Skip to main content

எடப்பாடி எடுக்கச் சொன்ன லிஸ்ட்! கோபத்தில் அமைச்சர்கள்!

Published on 16/05/2020 | Edited on 16/05/2020

 

eps


ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் முன்னெடுக்கும் கரோனா நிவாரண உதவிகள் குறித்து உண்மையான ரிப்போர்ட் வேண்டுமென சமீபத்தில் உளவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார் எடப்பாடி. இந்த உத்தரவு சீனியர் அமைச்சர்கள் பலருக்கும் தெரிந்து எடப்பாடி மீது கோபம் கொண்டிருக்கிறார்கள். 
 

                     
குறிப்பாக, வட மாநிலத்திலுள்ள சீனியர் அமைச்சர் ஒருவர், சக அமைச்சர்களிடம், இது குறித்து பகிர்ந்துகொண்ட போது, முதலில் இவரது மாவட்டமான சேலத்தில் என்ன நடக்கிறது? குறிப்பாக, அவரது தொகுதியான எடப்பாடியில் என்ன நடக்கிறது? எனத் தெரிந்து கொண்டு அதன் பிறகு நம்மை வேவு பார்க்கட்டும். அவரை விட நாம் நன்றாகத்தான் செய்து வருகிறோம். என்ன, அவரைப் போல நாம் விளம்பரப்படுத்திக் கொள்வது கிடையாது. நிவாரண உதவிகளில் என் மாவட்டத்தில் எந்தப் பிரச்சனையாவது வந்ததா? இல்லை. அவர் சொல்வதற்கு முன்பே அமைச்சர் என்கிற முறையில் என் மாவட்ட மக்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கையோ அதைச் செய்து வருகிறேன் எனப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.  
                

சீனியர் அமைச்சர் ஒருவரின் இந்த ஆதங்கம் உளவுத்துறை மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உடனே தனது மாவட்டத்தில் அதுவும் தனது தொகுதியில் என்ன நடக்கிறது? என்பதை விசாரித்து ரிப்போர்ட் தருமாறு உளவுத்துறையைக் கேட்டுக்கொண்டிருக்கிறார் முதல்வர். அதேசமயம், மாவட்ட கலெக்டரிடமும் ரிப்போர்ட் கேட்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் இரண்டு தரப்பினரிடமிருந்தும் எடப்பாடிக்கு ரிப்போர்ட் கொடுக்கப்பட்டதில், இரண்டு ரிப்போர்ட்டுகளும், சேலத்திலுள்ள அ.தி.மு.க.வினர் முதல்வரை ஏமாற்றுகிறார்கள் என்கிற ரீதியிலே இருந்தனவாம். தவிர, இரண்டு ரிப்போர்ட்டும் ஏறக்குறைய 80 சதவீதம் ஒத்துப்போயிருக்கிறது. 
                   


அதாவது,  தனது தொகுதியிலுள்ள 1 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் முழுமையாகப் போய்ச்சேர வேண்டும் என அங்குள்ள பொறுப்பாளர்களிடம் பொறுப்பை ஒப்படைத்திருந்திருக்கிறார் எடப்பாடி. அதற்கான நிதியையும் ஒதுக்கினார். நிதியைப் பெற்றுக்கொண்ட அ.தி.மு.க. பொறுப்பாளர்கள், குறிப்பாக எடப்பாடிக்கு நம்பிக்கையானவர்கள், தரமான நிவாரணப் பொருட்களை வழங்காமல் அதிகாரிகளின் துணையுடன் ரேசன் கடைகளில் உள்ள அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவைகளைப் பெற்று அதனை ஏழைகளுக்கு விநியோகித்திருக்கிறார்கள். இது குறித்து, மாவட்ட கலெக்டரிடம் புகாராகச் சொல்லியிருக்கிறார்கள் எடப்பாடி தொகுதிவாசிகள். இந்தச் சம்பவங்கள்தான் இரண்டு ரிப்போர்ட்டிலும் இருந்துள்ளது. ரிப்போர்ட்டை படித்துப் பார்த்துவிட்டு நொந்து போயிருக்கிறார் எடப்பாடி என்கிறது அதிமுக தலைமைக்கழக வட்டாரம்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.