Skip to main content

உண்மையிலேயே முதல்வர் பழனிசாமி விவசாயிதானா?

Published on 03/12/2020 | Edited on 03/12/2020
eps as farmer

 

 

“இந்த மசோதாவால் விவசாயிகளுக்கு உறுதியான வருவாய் கிடைக்கும் என்று, ஒரு விவசாயியாக நான் உணர்ந்திருக்கிறேன். கிராமப்புறங்களில் உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் உருவாகி, வேலை வாய்ப்புகள் பெருகும்” என்று கடந்த செப்டமர் மாதம் புதிய வேளாண் சட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளித்தபோது முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

 

மேலும், “எதிர்க்கட்சித் தலைவர்  மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதைப் போல் அல்லாமல், இச்சட்டங்களில் உழவர் சந்தைத் திட்டத்திற்கும், விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலைக்கும் வழிவகை செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல், உணவுப் பொருட்களை நிறுவனங்கள் பதுக்குவதைத் தடுப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்வதற்காகவும், இருப்பில் வைப்பதற்காகவும், விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதார விலையில் வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதும் தமிழ்நாட்டில் தொடரும் என்பதால், விவசாயிகளுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது” என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். விவசாயிகளிடம் அரசு கொள்முதல் செய்யும்போது குறைந்தபட்ச ஆதார விலை தொடரும், ஆனால் தனியார் கொள்முதலில் குறைந்தபட்ச ஆதார விலை இருக்கிறதா இல்லையா என்பது வேளாண் சட்டத்தில் குறிப்பிடவில்லை. இந்த சட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலை பற்றி குறிப்பிட வேண்டும் என்றுதான் தற்போது டெல்லியில் விவசாயிகள் எட்டு நாட்களாக போராடி வருகின்றனர்.

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள காவேரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என அறிவித்தது, நீண்ட நாட்களாக துர்வாரப்படாமலும், சீரமைக்கப்படாமலும் இருந்த பெரிய ஏரிகள், சிறு பாசன ஏரிகள், குளங்கள், ஊரணிகள், குட்டைகள் போன்றவற்றை தூர்வார, குடிமராமத்து திட்டத்தை அறிவித்தது, போன்ற திட்டங்கள் விவசாயிகளின் மத்தியில் முதல்வருக்கு ஒரு நல்லப் பெயரையும் வாங்கி தந்தது. இதனை தொடர்ந்து கடந்த எட்டு மாதங்களில் முதல்வர், தான் ஒரு விவசாயி என்பதை செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் மற்றும் தொண்டர்களின் மனதில் பதிய வைத்துவந்தார். தஞ்சை நீடாமங்கலம் அருகே வயலில் பயிரிட காத்திருந்த விவசாயிகளை சந்திக்க சென்றபோது, மாட்டு வண்டியில் சென்றது. வேட்டியை மடித்துக்கட்டி நாத்து நட்டது போன்றவை உண்மையிலேயே நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும். இதே முதல்வர்தான் பல ஏக்கர் விவசாய நிலங்களை அழித்துவிட்டு, சேலம் டூ சென்னை எட்டு வழிச்சாலை அமைக்க வேண்டும் என உறுதியாக இருந்து, விவசாயிகளின் எதிர்ப்பால் அந்த கனவு திட்டத்தை கைவிட்டார். அதேபோல நியூட்ரினோ திட்டம், மீத்தேன் திட்டங்களில் முதலில் முதல்வரின் நிலைப்பாடு வேறாக இருந்ததையும் சற்று பின்னோக்கி பார்த்தோம் என்றால் தெரியும்.

 

தற்போது கூட பல விவசாய சங்கங்கள், விவசாயிகள் எதிர்க்கும் புதிய வேளாண் சட்டத்திற்கு ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்திருக்கிறார். ஆளும் பாஜகவின் கூட்டணியில் இருப்பதனால் அதை ஆதரித்திருக்கிறாரா என்றால், தான் ஒரு விவசாயியாக உண்மையை உணர்ந்துதான் இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறேன் என்று அப்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார். மத்திய அரசோ விவசாயிகளுக்கு சுதந்திரம் பெற்று தந்துவிட்டதாக தொடக்கத்திலிருந்து கூறி வருகிறது. `ஒரே நாடு ஒரே சந்தை’ என்கிற முறையில் இந்தியாவில் எந்த மூலையில் ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டாலும், அந்தப் பொருளுக்கு எந்த இடத்தில் அதிகமான விலை கிடைக்கிறதோ, அங்கு போய் அந்தப் பொருளை விற்கலாம் என்று மத்திய அரசு, பிரதமர், சில வலதுசாரி அமைப்புகள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்திய விவசாயிகளில் 86 சதவீதம் பேர் சிறு, குறு விவசாயிகள். அதாவது ஐந்து ஏக்கருக்குள் விவசாயம் செய்பவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை விற்பதற்கு, அவர்கள் வசிக்கும் தாலுகாவைத் தாண்டி வெளியே வர மாட்டார்கள். ஏற்கனவே கடன் வாங்கி விவசாயம் செய்யும் ஒரு விவசாயி, மேற்கொண்டு வியாபாரம் செய்ய செலவு செய்து அவருக்கு ஏற்ற தொகை எங்கு கொடுக்கப்படுகிறதோ அங்கு செல்வாரா? அது வியாபாரிகளுக்கும் இடைத்தரகர்களுக்கும்தான் சாதகமாக இருக்கும் எனும் விவசாயிகள் `ஒரே நாடு ஒரே சந்தை’ என்பது ஒரு வெற்று முழக்கம் என்றே கூறுகின்றனர்.

 

பிரதமர் மோடியும் கூட, எதிர்கட்சியினர் இந்த புதிய வேளாண் சட்டத்தை வைத்து அரசியல் செய்கின்றனர் என்றார். ஆனால், அவருடைய கூட்டணியில் பல ஆண்டுகளாக இருந்த அகாலி தளம் கட்சி இந்த சட்டம் இயற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியிலிருந்து விலகியது குறித்து பிரதமர் வாய் திறக்கவில்லை. தன்னை விவசாயி என்று ஏறும் ஒவ்வொரு மேடையிலும் சொல்லிக்கொள்ளும் தமிழக முதல்வரோ, மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டிற்கு ஆதரவளித்து மௌனம் சாதித்து வருகிறார். டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் 'டெல்லி சலோ' போராட்டத்திற்கு செல்ல இருந்த விவசாய சங்கத் தலைவர் அய்யாகண்ணு இந்த போராட்டத்தில் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படாமல் போலீஸ் உதவியுடன் வீட்டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். எட்டு நாட்களாக அங்கு டெல்லி முழுவதும் சூழ்ந்திருக்கும் வட இந்திய விவசாயிகள் குறித்து முதல்வர் எதுவும் வாய் திறக்கவில்லை.

 

தனியார் பெரு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வங்கித்துறை, விமான போக்குவரத்து, தரைவழி போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளில் அரசாங்கத்தின் கைகள் மெல்ல கட்டப்பட்டு, இத்துறைகள் முழுவதுமே இன்று முழுமையாக தனியாரின் ஆதிக்கத்திற்கும் சென்றுள்ளது. இதேநிலை விவசாயத்துறைக்கும் எதிர்காலத்தில் ஏற்படும்போது, இன்று பொதுத்துறை வங்கிகளுக்கும், ஏர் இந்தியா நிறுவனத்திற்கும், என்ன நிலை ஏற்பட்டதோ அதே நிலை விவசாயிகளுக்கும் ஏற்படாது என்பது நிச்சயமல்ல.

 

இவ்வளவு ஏன், பாஜகவின் தாய் இயக்கம் ராஷ்த்ரிய சுயம் சேவக் என்னும் ஆர்.எஸ்.எஸ்-இன் கீழ் செயல்படும் விவசாய சங்கமான பாரத் கிஸான் சங், புதிய வேளாண் சட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலை பற்றி குறிப்பிடவில்லை என தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து, இதற்காக ஒரு புது சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தது. அப்படி இருக்கையில் இந்த சட்டத்திற்கு ஒரு விவசாயியாக உணர்ந்து ஆதரவு தெரிவித்திருக்கும் பழனிசாமி எந்தப் பிரச்சனையும் வராது என்று ஆணித்தரமாக சொல்கிறார், உண்மையிலேயே முதல்வர் பழனிசாமி விவசாயிதானா? எனும் கேள்வியும் எழாமல் இல்லை.

 

 

Next Story

“நடவடிக்கை எடுப்பதுபோல் பாவலா....” - தமிழக அரசுக்கு இ.பி.எஸ் கண்டனம்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
EPS condemns the Tamil Nadu government

இந்தியாவிலேயே போதைப் பொருள் கடத்தலில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறி தமிழக அரசுக்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விடிய விடிய இராமாயணம் கேட்டுவிட்டு, சீதைக்கு இராமன் சித்தப்பா என்பதுபோல், கடந்த மூன்றாண்டு கால மக்கள் விரோத திமுக அரசின் அவலங்களை எடுத்துச் சொன்னால், நானே முதல்வன், நான் ஆளும் மாநிலமே நாட்டில் முதன்மை மாநிலம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புலம்பி வருகிறார். ஒரு சிறந்த ஆட்சியாளர்கள் என்றால், தாங்கள் செய்த சாதனைகளையும், மற்ற மாநிலங்களில் அந்தந்த அரசுகள் செய்யும் சாதனைகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பது ஏற்கக்கூடிய ஒன்றாகும். மக்களின் விதிப் பயனால் நமக்கு கிடைத்துள்ள முதலமைச்சர் போதைப் பொருள் புழக்கம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களில் குஜராத்தோடும், அஸ்ஸாமோடும், மற்ற வட மாநிலங்களோடும் தமிழகத்தை ஒப்பிட்டுத் தனக்குத்தானே ஒரு பொய்மைத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார். இந்த திமுக அரசின் ஆட்சியாளர்கள், தங்கள் கட்சியில் நியமித்த அயலக அணி நிர்வாகிதான் வட மாநிலங்களில் இருந்து தமிழகம் வழியாக வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்களை கடத்தி இருக்கிறார் என்ற உண்மையை மறைக்க தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து வருகிறார்கள்.

இரண்டாயிரம் கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தங்கள் கட்சியினர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித பதிலோ, மறுப்போ நேரடியாக தெரிவிக்காத முதலமைச்சர், பிரச்சனைகளை திசை திருப்பும் விதமாக அ.தி.மு.க ஆட்சியில் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்ற பொய் பரப்புரையை தனது சுற்றுப்பயணத்தின் போதும், ஊடக விளம்பரங்கள் மூலமும் கட்டவிழ்த்துவிடுவது எள்ளி நகையாடக்கூடியதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கமோ, கடத்தலோ, விற்பனையோ இந்த திமுக அரசின் காவல்துறையினரால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை. மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவுதான் அந்தப் பணியைச் செய்து வருகிறது. திமுக அரசு ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து, தமிழ் நாட்டில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துக்கொண்டே இருப்பதை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் பலமுறை சட்டமன்றப் 

பேரவையில் எடுத்துரைத்ததோடு, காவல்துறை மானியக் கோரிக்கையிலேயே பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகில் கஞ்சா விற்பனை தொடர்பாக 2138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 148 குற்றவாளிகள் மட்டுமே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதற்கு எனது ஆச்சரியத்தையும், வழக்குகளின் எண்ணிக்கைக்கும், கைதானவர்களின் எண்ணிக்கைக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை சுட்டிக்காட்டி சுமார் 2000 பேர் கைதாகாமல் தப்பியது எப்படி என்று சட்டமன்றத்திலேயே கேள்வி எழுப்பியிருந்தேன். அதற்கு, இதுவரை மவுன சாமியார் வேடமிடும் இந்த ஆட்சியாளர்கள் பதிலளிக்கவில்லை. தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய இந்த திமுக அரசைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் தொடர்ச்சியான போராட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலிப் போராட்டங்கள், அறிக்கைகள் என்று அ.தி.மு.க தமிழக இளைஞர்களையும், மாணவர்களையும் போதைப் பழக்கத்தில் இருந்து காப்பாற்ற தொடர்ந்து களத்தில் நின்று போராடி வருகிறது.

மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, நூற்றுக்கணக்கான கிலோ கணக்கில் போதைப் பொருள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருளான மெத்தம்பெட்டமைன் மற்றும் போதைப் பொருட்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்தபின் தன்னுடைய ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் தானும் நடவடிக்கை எடுப்பதுபோல் ஒரு பாவலாவை இந்த ஆட்சியாளர்கள் காட்டியிருக்கிறார்கள். 100 கிராம், 200 கிராம் என்ற அளவில் போதை மாத்திரைகள் மற்றும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், 29 நாட்களில் 402 பேர் கைது என்று செய்திக் குறிப்பை காவல்துறை வெளியிட்டிருக்கிறது. மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் நடவடிக்கைகளுக்கு முன்புவரை இந்த 402 பேர் சுதந்திரமாக போதைப் பொருள் வியாபாரம் செய்ய அனுமதி அளித்தது யார்? மேலும், இதுபோன்ற சிறு சிறு குற்றவாளிகளை கைது செய்வதைப் போல், போதைப் பொருள் வியாபாரத்தின் ஆணிவேரை கைது செய்ய இதுவரை இந்த அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் திமுக அரசின் முதலமைச்சர், மனித சங்கிலிப் போராட்டம் ஒரு நாடகம் என்று சொன்னதாக நேற்று ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பறிமுதல் செய்த போதைப் பொருட்கள், திமுக நிர்வாகி கைது மற்றும் சம்பந்தப்பட்ட காவல்துறையினரின் பேட்டி போன்றவை நடைபெறவில்லை என்று முதலமைச்சர் நினைக்கிறாரா? மேலும், போதைப் பொருள் கடத்தல் குறித்து நாங்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளிக்காத இந்த திமுக அரசு, இனியாவது தூக்கத்திலிருந்து விழித்து தமிழகத்தில் நிலைமை என்ன என்று கூர்ந்து கவனித்து உடனடி நடவடிக்கை எடுக்க இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன். அ.தி.மு.க நடத்திவரும் ‘போதைப் பொருள் இல்லாத தமிழகம்’ என்ற உன்னதப் போராட்டங்களுக்கு மாபெரும் ஆதரவு அளித்து வரும் தமிழக மக்கள், தமிழ் நாட்டை போதைப் பொருள் கேந்திரமாக மாற்றிய இந்த மக்கள் விரோத திமுக-விற்கு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Next Story

அ.தி.மு.க. சின்னம் தொடர்பான வழக்கு; வெளியான தீர்ப்பு தேதி!

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
A.D.M.K. Litigation relating to symbol Date of judgment published

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பில், “பொதுக்குழு தொடர்பான பிரதான சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே எந்த தடையும் விதிக்கக் கூடாது” என வாதிடப்பட்டது. இதனையடுத்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில், அ.தி.மு.க. கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் எனவும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருந்தது. மேலும் சம்பந்தப்பட்ட நீதிபதியை அணுகி நிவாரணம் பெற ஓ. பன்னீர்செல்வத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த 4 ஆம் தேதி (04.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர்செல்வம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்னமும் தன்னை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது. அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஒருவர் இன்னமும் தன்னை ஒருங்கிணைப்பாளராக கூறி வருகிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி நடவடிக்கையில் தலையிடுவது தொண்டர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமியின் தரப்பு வாதம் நிறைவடைந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் மார்ச் 18 ஆம் தேதி (18.03.2024) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் தீர்ப்பளிக்க உள்ளார்.