Skip to main content

எடப்பாடியை அப்செட் செய்த சி.வி. சண்முகம்

Published on 11/09/2018 | Edited on 11/09/2018
CV shanmugam



 

நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும் என்கிற பயம் அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் அதிகரித்துவரும் நிலையில், கட்சியின் சீனியர்களிடமிருந்து வரும் நெருக்கடியால் அப்-செட்டாகியிருக்கிறாராம் எடப்பாடி.


கொங்கு மண்டலம் மற்றும் வட தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலரிடம் நாம் பேசியபோது, "தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு சாதகமா இருக்கும்னு நம்பிக்கையில்லை. அப்பீல் வரை போனாலும், ஆட்சி கவிழும் அபாயம் இருக்கு. பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடி விலகுவார். அதற்கான திட்டங்களை கடந்த 2 மாதங்களாக உருவாக்கி வைத்திருக்கும் பா.ஜ.க. தலைமை, நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்தவே விரும்புகிறது.


இதற்கிடையே திருவாரூருக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் ஜனவரிக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். ஆனா, மத்திய அரசின் மனமறிந்து செயல்படும் தலைமைத் தேர்தல் ஆணையம், ஒருவேளை நாடாளுமன்ற-சட்டமன்றத் தேர்தலை சேர்த்து நடத்தும் பா.ஜ.க.வின் மனநிலைக்கேற்ப இடைத்தேர்தலை தள்ளிப்போடலாம். எம்.பி., தேர்தலின்போது, தமிழகத்தில் வலிமையான ஒரு கூட்டணிக்குள் இருக்க வேண்டும் என பா.ஜ.க. தலைவர்கள் விரும்புகின்றனர். தி.மு.க. அல்லது ரஜினி என்பது அவர்களின் முதல்கட்ட சாய்ஸ்.


நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதுபற்றி அனைத்துக்கட்சியினரோடு தலைமைத் தேர்தல் ஆணையம் டெல்லியில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை கடந்த வாரம் நடத்தியது. அன்று இரவு தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக இடைத்தேர்தல் குறித்து தனி ஆலோசனை நடத்தியுள்ளது பா.ஜ.க. இதையறிந்துதான், ஆட்சி குறித்த பயம் எம்.எல்.ஏ.க்களிடம் வந்திருக்கிறது'' என்கின்றனர்.


இதுகுறித்து அமைச்சர்கள் சிலரின் உள் வட்டத்தில் நாம் விசாரித்தபோது, "கட்சி-ஆட்சி இரண்டிலும் எடப்பாடியின் கை ஓங்கியிருப்பதை அமைச்சர்கள் மற்றும் கட்சியின் சீனியர்கள் பலராலும் ஜீரணிக்க முடியவில்லை. அதேசமயம், ஆட்சிக்கு ஆபத்து நெருங்கியிருப்பதை எல்லோருமே உணர்ந்திருக்கிறோம். அதனால்தான் எடப்பாடிகூட, தேர்தலை எதிர்கொள்ள பல கோடிகள் தேவைப்படுமென்பதால், முக்கிய அமைச்சர்களிடம் கட்சி நிதி வசூலிக்க முயற்சித்தார். அது துவக்கத்திலேயே அமைச்சர் சி.வி.சண்முகம் மூலம் மோதலாக வெடித்தது. அவரவர் இலாகாவின் வலிமைக்கேற்ப கட்சிநிதி தரவேண்டும் என எடுக்கப்பட்ட அசைன்மெண்ட், ஓரிருவரைத் தவிர பெரும்பாலான அமைச்சர்களிடம் அதிருப்தியையே உருவாக்கியது. "கட்சி நிதி கேட்டு நெருக்கடி தராதீர்கள்; தேர்தல் வந்தால் அமைச்சர்கள் அவரவர் மாவட்டத்தைப் பார்த்துக்கொள்வார்கள். அம்மா பாணியில் நிதி வசூலிக்க முயற்சித்தால் தேவையில்லாத பிரச்சனைகள்தான் உருவாகும்' என எடப்பாடியிடமே தெரிவித்துவிட்டனர். இது, எடப்பாடியை அப்-செட்டாக்கியது.

 

 

 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.