Skip to main content

இவங்களையெல்லாம் ஏன் கூட்டிட்டு வர்றீங்க... விஜயபாஸ்கர் மீது கோபத்தில் பீலா ராஜேஷ்... எடப்பாடியின் திட்டம்!

Published on 20/04/2020 | Edited on 20/04/2020


கரோனாவை வேகமாகச் சோதனை செய்ய 25 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியிருக்கின்றன. சீனாவைச் சேர்ந்த வெண்டர் மேட்ரிஸ் என்கிற கம்பெனியிடம் 50 ஆயிரம் கிட்டுகளுக்கு ஆர்டர் கொடுத்து அதில் 24 ஆயிரம் கிட்டுகள் வந்திருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் 4 லட்சம் கிட்டுகள் வர இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் கரோனா கட்டுப்படுத்தப் பட்டுள்ளது எனச் சொல்லும் சூழ்நிலையில் லட்சக்கணக்கான டெஸ்டிங் கிட்டுகள் எதற்கு எனக் கேள்வி எழுப்புகிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.


இந்த ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் மட்டுமல்ல... பி.பி.இ. எனப்படும் கரோனாவில் இருந்து மருத்துவத்துறை ஊழியர்களைப் பாதுகாக்கும் உடைகள், மாஸ்க்குகள், கைகளைக் கழுவும் சானிடைசர்கள், உயிர் காக்க உதவும் வெண்டிலேட்டர்கள் என ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குத் தமிழக அரசு கரோனாவுக்காக பொருட்களை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளது. அவை மிகவும் தாமதமாக ஒவ்வொன்றாக வந்து சேர்ந்து கொண்டிருக்கிறது.

 

 

admk



ஏன் இந்த நிலை என்று கோட்டையில் உள்ள அதிகாரிகளிடம் விசாரித்தோம். “ஆயிரம் கோடி ரூபாய் ஆர்டரை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்தான் கொடுத்துள்ளார். அவருக்கும் எடப்பாடிக்கும் ஒத்துவரவில்லை. எடப்பாடி ஆயிரம் கோடி ரூபாயில் 150 கோடி ரூபாய் கட்சி நிதியாகத் தர வேண்டும் என்றார். விஜயபாஸ்கரோ 40 கோடி ரூபாய்க்கு மேல் தர முடியாது என மறுத்தார். அதனால் விஜயபாஸ்கரை இந்தக் கொள்முதலில் இருந்து எடப்பாடி கழட்டிவிட்டார். நேர்மையான அதிகாரி எனப் பெயர் பெற்ற உமாநாத் ஐ.ஏ.எஸ். அவர்களை இந்த கொள்முதல் கமிட்டிக்கு தலைவராக நியமித்தார். அவரும் தலைமைச் செயலாளர் சண்முகமும் இணைந்து எந்தக் கம்பெனிகளிடம் எந்தப் பொருட்கள் கிடைக்கும் என ஒரு லிஸ்ட்டைத் தயாரித்து முதல்வரிடம் கொடுத்தனர்.
 

http://onelink.to/nknapp


முதல்வர் அந்த லிஸ்டை அவருக்கு நெருக்கமான நண்பர்களிடம் கொடுத்தார். அவர்கள் குறிப்பிட்ட கம்பெனிகளிடம் பேசினார்கள். அந்தப் பேச்சுவார்த்தையில் 40 சதவிகிதம் வரை விலையில் கமிஷனாகக் கேட்கப்பட்டது. அதில் இழுபறி ஏற்படவே பொருட்கள் வருவது தாமதமானது. தமிழக அரசு ஆர்டர் செய்த அதே சீன கம்பெனிகளிடம் அமெரிக்க அரசும் ஆர்டர் செய்திருந்தது. அமெரிக்காவின் விலை பேச்சுவார்த்தை நேர்மையாக இருக்கவே அவர்களுக்குப் பொருட்களை அனுப்பி விட்டு கமிஷன், கட்டிங் போன்றவற்றில் இழுபறியாக இருந்த தமிழகத்திற்கு கடைசியாக சீன கம்பெனிகள் அனுப்பியது. இதுதான் இந்த பொருட்கள் தாமதமாக வந்ததற்கு காரணம் என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

 

ias



விஜயபாஸ்கர் சுகாதாரத்துறையிலேயே ஒதுக்கப் பட்டவுடன் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷின் கை சுகாதாரத்துறையில் ஓங்கிவிட்டது. தமிழகம் முழுவதும் சுகாதாரப் பணியாளர்கள் கரோனாவை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு உடைகள் இல்லை என்கிற குமுறல் கேட்கிறது.

மருத்துவமனைகளில் பணியாற்றும் சீனியர் டாக்டர்கள் ஒரு வாரம் கரோனா வார்டுகளில் தங்கி சிகிச்சை அளிக்கிறார்கள். அதன் பிறகு அவர்களை நட்சத்திர விடுதிகளில் தமிழக அரசு தங்க வைக்கிறது. அதே நேரத்தில் பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கு தங்கும் வசதிகள் எதையும் தமிழக அரசு செய்து தரவில்லை. நோயாளிகளுக்கு வழங்கப்படும் சத்தான உணவுகள் கூட அவர்களுக்குத் தரப்படுவதில்லை என நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த மருத்துவர் ஒருவர் இந்தத் துறையின் சீனியர் அதிகாரியான உமாநாத் ஐ.ஏ.எஸ்.ஸிடம் புகார் தெரிவித்திருந்தார்.

அவர் அந்தப் புகாரை பீலா ராஜேஷிடம் எடுத்துச் சொல்லி கோவை மருத்துவக் கல்லூரியில் இரண்டு பயிற்சி மருத்துவர்களுக்கு கரோனா நோய் வந்துவிட்டது. அதுபோல போதிய பாதுகாப்பு உடையில்லாமல் பணியாற்றும் இதர மருத்துவர்களுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் வர வாய்ப்பு உள்ளது. இதை நெல்லையைச் சேர்ந்த டாக்டர் ஒருவரே என்னிடம் தெரிவிப்பதாகச் சொன்னார். அந்த நெல்லை டாக்டர் பீலா ராஜேஷ் நடத்திய வீடியோ கான்பரன்ஸிலும் கலந்து கொண்டார். அவரை வீடியோ கான்பரன்ஸில் பார்த்த பீலா ராஜேஷ் டென்ஷன் அடைந்தார். அவர், பீலாவிடம் உமாநாத் ஐ.ஏ.எஸ்.ஸிடம் சொன்ன புகாரை விவரித்தார். உடனே எதுவும் பேசாமல் நீங்கள் வெளியேறுங்கள் என வீடியோ கான்பரன்ஸிலிருந்து அந்த அதிகாரியை வெளியேற்றினார் என விவரிக்கிறார்கள்.

அதேபோல் ஆளும் கட்சி சேனலான நியூஸ் ஜெ.வுக்கு கரோனா அப்டேட் எதையும் தனியாகக் கொடுக்க வேண்டாம் என ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளாராம். திருவெற்றியூர் பகுதியில் கரோனா நோய் பாதிப்புகளை பார்வையிட வந்த அமைச்சர் விஜயபாஸ்கருடன் பத்திரிகையாளர்கள் இணைந்து சென்றார்கள். பத்திரிகையாளர்கள் முன்பே அமைச்சரிடம் இவங்களையெல்லாம் ஏன் கூட்டிட்டு வர்றீங்க என கோபம் காட்டிய பீலாவின் செல்வாக்கைப் பார்த்து பத்திரிகையாளர்கள் வாயடைத்துப் போனார்கள்.


"கரோனா விசஷயத்தில், தமிழக சுகாதாரத்துறையில் நடைபெறும் குளறுபடிகளைத் தெரிந்து வைத்துள்ள நபர் என்ற அடிப்படையில் பீலா ராஜேஷ் எங்காவது அந்தத் தவறுகளைப் பற்றி நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசிவிடுவார் என்கிற மேல்மட்டத்தின் பயம்தான் சுகாதாரத் துறைச் செயலாளரின் செல்வாக்கு உயர்வதற்கு காரணம்'' என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

இதற்கிடையே பீலாவின் நண்பரான ஊட்டி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, தெங்கு மரகடா என்கிற கிராமத்தில் டெங்கு காய்ச்சலால் பலியான மருத்துவருக்கு கரோனா பாதிப்பு இருக்கலாம் என ஆளும்கட்சிக்கு நெருக்கமான நியூஸ் ஜெ செய்தி வெளியிட்டதற்கு எதிராக அவர் நேரடியாக அந்த சேனல் அமைந்திருக்கும் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பிறகு முதல்வர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் அவசர அவசரமாக தலையிட்டு அந்தப் புகார் சமரசமாக முடித்துக்கொள்ளப்பட்டது என எழுதி வாங்கிய சம்பவமும் நடைபெற்றுள்ளது.
 

http://onelink.to/nknapp


ஒரு பக்கம் கரோனா பணக்கார நோய், அது தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என முதல்வர் பேசி வருகிறார். மறுபக்கம் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இன்னொரு பக்கம் அதிகாரிகளின் ஆதிக்கம் என கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகத்தில் பெரிய கூத்தே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.