Skip to main content

தேமுதிகவுக்கு எடப்பாடி பெப்பே! விரக்தியில் பிரேமலதா!

Published on 29/02/2020 | Edited on 29/02/2020

 

                       

ராஜ்யசபா தேர்தலில் மூன்று இடங்களை எளிதாக அதிமுக கைப்பற்றும் நிலையில், ஒரு இடத்தைக் கேட்டு எடப்பாடியிடம் மல்லுக்காட்டுகிறார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா. இதற்காக, எடப்பாடியை சந்தித்து பேச தனது சகோதரர் சுதீசை அனுப்பி வைத்தார் பிரேமலதா. சந்திப்பும் நடந்தது. ஆனால், விரக்தியோடு திரும்பியிருக்கிறார் சுதிஷ் என்கிறார்கள் அதிமுகவினர். 

 

premalatha vijayakanth



       

இது குறித்து நம்மிடம் பேசிய கட்சியின் மூத்த தலைவர்கள், ‘’ லோக்சபா தேர்தலின் போது எங்களுக்கு கொடுக்கப்பட்ட உறுதி மொழியின்படி ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்குங்கள் என எடப்பாடியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் சுதீஷ். அதற்கு எடப்பாடியோ, அப்படி எந்த அக்ரிமெண்டும் நாம் போட்டுக்கொள்ளவில்லையே. இன்னும் சொல்லப் போனால், லோக்சபா தேர்தலில் உங்களுக்கான லோக்சபா இடங்களின் எண்ணிக்கையை பேசியதே பாஜக தலைமைதான். அப்படியிருக்க ராஜ்யசபா விசயத்தில் உங்களுக்கு எப்படி உறுதி தந்திருக்க முடியும்? 


               

 ஒரு பேச்சளவில் ராஜ்யசபா தேர்தல் வந்தால் பார்த்துக்கலாம்னு சொல்லியிருந்தாலும் கூட, அதனை தருவதற்கு நான் மட்டுமே இப்போ முடிவெடிக்க முடியாது. நீங்கள் என்னை சந்திப்பதற்கு முன்பே, உங்களின் எதிர்பார்ப்பை பற்றி கட்சியின் சீனியர்களிடம் தெரிவித்திருக்கிறேன். அவர்களோ, இந்த முறை 3 இடங்களிலும்  அதிமுகதான் போட்டிப்போட வேண்டும். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கக்கூடாது என ஒரே குரலில் வலியுறுத்துகிறார்கள். நான் என்ன செய்யட்டும்? அதனால், ராஜ்யசபா சீட்டை எதிர்ப்பார்க்காதீர்கள். சட்டமன்ற தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம் என சொல்லியிருக்கிறார். சுதீஷ் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் எடப்பாடி அசைந்து கொடுக்கவில்லை! என்கின்றனர். 

             

தேமுதிகவின் எதிர்பார்ப்பை எடப்பாடி நிராகரித்துவிட்ட நிலையில், விரக்தியுடன் திரும்பியுள்ளார் சுதீஷ்! இந்த நிலையில், தேமுதிகவுடன் எந்த அக்ரிமெண்டும் போட்டுக்கொள்ளவில்லை என அமைச்சர் ஜெயக்குமாரை சொல்ல வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இதனால் நொந்து போயிருக்கிறார் பிரேமலாதா. இந்நிலையில், அதிமுகவில் ராஜ்யசபா சீட்டை கைப்பற்ற கடைசி நேர முயற்சியாக பாஜக தலைமையின் உதவியை நாடலாமா? என விஜயகாந்த் குடும்பத்தில் ஆலோசனைகள் நடந்துள்ளன.

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.

Next Story

மத்திய பாஜக அரசு மீது இ.பி.எஸ். பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
EPS on Central BJP Govt Allegation sensational

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. கடந்த 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். எனவே இப்படிப்பட்ட கட்சியை அழிப்பது என்பது வெறும் கனவாகத் தான் முடியும். வெற்று வார்த்தையாகத் தான் முடியும். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, அளித்த வாக்குறுதிகளை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதாவது சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பச்சை பொய் பேசுகிறார்.

திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதே போன்று கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014க்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரியை போட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

EPS on Central BJP Govt Allegation sensational

மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். மாநில பிரச்சனைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முழுமையாக வழங்குவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்” எனக் கேள்வி எழுப்பினார்.