Skip to main content

இடைக்கால பொதுச்செயலாளர் ஆகிறார் இ.பி.எஸ்.! ஜூலை 11- ல் அதிர்ச்சி வைத்தியம் யாருக்கு?

Published on 05/07/2022 | Edited on 05/07/2022


 

EPS becomes interim general secretary! July 11 - Who is traumatized?

 

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமைக்கான குடுமிப்பிடி சண்டை உச்சமடைந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக அறிவிக்க அவருடைய ஆதரவாளர்கள் தீர்மானித்துள்ளனர். வரும் ஜூலை 11- ஆம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக ர.ர.க்கள் கூறுகின்றனர். 

 

ஜெ.,மறைவுக்குப் பிறகு, கடந்த ஐந்து ஆண்டுகளாக ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பேற்று கட்சியை வழி நடத்தி வருகின்றனர். இனியும் இரட்டைத் தலைமை எனும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருந்தால், கட்சியை முன் நகர்த்திச் செல்வதில் தொய்வு ஏற்படும் என்பதை உணர்ந்த முக்கிய நிர்வாகிகள், ஒற்றைத் தலைமைக்கான முழக்கத்தை திடீரென்று எழுப்பினர். எடப்பாடி பழனிசாமியின் கூடாரத்தில் இருந்து தான் இந்த முழக்கம் திட்டமிட்டு கிளப்பி விடப்பட்டது. 

 

ஒற்றைத் தலைமைக்கான முழக்கம், கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, பெரியகுளத்தாரை ரொம்பவே ஆட்டம் காணச் செய்தது. பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமின்றி மாவட்டச் செயலாளர்களிலும் பெரும்பான்மை ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதால், அவர்தான் ஒற்றைத் தலைமைக்கான ஒரே சாய்ஸ் என்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள். குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் உள்பட பலரும் இபிஎஸ்ஸை ஆதரிப்பதோடு, ஓபிஎஸ்ஸை வெளிப்படையாகவே தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர். 

 

இந்த பரபரப்புக்கு இடையே, கடந்த ஜூன் 23- ஆம் தேதி, சென்னையில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில், ஏற்கனவே நிறைவேற்றுவதற்காக முடிவு செய்து வைக்கப்பட்டிருந்த 23 தீர்மானங்களையும் ஒரே வரியில் நிராகரித்த எடப்பாடி தரப்பினர், புதிய மற்றும் நிரந்தர அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை நியமித்தும், அடுத்த பொதுக்குழுவை ஜூலை 11- ஆம் தேதி கூட்டப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினர். 

 

இதனால் உச்சக்கட்ட அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன் ஆகியோர் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினர். 

 

இந்நிலையில், பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர், ஜூலை 11- ஆம் தேதி நடக்க உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும், இபிஎஸ், சி.வி.சண்முகம், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, தமிழ்மகன் உசேன் ஆகியோர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். 

 

இந்த வழக்கு, திங்கள்கிழமை (ஜூலை 4), நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ''வரும் ஜூலை 11- ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு தடை கோரி, தனி நீதிபதியிடம்தான் செல்ல வேண்டும். உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டு உள்ளதால், நாங்கள் எந்த உத்தரவையும் இப்போது பிறப்பிக்க முடியாது. 

 

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரும் ஜூலை 7- ஆம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்,'' என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர். ஒருபுறம் வழக்கு, மேல்முறையீடு என ஓ.பி.எஸ். தரப்பு முட்டுக்கடைகளை போட முயற்சித்தாலும், இதைப் பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலைப்படாமல் பொதுக்குழுவை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இ.பி.எஸ். தரப்பு மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 

 

திருவள்ளூர் மாவட்டம், வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில், ஜூலை 11- ல் பொதுக்குழுவை நடத்த விரிவான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.பொதுக்குழுவில் விவாதிக்கப்பட வேண்டிய பொருண்மை விவரங்களை 2432 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கடிதமாக கொடுத்துள்ளனர். இதன் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. 

 

இது தொடர்பாக இலைக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் சிலரிடம் பேசினோம். ''பொதுக்குழுவில் பங்கேற்க உள்ள உறுப்பினர்கள், தங்களுக்கு உரிய அழைப்பிதழ், அடையாள அட்டை ஆகியவற்றை கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். இவற்றில் எதுவொன்று இல்லாவிட்டாலும் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது. 

 

கரோனா பரவல் அச்சம் உள்ளதால், அதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளும் பின்பற்றப்படும். முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்தக் கூட்டத்தில் 16 பொருண்மைகள் குறித்து விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமையை ரத்து செய்து, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொதுச்செயலாளர் பொறுப்பு குறித்து விவாதிக்கப்படும். 

 

முக்கியமாக, அ.தி.மு.க.வை முன்னெடுத்துச் செல்ல, இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்தும் பேசப்பட உள்ளது. இதே கூட்டத்தில், இடைக்கால பொதுச்செயலாளரை நியமித்து விடுவோம். இபிஎஸ்தான் அந்தப் பொறுப்புக்குத் தகுதியானவர். பொதுச்செயலாளர் தேர்தல் குறித்தும் முடிவெடுக்கப்படும். பெரியார், அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் போட இருக்கிறோம். 

 

இவையெல்லாம் கட்சி சார்ந்த சங்கதிகள். எனினும், திமுக அரசை கண்டித்தும் சில தீர்மானங்களை வைத்திருக்கிறோம். குறிப்பாக, அதிமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை ரத்து செய்தது, விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கை கட்டுப்பாட்டுக்குள் வைக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படும்,'' என்கிறார்கள் ர.ர.க்கள். 

 

இது ஒருபுறம் இருக்க, கரோனா பரவலைக் காரணம் காட்டி, பொதுக்குழுவுக்கு ஆளுந்தரப்பில் இருந்து முட்டுக்கட்டைகள் வந்தால் என்ன செய்வது என்பதால், அதற்கும் மாற்றுத் திட்டத்தை வைத்திருக்கிறார்கள் இபிஎஸ் தரப்பினர். 

 

ஒரே இடத்தில் 3 ஆயிரம் பேர் கூடுவதற்கு அரசு தடை விதிக்கும்பட்சத்தில், அந்தந்த மாவட்டத்திலேயே பொதுக்குழு கூட்டத்தை நடத்திக்கொள்ளவும் முடிவு செய்துள்ளனர். அதற்கும் முட்டுக்கட்டை வந்தால், வீடியோ கான்பரன்ஸ் மூலமும் பொதுக்குழுவை நடத்திக்கொள்ளவும் தீர்மானித்து இருக்கிறார்கள். 

 

அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை நியமித்தது செல்லாது என ஓ.பி.எஸ். தரப்பு புது குண்டை போட்டதால், எதற்கு தேவையில்லாத சர்ச்சை என்று இ.பி.எஸ். தரப்பு கருதியதோ என்னவோ, பொதுக்குழுவிற்கான அழைப்புக் கடிதத்தை அவைத்தலைவர் பெயரில் அனுப்பாமல், 'அதிமுக தலைமைக் கழகம்' என்ற பெயரில் மட்டும் அனுப்பி வைத்துள்ளனர். 

 

ஆகமொத்தத்தில், ஜூலை 11- ல், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆவதும், அன்று ஓ.பி.எஸ்.ஸூக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கவும் தயாராகி வருகிறது எடப்பாடி அன்டு கோ. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.