Skip to main content

ஜெயலலிதாவின் வாரிசுகளால் டென்ஷனில் இ.பி.எஸ்... போயஸ் கார்டன் பின்னணியில் பா.ஜ.க. தரப்பு... அ.தி.மு.க.விற்குக் கொடுக்க விரும்பாத பா.ஜ.க.!

Published on 08/06/2020 | Edited on 08/06/2020

 

admk


ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட தீபா, பல்வேறு அரசியல் சமரசங்களுக்கு மத்தியில் காணாமல் போனார். இதனால் அ.தி.மு.க.விலும், ஜெயலலிதாவின் சொத்துகளிலும் எந்தப் பிடிமானமும் இல்லாத நிலையில் நாட்களை நகர்த்தி வந்தார். அ.தி.மு.க.வினரும் தீபாவை சுத்தமாக மறந்து போயிருந்தனர்.
 


தற்போது, தீபாவும் அவரது சகோதரர் தீபக்கும் ஜெயலலிதாவின் வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள சூழலில் மீண்டும் அரசியல் காய் நகர்த்தல்களைத் துவக்கியிருக்கிறார் தீபா. இதற்காக, ஜெயலலிதாவுக்கு நெருக்கமான மூத்த வழக்கறிஞர் ஒருவரைச் சந்தித்து சுமார் 2 மணி நேரம் விவாதித்திருக்கிறார். அந்தச் சந்திப்பில் பல்வேறு ஆலோசனைகள் தீபாவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.
 

admk


ஜெயலலிதாவின் வாரிசுகளாக தீபா- தீபக்கை அறிவிக்க சட்டப்பூர்வமான வழிகள் இருப்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டதால்தான், போயஸ் கார்டன் பங்களா எந்தச் சூழலிலும் அவர்கள் வசம் போய்விடக் கூடாது என அதனை நினைவு இல்லமாக மாற்றும் அவசரச் சட்டத்தைப் பிறப்பித்து அதற்கு கவர்னரின் ஒப்புதலையும் பெற்றார் எடப்பாடி.

வாரிசுகளாக ஜெயலலிதாவின் அண்ணன் குழந்தைகளை நீதிமன்றம் அறிவித்ததில் அதிருப்தியடைந்துள்ள எடப்பாடி, இது குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அரசு வழக்கறிஞர்களிடம் ஆலோசித்தார். அதன்படி, மேல்முறையீடு செய்ய தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில்தான், ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவரும் அவரது வழக்குகளை ஒரு கட்டத்தில் கவனித்திருந்தவருமான மூத்த வழக்கறிஞரைச் சந்தித்து நீண்ட நேரம் விவாதித்துள்ளார் தீபா. காஞ்சி சங்கரமடத்தின் பின்னணியிலேயே இந்தச் சந்திப்பு நடந்ததாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.

இது குறித்து உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்த போது, "அ.தி.மு.க. தலைவர்கள் மீது மத்திய அரசு நம்பிக்கை இழந்துவிட்டது. அ.தி.மு.க.வை தற்போதைய தலைவர்கள் வசம் விடுவதற்கு பா.ஜ.க. தலைவர்களுக்கு விருப்பமில்லை. அதாவது, தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட அ.தி.மு.க.வை முழுமையாகக் கையிலெடுக்க வேண்டுமென்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மறைமுக அஜெண்டா. அதற்குப் பிராமணர் சமுக வி.வி.ஐ.பி. யாரும் தமிழகத்தில் மக்கள் செல்வாக்குடன் இல்லை. அதனால்தான் ஜெயலலிதாவின் குடும்பத்திலிருந்தே ஒருவரை கொண்டுவர வேண்டும். அதுவும் பெண்ணாக இருந்தால் மிக நல்லது என யோசித்து ஆர்.எஸ்.எஸ். எடுத்த வியூகம்தான் தீபா. ஏற்கனவே அரசியலில் அவர் குதித்து, அவருடைய தவறான அணுகு முறையாலும், ஜீரணிக்கவே முடியாத எதிர்பார்ப்புகளாலும், அவரைச் சுற்றி நடந்த விரும்பத்தகாத வில்லங்கங்களாலும் தீபாவால் அரசியலில் நிலைத்து நிற்க முடியவில்லை.
 

admk

 


இதனால் தீபா விசயத்தை சில காலம் தள்ளி வைத்தது ஆர்.எஸ்.எஸ். குறிப்பாக, சங்கரமடம். தற்போது சட்டமன்ற தேர்தலுக்கான காலம் நெருங்கி வருவதால் இரண்டாவது இன்னிங்ஸாகக் கையிலெடுக்கப்பட்டிருக்கிறார் தீபா. ஜெயலலிதாவின் வாரிசு என்கிற சட்டப்பூர்வ அடையாளம் இருந்தால் நல்லது என எதிர்பார்த்த நிலையில், சட்டரீதியாகவே தீபா, தீபக் தான் வாரிசாக வர முடியும் என்பதால், உயர்நீதிமன்றத்தின் தற்போதைய பிரகடனம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் திட்டத்திற்கு வலு சேர்த்துள்ளது'' எனச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

மேலும் விசாரித்தபோது, "ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு மட்டுமல்ல, அ.தி.மு.க.வின் வாரிசாகவும் தன்னை அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்கிற எதிர்கால திட்டத்தில் இருக்கிறார் தீபா. மூத்த வழக்கறிஞருடனான சந்திப்பின்போது இத்தகைய ஆசையை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார் தீபா. அந்தச் சந்திப்பில், அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டால் அதனை எதிர்த்து என்ன மாதிரி சட்டபோராட்டங்களை நடத்துவது என்பதையும், அரசியல் ரீதியாக எப்படிப்பட்ட காய்களை நகர்த்துவது என்பதையும் விவாதித்துள்ளனர்.

அப்போது, அ.தி.மு.க.வில் இணைவதற்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பு வந்தது. கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி கொடுப்பதாகவும் அ.தி.மு.க. தலைவர்கள் உங்களுக்கு வாக்குறுதி தந்தனர். இதைப் பயன்படுத்தி கட்சிக்குள் நுழைந்திருக்க வேண்டும். அப்படி நுழைந்திருந்தால் வாரிசு உரிமையைக் கட்சிக் குள்ளும் உருவாக்கியிருக்க முடியும். ஆனால், அதை விட்டு விட்டு முதல்வர் நாற்காலியை நீங்கள் குறி வைத்ததுதான் உங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவு. நடந்ததை விட்டுத்தள்ளுங்கள்.

தற்போது நீதிமன்றமே, நீங்கள் தான் வாரிசு எனச் சொல்லியிருப்பது உங்களுக்குப் பலம். மேல்முறையீட்டில் அரசுத் தரப்பில் என்ன மாதிரியான நடவடிக்கைகளை சட்டரீதியாக முன்னெடுக்கிறார்கள் என்பதை ஆராய்ந்து நாமும் நடவடிக்கை எடுப்போம். அரசியல்ரீதியாக பா.ஜ.க.வின் தேசிய தலைமையின் உதவியை நாடுங்கள். அ.தி.மு.க.வில் அரசியல் செய்ய அவர்கள் வழியமைத்து தருவார்கள் என அட்வைஸ் செய்திருக்கிறார் மூத்த வழக்கறிஞர். இந்தச் சந்திப்பின் பின்னணியில் சங்கரமடம் இருப்பதால் தெம்பாக இருக்கிறார் தீபா'' என்றும் விவரிக்கின்றனர் உளவுத்துறையினர்.
 

http://onelink.to/nknapp


ஜெயலலிதாவின் அசையும், அசையா சொத்துகள் என்னென்ன இருக்கின்றன? எங்கெங்கு இருக்கின்றன? என்பதைத் திரட்டி வரும் தீபா, ஆர்.எஸ். எஸ். மற்றும் பா.ஜ.க.வின் ஆதரவுகளுடன் ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு மட்டுமல்ல அவரின் அரசியல் வாரிசாகவும் அதிரடி கிளப்பி அ.தி.மு.க.வுக்குள் நுழைவதே தீபாவின் எதிர்கால திட்டமாக இருக்கிறது. இதுகுறித்து கருத்தறிய அவரது மொபைலில் தொடர்பு கொண்டபோது நமது லைனை அவர் அட்டெண்ட் பண்ணவில்லை. அவர் தனது கருத்துகளைத் தெரிவித்தால் அதனை வெளியிட நக்கீரன் தயாராக உள்ளது.


 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.