Skip to main content

உங்கள் ஓட்டு விலை ரூ.2000/- எடப்பாடியின் கரன்ஸி மேஜிக்!

Published on 16/03/2021 | Edited on 16/03/2021
ddd

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது என்று நம்புகிறது பா.ஜ.க. தலைமை. தொங்கு சட்டமன்றம் அமையலாம் என்றும் அது கருதுகிறது.

 

அண்மையில் தமிழகத்தில் இருந்து சென்ற ஒரு மருத்துவக் குழுவிடம் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சரான நிதின்கட்கரி, இதை அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார். எனவே, குதிரைபேர விளையாட்டின் மூலம் தமிழக அரசியலில் பலமாக விளையாடலாம் என்று விறுவிறுப்பாய்க் கணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறது டெல்லி.

 

அதேநேரம் எடப்பாடி மெஜாரிட்டியோடு மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று அவர் ஒரு பக்கம் சோழி உருட்டிக்கொண்டு இருக்கிறார். ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்த பட்சம் ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம், க்ளைமாக்ஸ் நேரத்தில் டிப்ஸ் கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறார் எடப்பாடி. அதன்படி சராசரி 180 தொகுதி களுக்கு 3600 கோடி ரூபாயைச் செலவழிக்கவும் அவர் ரெடியாகிவிட்டார். அதேபோல் மேற்கொண்டு மற்ற செலவுகளைச் சமாளிக்கவும் தொகுதிக்கு மேலும் ஒரு 20 கோடி வீதம், இன்னொரு 3600 கோடியையும் அவர் ஒதுக்கியிருக்கிறாராம். இந்த வகையில் 7,200 கோடியைத் தேர்தல் களத்தில் வாரி இறைக்க முடிவுசெய்திருக்கிறது எடப்பாடித் தரப்பு.

ddd

ஜெ.’இருந்தபோது, ஒவ்வொரு அமைச்சரும், மா.செ.க்களும் மேலிடத்துக்கு கப்பம் கட்ட வேண்டிய நிலை இப்போது இல்லை. அதேபோல் தேர்தல் காலச் செலவுகளுக்காக மாதம் தோறும் பார்ட்டி ஃபண்டையும் யாரும் தரவேண்டியதில்லை. அதனால் அமைச்சர்களிடம் அதிகமாகவே பணப் புழக்கம் இருந்துவருகிறது.

 

இந்த நிலையில் தேர்தலுக்குத் தன் பங்காக 5ஆயிரம் கோடி ரூபாயை அள்ளி இறைக்கவும் எடப்பாடி தயாராக இருக்கிறாராம். இந்தத் தகுதியைச் சுட்டிக்காட்டித்தான், அவர் முதல்வர் வேட்பாளர் என்ற நாற்காலியை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். எனவே தேர்தல் செலவுகளை எல்லாம் எளிதாக ஊதித் தள்ளிவிடலாம் என்று அ.தி.மு.க. தரப்பு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டிருக்கிறது.

 

அதேபோல் கூட்டணியில் இருக்கும் பவர் பார்ட்டியான பா.ஜ.க.வுக்கும், அது விரும்புகிற அளவுக்கு அள்ளித்தரவும் அ.தி.மு.க. தயாராகவே இருக்கிறதாம். இதற்கு முன் பா.ஜ.க. எந்த மாநிலத்தில் தேர்தலைச் சந்தித்தாலும், அவர்களது தேர்தல் செலவுகளுக்கும் தனது வள்ளல் கரத்தைத் தாராளமாகவே அ.தி.மு.க. நீட்டியிருக்கிறது. இந்தப் பணப் பரிவர்த்தனைகளை எடப்பாடியோடு சேர்ந்து கவனித்துக் கொண்டவர்கள் அமைச்சர்களான வேலுமணி, தங்கமணி, ’"சுகாதாரம்' விஜயபாஸ்கர் ஆகியோர்தான் என்கிறது டெல்லித் தரப்பு. வேட்பாளர் லிஸ்டிலும் இந்த மூவரின் பங்களிப்பு அதிகமாம்.

 

கட்சியின் ஒருங்கிணைப்பாளராகத் தான் இருந்தும் கூட, வேட்பாளர் தேர்வில் எடப்பாடி தன் ஆதரவாளர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற கடுப்பு ஓ.பி.எஸ்.சிடமும் இருக்கிறது. அவரது ஆதரவாளரான செம்மலைக்கே எடப்பாடி சீட் இல்லை என்று சொல்ல, இதைக்கேட்டு டென்ஷனாகிவிட்டாராம் ஓ.பி.எஸ். ""வேட்பாளர்களுக்கான பி ஃபார்மிலும் நான் கையெழுத்து இடமாட்டேன் என்பதையும் எடப்பாடியிடம் சொல்லிவிடுங்கள்''’என்று அவர் கோபமாகச் சொன்னதாகவும் தகவல். ஓ.பி.எஸ்.சை சமாதானப்படுத்த 9-ந் தேதி நள்ளிரவு வரை ஒரு பக்கம் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருந்தது.

ddd

இந்த நிலையில் தே.மு.தி.க. வெளியேறியதால், பா.ஜ.க.வும், த.மா.கா.வும், "அவர்களுக்கான சீட்டை எங்களுக்குக் கொடுங்கள்' என்று நச்சரிக்க ஆரம்பித்தது எடப்பாடிக்கு புதிய தலைவலியைக் கொடுக்க... அதையும் சமாளித்துள்ளார்.

 

இதற்கிடையே அ.ம.மு.க. 15 பேர் கொண்ட தனது முதல் வேட்பாளர் பட்டியலை 10-ந் தேதி வெளியிட்டது. அதில் 90 சதம் பேர் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள். மேலும் அவர்கள் அத்தனை பேரும் தொகுதியில் செல்வாக்கு பெற்றவர்கள் என்பதால், அது அ.தி.மு.க.வின் களத்தைக் கொஞ்சம் சிக்கலாகி விடுமோ என்ற தயக்கம் எடப்பாடிக்கு ஏற்பட்டிருக்கிறதாம்

 

இந்தச் சூழலில் தி.மு.க.வுக்கு ஆதரவான அலை மெல்ல வீசுகிறது என்று சிலர், அவரிடம் சொல்லிக்கொண்டிருக்க, ""அதையெல்லாம் எப்படி மாற்றுவது என்று எனக்குத் தெரியும். கரன்சி மேஜிக்கால் சாதிக்க முடியாதது என்று எதுவும் இல்லை'' என்று தன் நண்பர்களிடம் எடப்பாடி நம்பிக்கையோடு சொல்லிவருகிறாராம்.


 

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.