Skip to main content

எடப்பாடியின் சொந்த மாவட்டத்தில் நடக்கும் கொடுமை... கொந்தளிப்பில் மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

முதல்வரின் மாவட்டத்திலிருந்து இன்னொரு குமுறல் இது. சேலம், நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்களுக்கு நம்பிக்கை முகமாக விளங்கும் சேலம் ஆவின் நிர்வாகம், ஏரியா மக்களின் பலத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கிறது. சேலத்தை அடுத்த தளவாய்ப் பட்டியில், 1984-ஆம் ஆண்டு முதல் ஆவின் பால் பண்ணை இயங்கி வருகிறது. இது 54 ஏக்கர் பரப்பளவு கொண்டது நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வருகிறது. ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் வணிகம் செய்யும் நிறுவனமாகவும் இது வளர்ந்திருக்கிறது. எனினும் பால் பண்ணைக்கு நிலம் கொடுத்த தளவாய்ப்பட்டி கிராம மக்களை அது வஞ்சிப்பதாக அம்மக்கள் புகார் வாசிக்கின்றனர். 

 

admk



இது குறித்து சூழலியல் ஆர்வலர் சிவராமன் நம்மிடம் விரிவாகப் பேசினார்.’"ஆவினில் பால் பதனிடுதல், பால் பொருள்கள் தயாரித்தல், பால் கேன்கள், டேங்கர் லாரிகளை சுத்தம் செய்தல், பாய்லர் கிளீனிங் என தினமும் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பயன்படுத்தப்பட்ட தண்ணீரை, பண்ணைக்குள்ளேயே திறந்த வெளியில் தேக்கி வைக்கின்றனர். இது சுற்றுச்சுவரை உடைத்துக்கொண்டு கழிவு நீராக வெளியேறுகிறது. இதன் பாதிப்பால் தளவாய்ப்பட்டி ரொட்டிக்காரன் வட்டம் என்ற கிராமத்தில் நிலத்தடி நீரில் அது கலந்துவிட்டது. அதனால் அங்கே எங்கே தோண்டினாலும் கழிவு நீர் ஊற்று நீர் போல் வந்துவிடும். அங்கே சண்முகம் என்பவர் வீட்டுக்குள் சிமெண்ட் தரையை உடைத்துக்கொண்டு 24 மணி நேரமும் நீரூற்றாக வெளியேறுகிறது. இதனால் கடந்த 35 ஆண்டுகளாக கழிவுநீரோடு போராடிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு காலத்தில், இந்த ஆவின் கூட்டுறவு நிறுவனத்தில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இயக்குநராக தன் அரசியல் வாழ்வின் பொறுப்பைத் தொடங்கினார். ஆனால் முதல்வர் தனிப்பிரிவு, கலெக்டர், ஆவின் நிர்வாகம் என பலரிடமும் புகார் அளித்தும் இதுவரை எங்கள் பிரச்சினை தீர்ந்தபாடில்லை'' என்றார் வருத்தமாக.

 

village



ரொட்டிக்காரன் வட்டத்தில் சண்முகம் (40) என்பவரின் வீட்டை நேரில் பார்த்தோம். சுமார் 500 சதுரஅடி பரப்பு கொண்ட அந்த வீடு முழுக்கவே தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. எந்நேரமும் தண்ணீரில் நடந்து நடந்து சண்முகம், அவருடைய பெற்றோர் ஆகியோரின் கால் பாதங்கள், விரல்கள் சேற்றுப் புண்ணால் அழுகிப்போகும் நிலையில் இருந்தன. அவரின் தந்தையோ சமையல் அறைக்குள் தேங்கிய ஊற்றுநீரை பிளாஸ்டிக் முறத்தில் அள்ளி அள்ளி வெளியே ஊற்றிக் கொண்டிருந்தார்.

"கடந்த 35 ஆண்டுகளாக இந்த நரக வாழ்க்கையைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்''’என்றார் சண்முகம் கலக்கமாக. இங்குள்ள 14 பேரின் வீடுகளிலும் இந்த கழிவு நீர் நீரூற்று பெருகி ஓடிக்கொண்டிருந்தது.


அதே ஊரைச் சேர்ந்த விவசாயிகள் தங்கராஜ், நாராயணன், மாரியம்மாள் ஆகியோர், ''எங்கள் வயல்களில் பயிர்கள் மூழ்கிக் கிடக்கின்றன. கால்நடைகளுக்கு சோளத்தட்டு பயிரிட்டும் கூட, அதை அறுவடை செய்ய முடியாத நிலையில், காசுக்கு வாங்கி வந்து போடும் நிலையில் இருக்கிறோம். முதல்வர் எடப்பாடி ஒருமுறையாவது இங்கு வந்து எங்கள் நிலையைப் பார்க்கவேண்டும்,'' என்றார்கள் பரிதாபமாக.

 

Seshan



இதற்கிடையே ஆவினின் கழிவுநீரை, தளவாய்ப்பட்டி ஏரிக்குக் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை ஆவின் மேற்கொண்டது. ஆனால் விவசாயிகள் சிலர், ஏரியில் கழிவுநீரை தேக்கினால் அந்தப் பகுதியிலும் நிலத்தடி நீர் மாசுபடும் என்று போர்க்கொடி தூக்கினர்.

இப்பகுதி மக்களின் குமுறல்களை விளக்கி, இப்பகுதியில் இருக்கும் 33 குடும்பங்களுக்கும் பட்டா வழங்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என ஆவின் பொது மேலாளர் விஜய்பாபுவிடம் கோரிக்கையை நாம் வைத்தோம். எல்லாவற்றையும் நிதானமாக கேட்டுக் கொண்டார் விஜய்பாபு.

உடனே அவர் ரொட்டிக் காரன் வட்டம் முழுவதும் நேரில் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய விஜய் பாபு... "ஆவினில் தேக்கி வைக்கப்படுவது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்தான். அது கழிவு நீர் அல்ல. ஆவினுக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு பட்டா வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான செலவையும் ஆவின் நிர்வாகமே ஏற்றுக்கொள்ள ஆனதைச் செய்கிறோம். பசுமை வீடுகள் கட்டித்தரப்படும், தளவாய்ப்பட்டி மக்களை அழைத்து விரைவில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்படும்'' என்றார்.


இது தொடர்பாக நாம் தனியார் நில அமைப்பியல் வல்லுநர் ஒருவரை சந்தித்து விளக்கம் கேட்டோம். அவரோ, ""பொதுவாகவே எந்த ஓரிடத்திலும் நீண்ட காலத்திற்கு தண்ணீரை தேக்கி வைத்தால், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விடும். அதுவும் ஆவின் கழிவுநீர் மழைநீருடன் சேர்ந்து வெளி யேறும்போது நேரடியாக புவியின் மேற்பரப்பில் உள்ள நீரையும், போர்வெல் நீரையும் கண்டிப்பாக அது மாசுபடுத்தும். பூமிக்கடியில் நீரால் சூழப்பட்ட பகுதியை "அக்யூஃபர்' எனக் கூறுவோம். அந்தப் பகுதியில் ஆவின் கழிவுநீர் கலந்துவிட்டால் அதன் பாதிப்பு ஒரு கி.மீ., தூரத்திற்குக் கூட இருக்கும். ஆயிரம் அடி ஆழத்திற்கு அப்பாலும் நீரை மாசுபடுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. சேலம் ஆவினில் கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப்படுகிறதா என்பதை மாதந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும்,'' என்றார் அக்கறையோடு. தனது மாவட்டத்திலேயே இப்படிப்பட்ட பாதுகாப்பற்ற தீவுகள் இருப்பதை முதல்வர் எடப்பாடி அறிவாரா? அங்கு வசிக்கும் அப்பாவி மக்களை துயரங்களில் இருந்து அவர் மீட்பாரா?

 

Ayodhya




 

 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.