Skip to main content

உண்மையிலேயே முதல்வர் பழனிசாமி விவசாயிதானா?

Published on 03/12/2020 | Edited on 03/12/2020
eps as farmer

 

 

“இந்த மசோதாவால் விவசாயிகளுக்கு உறுதியான வருவாய் கிடைக்கும் என்று, ஒரு விவசாயியாக நான் உணர்ந்திருக்கிறேன். கிராமப்புறங்களில் உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் உருவாகி, வேலை வாய்ப்புகள் பெருகும்” என்று கடந்த செப்டமர் மாதம் புதிய வேளாண் சட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளித்தபோது முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

 

மேலும், “எதிர்க்கட்சித் தலைவர்  மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதைப் போல் அல்லாமல், இச்சட்டங்களில் உழவர் சந்தைத் திட்டத்திற்கும், விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலைக்கும் வழிவகை செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல், உணவுப் பொருட்களை நிறுவனங்கள் பதுக்குவதைத் தடுப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்வதற்காகவும், இருப்பில் வைப்பதற்காகவும், விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதார விலையில் வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதும் தமிழ்நாட்டில் தொடரும் என்பதால், விவசாயிகளுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது” என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். விவசாயிகளிடம் அரசு கொள்முதல் செய்யும்போது குறைந்தபட்ச ஆதார விலை தொடரும், ஆனால் தனியார் கொள்முதலில் குறைந்தபட்ச ஆதார விலை இருக்கிறதா இல்லையா என்பது வேளாண் சட்டத்தில் குறிப்பிடவில்லை. இந்த சட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலை பற்றி குறிப்பிட வேண்டும் என்றுதான் தற்போது டெல்லியில் விவசாயிகள் எட்டு நாட்களாக போராடி வருகின்றனர்.

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள காவேரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என அறிவித்தது, நீண்ட நாட்களாக துர்வாரப்படாமலும், சீரமைக்கப்படாமலும் இருந்த பெரிய ஏரிகள், சிறு பாசன ஏரிகள், குளங்கள், ஊரணிகள், குட்டைகள் போன்றவற்றை தூர்வார, குடிமராமத்து திட்டத்தை அறிவித்தது, போன்ற திட்டங்கள் விவசாயிகளின் மத்தியில் முதல்வருக்கு ஒரு நல்லப் பெயரையும் வாங்கி தந்தது. இதனை தொடர்ந்து கடந்த எட்டு மாதங்களில் முதல்வர், தான் ஒரு விவசாயி என்பதை செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் மற்றும் தொண்டர்களின் மனதில் பதிய வைத்துவந்தார். தஞ்சை நீடாமங்கலம் அருகே வயலில் பயிரிட காத்திருந்த விவசாயிகளை சந்திக்க சென்றபோது, மாட்டு வண்டியில் சென்றது. வேட்டியை மடித்துக்கட்டி நாத்து நட்டது போன்றவை உண்மையிலேயே நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும். இதே முதல்வர்தான் பல ஏக்கர் விவசாய நிலங்களை அழித்துவிட்டு, சேலம் டூ சென்னை எட்டு வழிச்சாலை அமைக்க வேண்டும் என உறுதியாக இருந்து, விவசாயிகளின் எதிர்ப்பால் அந்த கனவு திட்டத்தை கைவிட்டார். அதேபோல நியூட்ரினோ திட்டம், மீத்தேன் திட்டங்களில் முதலில் முதல்வரின் நிலைப்பாடு வேறாக இருந்ததையும் சற்று பின்னோக்கி பார்த்தோம் என்றால் தெரியும்.

 

தற்போது கூட பல விவசாய சங்கங்கள், விவசாயிகள் எதிர்க்கும் புதிய வேளாண் சட்டத்திற்கு ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்திருக்கிறார். ஆளும் பாஜகவின் கூட்டணியில் இருப்பதனால் அதை ஆதரித்திருக்கிறாரா என்றால், தான் ஒரு விவசாயியாக உண்மையை உணர்ந்துதான் இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறேன் என்று அப்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார். மத்திய அரசோ விவசாயிகளுக்கு சுதந்திரம் பெற்று தந்துவிட்டதாக தொடக்கத்திலிருந்து கூறி வருகிறது. `ஒரே நாடு ஒரே சந்தை’ என்கிற முறையில் இந்தியாவில் எந்த மூலையில் ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டாலும், அந்தப் பொருளுக்கு எந்த இடத்தில் அதிகமான விலை கிடைக்கிறதோ, அங்கு போய் அந்தப் பொருளை விற்கலாம் என்று மத்திய அரசு, பிரதமர், சில வலதுசாரி அமைப்புகள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்திய விவசாயிகளில் 86 சதவீதம் பேர் சிறு, குறு விவசாயிகள். அதாவது ஐந்து ஏக்கருக்குள் விவசாயம் செய்பவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை விற்பதற்கு, அவர்கள் வசிக்கும் தாலுகாவைத் தாண்டி வெளியே வர மாட்டார்கள். ஏற்கனவே கடன் வாங்கி விவசாயம் செய்யும் ஒரு விவசாயி, மேற்கொண்டு வியாபாரம் செய்ய செலவு செய்து அவருக்கு ஏற்ற தொகை எங்கு கொடுக்கப்படுகிறதோ அங்கு செல்வாரா? அது வியாபாரிகளுக்கும் இடைத்தரகர்களுக்கும்தான் சாதகமாக இருக்கும் எனும் விவசாயிகள் `ஒரே நாடு ஒரே சந்தை’ என்பது ஒரு வெற்று முழக்கம் என்றே கூறுகின்றனர்.

 

பிரதமர் மோடியும் கூட, எதிர்கட்சியினர் இந்த புதிய வேளாண் சட்டத்தை வைத்து அரசியல் செய்கின்றனர் என்றார். ஆனால், அவருடைய கூட்டணியில் பல ஆண்டுகளாக இருந்த அகாலி தளம் கட்சி இந்த சட்டம் இயற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியிலிருந்து விலகியது குறித்து பிரதமர் வாய் திறக்கவில்லை. தன்னை விவசாயி என்று ஏறும் ஒவ்வொரு மேடையிலும் சொல்லிக்கொள்ளும் தமிழக முதல்வரோ, மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டிற்கு ஆதரவளித்து மௌனம் சாதித்து வருகிறார். டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் 'டெல்லி சலோ' போராட்டத்திற்கு செல்ல இருந்த விவசாய சங்கத் தலைவர் அய்யாகண்ணு இந்த போராட்டத்தில் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படாமல் போலீஸ் உதவியுடன் வீட்டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். எட்டு நாட்களாக அங்கு டெல்லி முழுவதும் சூழ்ந்திருக்கும் வட இந்திய விவசாயிகள் குறித்து முதல்வர் எதுவும் வாய் திறக்கவில்லை.

 

தனியார் பெரு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வங்கித்துறை, விமான போக்குவரத்து, தரைவழி போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளில் அரசாங்கத்தின் கைகள் மெல்ல கட்டப்பட்டு, இத்துறைகள் முழுவதுமே இன்று முழுமையாக தனியாரின் ஆதிக்கத்திற்கும் சென்றுள்ளது. இதேநிலை விவசாயத்துறைக்கும் எதிர்காலத்தில் ஏற்படும்போது, இன்று பொதுத்துறை வங்கிகளுக்கும், ஏர் இந்தியா நிறுவனத்திற்கும், என்ன நிலை ஏற்பட்டதோ அதே நிலை விவசாயிகளுக்கும் ஏற்படாது என்பது நிச்சயமல்ல.

 

இவ்வளவு ஏன், பாஜகவின் தாய் இயக்கம் ராஷ்த்ரிய சுயம் சேவக் என்னும் ஆர்.எஸ்.எஸ்-இன் கீழ் செயல்படும் விவசாய சங்கமான பாரத் கிஸான் சங், புதிய வேளாண் சட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலை பற்றி குறிப்பிடவில்லை என தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து, இதற்காக ஒரு புது சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தது. அப்படி இருக்கையில் இந்த சட்டத்திற்கு ஒரு விவசாயியாக உணர்ந்து ஆதரவு தெரிவித்திருக்கும் பழனிசாமி எந்தப் பிரச்சனையும் வராது என்று ஆணித்தரமாக சொல்கிறார், உண்மையிலேயே முதல்வர் பழனிசாமி விவசாயிதானா? எனும் கேள்வியும் எழாமல் இல்லை.

 

 

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

'இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று  வருகிறது. இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டி கொடுத்திருக்கிறோம். கட்டி 3 வருடம் ஆகிறது. 1200 கோடியில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா என பல கட்டிடங்களை கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் ஒற்றைச் செங்கலை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக போகிறீர்களே உதயநிதி ஸ்டாலின் பல லட்சம் செங்கலில் கட்டி இருக்கிறோம் ஏன் அதை திறக்க மாட்டேன் என்கிறீர்கள்.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடம் என்று இன்றுவரை ரிப்பன் வெட்டுவதற்கு உங்களால் முடியவில்லை. மூன்று வருடம் ஆகிறது. இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது. என்ன கொடுமை பாருங்கள் நிறைவேற திட்டத்தை செங்கல்லை தூக்கிக்கொண்டு விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் கட்டிமுடித்த திட்டத்தை திறக்க முடியாத ஒரே அரசு திமுக அரசு. இந்த திட்டம் கொண்டுவரக் கூடாது என்று பார்க்கிறார்கள்.

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டம். கால்நடை பூங்கா திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம். அமெரிக்கா செல்லும் பொழுது அங்கு ஒரு பால் பண்ணைக்கு சென்றேன். அங்கு ஒரு பசு ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் கறக்கிறது. அந்த பசு போல நம்முடைய மாநில சீதோசன நிலைக்குத் தக்கவாறு கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகள் கொடுக்க வேண்டும். 40 லிட்டர் பாலை ஒரு நாளைக்கு கறந்து அவர்கள் வருமான பெருக வேண்டும் என்பதற்காக இந்த அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தேன். அதில் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் உள்ளது . அதன் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு கிடைக்கும் கால்நடைகளை விவசாயிகளுக்கு கொடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள். இன்று நாம் ஒரு ஆடு வளர்த்தால் 20 கிலோ தான் கிடைக்கும். ஆனால் கலப்பின ஆடு வளர்த்தால் 40 கிலோ கிடைக்கும். இந்த திட்டத்தை முடக்கி வைத்த அரசாங்கம் திமுக அரசாங்கம். கால்நடை பூங்கா வந்திருந்தால் இந்தப் பகுதி பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும். உலக அளவில் நம்முடைய சேலம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பிரசித்தி பெற்றிருக்கும்'' என்றார்.