Skip to main content

இந்தப் பணம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? பலத்தைக் காட்ட தயாராகி வரும் அரசியல் கட்சிகள்!!!

Published on 02/11/2020 | Edited on 02/11/2020
rk nagar

 

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. அதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் பலத்தைக் காட்ட முழுவீச்சுடன் தயாராகிவருகின்றன. கூட்டணி பலமாக இருந்தாலும், வியூகங்கள் வகுத்தாலும் நிதி இல்லையேல் விதி மாறும் என்பதே தற்போதைய தேர்தல் களத்துக்கான இலக்கணமாக இருக்கிறது. தேர்தலுக்கான நிதியைத் திரட்டுவதில் அனைத்து அரசியல் கட்சிகளுமே இப்போது தீவிரமாக இருக்கின்றன. 

 

"தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் இவ்வளவுதான் செலவு செய்யவேண்டும்' என்று வரம்பை நிர்ணயித்திருக்கிறது தேர்தல் ஆணையம். அந்த வரம்புக்குள் வீடு கட்டி விளையாட முடியாமல் திணறும் அவர்கள், கள்ளக் கணக்கை எழுதவே படாதபாடுபடுவார்கள். இவர்களின் திண்டாட்டத்தைக் கொஞ்சம் குறைக்கும்வகையில், வேட்பாளர்களின் செலவு வரம்பை 10 சதவீத அளவிற்கு அதிகரித்திருக்கிறது மத்திய அரசு. பீகார் சட்டமன்றத் தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடக்க வேண்டிய 64 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், ஒரு மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகியவற்றை விரைவில் தேர்தல் ஆணையம் நடத்த இருக்கிறது. இந்த நிலையில்தான், வேட்பாளர்களின் செலவு வரம்பு உயர்த்தப் பட்டிருக்கிறது.

 

இதற்கான பரிந்துரையைக் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே தேர்தல் ஆணையம் செய்திருந்த நிலையில், இப்போது மத்திய அரசு அதை ஏற்றுக்கொண்டு, அதற்கான அரசாணையை வெளியிட்டிருக்கிறது.

 

மத்திய சட்டத்துறை அமைச்சகம், இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்... மக்களவை தேர்தலில் வேட்பாளர்கள் செலவு தொகை வரம்பு ரூ.70 லட்சமாக இருந்த நிலையில், தற்போது ரூ.77 லட்சமாக அது உயர்த்தப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல்களில் வேட்பாளர்களின் செலவு வரம்பு ரூ.28 லட்சத்தில் இருந்து ரூ.30.8 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் "வேட்பாளர்களுக்கான இந்த செலவு வரம்பானது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்’என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரம்புத் திருத்தம் மத்திய அரசால் அறிவிக்கப் படும்வரை அமலில் இருக்கும்' என்றும் கூறப் பட்டுள்ளது.

 

தேர்தல் நிதி வசூலிக்கும் முறை பற்றிய நடைமுறைகளில் குளறுபடிகளும் இருக்கின்றன. "எலெக்டோரல் பண்ட் என்றால், அரசியல் கட்சிகள் தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறும் முறையாகும். இதை 2017-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன்படி, இந்தப் பத்திரங்களைப் பாரத ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில், ஒரு தனி நபர் அல்லது இந்தியாவில் நிறுவப்பட்ட அமைப்பு ஒன்றால் வாங்கமுடியும். ஒவ்வொரு காலாண்டிலும் முதல் பத்து நாட்கள் இவை விற்பனைக்குக் கிடைக்கும். வங்கி மூலமாகவே அதை அவர்கள் தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிக்கு நன்கொடையாக வழங்கலாம். இதில் மிகப்பெரிய பித்தலாட்டம் என்னவென்றால் அந்த பத்திரங்களில் அதை வாங்கியவரின் பெயர் இருக்காது. இப்படி, பெயர் தெரியாமல் நன்கொடை வாங்கும் தேர்தல் பத்திர முறையை எதிர்கட்சியினர் உள்ளிட்டோர் எதிர்த்து வந்தனர். குறிப்பாக "இது முறைகேட்டுக்கு வழிவகுக்கும்' என பலர் வழக்கும் தொடர்ந்தனர். தற்போது அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

 

சரி... இது ஒரு புறம் இருக்கட்டும். அரசியல் கட்சிகளில் மற்றொரு வடிவிலான நிதி திரட்டல் விவகாரத்தைப் பார்ப்போம். பெரும்பாலும் கட்சிகள் ஆசை காட்டியும் சிறு வியாபாரிகளை மிரட்டியும் தேர்தல் நிதி வாங்குவது வழக்கமாக இருக்கிறது. இதற்கிடையே, வணிக நிறுவனங்கள் தாமாக முன்வந்து நிதி வழங்குவதும் உண்டு. இப்படி தேர்தல் சாக்கில் பல்வேறு வகைகளில் நிதி குவிவதால், அதில் ருசிகண்ட அரசியல் கட்சிகள், ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் தேர்தல் நிதியை வசூலிப்பதில் ஆர்வம் காட்டுகின்றன.

 

ஒரு கட்சியின் எந்தத் தொண்டர் அதிக அளவில் தேர்தல் நிதியை வசூலித்துத் தருகிறாரோ, அவரே சில சமயங்களில் வேட்பாளராகவும் தேர்வாகிறார். இவ்வாறாக நிதி செய்யும் தேர்தல் மாயங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இப்படி பல வகைகளிலிருந்து அரசியல் கட்சிகளுக்கு வந்துசேரும் தேர்தல் நிதி எவ்வளவு? அதைக் கட்சிகள் எந்தெந்த வகைகளில் பெறுகின்றன? அதை எப்படிச் செலவு செய்கின்றன என்பதில் இதுவரை எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லை. அவர்களைக் கண்காணிக்காமல் விடுவதால் தான், வாக்குகள் பல சரக்குக்கடைப் பொருட்கள் போல, பசைப் பார்ட்டிகளால் வாங்கப்படுகின்றன.

 

2004 தொடங்கி 2014 வரையிலான 11 ஆண்டுகளில் தேர்தல் செலவுகளைச் செய்திருக்கும் அரசியல் கட்சிகள், அந்தத் தொகையில் ஏறக்குறைய 70 சதத்தை எந்த வகைகளில் பெற்றன என்ற விவரம் அதி காரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. இதை ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான அமைப்பு தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.

 

"வரும் சட்டமன்ற தேர்தலிலாவது தேவையற்ற பணப்புழக்கம் தடுக்கப்படுமா? அரசியல் கட்சிகளின் உண்மையான தேர்தல் வரவு செலவுக் கணக்குகள் ஆராயப்படுமா?' என்பதற்கெல்லாம் இங்கே உத்தரவாதம் இல்லை. எனவே, என்னதான் செலவு வரம்பை வைத்தாலும், வரும் தேர்தல்களிலும் வாக்காளர்களை வளைத்து ஜனநாயகத்தை முடக்க, கரன்ஸிக் கட்டுக்கள் அங்கங்கே காத்துக்கொண்டிருக்கின்றன.

 

-சேகுவேரா

 

 

 

Next Story

எதிரொலித்த அதிருப்திகள்; வேங்கை வயல், பரந்தூரில் பதிவான வாக்குகள் எத்தனை தெரியுமா?

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Dissatisfaction echoed; Do you know how many votes were cast in Vengai vayal, Parantur?

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்த தேர்தலில் சில கிராமங்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக முன்னரே பகிரங்கமாக அறிவித்திருந்தது. குறிப்பாக புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தற்பொழுது வரை இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தீர்வு கிடைக்காததால் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக வேங்கைவயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். மொத்தம் 561 வாக்காளர்களைக் கொண்ட வேங்கை வயலில் இறையூர் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேர் மட்டுமே வாக்குகளை பதிவு செய்துள்ளனர். வேங்கைவயல், இறையூர் ஆகிய இரண்டு கிராமங்களை சேர்ந்த மக்களிடமும் தொடர்ந்து அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க முன்வரவில்லை.

அதேபோல காஞ்சிபுரம் பரந்தூரில் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களும் தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுத்திருந்தனர். இந்நிலையில் ஏகனாபுரத்தில் தற்பொழுது வரை 17 ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தமிழக மற்றும் புதுச்சேரியில் வாக்களிக்க இன்னும் 30 நிமிடங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது என்பது குறிப்பிடத் தகுந்தது. தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த வேங்கை வயல் மக்கள்  இறுதிக்கட்டத்தில் தற்போது திடீரென வாக்களிக்க திரண்டுள்ளததால் வாக்குசாவடி பரபரப்பை அடைந்துள்ளது. 

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.