Skip to main content

விஸ்வரூபம் எடுக்கும் ஓபிஎஸ்... மறைமுக அரசியல் செய்யும் எடப்பாடி... அதிர்ச்சியில் ஓபிஎஸ் தரப்பு!

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

"இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க.வில் அனைவரும் ஒற்றுமையாகவே செயல்படுகிறோம். தி.மு.க.வினர் தான் சிண்டு முடிகிறார்கள் என்றும் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். சீர்குலைக்கும் முயற்சிகள் பலிக்காது என்றும் அமைச்சர்கள் தரப்பிலிருந்து யாராவது ’வாய்ஸ்’ கொடுப்பார்கள். சால்வை அணிவிப்பது, பூங்கொத்து தருவது போன்ற இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். படங்களை அவ்வப்போது வெளியிட்டு இருவருக்குமான ஒற்றுமையை நிரூபித்த வண்ணம் இருக்கிறது எங்க கட்சி. திரைமறைவில் நடப்பதோ முற்றிலும் வேறானது'' இப்படி நம்மிடம் ஆதங்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஒருவர் நடந்தவற்றை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டார்.

 

admk



"அண்ணனும் அவர் பையனும் இப்ப அமெரிக்கா போயிருக்காங்கள்ல. அதுபத்தி பெரிய அளவுல மீடியாவுலயோ, சோஷியல் மீடியாவுலயோ எதுவும் வரக்கூடாதுன்னு எடப்பாடி மகனோட டீம் சைலன்ட்டா வேலை பார்த்துக்கிட்டிருக்கு. இப்பல்லாம் நமது அம்மா பேப்பர்ல ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்புங்கிற பேர்லதான் அறிக்கை வெளியிடறாங்க. இதெல்லாம் தங்கமணி, வேலுமணி பண்ணுற வேலை தான். "நமது அம்மா' கட்சி பேப்பர்தான. அதுல கூட்டுறவு வங்கியில பொறுப்பு கொடுத்ததுக்கு நன்றி தெரிவிச்சு விளம்பரம் வருது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில் எடப்பாடி படம் ஃபுல் சைஸ்ல. ஓ.பி.எஸ். படம் பார்த்தீங்கன்னா ஸ்டாம்ப் சைஸ்ல. கட்சிக்காரர் ஒருத்தர் அப்படியே இந்த மாதிரி ஒரு விளம்பரம் தந்தாலும், அதைச் சரிபண்ண வேண்டாமா? பதவிக்கு ஓ.பி.எஸ். அண்ணன் மரியாதை தர்றாரு. அவ்வளவுதான். அந்த மரியாதை எடப்பாடி தரப்புல இருந்து கிடைக்குதா? இல்லியே!
 

admk



அன்னைக்கு நைட் ஓ.பி.எஸ். அமெரிக்கா கிளம்புறாரு. அப்ப தமிழ்நாட்டுல இருந்து மட்டுமில்ல.. கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரில இருந்தெல்லாம் நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள்லாம் வந்துட்டாங்க. கட்சித்தலைவர் இவருதான்னு பொக்கே கொடுக்கிறதுக்கு வரிசை கட்டி நிக்கிறாங்க. கட்டுக்கடங்காத கூட்டம். அதே மாதிரி தான்.. சென்னை தலைமைச் செயலகத்துலயும் கூட்டம். ஓ.பி.எஸ்.ஸுக்கு இந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் இருக்கும்போது, நாம போயி பார்க்கலைன்னா நல்லா இருக்காதுன்னு சி.எம்.மும் ஓ.பி.எஸ். வீட்டுக்கு கிளம்பி வந்துட்டாரு. உடனே இவரு போயி அவரை ரிசீவ் பண்ணுறாரு. சால்வை போட்டு பொக்கே எல்லாம் கொடுத்து போட்டோ எடுத்துக்கிட்டாரு சி.எம். ஆனா.. மறுநாள் ஒருசில பேப்பர்ல அது எப்படி வருதுன்னா.. துணை முதல்வர் அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் போறதுன்னால, முதல்வரை சந்தித்து சால்வை அணிவித்து ஆசிபெற்றார்ன்னு வருது. சி.எம். வெளிநாடு போறப்ப, அவரு வீட்டுக்கு ஓ.பி.எஸ். போயி மரியாதை நிமித்தமா சால்வை போட்டுட்டு வந்தாரு. ஓ.பி.எஸ். எடப்பாடிக்கு சால்வை போட்ட அந்தப்படம்தான் இப்ப போட்ட மாதிரி வருது.


பளிச்சின்னு வெளிய தெரியாத, ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிரான குசும்பு வேலை அங்கே நெறய நடந்துக்கிட்டிருக்கு. இதுக்கெல்லாம் தங்கமணியும் வேலுமணியும் உடந்தை. ஆனா.. கட்சித் தொண்டர்கள் இத விரும்பல. இப்பல்லாம் எடப்பாடியோட பேச்சே மாறிருச்சு. அம்மா ஆட்சின்னு சொல்லிக்கிட்டிருந்தவரு "என் ஆட்சியில்'னு பேசுறாரு. அம்மா ஆட்சி... பொது வாழ்க்கைல என்னை இந்த இடத்துக்கு கொண்டுவந்த அம்மாவுக்கு இந்த விருதுகளெல்லாம் சமர்ப்பணம்னு சொல்லுறாரு ஓ.பி.எஸ். என் ஆட்சின்னு எடப்பாடி சொல்லுறத தொண்டர்கள் எப்படி விரும்புவாங்க? இவங்க எவ்வளவு தூரம் ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிரா சதிவேலை பண்ணுறாங்க தெரியுமா? ஓ.பி.எஸ்.ஸுக்கு இப்ப இருக்கிற ஆறுதல் அவரோட பையன் ரவீந்திரநாத்குமார்தான். அதனாலதான்.. வயித்துல இருக்கிற பையில குட்டியைத் தூக்கி வச்சிக்கிற கங்காரு கணக்கா.. வெளிநாட்டுக்கும் அவரைக் கூட்டிட்டுப் போயிருக்காரு. வெளில பார்க்கிறதுக்கு வேணும்னா வாரிசு அரசியலா தெரியும். ஆனா.. இதுல கட்சியோட எதிர்காலமும் அடங்கியிருக்கு.


ஜெயலலிதாவ அம்மான்னு சொன்ன மாதிரி... எல்லாரும் தன்னை அய்யான்னு சொல்லணும்னு எதிர்பார்க்கிறாரு எடப்பாடி. இல்லைன்னா.. தமிழக அரசின் செய்தித்துறை சார்பில் தியேட்டர்களில் வெளியான விளம்பரத்தில், குருக்களிடம் ஒரு பெண், ‘நம்ம தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஐயா பெயருக்குத் தான் அர்ச்சனை’ என்று பேசுவதுபோல் ‘சீன்’ வைத்திருப்பார்களா? எடப்பாடி யோட கண்ணசைவில் ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிரான வேலை பார்க்கிறதுல முக்கிய பங்கு யாருக்குன்னா.. சி.எம். அலுவலகத்துல பொறுப்பான ஒரு இடத்துல இருக்கிற கவுண்டர் ஒருத்தருக்குத்தான். தமிழ்நாட்டுல இருக்கிற முக்கியமான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிங்க எல்லாருமே கவுண்டருங்கதான். ஓ.பி.எஸ். அண்ணன் நடக்கிறதயெல்லாம் வேடிக்கை பார்த்துட்டு, கட்சிதான் முக்கியம்னு அமைதி காத்துட்டு இருக்காரு. அதனாலதான்.. கட்சியில தொண்டர்கள் மத்தியில ஓ.பி.எஸ்.ஸுக்கு செல்வாக்கு கூடிக்கிட்டே இருக்கு. எடப்பாடி டீமும் ஓ.பி.எஸ். பெயரை எந்த வழிலயாச்சும் இருட்டடிப்பு பண்ணணும்னு துடியா துடிக்குது. உள்ளத சொல்லுறேன். இன்னும் சரியா சொல்லணும்னா.. தென் மாவட்டத்துல இருக்கிற எங்க கட்சிக்காரங்க எல்லாருக்குமே எடப்பாடி மேல வருத்தம் இருக்கு. ஓ.பி.எஸ். தர்மயுத்தம் நடத்துனாருல்ல. பார்த்துக்கிட்டே இருங்க.. ஒருநாள் விஸ்வரூபம் எடுப்பாரு'' என்று கொட்டித் தீர்த்தார்.

ஆதரவாளர்கள் உள்ளுக்குள் எத்தனை குமுறினாலும் எதையும் கண்டுகொள்ளாதவராகவே ஓ.பி.எஸ். தன்னை வெளிப்படுத்தி வருகிறார்.

 

 

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.