Skip to main content

’’சமூக அக்கறையும் துணிச்சலும் எடப்பாடிக்கு இல்லை!‘’ -வாள் வீசும் கே.சி.பழனிச்சாமி!   

Published on 02/08/2020 | Edited on 02/08/2020
edappadi palanisamy - k c palanisamy

 

 

கரோனா பரவலை தடுப்பதற்காக பொது முடக்கத்தை ஆகஸ்ட் 30 வரை நீட்டித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. சில தளர்வுகளுடன் பெரும்பாலான பழைய கட்டுப்பாடுகள் அப்படியே நீடிக்கின்றன. ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்படும் என மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், எடப்பாடியின் உத்தரவு ஏமாற்றமளிக்கிறது. 
                        

இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி, கொரோனா குளறுபடிகள் குறித்து, எடப்பாடிக்கு எதிராக வாள் சுழற்றி வருகிறார். அவரிடம் நாம் பேசியபோது, ‘’ மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இனிமேல் இ-பாஸ் வாங்க தேவை இல்லை; பொதுமக்கள் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம் என மத்திய அரசு அறிவித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி இந்த முடிவை எடுத்திருப்பது பல தரப்பிலும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. 
                          

தொற்று பரவல் அதிகமாக இருக்கும் இடங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் நீடிக்கலாம். மற்றபடி ஆங்காங்கு உள்ள நிலைமைக்கு தகுந்தவாறு மாநில அரசும் கலெக்டர்களும் முடிவுகள் எடுக்கலாம். தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியது. ஆனால், மத்திய அரசின் முடிவை பார்த்தபின் தமிழக அரசு முடிவு எடுக்கும்  என்று சொல்லி வந்த முதல்வர், மொத்த தமிழ்நாட்டையும் மேலும் ஒரு மாதம் முடக்கி வைப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. 
                        

மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது கரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது என்று பழனிசாமி பல முறை பெருமையுடன் குறிப்பிட்டார். ”இதற்கு மேலும் கரோனாவை விரட்டி அடிப்பது இனிமேல் மக்கள் கையில்தான் இருக்கிறது” என்றும் சொன்னார். இதனால், ஊரடங்கு வாபஸ் பெறப்படும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி நடக்கவில்லை. 
                  

கரோனா தொற்று மிக பெரிய ஆபத்தானதுதான். மறுக்கவில்லை. ஆனால், ஊரடங்குதான் தீர்வு என்றால், இந்த நாலரை மாதத்தில் கரோனா முழுவதுமாக ஒழிந்திருக்க வேண்டும். ஆனால், ஒழிக்கப்படவில்லை. ஆக, ஊரடங்கு மட்டும் இதற்கு தீர்வு அல்ல! ஊரடங்கு விதிகளை மக்கள் முழுமையாக பின்பற்றவில்லை என்றும், முக கவசம் அணிவதிலும், சமூக இடைவெளி கடைபிடிப்பதிலும் மக்கள் அலட்சியமாக நடக்கின்றனர் என்றும் பழனிசாமி சொல்வதில் உண்மை இல்லை. பெரும்பாலான மக்கள் இந்த விதிகளை முழுமையாக பின்பற்றுகின்றனர். ஒரு சிலர் மட்டும்தான் விதிகளை அப்பட்டமாக மீறி நடக்கின்றனர். விதிகளை பின்பற்றாமல் அப்பாவி மக்களுக்கு தொற்று ஏற்படுத்துபவர்கள் சமூக விரோதிகள் என்று கேரள அரசு அறிவித்து ஜெயில் தண்டனை அளிக்க அவசர சட்டம்  போட்டுள்ளது. அந்த சமூக அக்கறையும் துணிச்சலும் எடப்பாடி அரசுக்கு ஏன் வரவில்லை?
                   

நோய் வராமலே மரணம் வந்து விடுமோ என்று பீதி அடையும் அளவுக்கு ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். தொழில்கள் முடங்கி கிடக்கின்றன. வேலைகள் பறி போகின்றன. ஊதியம் குறைக்கப்படுகிறது. அனைத்தையும் தாங்கி கொண்டு வேலைக்கு போகலாம் என்று புறப்பட்டால் இ-பாஸ் கெடுபிடி தடுக்கிறது. அன்றாடம் உழைத்து சம்பாதிப்பவர்களின் நிலைமை இன்னும் பரிதாபமாக இருக்கிறது. பணக்காரர்கள், அரசு சம்பளம் வாங்குபவர்கள் தவிர மற்ற பிரிவுகளை சேர்ந்த மக்களின் வாழும் உரிமையே கேள்விக்குறியாகி நிற்கிறது. உயிர் பாதுகாப்பு தவிர வேறு எந்த தேவைகளும் இல்லாத ஒரு சிறு பிரிவின் ஆலோசனையை கேட்டு முடிவுகள் எடுத்தால், அடுத்த ஆண்டு தேர்தலில் அதற்காக மிகப்பெரிய விலையை எடப்பாடி கொடுக்க வேண்டியது வரும்! ‘’ என்கிறார் ஆவேசமாக!

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.