Skip to main content

உங்கள் ஓட்டு விலை ரூ.2000/- எடப்பாடியின் கரன்ஸி மேஜிக்!

Published on 16/03/2021 | Edited on 16/03/2021
ddd

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது என்று நம்புகிறது பா.ஜ.க. தலைமை. தொங்கு சட்டமன்றம் அமையலாம் என்றும் அது கருதுகிறது.

 

அண்மையில் தமிழகத்தில் இருந்து சென்ற ஒரு மருத்துவக் குழுவிடம் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சரான நிதின்கட்கரி, இதை அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார். எனவே, குதிரைபேர விளையாட்டின் மூலம் தமிழக அரசியலில் பலமாக விளையாடலாம் என்று விறுவிறுப்பாய்க் கணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறது டெல்லி.

 

அதேநேரம் எடப்பாடி மெஜாரிட்டியோடு மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று அவர் ஒரு பக்கம் சோழி உருட்டிக்கொண்டு இருக்கிறார். ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்த பட்சம் ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம், க்ளைமாக்ஸ் நேரத்தில் டிப்ஸ் கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறார் எடப்பாடி. அதன்படி சராசரி 180 தொகுதி களுக்கு 3600 கோடி ரூபாயைச் செலவழிக்கவும் அவர் ரெடியாகிவிட்டார். அதேபோல் மேற்கொண்டு மற்ற செலவுகளைச் சமாளிக்கவும் தொகுதிக்கு மேலும் ஒரு 20 கோடி வீதம், இன்னொரு 3600 கோடியையும் அவர் ஒதுக்கியிருக்கிறாராம். இந்த வகையில் 7,200 கோடியைத் தேர்தல் களத்தில் வாரி இறைக்க முடிவுசெய்திருக்கிறது எடப்பாடித் தரப்பு.

ddd

ஜெ.’இருந்தபோது, ஒவ்வொரு அமைச்சரும், மா.செ.க்களும் மேலிடத்துக்கு கப்பம் கட்ட வேண்டிய நிலை இப்போது இல்லை. அதேபோல் தேர்தல் காலச் செலவுகளுக்காக மாதம் தோறும் பார்ட்டி ஃபண்டையும் யாரும் தரவேண்டியதில்லை. அதனால் அமைச்சர்களிடம் அதிகமாகவே பணப் புழக்கம் இருந்துவருகிறது.

 

இந்த நிலையில் தேர்தலுக்குத் தன் பங்காக 5ஆயிரம் கோடி ரூபாயை அள்ளி இறைக்கவும் எடப்பாடி தயாராக இருக்கிறாராம். இந்தத் தகுதியைச் சுட்டிக்காட்டித்தான், அவர் முதல்வர் வேட்பாளர் என்ற நாற்காலியை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். எனவே தேர்தல் செலவுகளை எல்லாம் எளிதாக ஊதித் தள்ளிவிடலாம் என்று அ.தி.மு.க. தரப்பு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டிருக்கிறது.

 

அதேபோல் கூட்டணியில் இருக்கும் பவர் பார்ட்டியான பா.ஜ.க.வுக்கும், அது விரும்புகிற அளவுக்கு அள்ளித்தரவும் அ.தி.மு.க. தயாராகவே இருக்கிறதாம். இதற்கு முன் பா.ஜ.க. எந்த மாநிலத்தில் தேர்தலைச் சந்தித்தாலும், அவர்களது தேர்தல் செலவுகளுக்கும் தனது வள்ளல் கரத்தைத் தாராளமாகவே அ.தி.மு.க. நீட்டியிருக்கிறது. இந்தப் பணப் பரிவர்த்தனைகளை எடப்பாடியோடு சேர்ந்து கவனித்துக் கொண்டவர்கள் அமைச்சர்களான வேலுமணி, தங்கமணி, ’"சுகாதாரம்' விஜயபாஸ்கர் ஆகியோர்தான் என்கிறது டெல்லித் தரப்பு. வேட்பாளர் லிஸ்டிலும் இந்த மூவரின் பங்களிப்பு அதிகமாம்.

 

கட்சியின் ஒருங்கிணைப்பாளராகத் தான் இருந்தும் கூட, வேட்பாளர் தேர்வில் எடப்பாடி தன் ஆதரவாளர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற கடுப்பு ஓ.பி.எஸ்.சிடமும் இருக்கிறது. அவரது ஆதரவாளரான செம்மலைக்கே எடப்பாடி சீட் இல்லை என்று சொல்ல, இதைக்கேட்டு டென்ஷனாகிவிட்டாராம் ஓ.பி.எஸ். ""வேட்பாளர்களுக்கான பி ஃபார்மிலும் நான் கையெழுத்து இடமாட்டேன் என்பதையும் எடப்பாடியிடம் சொல்லிவிடுங்கள்''’என்று அவர் கோபமாகச் சொன்னதாகவும் தகவல். ஓ.பி.எஸ்.சை சமாதானப்படுத்த 9-ந் தேதி நள்ளிரவு வரை ஒரு பக்கம் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருந்தது.

ddd

இந்த நிலையில் தே.மு.தி.க. வெளியேறியதால், பா.ஜ.க.வும், த.மா.கா.வும், "அவர்களுக்கான சீட்டை எங்களுக்குக் கொடுங்கள்' என்று நச்சரிக்க ஆரம்பித்தது எடப்பாடிக்கு புதிய தலைவலியைக் கொடுக்க... அதையும் சமாளித்துள்ளார்.

 

இதற்கிடையே அ.ம.மு.க. 15 பேர் கொண்ட தனது முதல் வேட்பாளர் பட்டியலை 10-ந் தேதி வெளியிட்டது. அதில் 90 சதம் பேர் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள். மேலும் அவர்கள் அத்தனை பேரும் தொகுதியில் செல்வாக்கு பெற்றவர்கள் என்பதால், அது அ.தி.மு.க.வின் களத்தைக் கொஞ்சம் சிக்கலாகி விடுமோ என்ற தயக்கம் எடப்பாடிக்கு ஏற்பட்டிருக்கிறதாம்

 

இந்தச் சூழலில் தி.மு.க.வுக்கு ஆதரவான அலை மெல்ல வீசுகிறது என்று சிலர், அவரிடம் சொல்லிக்கொண்டிருக்க, ""அதையெல்லாம் எப்படி மாற்றுவது என்று எனக்குத் தெரியும். கரன்சி மேஜிக்கால் சாதிக்க முடியாதது என்று எதுவும் இல்லை'' என்று தன் நண்பர்களிடம் எடப்பாடி நம்பிக்கையோடு சொல்லிவருகிறாராம்.


 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.