Skip to main content

பாஜகவை வடக்கும் கை கழுவுகிறது…

Published on 09/10/2018 | Edited on 09/10/2018
modi

 

2013ல் மோடியை பெரிய ஹீரோவாக நிரூபிக்க உதவியவை ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள். அந்தத் தேர்தல்களில் மோடியின் பிரச்சாரம்தான் பாஜகவுக்கு வெற்றியை தேடித் தந்தது என்று பில்டப் செய்தார்கள். 2014 மக்களவை தேர்தலில் மோடி பிரதமராவதற்கு இந்த பில்டப் மிகவும் உதவியது. இதோ, 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கான வாய்ப்பை உறுதிசெய்ய அதேதேர்தல்கள் உதவப்போவதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன.
 

அந்த மாநிலத் தேர்தல்களுடன் மிசோரம், தெலங்கானா மாநிலங்களிலும் பேரவைக்கு தேர்தல்கள் நடைபெறப்போகின்றன. இந்தத் தேர்தல்களை நடத்துவதா அல்லது மக்களவைக்கும் சேர்த்தே தேர்தல் நடத்துவதா என்று மோடி யோசிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அனைத்து முனைகளிலும் மோடி அரசு அடைந்துள்ள தோல்வியும், மக்கள் மத்தியில் மோடிக்கு எதிராக உருவாகியுள்ள எதிர்ப்பும் மக்களவைத் தேர்தலை தள்ளிப்போடச் செய்தது.
 

2012 ஆம் ஆண்டிலிருந்து மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி கார்பரேட் நிறுவனங்களின் நிதியுதவியுடன் டிஜிடல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அதை போட்டோஷாப் பிரச்சாரம் என்று இப்போது சொல்கிறார்கள். உலகின் அத்தனை பெரிய கட்டுமானங்களையும் குஜராத்தில் இருப்பதாக இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டது. பாஜகவின் பிரச்சாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முறியடிக்க தவறிவிட்டன.
 

2013 ஆம் ஆண்டு மோடியை முன்னிறுத்திய சமயத்தில், பல மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்றன. கர்நாடகா தேர்தல் மோடிக்கு முதல் சவாலாக அமைந்தது. ஆனால், அதில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. அதன்பிறகுதான் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.
 

இந்த நான்கு மாநிலங்களில் மத்தியப் பிரதேசத்திலும் சத்தீஸ்கரிலும் பாஜக ஆட்சிதான் நடைபெற்றது.  ராஜஸ்தானிலும் மிஜோரம் மாநிலத்திலும் காங்கிரஸ் அரசு இருந்தது. அந்தத் தேர்தலில் மோடி பறந்து பறந்து பிரச்சாரம் செய்வதற்காக அதானியும் அம்பானியும் விமானங்களை கொடுத்தார்கள். தேர்தல் முடிவு வந்தபோது, மத்தியப்பிரதேச மாநிலத்தில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. பாஜக 44.88 சதவீதமும், காங்கிரஸ் 36.38 சதவீதமும் வாக்குகளை பெற்றிருந்தன. சத்தீஸ்கரிலும் பாஜக மூன்றாவது முறையாக வெற்றிபெற்றது. பாஜக 54.44 சதவீதம் வாக்குகளையும் காங்கிரஸ் கட்சி 43.33 சதவீதம் வாக்குகளையும் பெற்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. பாஜக கைப்பற்றியது. அங்கு பாஜக 45.17 சதவீதமும், காங்கிரஸ் கட்சி 33.07 சதவீதமும் வாக்குகளைப் பெற்றன. மிஜோரம் மாநிலத்தை காங்கிரஸ் மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. ஆக, இந்தத் தேர்தல்களில் ராஜஸ்தான் மட்டுமே பாஜகவுக்கு லாபம். அதிலும் அங்கு இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வருவது வழக்கமாக இருந்தது. ஆனால், மோடியின் பிரச்சாரத்தால்தான் மூன்று மாநிலங்களையும் பாஜக கைப்பற்றியது போன்ற ஒரு தோற்றத்தை மீடியாக்கள் வழியாக உருவாக்கினார்கள்.
 

இப்போது அதே நான்கு மாநிலங்களுடன், முன்கூட்டியே கலைக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திற்கும் சேர்த்து தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மிஜோரம் எப்போதுமே காங்கிரஸ் கட்சிதான் ஜெயிக்கும். தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகரராவ் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில் காங்கிரஸும் தெலுங்கு தேசமும், தெலங்கானா போராட்டக்குழுவும் கூட்டணி அமைத்திருக்கின்றன. இதை சந்திரசேகர் ராவ் கடுமையாக தாக்கியுள்ளார்.
 

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் இப்போது காங்கிரஸுக்கு சாதகமாக மாறி இருக்கின்றன. ராஜஸ்தானில் காங்கிரஸ் முழு மெஜாரிட்டியுடன் வெற்றிபெறும் என்றும், மத்தியப்பிரதேசத்திலும், சத்தீஸ்கரிலும் ஆட்சி அமைக்கத் தேவையான பலத்துடன் காங்கிரஸ் வெற்றிபெறும் என்றும் முதல்கட்ட கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
 

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்த மாநிலங்களில் பாஜகவுக்கு எதிரான மனநிலை தீவிரமடைந்து வருவதை அந்த மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின. பெட்ரோல் விலை உயர்வு, கியாஸ் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, விவசாயிகளுக்கு அல்வா கொடுத்தது, அவர்கள் மீதான தொடர் தாக்குதல், தலித்துகள் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் என்று இந்த மாநிலங்களில் அரசுக்கு எதிரான மனநிலை அதிகரித்துக்கொண்டே இருந்தது. இப்போது வெளியாகி இருக்கும் கருத்துக் கணிப்புகளைக் காட்டிலும் காங்கிரஸுக்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். ராஜஸ்தானில் சச்சின் பைலட்டும், மத்தியப்பிரதேசத்தில் மாதவராவ் சிந்தியாவும் காங்கிரஸ் கோஷ்டி மனப்பான்மையை முடிவுக்கு கொண்டுவந்து, அங்கு கட்சியைப் பலப்படுத்தி இருக்கிறார்கள். காங்கிரஸின் எதிர்காலம் மட்டுமின்றி, தங்களுடைய அரசியல் எதிர்காலம் குறித்தும் அந்தக் கட்சியின் முன்னணி தலைவர்கள் உணர்ந்து ஒற்றுமையாக இயங்குகிறார்கள் என்று கூறப்படுகிறது.
 

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸில் இருந்து வெளியேறிய அஜித் ஜோகியால் அந்தக் கட்சிக்கு பின்னடைவு இருக்கும் என்று பாஜக எதிர்பார்த்தது. அங்கு அஜித் ஜோகியின் கட்சியுடன் மாயாவதியும், அகிலேஷ் யாதவும் கூட்டணி அமைத்துள்ளனர். ஆனால் இந்தக் கூட்டணி காங்கிரஸ் வெற்றியை பாதிக்காது என்று கருத்துக் கணிப்பு கூறியிருப்பதால், பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.

 

Next Story

பிரதமர் இல்லம் முற்றுகை; ஆம் ஆத்மியினர் குண்டுக்கட்டாக கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Siege of Prime Minister's House; Aam Aadmi Party Arrested for Bombing

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை ஆம் ஆத்மி கட்சியினர் எடுத்து வருகின்றனர்.

தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிட ஆம் ஆத்மி கட்சியினர்  முற்பட்டனர். ஆனால் காவல்துறை சார்பில் அதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தடையை மீறி பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பாக உள்ளது.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.