மத்திய அரசின் ஒப்புதலோடு பெட்ரோலில் 10% "எத்தனால்' எனப்படும் வேதிப்பொருளை கலந்து பெட்ரோல் பங்குகளுக்கு விநியோகிக்க ஆரம்பித்திருக்கின்றன பெட்ரோலிய நிறுவனங்கள். அதாவது, 1 லிட்டர் பெட்ரோலில் 100 மில்லி லிட்டர். 10,000 லிட்டர் பெட்ரோலில் 1,000 லிட்டர் எத்தனாலை கலந்துகொள்ளலாம். "எத்தனால்' என்பது சர்க்கரையிலிருந்து எடுக்கப்படும் வேதிப்பொருள்.
"இந்த எத்தனால் கலந்த பெட்ரோலில் தண்ணீர் கலந்துவிட்டால் வாகனம் பாதியிலேயே நின்றுவிடும் அபாயம் உள்ளது'’என்று சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அனைவரிடமும் புகார் கொடுத்த தமிழ்நாடு பெட்ரோல் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் முரளி நம்மிடம், “""எத்தனால் கலந்த புதிய பெட்ரோலை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு மத்திய அரசானது பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இல்லை. இதனால், சிவப்பு நிறத்திலிருந்து வெள்ளை நிறத்திற்கு மாறியிருக்கும் எத்தனால் கலந்த பெட்ரோலை பார்த்து "கலப்பட பெட்ரோலா?' என்று சந்தேகிக்கிறார்கள் வாகன ஓட்டிகள். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோல் விலை கூடுதலானது. அதுவே, இந்தியாவில் கரும்பிலிருந்து கிடைக்கும் விலைகுறைந்த எத்தனால் கலந்தால் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படாது. எஞ்சினும் மாசுபடாமல் ஸ்பீடு மற்றும் மைலேஜ் கிடைப்பதோடு புகை குறைந்து சுற்றுச்சூழலும் மாசுபடாமல் இருக்கும் என்பது உண்மைதான்.
ஆனால், எத்தனால் கலந்த பெட்ரோலில் தண்ணீர் கலந்துவிட்டால் பெட்ரோலிலுள்ள எத்தனால் அப்படியே தண்ணீராக மாறிவிடும் தன்மை கொண்டது''’’ என்று ஷாக் கொடுத்தவர், “""பெட்ரோல் பங்குகளிலுள்ள டேங்குகளின் அடியில் சுமார் 5 அங்குலம் (ஒய்ஸ்ரீட்ங்ள்) தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதனால்தான், பெட்ரோலை உறிஞ்சக்கூடிய பம்பை 5 அங்குலத்துக்கு மேல் வைத்திருப்பார்கள். அதை உள்ளே சென்று சுத்தம் செய்து நீரை வெளியேற்றவும் இயலாது. மேலும், வழக்கமான பெட்ரோலில் தண்ணீர் கலந்தாலும் மிக்ஸ் ஆகாது. அடர்த்தி குறைவாக இருப்பதால் தண்ணீர் அடியிலேயே தங்கிவிடும். அதையும் மீறி மிகக்குறைவான அளவு தண்ணீர் மிக்ஸ் ஆனாலும் வாகனத்திற்கு பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. ஆனால், எத்தனால் கலந்த 10,000 லிட்டர் புதிய பெட்ரோல் என்றால் 9,000 லிட்டர் பெட்ரோலில் 1,000 லிட்டர் எத்தனால் கலந்திருக்கும். பெட்ரோல் பங்க் டேங்கிற்கு அடியிலுள்ள தண்ணீர் அதில், கலந்துவிட்டால் 1,000 லிட்டரும் தண்ணீராக மாறிவிடலாம். பெட்ரோலில் இவ்வளவு தண்ணீர் கலந்துவிட்டால் ஓட்டிச்செல்லும்போது வாகனங்கள் பாதியிலேயே நின்றுவிடும் நிலை ஏற்படும்''’என்று எச்சரிக்கிறார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்திற்கு ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம்தான் "எத்தனால்' கலந்த பெட்ரோலை விநியோகிக்கிறது. இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் லிமிட்டெட் நிறுவனம் சேலம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் பெங்களூருவிலும் பிரித்துக்கொண்டு விநியோகிக்கின்றன. அதனால், சென்னை ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் பொதுமேலாளர் சந்தீப்பை தொடர்புகொண்டபோது, அவர் வெளியூரில் இருப்பதால் துணை பொதுமேலாளர் பென்னிதாமஸ் பேசினார். “""எத்தனால் கலந்த பெட்ரோலில் தண்ணீர் கலந்துவிட்டால் எத்தனாலும் தண்ணீராக மாறிவிடும் என்பது உண்மைதான். ஆனால், ஏற்கனவே 5% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் விநியோகத்தில் இருந்தபோது எந்த வாகனத்துக்கும் பிரச்சினை ஏற்பட்டதில்லை. அதற்கான தொழில்நுட்பத்தையும் உருவாக்கிவருகிறோம்''’என்றார்.
10% எத்தனால் கலப்பது தற்போதுதான் ஆதாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது என்கிறார்கள் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள். இதுகுறித்து, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஐ.ஏ.எஸ். மதுமதியிடம் கேட்டபோது, ""எத்தனாலில் தண்ணீர் கலந்துவிட்டால் ஏற்படும் பிரச்சனை குறித்து ஆராயப்படும்''’என்று உறுதியளித்தார்.
எத்தனாலில் தண்ணீர் கலந்துவிட்டால் என்ன செய்வது என்பது ஆராயப்படவேண்டும். அதேபோல், விலைகுறைவான எத்தனாலை 10 சதவீதம் கலந்து விற்றால் பெட்ரோல் விலை நியாயமாக குறைந்திருக்க வேண்டும். ஆனால் அதே 74 ரூபாய் 3 பைசாவுக்கு பெட்ரோலை விற்பது என்ன நியாயம்? நியாயம் கேட்கிறார்கள் பொதுமக்கள்.