Skip to main content

"சென்னையிலேயே தங்கியிருங்கள், நல்ல செய்தி வரும்'' குஷியில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்!

Published on 16/09/2019 | Edited on 16/09/2019

கூவத்தூர் முகாமிற்குப் போகும் வழியில் பஸ்ஸிலிருந்து திடீரென குதித்து ஓ.பி.எஸ்.சின் தர்மயுத்த கேம்பிற்குள் வந்தவர் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ.சண்முகநாதன். அதன் பின் தர்மயுத்தத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு, இ.பி.எஸ்.சுடன் இணைந்தார் ஓ.பி.எஸ். இருவரின் இணைப்பிற்குப் பின் தனக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார் சண்முகநாதன். ஆனால் அவருக்கு மா.செ. பதவி கொடுத்து அமைதிப்படுத்தினார் எடப்பாடி. ஆனாலும் அடைந்தால் மந்திரி பதவி, இல்லையேல் வேறு முடிவு என்பதில் உறுதியாக இருந்தார் சண்முகநாதன்.

 

admk



அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு நேரடி எதிரியான எம்.எல்.ஏ.ராஜன் செல்லப்பா, இ.பி.எஸ்.சின் ஆதரவாளர் தான். என்ன நினைத்தாரோ, யாரை மனதில் நினைத்தாரோ, கட்சிக்குத் தேவை ஒற்றைத் தலைமை தான் என புயலைக் கிளப்பினார். மாஜி அமைச்சரான தோப்பு வெங்கடாசலமும் ஆரம்பத்தில் தினகரன் டீமுக்குள் ஐக்கியமானவர்தான். இதனால் ஆட்சி மேலிடத்திலிருந்து கடும் நெருக்கடி வந்ததும் "எனது தொகுதிக்கு ஒன்றுமே செய்ய முடியவில்லை என கண்ணீர் வ(ந)டித்தார். ஒருவழியாக அவரையும் சமாளித்து தனது ஆதரவாளராக மாற்றினார் எடப்பாடி.


இப்படியெல்லாம் அ.தி.மு.க. முகாம் இருக்கும் போது தான் அமைச்சர் மணிகண்டனை அதிரடியாக நீக்கினார் முதல்வர் எடப்பாடி. ஏற்கனவே பாலகிருஷ்ண ரெட்டியின் அமைச்சர் பதவியும் பறி போயிருந்தது. ரைட்டு இது தான் சரியான சந்தர்ப்பம் என சண்முகநாதன், ராஜன் செல்லப்பா, தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் மந்திரி நாற்காலியை நோக்கி நகர ஆரம்பித்தார்கள். வெளிநாடுகளுக்கு இருவார சுற்றுப்பயணம் போன எடப்பாடியை பவ்வியமாக வழி அனுப்பி வைத்தனர் மூவரும். முதல்வர் எடப்பாடி, வெளிநாடுகளிலிருந்து முதலீடுகளை ஈர்த்து வருகிறாரோ இல்லையோ, அவரை நாம் ஈர்த்துவிட வேண்டும் என்ற முடிவுடன் மூவரும் காய் நகர்த்தினார்கள். அதற்கு பலனும் கிடைத்துவிட்டது.

வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த எடப்பாடியை அதே பவ்வியத்துடன் வரவேற்ற எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் மேற்படி மூவரும் அதிகமாகவே பவ்வியம் காட்டியிருக்கிறார்கள். அவர்களின் அன்பினால் எடப்பாடியும் ரொம்பவே நெகிழ்ந்துவிட்டாராம். முக்கியமான அரசுப்பணிகளையெல்லாம் முடித்துவிட்டு, மூவரையும் தனித் தனியாக தொடர்பு கொண்ட எடப்பாடி, "சென்னையிலேயே தங்கியிருங்கள், விரைவில் நல்ல செய்தி வரும்' என்ற செய்தியைச் சொல்லியுள்ளா ராம். முதல்வர் எடப்பாடி அடுத்ததாக இஸ்ரேல் செல்வதற்குள் சைரன் காரில் ஏறிவிட வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார்கள் சண்முகநாதன், ராஜன் செல்லப்பா, தோப்பு வெங்கடாசலம் ஆகியோர். அமைச்சரவை மாற்றம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.