Skip to main content

என் பெயரைப் போட்டுடாதீங்க பிரச்சனை பண்ணுவாங்க... முதல்வரின் ஆயிரம் ரூபாய் அரசியல்... அதிர்ச்சியில் திமுக!

Published on 06/04/2020 | Edited on 07/04/2020

21 நாட்கள் ஊரடங்கு உத்தரவால், வீட்டில் முடங்கும் ஏழை, எளிய மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாவார்கள் என்று தமிழக எதிர்கட்சிகளும் பொருளாதார வல்லுநர்களும் வலியுறுத்தியதின் பேரில், குடும்ப அட்டைகளுக்கு ஆயிரம் ரூபாயும், 25 கிலோ அரிசி, சர்க்கரை, எண்ணெய், பருப்பு போன்ற பொருட்களும் ஏப்ரல் மாதம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த அறிவிப்பு வரவேற்பைப் பெற்றது.


பொதுவிநியோக ஊழியர் சங்கத் தலைவர் பால்ராஜ், "ரேஷன் கடையில் பணியாற்றுவோருக்கு பாதுகாப்பில்லாத நிலையில், 1000 ரூபாயை கடைகளில் வழங்க முடியாது''’என்றார் அச்சத்துடன். இதன்பிறகே, நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதோடு, மக்கள் கூடுவதை தடுக்க, வீடுவீடாக சென்று டோக்கன் வழங்குவது பற்றி அறிவிக்கப்பட்டது.

 

 

admk



ஏப்ரல் 01ந்தேதி, ஒவ்வொரு ரேஷன் கடை விற்பனையாளரும், தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் கடைகளுக்கு கீழ்வரும் குடும்ப அட்டைதாரர்களை நூறு நூறாகப் பிரித்து, தேதிவாரியாக டோக்கன் வழங்கினார். தமிழகம் முழுவதும் ஏப்ரல் 02ந்தேதி முதல் பணம், பொருட்கள் விநியோகம் தொடங்கிய நிலையில், அது வீடுவீடாக வழங்கப்படுகிறதா என்பதை அறிய களமிறங்கினோம். திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்கால் கிராமத்தில் வீடுவீடாக பணம் மற்றும் பொருட்களை வழங்கும் திட்டத்தை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன், கலெக்டர் கந்தசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். குட்டியானை வண்டியில் வீடுவீடாக சென்று டோக்கனை சரிபார்த்து பொருட்களை வழங்கினார்கள்.

 

nakkheeran app



அதேநேரம், திருவண்ணாமலை நகரத்தில் நிலைமை தலைகீழாக இருந்தது. மாவட்ட வனத்துறை அலுவலகம் எதிரேயுள்ள போயர் தெருவைச் சேர்ந்த நூறு பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், வீடு வீடாக சென்று பொருட்களை வழங்காமல், மூடப்பட்ட ஒரு பங்க் கடை முன்பு வண்டியை நிறுத்தி, மக்களைக் கூட்டமாக வரவைத்து பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தார், ரேஷன் கடை ஊழியர். மக்கள் முண்டியடித்துக் கொண்டிந்தனர். கூட்டத்தில் நின்றிருந்த ஒரு பெண்ணிடம் கேட்டோம். "வெயிலா இருக்குதான். அதான், வீட்டுக்கு வந்து கொடுக்காம, இங்க வரச்சொல்லி இருக்காங்க'' என்று சொன்னவர், "என் பெயரைப் போட்டுடாதீங்க. நாளை பின்ன கடைக்கு வந்தா பிரச்சனை பண்ணுவாங்க'' என்றார் தயக்கத்துடன்.

பேகோபுரத் தெருவில், சக்தி தியேட்டர் அருகே அரசமர நிழலில் வண்டியை நிறுத்தி ரேஷன்கடை ஊழியர் அழைத்தபோது, 200க்கும் அதிகமான பெண்கள் அங்கு குவிந்துவிட்டனர். டோக்கன்களைச் சரிபார்த்து "முதல் நூறு பேருக்கு மட்டுமே இன்று தரப்போகிறேன்'' என்று சொன்னதால் அங்கு குழப்பம் உருவானது. இதுதொடர்பாக, திருவண்ணாமலை வட்ட வழங்கல் அலுவலருக்கு, மாவட்ட வழங்கல் அலுவலருக்கும் புகார்சொல்ல அந்தப்பகுதி இளைஞர்கள் அழைத்தபோது ரெஸ்பான்ஸ் இல்லையாம்.

 

admk



நகரத்தைப் போலவே, நாச்சாந்தல், மெய்யூர், பாவுப்பட்டு, பறையம்பட்டு, ஈராடி ஆகிய கிராமங்களிலும், வீடுவீடாக செல்லாமல், தொடக்கப் பள்ளிகளில் வைத்தே பொருட்கள் வழங்கப்பட்டன. பல இடங்களில் ரேஷன்கடை ஊழியர்களோடு அதிமுகவினரையும் பார்க்க முடிந்தது. தமிழகம் முழுவதும் இதுதான் நிலைமை. சென்னை விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் அத்தியாவசியப் பொருட்களும், ஆயிரம் ரூபாயும் அதிமுகவினராலேயே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. வீடுவீடாக சென்று பொருட்களை வழங்கும் உத்தரவை சென்னை மாநகரிலேயே பல இடங்களில் கடைபிடிக்கவில்லை.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டியிலுள்ள ரேஷன் கடைக்கு படை பரிவாரங்களோடு சென்ற கே.வி.குப்பம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ லோகநாதன், பணம் மற்றும் பொருட்களை வழங்கினார். அதேபோல் கொண்டசமுத்திரம், கலப்பாடி, கொட்டினப்பள்ளி போன்ற ஊராட்சிகளிலும், அ.தி.மு.க. பிரமுகர்களான மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராமு, கூட்டுறவு வங்கித்தலைவர் கோபி இருவரும், பொதுமக்களுக்கு பணமும், பொருட்களையும் வழங்கினார்கள்.

இப்படி, அரசின் நிதியுதவித் திட்டத்தை அ.தி.மு.க. நிகழ்வாக மாற்றியிருப்பது பற்றி அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, "ரேஷன்கடை ஊழியர்கள் பொதுமக்களுக்கு பொருட்களை வழங்க செல்லும்போது, அதிமுக பிரமுகர்களையும் உடன் அழைத்துச் செல்லவேண்டும் என்ற உத்தரவு முதல்வர் அலுவலகத்தில் இருந்தே வழங்கப்பட்டது. இதற்காக ஊராட்சிமன்றத் தலைவர்களைப் பயன்படுத்தினால், பாதி இடங்களுக்கு மேல் திமுகவினர் வருவார்கள் என்பதால்தான், கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்களை அனுப்பி வைத்திருக்கிறது அதிமுக அரசு. இப்படி நடக்குமென்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளே எதிர்பார்க்கவில்லை'' என்றார்கள்.

சென்னை பெருவெள்ளத்தின் போது, செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டு, மாநகர மக்களை பிரச்சனைக்குள் தள்ளியது அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு. அதிலிருந்து மீண்டுவந்து அத்தியாவசியப் பொருட்களுக்காக அம்மக்கள் ஏங்கியபோது, தன்னார்வலர்கள் முன்வந்து செய்த உதவியில் ஜெயலலிதா படமிட்ட ஸ்டிக்கர்களை ஒட்டினார்கள் அதிமுகவினர். அதுபோலவே, நோய்த் தொற்று அச்சத்தில் வீடுகளில் முடங்கி இருக்கும் வேளையில், மக்கள் வரிப் பணத்தில் இருந்து தரப்படும் அவசரகால ஆயிரம் ரூபாய் உதவியில் தங்களுக்கான அரசியல் ஆதாயத்தைத் தேடத் துடிக்கிறது அதிமுக.

 

admk



ஏப்ரல் 14ந்தேதி வரை இந்த நிதி மற்றும் பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் பண உதவி கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் அல்லாடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் செஞ்சி, மேல்மலையனூர் வட்ட ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட் வேளாங் கண்ணியிடம் இதுதொடர்பாக பேசினோம். "ரேஷன்கார்டு இல்லாமல் அதிகளவு பாதிக்கப்படுவது காட்டுநாயக்கன், இருளர் மற்றும் பூம்பூம் மாட்டுக்காரர் சமுதாயங்களைச் சேர்ந்த மக்கள்தான். விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ரேஷன் அட்டைகூட இல்லாமல் பல்லாயிரக்கணக்கான இருளர் சமுதாய மக்கள் இப்போதும் தவிக்கிறார்கள். அவர்களும் மனிதர்கள்தான், அவர்களுக்கும் பசிக்கும். சமூக ஒடுக்குதலுக்கு ஆளாகி, செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக தவிக்கும் அந்த மக்களுக்கும் இந்த அரசு உதவ முன்வர வேண்டும்'' என்ற கோரிக்கையை முன்வைத்தார் ஆல்பர்ட்.

தமிழகத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள், குடும்ப அட்டை இல்லாமல், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர். அவர்கள் மிக,மிக ஒடுக்கப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள். இந்த மண்ணின் பூர்வக்குடிகள். திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, விழுப்புரம், திருப்பத்தூர், கடலூர், ஈரோடு, நாமக்கல் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நிரந்தர வீடுகூட இல்லாமல் சாலையோரங்கள், ரயில்வே பிரிட்ஜ், ஊருக்கு ஒதுக்குபுறமாக, காடுகளில் வாழ்கிறார்கள். அன்றாடம் உழைக்க வாய்ப்புள்ள மக்களே அல்லாடும்போது, வீடற்ற, குரலற்ற இவர்களது தேவைகளைப் பூர்த்திசெய்ய இப்போதாவது அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இந்த நிலையின் தீவிரத்தை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் கொண்டுசென்றோம். அவர் நம்மிடம், "திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஆயிரம் பேர் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளார்கள். அவர்களுக்கு அரசு அறிவித்திருக்கும் ஆயிரம் ரூபாய் நிதி, உணவுப் பொருட்கள் வழங்குவது தொடர்பாக அரசிடம் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளோம்.'' என்று உறுதியளித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அடப்பன்வயலில் வீடு வீடாக சென்று டோக்கன் தருவதற்கு பதில் ஒரே இடத்தில் தந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திருக்கோகர்ணத்தில் 3அடி இடைவெளியில் நாற்காலிகள் போட்டு மக்களுக்கு வசதி செய்திருந்தனர்.

ரேஷன் அட்டை இல்லாதவர்கள்-பழங்குடி மக்களின் பசி குறித்து தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜின் கவனத்திற்கும், நக்கீரன் மூலமாக கொண்டு சென்றுள்ளோம். நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

- பகத்சிங்
படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்


 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்