Skip to main content

இபிஎஸ்- ஓபிஎஸ்சுக்கு ஜாக்பாட்! சிறையில் சசிகலா அப்-செட்!

Published on 02/05/2020 | Edited on 02/05/2020

 

sasikala


சிறையிலுள்ள சசிகலா அப்-செட்டாகியிருப்பதாக பெங்களூரிலிருந்து தகவல்கள் கிடைக்கின்றன. தண்டனை காலம் முடிந்து சிறையிலிருந்து வெளியே வந்ததும் தேர்தல் களத்தைச் சந்திக்க முடியாமல் போனாலும், நேரடி அரசியலில் பங்கெடுக்க வேண்டும் என்பதே சசிகலாவின் திட்டமாக இருக்கிறது. அதற்கு இரட்டை இலை சின்னம் தன் பக்கம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் சசிகலா. 
                     

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார் சசிகலா. அதில் தனக்குச் சாதகமான தீர்ப்பு வரும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால், இம்மனு மீது கடந்த வாரம் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சசிகலாவின் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புதான் சசிகலாவை அப்-செட்டாக்கியிருக்கிறது. 
                     

இரட்டை இலை சின்னம் தங்களுக்கே சொந்தம் என சசிகலா மற்றும் தினகரன் தரப்பும், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பும் டெல்லியிலுள்ள தலைமைத் தேர்தல் ஆனையத்திடம் உரிமை கோரின. தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள், இபிஎஸ்- ஓபிஎஸ் தரப்புக்கே இரட்டை இலை சொந்தம் எனத் தீர்ப்பளித்தனர். இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை உறுதி செய்தது உயர்நீதிமன்றம். இதனை எதிர்த்துதான் மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார் சசிகலா. அதனைத்தான் தற்போது தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம். 
                      

சசிகலா மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதில் ஆளும் கட்சியினரிடம் கரோனா பரபரப்பையும் மீறி ஒருவித உற்சாகம் தெறிக்கிறது. இதுகுறித்து அதிமுக வழக்கறிஞர்களிடம் விசாரித்தபோது, ‘’இப்படிப்பட்ட தீர்ப்புதான் வரும் என நாங்கள் எதிர்பார்த்தோம். சசிகலாவின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு சாதகமான தீர்ப்பையோ அல்லது தேர்தல் ஆணையம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடையையோ கொடுத்திருந்தால் சட்டரீதியாகச் சில சிக்கல்களை இபிஎஸ்-ஓபிஎஸ் எதிர்கொள்ள நேரிட்டிருக்கும். 
                   

அதாவது, ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தொடங்கி நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் எனப் பல தேர்தல்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு ஜெயித்திருக்கிறது அதிமுக. சசிகலாவின் கோரிக்கை ஏற்கப்பட்டிருந்தால் தேர்தலில் அதிமுக ஜெயித்த வெற்றி குறித்து சட்டரீதியாகப் பல கேள்விகள் எழுந்திருக்கும். அது, புதிதாகப் பல சிக்கல்களையும் ஏற்படுத்தும். அதனால்தான், சசிகலா கோரிக்கை நிராகரிக்கப்படும் என்பதில் நிறைய நம்பிக்கை அதிமுக தலைமைக்கு இருந்தது. சின்னம் கிடைத்திருப்பதில் எடப்பாடி-ஓபிஎஸ்சுக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது ‘’  எனச் சுட்டிக்காட்டுகிறார்கள். 
                       

http://onelink.to/nknapp

 

இரட்டை இலை சின்னத்தை மீட்பதில் சசிகலா தோல்வியடைந்திருப்பதால், அவர் சிறையிலிருந்து வெளியே வந்தாலும் அதிமுகவைச் சொந்தம் கொண்டாட முடியாது. எடப்பாடி- ஓபிஎஸ்சை நம்பியே அவர் அரசியல் செய்ய வேண்டும். இல்லையெனில், தினகரனின் அ.ம.மு.க.வை அவர் கையிலெடுக்க வேண்டும் எனவும் அதிமுக தரப்பில் எதிரொலிக்கின்றன!

 


 

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.