Skip to main content

"கவுன்சிலர் பதவிக்குக் கூட தகுதியில்லாதவர் எடப்பாடி; ஊழல் மட்டுமே செய்தவருக்கு எங்கள் ஆட்சியைப் பற்றிப் பேசத் தகுதியில்லை..." - புகழேந்தி பேச்சு

Published on 02/12/2022 | Edited on 03/12/2022

 

ு

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் தமிழக அரசின் செயல்பாடுகளைப் பற்றிப் பேசி, தமிழகம் இதுவரை கண்டிராத சிறப்பான ஆட்சியைக் கொடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் நடைபெற்று வரும் நல்ல ஆட்சியைக் கெடுக்க வேண்டும் என்று சிலர் நினைப்பதாகவும் அது ஒருபோதும் நடக்காது என்றும், அவர்கள் எண்ணம் கனவாகவே போகும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்க் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக திமுக மூத்த தலைவர் புகழேந்தியிடம் கேள்வி எழுப்பியிருந்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு,

 

அரியலூரில் நடைபெற்ற அரசு விழாவில் ஒரு அரசு எப்படிச் செயல்பட வேண்டும்; முதல்வர் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கு திமுக அரசே மிகச் சிறந்த உதாரணம் என்று முதல்வர் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் எதிர்க் கருத்து தெரிவித்திருந்த எடப்பாடி பழனிசாமி ஒரு ஆட்சி எப்படிச் செயல்படக்கூடாது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த பதினெட்டு மாத திமுக ஆட்சி என்று கூறியுள்ளார். இதை எப்படிப் புரிந்துகொள்வது, இதற்கு உங்களின் பதில் என்ன?

 

இன்றைக்குத் தமிழக முதல்வரின் ஆட்சி இந்தியாவில் எங்குமே நடைபெறாத வண்ணம் மிகச் சிறப்பான ஒரு ஆட்சியைத் தமிழகத்தில் அவர் கொடுத்து வருகிறார். இதை இந்தியாவில் உள்ள அனைவரும் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களைக் கேட்டால் கூட ஏற்றுக்கொள்வார்கள். எடப்பாடிக்கு ஒரு கவுன்சிலராக இருக்கக்கூடத் தகுதியில்லாதவர். இன்னும் அவர் பஞ்சாயத்துத் தலைவராகக் கூட அவருக்கு எந்த தகுதியும் வந்ததாக நான் நினைக்கவில்லை. யாரோ ஒருவருடைய காலில் விழுந்து பதவியைப் பெற்றவர்தான் எடப்பாடி பழனிசாமி. இன்றைக்குத் தமிழகத்திலே பெரிய அரசியல் தலைவரைப் போல் பேசி வருகிறார்.

 

ஆட்சியின் மீது தேவையில்லாத உண்மைக்கு மாறான தகவல்களை அவர் தொடர்ந்து கூறி வருகிறார். ஆட்சி எப்படி நடத்துவது என்று இவர் திமுகவுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் எப்படி ஆட்சி நடத்தக்கூடாது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக நான்கு ஆண்டுகள் ஆட்சி நடத்தினார். கையை காலை பிடித்து இவர் ஆட்சியில் அமர்ந்து கொள்ளையடித்ததை போல் இதுவரை தமிழகம் வேறு யாரையும் கண்டதில்லை. அவங்க தலைவி வழியில் எடப்பாடியும் சிறப்பாகக் கொள்ளையடித்து வந்தார். அவர் ஏற்கனவே சொன்னதுதானே, எங்கள் தலைவி வழியில் ஆட்சி நடத்துவோம் என்று பதவியேற்றதும் எடப்பாடி பழனிசாமி கூறினார். அதனால் அவர் ஆட்சியில் இருக்கும்போது அதை நிறைவேற்றி வருகிறார். 

 

ஒரு முதலமைச்சர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகத் தண்டிக்கப்பட்டவர் இந்தியாவிலேயே இவருடைய தலைவி ஜெயலலிதா தான். அவர் வழியில் ஆட்சி நடத்தியதாகக் கூறும் எடப்பாடி பழனிசாமி எங்கள் ஆட்சியைப் பற்றி குற்றம் சுமத்த என்ன இருக்கிறது. மக்கள் விரோத ஆட்சியைக் கடந்த நான்கு வருடமாகத் தொடர்ந்து கொடுத்து வந்த அவர், திமுகவைப் பற்றிப் பேசுவதற்கு உரியத் தார்மீக தகுதியையே இழந்துவிட்டார். எங்கள் தலைவர் இவரைப் போல் குருட்டு அதிர்ஷ்டத்தில் முதல்வர் ஆனவர் இல்லை. மக்களைச் சந்தித்து மக்களின் நம்பிக்கையைப் பெற்று அதன் மூலம் ஆட்சியைப் பிடித்தவர். எனவே எடப்பாடி இதை எல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவ்வாறு நினைத்துப் பார்த்தால் எங்களைப் பற்றிப் பேசவே கூச்சப்படுவார்" என்றார்.

 

 

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.