Skip to main content

இபிஎஸ் எடுத்த சர்வே! 50 பேருக்கு கல்தா! 'சீட்டுக்கு 2 சி' என அமர்க்கள வசூல்!

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

ddd

 

அரசு முறைப் பயணமாக சென்னை வந்த பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தற்கு மறுநாளே (15.2.2021), சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர், பிப்ரவரி 24 முதல் மார்ச் 5 வரை விருப்ப மனுக்களைத் தரலாம் என்ற விறுவிறு அறிவிப்பை வெளியிட, ர.ர.க்களிடையே ஏக பரபரப்பு.

 

அ.தி.மு.க. அறிவித்த நாளிலேயே தி.மு.க.வும் பிப்ரவரி 17 முதல் பிப்.24 வரை விருப்ப மனுக்கள் அளிக்கலாம் என அறிவித்தது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பிலும் விருப்ப மனுக்கள் பெறுவதை அறிவித்திருக்கிறார் கமல்ஹாசன். இதனால் தேர்தல் களம் விறுவிறுப்பாகியிருக்கிறது.

 

பிரதமர் மோடி - எடப்பாடி பழனிசாமி சந்திப்புக்கும், விருப்ப மனு அறிவிப்பிற்கும் தொடர்பு இருப்பதாக அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடம் எதிரொலி இருக்கும் நிலையில், மத்திய உளவுத்துறை வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது, "மோடியை தனியாகச் சந்தித்து பேசுவதற்கு ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் பிரதமர் அலுவலகத்தில் நேரம் கேட்டிருந்தனர். அரசு முறை பயணம் என்பதால் தனி சந்திப்புக்குப் பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது. எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சனிடம் ஆலோசித்துள்ளார். டெல்லியிடம் தலைமைச் செயலாளர் எடுத்த முயற்சியில், 10 நிமிடம் பிரதமரிடம் பேச எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் நேரம் ஒதுக்கப்படும் என மோடி புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது.

 

அந்த தனிப்பட்ட சந்திப்பில் பிரதமரிடம், ‘எங்கள் கைகளை உயர்த்தி கூட்டணியை உறுதிப்படுத்தியதில் ரொம்ப மகிழ்ச்சி’ என பகிர்ந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, ‘இடைக்கால பட்ஜெட்டில் சில அறிவிப்புகளைச் செய்யலாம் என திட்டமிடுகிறேன். அதற்கான நிதி ஆதாரங்களைக் காட்ட வேண்டும். தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை 19 ஆயிரம் கோடியைக் கொடுத்து உதவ ஆவன செய்யுங்கள். அது கிடைக்கும் பட்சத்தில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டால், தேர்தல் வெற்றிக்கு உதவும்’ என சொல்ல, நிதியமைச்சரிடம் (நிர்மலா சீதாராமன்) சொல்கிறேன். அவரிடம் பேசுங்கள் என தெரிவித்திருக்கிறார் பிரதமர். இதை க்ரீன் சிக்னலாக கருதி, மோடி புறப்பட்டதும் ஓபிஎஸ்- சிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பட்ஜெட் தாக்கலுக்கான தேதியை முடிவு செய்ததுடன், எல்லா வகையிலும் டெல்லி நமக்குப் பாசிட்டிவ்வாக இருப்பதையும், தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்பதையும் விவாதித்திருக்கிறார். இதனையடுத்தே, அ.தி.மு.க.வில் விருப்ப மனு பெறும் தேர்தல் நடவடிக்கைகளைத் துவக்க இருவரும் முடிவு செய்தனர்'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள் உளவுத் துறையினர்.

 

விருப்ப மனுவுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால் யார் யாருக்கு சீட் கிடைக்கும் என ஒவ்வொரு மாவட்ட அ.தி.மு.க.விலும் தேர்தல் பணிகள் வேகமெடுத்துள்ளன. விருப்ப மனு செய்வதற்கு முன்பே சீட்டுகளை உறுதி செய்துகொள்வதற்காக பலரும் பல வழிகளையும் தேர்ந்தெடுத்துள்ளனர். இதில், எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமான சேலம் இளங்கோவனை பலரும் அணுகியுள்ளனர். இளங்கோவன் பெயரைச் சொல்லி வசூல் வேட்டையும் அ.தி.மு.க.வில் களை கட்டுகிறது. ஒரு சீட்டுக்கு 2சி என முடிவு செய்து, அட்வான்ஸாக 1 சி-யும், சீட் கிடைத்ததும் 1 சி-யும் கொடுக்க வேண்டும் என பேரம் பேசப்படுகிறது.

 

இந்தப் பேரத்தில், கடலூர் மாவட்ட அ.ம.மு.க.விலிருந்து அ.தி.மு.க.வுக்குத் தாவிய கார்த்தி என்பவர் இளங்கோவன் பெயரைச் சொல்லி தூள் கிளப்புவதாக அ.தி.மு.க. தலைமைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எடப்பாடி பழனிசாமிக்கும், கட்சியின் சீனியர்களுக்கும் நெருக்கமானவர்கள் என சொல்லிக்கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் சீட் வாங்கித் தர மீடியேட்டர்கள் பலர் அ.தி.மு.க.வில் முட்டி மோதுகின்றனர். அ.தி.மு.க.வின் வழிகாட்டும் குழு உறுப்பினர்களிடமும், மூத்த தலைவர்களின் வாரிசுகளிடமும் சிபாரிசை வேண்டி நிற்கிறார்கள் ர.ர.க்கள். அ.தி.மு.க.வில் விருப்பப் மனு கொடுத்தவர்களிடம் பெரும்பாலும் நேர்காணல் நடத்தப்படுவதில்லை என்பதாலேயே கட்சியில் வலிமையானவர்களின் சிபாரிசுகளைப் பெற துடிக்கின்றனர்.

 

சிட்டிங் எம்.எல்.ஏ.க்களில் 50 சதவீதம் பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி எடுத்த சர்வேயில் சொல்லப்பட்டிருப்பதால், அவர்களுக்குக் கல்தா கொடுக்கும் முடிவில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. பண வசதியுடன் இருப்பது சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள்தான் என்பதால், அவர்களைப் புறக்கணித்தால், தேர்தல் நேரத்தில் எந்த அளவுக்கு ஒத்துழைப்பார்கள்? எப்படி செலவு செய்வார்கள்? உள்ளிட்ட வில்லங்கங்களும் அலசப்பட்டிருக்கின்றன. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய அரசு பதவிகள் கொடுக்கப்படும் என உத்தரவாதம் தரும் யோசனையும் இருக்கிறதாம்.

 

 

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.