Skip to main content

தப்பிக்க நினைக்கும் எடப்பாடி... பாஜக கையில் இருக்கும் முடிவு... கோபத்தில் எதிர்க்கட்சியினர்!

Published on 24/02/2020 | Edited on 24/02/2020

ராஜீவ் படுகொலை வழக்கின் சிறைவாசிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து தமிழக சட்டமன்றத்தில் காரசாரமான விவாதத்தை நடத்தியது தி.மு.க. இந்த நிலையில், அவர்களின் விடுதலை குறித்து மீண்டும் தனது நிலைப்பாட்டை மாற்றி அதிர்ச்சியை தந்திருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு.

 

admk



நீண்ட வருடங்களாக சிறைக் கொட்டடியில் தவிக்கும் 7 பேரின் விடுதலையை மாநில அரசே அதன் அதிகாரத்தை பயன்படுத்தி முடிவு செய்துகொள்ளலாம் என தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். இதன் தொடர்ச்சியாக, 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநர் பன்வாரிலாலுக்கு அனுப்பி வைத்தது முதல்வர் எடப்பாடி தலைமையிலான தமிழக அமைச்சரவை. அதன் மீது எவ்வித முடிவையும் எடுக்காமல் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கிடப்பில் வைத்திருக்கிறார் ஆளுநர்.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கின் விசாரணை கடந்த 11-ந்தேதி நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில் வந்தபோது, "ஏழுபேர் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி கடந்த 2018-ல் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் தற்போது வரை நிலுவையில் இருக்கிறது'' என தமிழக அரசு சார்பில் முன் வைக்கப்பட்டது.
 

issues



அதனை உற்றுக் கவனித்த நீதிபதிகள், "ஆளுநர் என்பவர் ஒரு அரசின் பிரதிநிதி. உயர் அதிகாரம் படைத்தவர். இந்த விவகாரத்தில் அவருக்கு எப்படி நாங்கள் அழுத்தம் கொடுக்க முடியும்? கவர்னருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. தாங்கள் பரிந்துரைத்த தீர்மானத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என ஆளுநரிடம் மாநில அரசுதான் கேட்க வேண்டும். ஏழு பேர் விடுதலை தொடர்பான கோப்புகள் கவர்னரிடம் ஏன் இவ்வளவு காலம் நிலுவையில் உள்ளது? அதன் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்த அறிக்கையை 2 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டனர்.

இந்தச் சூழலில்தான், 7 பேர் விடுதலை விவகாரம் மீண்டும் சூடு பிடிக்க, சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. இது குறித்து சட்டப் பேரவையில் 19-ந்தேதி கேள்வி எழுப்பிய தி.மு.க.வின் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், "தர்மபுரி பஸ் எரிப்பில் மாட்டிக்கொண்ட அ.தி.மு.க. கட்சிக்காரர்களை உடனடியாக விடுதலை செய்த இந்த அரசு, ஏழு பேர் விடுதலையில் மெத்தனமாக இருக்கிறது'' என குற்றம்சாட்டினார்.

 

dmk



அப்போது சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், "ஏழு பேரும் விடுதலை செய்யப்பட வேண்டு மென்பதுதான் இந்த அரசின் கொள்கை. அதனால்தான் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டதுமே அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரைத்திருக்கிறோம். அவர்களின் விடுதலையில் அரசுக்கு உரிய அதிகாரம் முழுமையாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த விவகாரத்தில் கவர்னர் முடிவெடுப்பதற்கு கால நிர்ணயம் செய்யப்படவில்லை. இருந்தாலும் நல்ல முடிவை விரைந்து எடுப்பார் என்கிற நம்பிக்கை இருக்கிறது'' என தெரிவித்தார்.

 

dmk



இதில் திருப்தியடையாத தி.மு.க. தலைவரும் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், "கவர்னர் ஏன் முடிவெடுக்கவில்லை என கேட்கும் அதிகாரம் அரசுக்கு இருப்பதாக உச்சநீதிமன்றம் சொல்லியுள்ள நிலையில், கவர்னரிடம் கேள்வி எழுப்பினீர்களா? முடிவெடுக்க வலியுறுத்தும் சூழ்நிலையை எடுத்தீர்களா? என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனால் பேரவையில் வாதங்கள் சூடுபிடித்தன. ஒரு கட்டத்தில், "கவர்னர் நிச்சயம் நல்ல முடிவை எடுப்பார். இதே கருத்தைத்தான் மத்திய அரசும் சொல்லியிருக்கிறது. அதனால் நல்ல முடிவு வரும். அந்த நம்பிக்கை இருக்கிறது'' என்றார் முதல்வர் எடப்பாடி. இதனையடுத்து சபை அமைதியானது.


பேரவையில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளிடையே அவர்களின் விடுதலை சாத்தியமாகும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தாலும், இரண்டு வாரத்துக்குள் அவர்களின் விடுதலை குறித்த முடிவை தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், கவர்னரின் முடிவை தெரிந்து கொள்ள எவ்வித அக்கறையையும் காட்டவில்லை எடப்பாடி அரசு.


அதேசமயம், "கவர்னர் முடிவெடுக்க காலதாமதம் செய்வதால் நாங்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறோம்'' என்பதை சுட்டிக்காட்டி நளினி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் 20-ந்தேதி வந்தபோது, "சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் சிறைத்தண்டனை பெற்றவர்களின் விடுதலை குறித்து மத்திய அரசின் பரிந்துரை இல்லாமல் விடுதலை செய்ய முடியாது. அவர்களின் விடுதலை குறித்த தமிழக அரசின் அமைச்சரவை தீர்மானமும், அவர்களது பரிந்துரைகளும் வெறும் பூஜ்ஜியம்தான். விடுதலை செய்ய எந்த அதிகாரமும் தமிழக அரசுக்கு கிடையாது என கடுமையாக வாதிட்டார் மத்திய அரசு வழக்கறிஞர் ராஜகோபால். இந்த வாதம் வழக்கறிஞர்களிடம் ஏக அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நடராஜன், கவர்னருக்கு பரிந்துரைப்பதோடு எங்களின் கடமை முடிந்துவிட்டது. அதனால் கவர்னர்தான் முடிவெடுக்க வேண்டும். இதில் நாங்கள் தலையிட முடியாது'' என தெரிவித்ததோடு அமைதியானார். இதனால் மேலும் மேலும் அதிர்ச்சிகள் அதிகரிக்க, மத்திய அரசு வழக்கறிஞர் கூறுவது சரி அல்ல. அவர் பேசுவது நீதிமன்ற அவமதிப்பாகும். அரசியல் சாசனத்துக்கும் எதிரானது. அமைச்சரவையின் பரிந்துரைகளை கவர்னர் ஏற்க வேண்டும்'' என வலியுறுத்தினார் நளினியின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன். இதனையடுத்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்திருக்கிறது உயர்நீதிமன்றம்.

இதே நீதிமன்றத்தில் இதே வழக்கின் முந்தைய விசாரணையின் போது, "இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி தேவையில்லை. ஆளுநரே சுதந்திரமாக முடிவெடுக்கலாம்'' என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது, மத்திய அரசின் பரிந்துரை இல்லாமல் முடிவெடுக்க முடியாது என அவர் தெரிவித்திருப்பது 7 பேர் விடுதலையை எதிர்பார்க்கும் அரசியல் கட்சிகளையும் ஜன நாயக அமைப்புகளையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

இதன் பின்னணிகள் குறித்து விசாரித்தபோது, "ஏழு பேர் விடுதலையில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வது விந்தையாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு, மாநில அரசு, ராஜ்பவன் மூன்றுமே அரசியல் விளையாட்டை ஆரம்பித்துள்ளன. அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம் "விடுதலைக்கு நாங்கள் எதிரி இல்லை' என காட்டிக்கொள்கிறது எடப்பாடி அரசு. அமைச்சரவையில் முடிவெடுத்தாலும் கவர்னரின் முடிவில்தான் அவர்களின் விடுதலை இருக்கிறது என அரசுக்கு தெரியும் என்பதால், கவர்னரை சுட்டிக்காட்டி எடப்பாடி தப்பித்துக்கொள்ள முயற்சிக்கிறார்.

அரசுக்கு அக்கறை இருக்குமானால், "எனது அமைச்சரவையின் பரிந்துரை மீது என்ன முடிவு எடுத்தீர்கள்? ஏன், காலதாமதம்?' என கேள்வி கேட்க எடப்பாடி அரசால் முடியும். சட்ட ரீதியாக இதற்கு இடமில்லையெனினும் தார்மீக அடிப்படையில் கேள்வி கேட்க உரிமை இருக்கிறது. ஆனால், அந்த உரிமையை பயன்படுத்த அரசு நினைக்கவில்லை. அதேபோல, இந்த விவகாரத்தில் சுயமாக முடிவெடுக்க கவர்னருக்கு அதிகாரமிருந்தாலும் மத்திய அரசின் விருப்பத்தை அறிந்துகொள்ளவே ஆர்வமாக இருக்கிறது ராஜ்பவன்.

மத்திய அரசோ, 7 பேரையும் விடுதலை செய்வதில் என்ன அரசியல் ஆதாயம் இருக்கிறது என திட்டமிடுகிறது. அதனாலேயே, அவர்களின் விடுதலைக்கு தற்கால தடையை கவர்னர் மூலம் ஏற்படுத்துகிறது. குறிப்பாக, மத்திய பா.ஜ.க. அரசு நினைத்தால் மட்டுமே அவர்களின் விடுதலை சாத்தியமாகும் என்கிற எதிர்பார்ப்பும் சூழலும் தமிழகத்தில் பரபரப்பாக இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. அதற்காகத் தான் நீதிமன்றங்களின் மூலம் அதிர்ச்சிகளையும், ஆனந்தத்தையும், பரபரப்புகளையும் மாற்றி மாற்றி உருவாக்கி வருகின்றனர் மத்திய ஆட்சியாளர்கள்.

இந்த விவகாரத்தில் இரண்டு திட்டங்களை வைத்திருக்கிறது டெல்லி. அதாவது, எடப்பாடி ஆட்சி நீடித்தால், சட்டமன்றத் தேர்தல் நெருக்கத்தில் ஆளுநருக்கு சில உத்தரவுகள் பறக்கும். அப்போது, அவர் டெல்லிக்கு பறப்பதும் சென்னைக்குத் திரும்புவதுமான சூழலை உருவாக்கி அதன்பிறகு விடுதலைக்கான கோப்பில் கையெழுத்திடுவார்.

ஒருவேளை எடப்பாடி ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்துவதன் மூலம் தமிழகத்தில் கவர்னர் ஆட்சி அமையும் சூழலை உருவாக்கி அப்போது விடுதலை கோப்பில் கவர்னர் கையெழுத்திடுவது போன்ற நிலையை ஏற்படுத்துவது என்கிற 2 திட்டங்களை போட்டு வைத்திருக்கிறது. அதனால், தேர்தலுக்காக அவர்களின் விடுதலையை தடுத்து நிறுத்தியிருக்கும் மத்திய அரசு, தேர்தல் சமயத்தில் மட்டுமே தடையை உடைக்கும். அதுவரை இப்படி கண்ணாமூச்சி ஆட்டங்களை மூன்று தரப்புமே ஆடிக்கொண்டிருக்கும்'' என்கின்றன டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.

இந்த விவகாரத்தில் இப்படியான சூழல்கள் உருவாகி வரும் நிலையில், 7 பேர் விடுதலையும் ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களின் வழக்கும் ஒரே திசையில் பயணிக்கின்றன. அதாவது, ஒரு பிரச்சனையின் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என்கிற காலக்கெடுவிற்கான சட்ட விதிகள் எதுவும் கவர்னருக்கும், சட்டமன்ற சபாநாயகருக்கும் கிடையாது. குறிப்பிட்ட பிரச்சனை மீது எவ்வித முடிவையும் இவர்கள் எடுக்காத நிலையில், எடுத்தே தீர வேண்டும் என அவர்களுக்கு சட்ட ரீதியிலான எவ்வித அதிகார நெருக்கடியை தர முடியாது. அதனால், காலநிர்ணயம் குறிப்பிடப்படவில்லை என்கிற விதியை சாதகமாக பயன்படுத்தி கவர்னரும் சபாநாயகரும் தங்களின் ஜனநாயக கடமையிலிருந்து விலகி நிற்கிறார்கள்.


 

 

Next Story

சேலம் வரும் பிரதமர்; ட்ரோன்கள் பறக்க தடை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
nn

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதே தேர்தல் பரப்புரைகளுக்கான தீவிர முயற்சிகளை அரசியல் கட்சிகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று சேலத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பாமக, பாஜக கூட்டணியில் சேர்ந்திருக்கும் நிலையில், இன்று நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ், ஏனைய கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

கோவையில் இருந்து சேலத்திற்கு விமானம் மூலம் பிரதமர் மோடி வர இருக்கிறார். அவரது வருகையை முன்னிட்டு சேலத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் சேலம் வருவதையொட்டி நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல், திருச்செங்கோடு, வையப்பமலை வழியாக சேலம் செல்லலாம் என போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரதமர் வருகையை ஒட்டி 11 மணிக்கு பிறகு சேலம் விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 மணிக்கு பிறகு சேலம் விமான நிலையம் சிறப்பு பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டிற்கு வர இருக்கிறது. இதனால் சேலம் விமான நிலையத்திற்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Next Story

“கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை மதிக்கக் கூடிய ஒரே இயக்கம் திமுக தான்” - பாலகிருஷ்ணன்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 DMK is the only movement that can respect the candidates of the coalition party says Balakrishnan

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி சார்பாக போட்டியிடும் சி.பி.எம் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்யும் கூட்டம், மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் மாளிகையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளரும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சக்கரபாணி, சி.பி.எம்.கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, கனகராஜ், பாண்டி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் வரவேற்று பேசினார்.

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் சிபிஎம். கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அறிமுகம் செய்துவிட்டு அவரை வாழ்த்தி பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது வரலாறு காணாத வெற்றியை பெற்றோம். அதுபோல இம்முறையும் மாபெரும் வெற்றி பெறவேண்டும். கூட்டணி தர்மத்தை மதிக்க கூடிய கலைஞர் வழியில் வந்த கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் வழியில், திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் சிபிஎம் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை மாபெரும் வெற்றிபெற செய்வதன் மூலம் நாம் நம் கழகத்தலைவரின் பெருமைக்கு எடுத்துக்காட்டாக தேர்தல் பணியாற்ற வேண்டும். நாட்கள் குறைவாக இருக்கின்றன. கூட்டணி கட்சியின் சின்னத்தை ஒவ்வொரு இல்லம்தோறும் சென்றடையும் வண்ணம் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும். இங்கு போட்டியிடும் வேட்பாளரின் வெற்றி இந்திய அளவில் பேசும்படி செய்யும் வண்ணம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டும்” என கூறினார்.

அடுத்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, “திண்டுக்கல்லில் சிபிஎம் கட்சி சார்பாக சச்சிதானந்தம் போட்டியிடவில்லை. தலைவரும் முதல்வருமான ஸ்டாலின்தான் போட்டியிடுகிறார். அதுபோல் அண்ணன் அமைச்சர் ஐ.பெரியசாமி தான் போட்டியிடுகிறார் என நினைத்து நீங்கள் ஒவ்வொருவரும் தேர்தல் பணியாற்ற வேண்டும். நாட்கள் குறைவாகத்தான் இருக்கின்றன. சின்னம் வரைவதில் முக்கியமில்லை. அந்த சின்னத்தை மக்கள் மனதில் நிறுத்துவதில்தான் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். எப்படி ஸ்டாலின குரல் திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து இல்லங்களிலும் ஒலித்ததோ, அதுபோல சிபிஎம் கட்சியின் சின்னமும் அனைத்து இல்லங்களிலும் தெரியும் வண்ணம் தேர்தல் பணியாற்ற வேண்டும். மாபெரும் வெற்றியை நாம் நமது முதல்வருக்கு தெரிவிக்கும் வண்ணம் திமுக நிர்வாகிகள் இன்றே களப்பணியை தொடங்க வேண்டும்” என்று கூறினார்.

 DMK is the only movement that can respect the candidates of the coalition party says Balakrishnan

இறுதியாக சிபிஎம் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசும் போது, “கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை மதிக்கக்கூடிய ஒரே இயக்கம் திமுக. அதற்கு காரணம் எங்கள் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சச்சிதானந்தம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு கேட்க தொடங்கினால் காலநேரம் செலவாகும் என்பதை கருத்தில் கொண்டு தேர்தலில் வெற்றியை இலக்காக செயல்பட வைக்க வேண்டும் என்ற நோக்கில் அமைச்சர் அண்ணன் ஐ.பெரியசாமி அவர்களும், உணவு வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்களும் குறுகிய காலத்தில் இந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தின் மூலம், திமுக நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்துவைத்திருப்பது அவர்களின் தேர்தல் பணியின் சுறுசுறுப்பை எடுத்துக்காட்டுகிறது. திண்டுக்கல்லில் சிபிஎம் வேட்பாளர் பெறும் வெற்றி இந்திய கூட்டணியை ஆட்சி பீடத்தில் அமர வைக்கும் வெற்றியாக இருக்கும்.

தமிழக ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறார். உச்சநீதிமன்றமே பொன்முடி தண்டனையை நிறுத்தி வைத்தபோது, ஆளுநர் ஏன் பதவி பிரமாணம் செய்து வைக்காமல் இருக்கிறார் என்றால், அதற்கு காரணம் மத்தியில் ஆளும் மோடி அரசின் ஜனநாயக விரோதப் போக்கே. இங்கு போட்டியிடும் வேட்பாளரின் வெற்றி தமிழக முதல்வருடைய வெற்றி. அமைச்சர் ஐ.பெரியசாமியின் வெற்றி;  அமைச்சர் சக்கரபாணியின் வெற்றி. பம்ரபமாய் சுழன்று தேர்தல் பணியாற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமாரின் வெற்றி என்று திமுக மற்றும் சிபிஎம். கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் நினைத்து வெற்றிக்காகப் பாடுபட வேண்டும்” என்று கூறினார்.