Skip to main content

"சென்னையிலேயே தங்கியிருங்கள், நல்ல செய்தி வரும்'' குஷியில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்!

Published on 16/09/2019 | Edited on 16/09/2019

கூவத்தூர் முகாமிற்குப் போகும் வழியில் பஸ்ஸிலிருந்து திடீரென குதித்து ஓ.பி.எஸ்.சின் தர்மயுத்த கேம்பிற்குள் வந்தவர் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ.சண்முகநாதன். அதன் பின் தர்மயுத்தத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு, இ.பி.எஸ்.சுடன் இணைந்தார் ஓ.பி.எஸ். இருவரின் இணைப்பிற்குப் பின் தனக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார் சண்முகநாதன். ஆனால் அவருக்கு மா.செ. பதவி கொடுத்து அமைதிப்படுத்தினார் எடப்பாடி. ஆனாலும் அடைந்தால் மந்திரி பதவி, இல்லையேல் வேறு முடிவு என்பதில் உறுதியாக இருந்தார் சண்முகநாதன்.

 

admk



அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு நேரடி எதிரியான எம்.எல்.ஏ.ராஜன் செல்லப்பா, இ.பி.எஸ்.சின் ஆதரவாளர் தான். என்ன நினைத்தாரோ, யாரை மனதில் நினைத்தாரோ, கட்சிக்குத் தேவை ஒற்றைத் தலைமை தான் என புயலைக் கிளப்பினார். மாஜி அமைச்சரான தோப்பு வெங்கடாசலமும் ஆரம்பத்தில் தினகரன் டீமுக்குள் ஐக்கியமானவர்தான். இதனால் ஆட்சி மேலிடத்திலிருந்து கடும் நெருக்கடி வந்ததும் "எனது தொகுதிக்கு ஒன்றுமே செய்ய முடியவில்லை என கண்ணீர் வ(ந)டித்தார். ஒருவழியாக அவரையும் சமாளித்து தனது ஆதரவாளராக மாற்றினார் எடப்பாடி.


இப்படியெல்லாம் அ.தி.மு.க. முகாம் இருக்கும் போது தான் அமைச்சர் மணிகண்டனை அதிரடியாக நீக்கினார் முதல்வர் எடப்பாடி. ஏற்கனவே பாலகிருஷ்ண ரெட்டியின் அமைச்சர் பதவியும் பறி போயிருந்தது. ரைட்டு இது தான் சரியான சந்தர்ப்பம் என சண்முகநாதன், ராஜன் செல்லப்பா, தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் மந்திரி நாற்காலியை நோக்கி நகர ஆரம்பித்தார்கள். வெளிநாடுகளுக்கு இருவார சுற்றுப்பயணம் போன எடப்பாடியை பவ்வியமாக வழி அனுப்பி வைத்தனர் மூவரும். முதல்வர் எடப்பாடி, வெளிநாடுகளிலிருந்து முதலீடுகளை ஈர்த்து வருகிறாரோ இல்லையோ, அவரை நாம் ஈர்த்துவிட வேண்டும் என்ற முடிவுடன் மூவரும் காய் நகர்த்தினார்கள். அதற்கு பலனும் கிடைத்துவிட்டது.

வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த எடப்பாடியை அதே பவ்வியத்துடன் வரவேற்ற எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் மேற்படி மூவரும் அதிகமாகவே பவ்வியம் காட்டியிருக்கிறார்கள். அவர்களின் அன்பினால் எடப்பாடியும் ரொம்பவே நெகிழ்ந்துவிட்டாராம். முக்கியமான அரசுப்பணிகளையெல்லாம் முடித்துவிட்டு, மூவரையும் தனித் தனியாக தொடர்பு கொண்ட எடப்பாடி, "சென்னையிலேயே தங்கியிருங்கள், விரைவில் நல்ல செய்தி வரும்' என்ற செய்தியைச் சொல்லியுள்ளா ராம். முதல்வர் எடப்பாடி அடுத்ததாக இஸ்ரேல் செல்வதற்குள் சைரன் காரில் ஏறிவிட வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார்கள் சண்முகநாதன், ராஜன் செல்லப்பா, தோப்பு வெங்கடாசலம் ஆகியோர். அமைச்சரவை மாற்றம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.