Skip to main content

ஹெலிகாப்டரை வணங்கியவர்கள்..! மக்களிடம் கனிமொழி! - களத்தில் கனல் மொழி!

Published on 13/01/2021 | Edited on 13/01/2021

 

ddd

 

கலைஞர் இல்லாத தி.மு.கவில் சி.ஐ.டி. காலனி இல்லம் மீண்டும் பரபரப்படைந்தது, கடந்த ஜனவரி 5ஆம் நாள் அன்றுதான். தி.மு.க. மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழியின் பிறந்தநாளுக்காக நேரில் வாழ்த்தியவர்கள் ஏராளம். கட்சித் தலைவரின் அன்பான வாழ்த்துகளுடன் பிறந்தநாளைக் கொண்டாடிய கனிமொழி, தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறார்.

 

தூத்துக்குடியில் பெண்களைத் திரட்டி சமையல் எரிவாயு விலையேற்றத்திற்கெதிராகப் போராட்டம் நடத்திய கனிமொழி, "மக்களின் அத்தியாவசியத் தேவையான சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு குறைக்காவிட்டால் நாங்கள் மத்திய அரசுக்கெதிராக போராடுவோம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரலின் விலை குறைந்தபோதும் ஏன் இந்த விலையேற்றம்?'' என்ற கேள்வியை அழுத்தமாக எழுப்பினார்.

 

தென்காசி மாவட்டத்தின் ராயகிரி பகுதியில் மலைவாழ் பழங்குடியினரை கனிமொழி சந்தித்தபோது, வனத்துறை மற்றும் அரசு அதிகாரிகளால் தங்களுக்கு ஏற்படும் துயரங்களை முன்வைத்தனர். “தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆட்சியமைந்தவுடன் உங்களின் நியாயமான உரிமைகள் உங்களுக்குக் கிடைக்கும்'' என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 

சிவகிரி பகுதியில் கனிமொழி மக்களைச் சந்தித்தபோது, கிருஷ்ணவேணி என்பவர், “கொரோனா நேரத்தில் வேலை வெட்டியில்லாம முடங்கிக் கிடந்த மகளிர் சுயஉதவிக் குழுவினர், ஏற்கனவே வாங்கிய கடன் தொகைக்கு அரசு தெரிவித்தபடி வட்டிச் சலுகை இல்லை. வட்டியும் அதிகமாகிறது. வட்டி தள்ளுபடி பண்ணனும் இல்லன்னா வட்டியைக் குறைத்தாலும் போதும்'' என்று ஈனஸ்வரத்தில் சொல்லியிருக்கிறார்.

 

தாமரை என்ற பெண்மணியோ, "புள்ளைகளப் படிங்க படிங்கன்னு சொல்லுதாவ. படிச்சிப்புட்டுப் பதினோரு வருஷமா எங்க புள்ளைக வேலையில்லாம இருக்கிறப்ப, ஏம் புள்ளைகளப் படிக்கவைக்கணும்'' என்றார். கனிமொழி, "ஆட்சி மாற்றம் நிலைமையை மாற்றும்” என அவருக்கு ஆறுதல் கூறினார்.

 

கிராமப்புறங்களில் "கழிப்பிட வசதியில்ல... கழிவுநீர் போக வழிவகை செய்யல்ல' என்று தெரிவித்த பெண்களிடம், “மத்திய அரசு, தொகுதி மேம்பாட்டு நிதியாக 5 கோடி ஒவ்வொரு எம்.பி.க்களுக்கும் இதுவரை தொடர்ந்து கொடுத்து வந்தது. மோடி அரசு அந்த நிதியை நிறுத்திவிட்டு அதனைக் கொண்டு ஆயிரம் கோடியில் புதிய பாராளுமன்றம் அமைக்கிறார்கள். நாங்கள் தொகுதிநலன் பொருட்டு அதற்காகப் போராடிவருகிறோம். நிச்சயம் உங்கள் கவலை தீரும்'' என்று பிரச்சனையின் மையத்தையும் அதன் காரணத்தையும் சுட்டிக்காட்டினார்.

 

புளியங்குடியில் கனிமொழி விவசாயிகளைச் சந்தித்தபோது "கொல்லம் - மதுரை நான்கு வழிச் சாலைய வேற வழியில போடுங்க. விவசாய நிலம் பாதிக்கிறது' என்றவர்களிடம் “இந்த ஆட்சியில் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களே கொண்டுவரப்படுகிறது. ஹெலிகாப்டரில் பறந்து வந்தவங்கள வணங்கினவர்கள் எதுவும் செய்யமாட்டார்கள்’’ என்று பஞ்ச் வைத்தார்.

 

சுமார் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி நெசவுத்தொழிலாளர்களைக் கொண்ட தொழில் நகரமான சங்கரன்கோவிலில் விசைத்தறிக் கூடம் சென்ற கனிமொழியிடம் பொங்கியிருக்கிறார்கள் தொழிலாளர்களும், ஜவுளி உற்பத்தியாளர்களும்.

 

மணி, சங்கரன், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் "விசைத்தறிக்குன்னு 500 யூனிட் கரண்ட் இலவசமாகக் குடுத்தவர் கலைஞர். இந்த அரசு இந்தத் தொழிலுக்குன்னு எதுவும் செய்யல. மாதந்தோறும் கரண்ட் பில் கட்டுறத விட்டுப்புட்டு, ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவ கணக்கு எடுக்குறது தொழில் செலவை அதிகரிக்குது'' என்றனர்

 

“ரகக் கட்டுப்பாடுன்னு சொல்லிக்கிட்டு மத்திய அரசின் என்ஃபோர்ஸ்மெண்ட் அதிகாரிகள் இன்ன ரகம் உற்பத்தி பண்ணக்கூடாதுன்னு எங்க மேல கிரிமினல் கேஸ் போடுறாங்க. நெசவுத் தொழில் பண்ற நாங்க என்ன கிரிமினல்களா? உற்பத்தி பண்ணுன ரகங்களுக்கு ஜி.எஸ்.டி. வரிகட்டுன எங்களுக்கு, வருஷங்கள் போயும் ரீபண்ட் கெடைக்கல்ல. தொழில்சிக்கல் வேற, இதுல ஜி.எஸ்.டி. ரீபண்ட்லயே எங்க முதல் முடங்கிப் போனதால தொழில நகர்த்தமுடியல. தமிழகம் முழுதும் நெசவுத்தொழிலின் நிலை இதுதான்’’ என்ற புலம்பலைக் கேட்டு அதிர்ந்த கனிமொழி,

 

"இதுபோன்ற சிறு தொழில்களை எல்லாம் மத்திய, மாநில, அரசுகள் கவனிக்காது. உங்களின் இந்தக் குறைகளைப்போக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்'' என்று நம்பிக்கையளித்திருக்கிறார். விசைத்தறி தொழில்கூடத்தைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த கனிமொழியின் பக்கம் கூட்டம் திரண்டுவிடக்கூடாது என்பதற்காக அவர் சென்றிருந்த விசைத்தறிக்கூடம் எதிரில், தொகுதியின் அமைச்சர் ராஜலட்சுமிக்கு நன்றி சொல்கிற மக்கள் நிகழ்ச்சியைத் திடீரென ஏற்பாடு செய்த நகர அ.தி.மு.க. நிர்வாகிகள், அவர்கள் பாணியில் கூட்டம் சேர்த்துப் பார்த்தனர். ஆனால் அதையும் தாண்டி, நகர மக்கள் கனிமொழியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கூடியிருந்தனர்.

 

"இதுபோன்று தொகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த பணிகளில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளைப் பற்றி டைமிங்காக எடுத்து வைக்கும் கனிமொழி, அரசுகளைத் தெறிக்கவிடுகிறார். அவரின் பரப்புரையில் ஏற்படும் நிகழ்வுகளை, எதிரொலிப்பை அறியும் பொருட்டு அரசு இயந்திரங்கள் அவரைப் பின்தொடர்கின்றன.

 

மக்களிடம் பேசுகையில் கனிவான மொழி, அரசை விமர்சிக்கையில் கனல்மொழி எனும் பிரச்சார யுக்தி, மக்களின் கவனத்தை ஈர்ப்பதோடு தி.மு.க.வின் வாக்குப் பலத்தையும் அதிகரிக்க வைத்திருக்கிறது.

 

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.