Skip to main content

எல்லாமே எனக்கு தெரியும். இனியும் நீங்க திருந்தவில்லை என்றால்...அமைச்சரிடம் கோபப்பட்ட எடப்பாடி!

Published on 12/08/2019 | Edited on 12/08/2019

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டனை நீக்க வைத்தது, அவர் வெளிப்படையாகக் குற்றம்சாட்டிப் பேசிய வீடியோதான் எனச் சொல்லப்பட்டாலும், உண்மைக் காரணத்தை வெளிப்படுத்தும் வகையில் வெளியானது, அவர் பதவிப் பறிப்புக்குப் பிறகான அந்த ஆடியோ. மணிகண்டனின் முன்னாள் பி.ஏ. காந்தி. அப்புறம் பி.ஏ.வான செல்வராஜ் இருவரும், அமைச்சரின் பதவிப் பறிப்புக்குப் பிறகு இப்படி பேசிக் கொண்டார்கள். 

 

admk



செல்வராஜ் : ஐயா வணக்கம். சொல்லுங்க.

காந்தி : முடிச் சிட்டீங்கல்ல. சந்தோஷமா?

செல்வராஜ் : என்ன முடிச்சிட்டீங்களா, சந்தோசமா? ஹலோ...

காந்தி : போட்ட ஆட்டத்துக்கு முடிச்சிட் டீங்களா அவரை?

செல்வராஜ் : நாங்க ஆட்டம் போட்டோம் நீங்க ஆட்டம் போடலை?

காந்தி : என்ன ஆட்டம் போட்டோம்?

செல்வராஜ் : நான் என்ன ஆட்டம் போட்டேன் நீ கண்ட?

காந்தி : என்ன ஆட்டம் போடலை?

செல்வராஜ் : நீ என்ன ஆட்டம் போடலை... உன்னை மாதிரி ஊரெல்லாம் ஏமாத்தி ஒளிஞ்சிருக்கேனா?

காந்தி : உன்னை மாதிரி பொம்பள வேலையையா நான் பாத்தேன். உழைச்சோமய்யா... அவருக்காக நைட்டும், பகலுமாக உழைச்சோம். உன்னை மாதிரி...

என இருவரும் மாறி மாறி தொடர்ந்து பேசுகின்றனர். ஒன்றரை நிமிட அந்த ஆடியோ கெட்ட வார்த்தைகளில் முடிகிறது. பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல பதவி நீக்கப்பட்ட மணிகண்டனின் பலவீனங்களை இந்த ஆடியோ அம்பலப்படுத்தியுள்ளது. ஜெ.வால் 2016-ல் தகவல் தொழில்நுட்ப மந்திரியாக்கப்பட்டவர் டாக்டர் மணிகண்டன். பதவிக்கு வந்ததும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கேபிள் நடத்துவதற்கான எம்.எஸ்.ஓ.வை தி.மு.க. நகரச் செயலாளர் கார்மேகத்தின் மருமகனுக்கு கொடுத்தது, மாலை நாளிதழின் தொலைக்காட்சிக்காக அதன் அதிபரிடம் வாங்கிய பல "சி'க்கள் ஆகியவற்றை அறிந்ததும் மா.செ. பதவியிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா. அமைச்சர் பதவி தொடர்ந்தது. ஜெ. உடல்நலன் குன்றி, மரணமடைய எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் புகுந்து விளையாடியது அமைச்சர் தரப்பு. அதனால், சொந்த மாவட்டத்திலேயே எதிர்ப்பு அதிகமானது.

 

admk



ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 ஒன்றி யங்கள், 7 பேரூராட்சிகள் மற்றும் 4 நகராட்சிகள் இதில், திருவாடனை, திருப்புல்லாணி, போகளூர், பரமக்குடி, நயினார்கோவில், கமுதி, கடலாடி, சாயல்குடி ஒன்றியச் செயலாளர்களும், ராமநாதபுரம், பரமக்குடி, கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் நகரச் செயலாளர்களும் மந்திரிக்கு எதிர் அணிதான் தற்பொழுது வரை.. ஐ.டி. மந்திரியாக ஆனவுடனே அனலாக் முறையிலிருந்த கேபிள் டி.வி.யினை செட்டாப் பாக்ஸ் மூலம் பார்த்துக்கொள்ளலாம் என செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க ஒப்பந்தம் கோரப்பட்டது. இதில் ஞயப எனப்படும் செட்டாப் பாக்ஸினை தேர்வு செய்து, ஒரு செட்டாப் பாக்ஸிற்கான விலை ரூ.1850 என தீர்மானிக்கப்பட்டு, அந்த விலையினை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு மொத்தமாக கொடுத்துவிடுவதாகவும், மக்களுக்கு இலவச முறையில் விநியோகம் என அறிவித்ததால் சேனல் பேக்கேஜுடன் மாதம் ரூ.35 இணைத்து வாங்குவதெனவும் தீர்மானித்து தனக்கு வேண்டப்பட்டவரிடம் ஒப்பந்தத்தைக் கொடுத்தது மந்திரி தரப்பு. ஏறக்குறைய 35 லட்சத்திற்கும் அதிகமான ஞயப செட்டாப் பாக்ஸ்கள் தற்பொழுது வரை புழக்கத்திலுள்ளதாக புள்ளிவிபரம் கூறுகின்றது.


"இந்த ஒப்பந்தத்தால் ரூ.200 சி வரை கை மாறியது. அது சிங்கப்பூரிலுள்ள வங்கி ஒன்றில் உறவினர் பெயரில் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. இது அமலாக்கத்துறையால் மோப்பம் பிடிக்கப்பட்டு, இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டனர். உறவினருக்கும் சம்மன் போனது. இதையறிந்த முதல்வர், நெருக்கடியைத் தவிர்க்க அரசு கேபிள் கழகத் தலைவராக தனக்கு தோதான உடுமலை ராதாகிருஷ்ணனை நியமித்தார். இது குறித்து எடப்பாடியிடம் மணிகண்டன் குரல் உயர்த்தியபோது பதிலுக்கு, "எல்லாமே எனக்கு தெரியும். இனியும் நீங்க திருந்தவில்லை என்றால் நான் ஒரு முடிவுக்கு வந்தாகணும். வருகின்ற வியாழனன்று சென்னையில் சந்தித்து இதுபற்றி பேசலாம்' என்றிருக்கின்றார்.

அதற்கு முன், " 2 லட்சம் கனெக்ஷன் கொண்ட தனியார் நிறுவனத்தை வைத்திருக்கும் அமைச்சர் உடுமலை, கேபிள் கழக தலைவராகிவிட்டார். அவர் முதலில் தன்னிடம் இருக்கும் கனெக்ஷன்களை அரசு கேபிளுக்கு வழங்க வேண்டும். அவரை நியமிப்பது பற்றி முதல்வர் என்னிடம் எதுவும் சொல்ல வில்லை' என பிரஸ்மீட்டில் போட்டுத்தாக்க மந்திரி பதவியிலிருந்து நீக்கப்பட்டார் மணிகண்டன்''என்கின்றனர் விபரமறிந்தவர்கள். ஆடம்பரத்திற்கும் அந்தரங்கத்திற்கும் பயன்படுத்த நினைத்த அமைச்சர் பதவி எனும் ஃப்யூஸ் பிடுங்கப்பட்டு, பவர் இழந்திருக்கிறார் மணிகண்டன்.
 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.