Skip to main content

அமலாக்கத் துறை அதிகாரமும், பின்னணியில் இயங்கும் அரசியலும் - ஓர் விரிவான பார்வை!

Published on 17/06/2023 | Edited on 27/06/2023

 

 Enforcement Directorate

 

அமலாக்கத் துறையின் அதிகாரங்கள் என்னென்ன? தேசிய அமைப்பான அமலாக்கத் துறை உண்மையில் யார் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது? இதுவரை அமலாக்கத் துறை எடுத்த நடவடிக்கைகள் எத்தனை? அதில் தண்டனை பெற்றவர்கள் எத்தனை பேர்? அமலாக்கத் துறை ஒன்றிய அரசின் கைப்பாவை என்கிற விமர்சனம் உண்மையா? 

 

இந்தியாவில் 1956 ஆம் ஆண்டு முதல் நாட்டில் ஏற்படும் பொருளாதார குற்றங்களைத் தடுக்கவும் அந்நியச் செலாவணி முறைகேடுகளைத் தடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்புதான் அமலாக்கத் துறை. ஒன்றிய அரசின் பொருளாதார விவகாரத் துறையின் கீழ் இது ஒரு தேசிய அமைப்பாக செயல்பட்டு வந்தது. தலைநகர் டெல்லியில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் ஆரம்பத்தில் ஆறு அலுவலர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டார்கள். சட்டம் தெரிந்த ஓர் உயர் அதிகாரி, அவருக்கு கீழ் ரிசர்வ் வங்கியில் பணியாற்றிய இரண்டு அலுவலர்கள், சிறப்பு காவல் பிரிவில் மூன்று ஆய்வாளர்கள் என மிகக் குறைந்த அலுவலர்களைக் கொண்ட அமைப்பாக இது தொடங்கப்பட்டது.

 

அதன்பிறகு 1957 ஆம் ஆண்டு  இந்த அமைப்பு மத்திய அமலாக்கப் பிரிவு எனப் பெயர்மாற்றம் கண்டது. தொடர்ந்து, அதன் சட்டங்களில் பலவிதத் திருத்தங்களும் கொண்டு வரப்பட்டன. தற்போது இது நிதி மற்றும் வருவாய்த் துறையின் கீழ் செயல்படுகிறது. தொடங்கிய 40 ஆண்டுகள் வரைக்கும் இருக்கும் இடம் தெரியாமல்தான் அமலாக்கத் துறையின் செயல்பாடுகள் இருந்து வந்தன. அதன்பிறகு புதிதாகச் சேர்க்கப்பட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரபலமடையத் தொடங்கியது.

 

கடைசியாக 2018 ஆம் ஆண்டு சட்டத்திருத்தத்தின்படி 5 பணிகள் இதன் முக்கியப் பணிகளாக உள்ளன. சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் 2002, அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் 1999, தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் 2018, அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம் 1973, காபிபோசா சட்டம் 1974 ஆகியவற்றை அமல்படுத்துவது அமலாக்கத் துறையின் கீழ் வந்தது. 

 

இப்படி அமலாக்கத் துறையின் கீழ் பல பிரிவுகள் இருந்தாலும் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் 2002 என்ற சட்டத்தில் பல சிறப்பு பிரிவுகள் சேர்க்கப்பட்ட பிறகு ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கும் அல்லது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படும் அரசியல்வாதிகளுக்கும் அந்த சட்டம் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. ஆனால், அதே நேரத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் ஒன்றிய அரசுகள் இந்த சட்டத்தைப் பயன்படுத்தி அமலாக்கத் துறையை தங்களின் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றன என்ற விமர்சனமும் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.

 

அமலாக்கத் துறை பெரும்பாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் மீது மட்டுமே அதிக அளவில் வழக்குகளைப் பதிவு செய்வது அதற்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. இதனால் அமலாக்கத் துறையின் நடவடிக்கைகள் உண்மையிலேயே சட்டப்பூர்வமாகத்தான் நடக்கிறதா அல்லது அதற்கு பின்னால் ஏதேனும் அரசியல் அழுத்தங்கள் இருக்கிறதா என்ற கேள்விகளும் அமலாக்கத் துறையை நோக்கி அடிக்கடி எழுப்பப்படுகின்றன.

 

 Enforcement Directorate

 

அதேபோல் அமலாக்கத் துறை பதிவு செய்யும் வழக்குகளும் விரைவாக முடிக்கப்படாமல் நீண்டகாலம் இழுத்தடிப்பதால் அமலாக்கத் துறையின் மீதான நம்பகத்தன்மையும் கேள்விக்குள்ளாகிவிடுகிறது. அமலாக்கத் துறையால் போடப்பட்ட பல வழக்குகள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. வெகு சில வழக்குகளில் மட்டுமே இதுவரை தீர்ப்புகள் வெளிவந்திருக்கிறது என்று சொல்லப்பட்டாலும் அமலாக்கத் துறை வேறு விதமான புள்ளிவிவரங்களைத் தந்துள்ளது.

 

அமலாக்கத் துறை தொடங்கி 67 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், இதுவரை மொத்தம் 33,958 வழக்குகள் அமலாக்கத் துறையால் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளன. இதில் 16,148 வழக்குகளில் விசாரணை முடிந்துள்ளது. 8,440 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 6,847 வழக்குகளில் விசாரணை முடிந்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல் அமலாக்கத் துறை மீது வைக்கப்படும் இன்னொரு முக்கியமான குற்றச்சாட்டு அமலாக்கத் துறையால் செய்யப்படும் கைது நடவடிக்கைகளின்போது அதிக அளவில் மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன என்பதுதான். சமீபத்தில் நடந்த அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையின்போது கூட அப்படி நடந்ததாகப் பரவலாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியை 20 மணி நேரத்திற்கு மேலாக தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமலாக்கத் துறை, அவரை பல்வேறு விதத்தில் துன்புறுத்தியதாகவும், அதனால் அவரது தலைப்பகுதியில் ஒரு இடத்தில் வீக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் கூட சொல்லப்படுகிறது.

 

அமைச்சர் செந்தில் பாலாஜி விஷயத்தில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டு, மனித உரிமைகள் ஆணையம் நேரில் சென்று விசாரணை நடத்தியது. அப்படி நடந்த அந்த விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையில் மனித உரிமை மீறல் நடந்திருப்பது உறுதியாகி இருக்கிறது. எனவே, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் சார்பில் அமலாக்கத் துறைக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார். ஒருவேளை தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பில் அமலாக்கத் துறையின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமானால் அமலாக்கத் துறை என்பது ஆளும் ஒன்றிய அரசின் கைப்பாவை என்பது உறுதியாகிவிட வாய்ப்பிருக்கிறது என்பதால் அமலாக்கத் துறை தன் மீது படிந்துள்ள  விமர்சனக் கறைகளைக் கழுவிக்கொள்ள முன்வர வேண்டும்.

 

- எஸ்.செந்தில்குமார்

 

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors appeared in the office of the ed

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் இன்று (25.04.2024) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.