Skip to main content

ஓபிஎஸ்ஸிற்கு தெரியாமல் பதவி பறித்த இபிஎஸ்! பயத்தில் ஜூனியர் அமைச்சர்கள்!   

Published on 12/08/2019 | Edited on 12/08/2019

தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனின் பதவி பறிக்கப்பட்டதில் முதல்வர் எடப்பாடியை கலவரமாக பார்க்கத் துவங்கியுள்ளனர் ஜூனியர் அமைச்சர்கள். தமிழக அரசியல் களமும் இந்த நடவடிக்கையை அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்க்கிறது. சீனியர் அமைச்சர்களுக்கு நெருக்கமான அ.தி.மு.க.வினரிடம் விசாரித்தபோது, "தகவல் தொழில்நுட்பத் துறையின் அமைச்சரான மணிகண்டன், ஜூனியர் அமைச்சர் என்பதால் துறையின் உயரதி காரிகள் இவரை மதிப்பதே இல்லை. துறையின் டெண்டர்களில் குறைந்தபட்ச தொகை மட்டுமே மணிகண்டனுக்கு தரப்பட்டு, பெருந்தொகை அதிகாரிகளால் பிரித்துக் கொள்ளப்படும். தோதான அதிகாரிகள் வேண்டுமென எடப்பாடியிடம் மணிகண்டன் புலம்பியும் நடக்கவில்லை.

 

admk



இந்த நிலையில்தான், தனது துறையின் கட்டுப்பாட்டி லுள்ள அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேசனின் சேர்மன் பதவியில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணனை நியமித்தார் எடப்பாடி. அதுவரையில் அந்த பதவி மணிகண்டனின் துறைச் செயலாளர் சந்தோஷ்பாபுவிடம் இருந்தது. தன்னிடம் கலந்தா லோசிக்காமல் தனது கட்டுப் பாட்டிலுள்ள ஒரு நிறுவனத்துக்கு மற்றொரு அமைச்சரை தலைவராக நியமிப்பதா? என எடப்பாடி மீது கோபப்பட்டார் மணிகண்டன். அதற்கேற்ப அவரது உதவியாளர்களும் தூண்டிவிட்டனர்.

 

admk



சேர்மன் பதவியில் உடுமலை ராதாகிருஷ்ணன் நிய மிக்கப்பட்டபிறகு, எடப்பாடியை சந்தித்த மணிகண்டன் இது குறித்து முறையிட்டுள்ளார். "அரசு ஆபரேட்டர்கள் பலரும் அரசின் இலவச செட்டாப் பாக்ஸ்களை வாங்கி வைத்துக் கொண்டு தனியார் சேனல்களின் வர்த்தகத்துக்குத்தான் உதவியாக இருக்கிறார்கள். அரசுக்கு இதனால் நட்டம். அதனால் நிறுவனத்தை ஒழுங்குபடுத்த வேண்டியிருக்கிறது. ஏற்கனவே இந்த நிறுவனத்துக்கு சேர்மனாக இருந்த உடுமலைக்கு அனுபவம் இருப்பதால் அவரை நியமிக்க வேண்டியிருந்தது' என தெளிவு படுத்தியிருக்கிறார் எடப்பாடி. அப்போது, குரலை உயர்த்திப் பேசிய மணிகண்டன், சில தடித்த வார்த்தைகளை முணுமுணுத்துக் கொண்டே கோபத்துடன் வெளியேறினார். இதன் பிறகு, "கேபிள் விவகாரம் குறித்து என்னிடம் மட்டுமே விவாதிக்க வேண்டும், அமைச்சர் மணி கண்டனிடம் விவாதம் நடத்தக் கூடாது' என்றும், "கேபிள் கார்ப்பரேசனை பொறுத்தவரை நான்தான் அமைச்சர்' என தகவல் தொழில்நுட்ப அதிகாரி களை எச்சரித்திருக்கிறார் உடுமலை ராதாகிருஷ்ணன். தனது துறைக்கு அமைச்சர் மணிகண்டன் என்றபோதும், அவரிடம் எதையும் விவாதிக்க வில்லை. உடுமலை சொல் வதையே ஏற்கிறார் எடப்பாடி.


  admk



பெண் அமைச்சர்கள் உள்பட செயல்படாத ஜூனியர் அமைச்சர்கள் சிலரை நீக்க வேண்டும் என திட்டமிட்டு அவர்களுக்கு எதிரான பல விசயங்களை சேகரித்து வைத்திருக்கிறார் எடப்பாடி. அதில் மணிகண்டனுக்கு எதிரான பல விசயங்கள் அவரிடம் இருக்கிறது. இவை குறித்து, மணிகண்டனிடம் கடுமையாக கோபம் காட்டிய எடப்பாடி, "இப்படியே போனால் அமைச்சர் பதவியிலிருந்து தூக்கிடுவேன்' என எச்சரித்துள்ளார். எடப்பாடியின் அந்த கோபத்தை மணிகண்டன் எதிர்பார்க்கவில்லை. இதற்கெல்லாம் உடுமலைதான் காரணம் என நினைத்து ஆத்திரத்தை தேக்கி வைத்திருந்த மணிகண்டன், தேசிய கைத்தறி விழாவில் கலந்துகொண்டுவிட்டு வெளியே வந்தபோது பத்திரிகையாளர்கள் கேபிள் குறித்து கேள்விகள் கேட்க, எடப்பாடியையும் உடுமலையையும் குற்றம்சாட்டி வெளிப்படையாக பேட்டி தர, அது பரபரப்பாகிவிட்டது. அதே சமயம், எடப்பாடியிடம் வருத்தப்பட்டு கடுமையாக பேசியிருக்கிறார் உடுமலை. இதன் பின்னணியிலேயே முதல் விக்கெட்டாக அவரது பதவி பறிக்கப்பட்டது' என விரிவாக சுட்டிக்காட்டினார்கள்.


"மணிகண்டனிடம் பறிக்கப்பட்ட இலாகா, வருவாய்த் துறை அமைச்சர் உதய குமாரிடம் கூடுதலாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பதவி பறிப்பு விவகாரத்தை துணை முதல்வர் ஓ.பி. எஸ். உள்பட மூத்த அமைச்சர்கள் யாரிடமும் விவாதிக்காமலே தன்னிச்சையாக எடுத்துள்ளார் எடப்பாடி. இதனால் ஜூனியர் அமைச்சர்களிடம் பதட்டம் இருக்கிறது. அதேசமயம், ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளைக் கொண்டுள்ளவர்களும் 8 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் உள்ளவர்களும் அமைச்சராக நீடிக்கும் நிலையில், இளம் அமைச்சரின் பதவியைப் பறித்து, அதை இன்னொரு அமைச்ச ரிடம் கூடுதலாகக் கொடுத்தது எடப்பாடிக்கு எதிரானதாகவும் மாற வாய்ப்புள்ளது'' என்கிறார்கள்.


 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.