Skip to main content

ரஜினி படத்தை தொடர்ந்து விஜய் படத்தை கைப்பற்றிய எடப்பாடி... சசிகலாவை பின்பற்றும் இபிஎஸ்!

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

தமிழ் அரசியலும் தமிழ் சினிமாவும் இரட்டைக் குழந்தைகள் போல. "பராசக்தி' வசனம் மூலம் அரசியலிலும் சினிமாவிலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியவர் கலைஞர். அவருடைய எழுத்தின் வீச்சும் பேச்சின் வசீகரமும் தமிழக முதல்வராக்கியது. தான் நடித்த முக்கால்வாசிப் படங்களில் ஏழைப்பங்காளனாக நடித்த எம்.ஜி.ஆரும் சினிமாவில் டாப் ஹீரோவாக கோலோச்சி, அரசியலில் உச்சத்தைத் தொட்டு முதல்வரானார். ஆனால் சினிமாவிலிருந்து ரிடையர்டான ஜெயலலிதாவோ, அரசியல் விபத்து மூலம் திடீரென முதல்வராக்கப்பட்டார்.

 

rajini



எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் கலைஞர் தனது பூம்புகார் புரொடக்ஷன்ஸ் மூலம் பல குடும்பப்பாங்கான படங்களைத் தயாரித்ததோடு, எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு எதிரான அரசியல் சாட்டையடி படங்களையும் தயாரித்தார். எம்.ஜி.ஆரின் சினிமா தயாரிப்பு நிறுவனமான சத்யா மூவீஸை நிர்வகித்த ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் பவர்ஃபுல்லாக இருந்த போதும் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின்னும் சத்யா மூவீஸ் மூலம் தொடர்ந்து படங்களைத் தயாரித்து வந்தார். ஆர்.எம்.வீ.யின் சத்யா மூவீஸ் தயாரித்த கடைசிப் படம்தான் ரஜினியின் அரசியல் என்ட்ரி குறித்த எதிர்பார்ப்புகளுக்கு அடித்தளமிட்ட பாட்ஷா.

இப்படி தங்களது அரசியல் பவர் மூலம் அப்போதிலிருந்து இப்போது வரை சினிமாவிலும் கொடி நட்டு, செழிப்பாகவே இருந்து வருகிறார்கள். 1980-களில் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த கே.கே. எஸ்.எஸ்.ஆர்., "பூ ஒன்று புயலானது', "இதுதாண்டா போலீஸ்' போன்ற அரசியல் தடாலடி படங்கள் உட்பட ஏகப்பட்ட படங்களின் தென்மாவட்ட வினியோக உரிமையை வாங்கி நல்ல வருமானம் பார்த்தார்.

 

admk



1991-96 ஜெ. மந்திரிசபையில் இருந்த கண்ணப்பன், ரகுபதி, நடேசன் பால்ராஜ், உட்பட பல மந்திரிகள் சினிமா வினியோகஸ்தர்களாகவும் பல படங்களுக்கு மறைமுக தயாரிப்பாளர்களாகவும் இருந்துள்ளனர். அதே போல் மந்திரிகளின் வாரிசுகளும் சினிமா தயாரிப்பிலும் வினியோகத்திலும் இறங்கி, வளப்படுத்திக்கொண்டார்கள். சசிகலா வகையறாக்களின் சில நூறு கோடிகள், மதுரை அன்புச் செழியன் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்து பலநூறு கோடிகளாகின.

2006-ல் கலைஞர் தமிழக முதல்வரானதும் கலைஞர் குடும்பத்தினரும் அமைச்சர்களும் தி.மு.க. வி.ஐ.பி.க்களும் சினிமா உலகை நோக்கி தங்கள் கவனத்தைத் திருப்பினார்கள். மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் "க்ளவுட் நைன் புரொடக்ஷன்ஸ்', மு.க.தமிழரசுவின் "மோகனா மூவீஸ்', கலாநிதி மாறனின் "சன் பிக்சர்ஸ்', உதயநிதி ஸ்டாலினின் "ரெட் ஜெயண்ட்' என கலைஞர் குடும்பத்தின் சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொடி நாட்ட... அது திரையுலகிலும் அரசியலிலும் கடும் சர்ச்சைகளை உண்டாக்கி 2011 தேர்தல்களம் வரை எதிரொலித்தது.


சேப்பாக்கம் தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், பல சினிமாக்களின் சென்னை மாநகர வினியோகஸ்தராக இருக்கிறார். "ஆதிபகவன்'’என்ற படத்தைத் தயாரித்து ரிலீஸ் செய்வதற்குள் பெரும் நொம்பலத்திற்குள்ளானதால், படத் தயாரிப்பையே நிறுத்திவிட்டார்.

 

மீண்டும் 2016-ல் ஜெ. ஆட்சி வந்ததும் சினிமா உலகையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் காரியங்களில் இறங்கியது சசிகலா வகையறா. சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் "ஜாஸ் சினிமாஸ்' என்ற நிறுவனத்தை துவங்கி, பெரிய ஹீரோக்கள் படங்களின் ஒட்டுமொத்த தமிழக வினியோக உரிமையையும் வாங்கினார். சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபோனிக்ஸ் மாலில் உள்ள லக்ஸ் தியேட்டரை 1,000 கோடி ரூபாய்க்கு வாங்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்தார்.

இப்படியெல்லாம் தனது தலைவியும் தன்னை முதல்வராக்கிய சசிகலாவும் சினிமா மீது கண் வைத்திருப்பதை கவனித்த எடப்பாடி தரப்பு இப்போது சினிமா உலகிற்குள் நுழைந்துவிட்டது. முதல்வரின் நம்பிக்கைக்குரிய அரவிந்த் என்பவர் மூலம் "பிளஸ்மேக்ஸ்' என்ற கம்பெனியை ஆரம்பித்து, அதற்கு சப்போர்ட்டாக மில்க் புள்ளியை நியமித்து, ரஜினியின் ‘"தர்பார்'’படத்தின் திருச்சி,—தஞ்சை ஏரியாக்களின் வினியோக உரிமையை வாங்கினார் எடப்பாடி.

இப்போது விஜய்யின் "மாஸ்டர்'’படத்தின் அதே ஏரியாக்களின் வினியோக உரிமைக்காக மிரட்டலில் இறங்கியுள்ளனர் அரவிந்தும் மில்க்கும் என்கிறது சினிமா ஏரியா. "மாஸ்டர்'’ படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துள்ள நிலையில், படத்தின் ஒட்டுமொத்த வியாபாரம் 250 கோடிக்கு முடிந்துள்ளதாம். படத்தின் தமிழக வினியோக உரிமையை லலித் என்பவர் வாங்கி, மாவட்ட ரீதியாக பிரித்தும் கொடுத்து விட்டார். அதன்படி திருச்சி,—தஞ்சை உரிமையை ஆர்.விஸ்வ நாதனின் மருமகன் ரவிசங்கர் வாங்கியிருந்தார். திடீரென முதல்வர் அலுவலகத்திலிருந்து வந்த மிரட்டலால் அரவிந்தின் பிளஸ்மேக்ஸ் கம்பெனிக்கு கொடுக்கும்படி ஆகிவிட்டது என்கின்றனர்.


"இது உண்மையா' என ரவிசங்கரிடம் கேட்டபோது, "ஆமா சார், 8.40 கோடி பேசி, கடந்த 05-ஆம் தேதி அட் வான்ஸ் கொடுக்கலாம்னு இருந்தேன். அப்ப லலித் எனக்கு போன்பண்ணி "மில்க்குக்கு வினியோக உரிமையைக் கொடுக்கச் சொல்லி பிரஷர் வருது, கொடுக்கலேன்னா ரிலீஸ் நேரத்துல பிரச்சினை வரும். அதனால சாரிங்க' என்றார். இந்தப் பிரச்சனையை திருச்சி மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கேசவனிடம் சொல்லியிருக்கேன்'' என்றார்.

நாம் கேசவனிடம் பேசியபோது, ""ஏற்கனவே "பிகில்'’படத்தால் ரவிசங்கருக்கு லலித் 40 லட்சம் தரவேண்டியிருக்கு. இப்ப இந்தப் பிரச்சினை வேற'' என்றார். "தர்பார்'’வினியோக உரிமையை வாங்கியதும், தனது தம்பியை அழைத்துக்கொண்டு போய் ஆர்.விஸ்வநாதனிடம் ஆசி வாங்கினார் மில்க் புள்ளி. இப்போது அந்த ஆர்.வி. மருமகனுக்கே ஆப்பு அடித்திருக்கிறார்.

 

 

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.