாயிகளுடைய வாழ்வாதாரத்திலும் அரசியல் செய்வதைவிட ஒரு கேவலம் எதுவும் கிடையாது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.