Skip to main content

நேரக் கட்டுப்பாட்டை விதித்துள்ளீர்களாமே... மோடியிடம் இருந்து எடப்பாடிக்கு வந்த உத்தரவு... கோபத்தில் எடப்பாடி!

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

விழித்திரு ; விலகியிரு ; வீட்டிலேயே இரு என்று மக்களுக்கு அறிவுறுத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கடந்த 25ந் தேதி சென்னையிலுள்ள தனது இல்லத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் சண்முகம், உள்துறைச் செயலாளர் பிரபாகர், சுகாதார செயலாளர் பீலாராஜேஷ், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட அரசின் உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

எடப்பாடியிடம் ஒரு கோப்பு இருந்தது. சமீபத்தில் மத்திய அரசின் குடியேற்றத்துறையிலிருந்து அனுப்பப்பட்டிருந்த. அந்த கோப்பில், தமிழகத்தில் 86,644 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியல் இருந்தது. அவர்கள் எந்தெந்த வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வந்திருந்தனர் என்கிற தகவலும் குறிப்பிடப்பட்டிருந்தன. அந்தப் பட்டியலில் இருப்பவர்களின் நிலை என்ன ? என்பது குறித்து எடப்பாடி கேட்டார்.

 

admk



வெளி நாடுகளிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் இதுவரை 2 லட்சத்து 9 ஆயிரத்து 285 பேருக்கு கொரோனா தொடர்பான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவர்களில் 16 ஆயிரம் பேர் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்கள். 300 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை 962 பேரின் ரத்தப் பரிசோதனையில் 933 பேருக்கு தொற்று இல்லை என ரிசல்ட் வந்திருக்கிறது. 29 பேருக்கு பாதிப்பு இருப்பதை உறுதி செய்து சிகிச்சை தருகிறோம். பட்டியலில் இருப்பவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷும் விளக்கமளித்திருக்கிறார்கள்.

கேரளாவிலுள்ள தமிழர்களை கேரளாவை விட்டு வெளியேற்றுமாறு கேரள முதல்வர் பிணராயிவிஜயன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது பற்றியும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எடுத்துக்கூறி, மாநில எல்லையிலேயே தமிழர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதைத் தெரிவித்திருக்கிறார்.

144 தடை உத்தரவு குறித்து டிஜிபி திரிபாதியிடம் எடப்பாடி விசாரித்தபோது, மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் அலட்சியம் இன்னும் இருக்கிறது. என டி.ஜி.பி சொல்ல, தயவு தாட்சண்யமில்லாமல் நடவடிக்கை எடுக்கச் சொன்ன எடப்பாடி, 144 தடையையும் ஏப்ரல் 14 வரை நீட்டிக்கச் சொன்னார். உள்துறை செயலாளர் பிரபாகர் குறித்துக்கொண்டார்.


கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான நிதியைப் பொது வெளியிலிருந்து திரட்டலாம் எனத் தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவிக்க, தொழில்நிறுவனத்தினர், திரைத்துறையினர் உள்ளிட்டவர்களை துணை முதல்வர் ஓபிஎஸ் சுட்டிக்காட்ட, எடப்பாடியும் ஏற்றுக்கொண்டார். பொதுவெளியிலிருந்து 5000 கோடி திரட்ட இலக்கு வைக்கலாம். அதேசமயம், மத்திய அரசிடம் 4000 கோடி நிதி உதவி குறித்து கடிதம் எழுதுமாறு தலைமைச் செயலாளரிடம் தெவித்தார் எடப்பாடி.

 

 

bjp



வீடற்ற தொழிலாளர்கள், சாலையோர தொழிலாளிகளைப் பாதுக்காக்கவும் அவர்கள் மூலம் தொற்று பரவாமல் இருக்கவும் அவர்களை அங்கிருந்து அப்புறப் படுத்தி மருத்துவ கண்காணிப்பில் இருக்க வைக்க வேண்டும். ஆனால், அவர்களைத் தங்க வைப்பதற்கான இடங்கள் போதுமானதாக இல்லை. அதனால் மாநகராட்சி வசமுள்ள சமூக நலக்கூடங்கள், அரங்கங்கள், கல்யாண மண்டபங்களைக் கொடுத்து உதவ வேண்டும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவிக்க, அதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு அமைச்சர் வேலு மணியை கேட்டுக்கொண்டார் எடப்பாடி. நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள், சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைத்தல் உள்ளிட்டவை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 26-ந்தேதி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடனும் காவல்துறை அதிகாரிகளுடனும் வீடியோ கான்ஃப்ரன்சில் விவாதித்த போது, சில கலெக்டர்களிடம் கோபமும் காட்டியிருக்கிறார் எடப்பாடி. இனி ஒரு உயிர் கூட கொரோனாவால் பறிப்போகக் கூடாது எனச் சொன்னவர், புதுக்கோட்டை கலெக்டர் உமாமகேஷ்வரியிடம், அத்யாவசிய பொருட்கள் கிடைப்பதற்கான நேர கட்டுப்பாட்டை விதித்துள்ளீர்களாமே.. அப்படியெல்லாம் கூடாது எனக் கண்டித்தார்.

டெல்லியிலிருந்து கொடுக்கப்படும் உத்தரவுகளுக்கேற்ப எடப்பாடி அரசின் நடவடிக்கைகளைக் கவனித்து வருகிறார் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித். ராஜ்பவனுக்கு வரும் தகவல்கள் அப்படியே கோட்டைக்கு பாஸ் செய்யப்படுகின்றன. அந்தத் தகவல்கள் மீது உரிய கவனம் செலுத்த தனது செயலாளர்களுக்குப் பிரத்யேகமான உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

இதற்கிடையே, கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர்களிடம் ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி. இது குறித்து டெல்லி பத்திரிகையாளர்களிடம் விசாரித்தபோது, ''இந்தியா முடக்கப்பட்டதில் தினசரி 40 ஆயிரம் கோடி இழப்பை நாடு சந்தித்து வருகிறது என நிதித்துறை அமைச்சர் நிர்மலா கீதாராமன் தெரிவித்ததை ஆமோதித்த மோடி, நாட்டின் பொருளாதாரத்தை விட, மக்களின் உயிர் முக்கியம் அதற்கேற்ப பொருளாதார இழப்பைச் சமாளிக்க வேண்டும் எனத் தெளிவுப்படுத்தியிருக்கிறார். இதன்பிறகே 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி சிறப்புத் தொகுப்பை நிர்மலா அறிவித்தார்.

இந்தியா முடக்கப் பட்டுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் மக்கள் ஒன்று கூடுதல் நடந்து கொண்டுதானிருக்கிறது என உளவுத்துறை கொடுத்துள்ள அறிக்கை மீது மோடி விவாதித்துள்ளார். மாநில அரசுகளின் காவல்துறையினர் மீது மக்களுக்கு அலட்சியம் இருக்கிறது.. அதனால் காவல் துறையினருக்கு உதவியாக ராணுவத்தைக் களமிறக்கலாம் எனப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சொல்ல, நல்ல யோசனைதான். ஆனா, வேறு பிரச்சினைகள் ஏற்படலாம். பொறுத்திருந்து முடிவெடுக்கலாம். அதற்கு மாறாக மாநில காவல்துறை அதிகாரிகளுக்கு ஸ்ட்ரிக்டான உத்தரவுகளைப் போடலாம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்ல, அதனை மோடி ஏற்றுக் கொண்டிருக்கிறார்.


ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் ராணுவத்தின் கண்காணிப்பிலேயே இருக்கட்டும் எனவும் முடிவு செய்திருக்கிறார்கள். 21 நாட்கள் கெடு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்த்தனிடம் பிரதமர் சில கேள்விகள் கேட்க, மக்களின் ஒத்துழைப்பு போதுமான அளவில் கிடைக்கவில்லை. பாதிக்கப் படுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்கின்றன. 21 நாட்களுடன் பிரச்சனைகள் கட்டுக்குள் வந்துவிடுமா என்பது தெரியவில்லை. மக்கள் முழுமையாக ஒத்துழைத்தால் மட்டுமே சாத்தியப்படும். தேவைப்பட்டால் 21 நாட்கள் என்பதை நீட்டிக்க வேண்டியதிருக்கும் என அவர் சொல்ல பிரதமர் உள்பட பலரும் அதிர்ச்சி யடைந்திருக்கிறார்கள். இதனையடுத்து, ஒவ்வொரு மாநிலத்தையும் ஒரு மத்திய அமைச்சரின் கண்காணிப்பில் கொண்டு வருவதற்கேற்ப முடிவுகள் எடுக்கப்பட்டன"' என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.

கொரோனா பரபரப்பிற்கிடையிலும் எடப்பாடி, தமிழக அமைச்சர்களின் நடவடிக் கைகள் மீதும் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக, ஓபிஎஸ் உள்ளிட்ட சீனியர் அமைச்சர்களிடம், சமீபத்தில் மா.செ.பதவி பறிக்கப்பட்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கேபினெட்டிலிருந்து எடுக்கவும், புதிதாக இருவரை சேர்க்கவும் ஆலோசித்துள்ளார். அப்போது, பிரதமர் விதித்துள்ள 21 நாள் கெடு ஏப்ரல் 14-ந்தேதியோடு முடிந்து போகுமா? அல்லது நீட்டிக்கப்படுமா? எனத் தெரியவில்லை. அது தெரிந்தபிறகு கேபினெட் மாற்றம் குறித்து முடிவு எடுக்கலாம் எனச் சொல்லியிருக்கிறார்கள் கீனியர்கள். இந்த நிலையில், டெல்லியிலிருந்து கொடுக்கப்பட்ட உத்தரவுகளுக்கேற்ப ஒவ்வொரு பணிகளையும் கவனிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட 9 குழுக்களை அமைத் துள்ளார் எடப்பாடி.

அதன்படி செந்தில்குமார், அதுல்யமிஸ்ரா, பங்கஜ்குமார் பன்ஜால், சந்தோஷ் கே மிஸ்ரா உள்ளிட்ட ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இந்திய அரசுடன் இணைந்த மாநில அளவிலான ஒருங்கிணைப்பை கவனிக்கவும் ; முருகானந்தம், அருண் ராய், அனுஜார்ஜ், அணீஷ் சேகர் ஆகிய ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மாநிலத்தில் அத்யாவசிய பொருட்களுக்கான உற்பத்தியைக் கண்காணிக்கவும் ; தயானந்த கட்டாரியா, ககந்தீப்சிங்பேடி, சந்திரமோகன் ஆகிய ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளுடன் தாமரைக்கண்ணன் ஐ.பி.எஸ்.அதிகாரியும் இணைந்து மாவட்ட அளவில் அத்யாவசிய பொருட்கள் சப்ளையாவதை கண்காணிக்கவும் ; குமரகுருபரன், சங்கர், தீபக் ஜேக்கப் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் ஊடக ஒருங்கிணைப்பிற்காகவும் ; கோபால், நாகராஜன் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் தனியார் மருத்துவ மனைகளை ஒருங்கிணைக்கவும் ; பிரபாகர், ஜவஹர், தர்மேந்திரபிரதாப் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் போக்குவரத்துகளை கண்காணிக்காவும் ; உமாநாத், ஜெகனாதன், சாம்சன் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மக்களின் தனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப் படுத்தப்பட்ட வார்டிகளை கண்காணிக்கவும் ; ஹன்ஸ்ராஜ்வர்மா, ஹர்மேந்தர்சிங், மாணிவாசன் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மருத்துவமனை கட்டமைப்பை ஒருங்கிணைக்கவும் ; கிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், விஷ்ணு ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் நிவாரணபணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வ குழுக்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள், பாதிக்கப்பட்ட முதியவர்களின் தேவைகளைக் கவனிக்கவும் என 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியா முடக்கப்பட்ட முதலிரண்டு நாட்களிலேயே மக்கள் கடும் நெருக்கடியை சந்திக்கும் நிலையில், மிச்ச நாட்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறது நாடு என்ற கேள்வி உள்ளது.

 

 


 

Next Story

11 மாதங்களுக்குப் பிறகு பிரச்சாரத்திற்குச் சென்ற அமித்ஷா; கொந்தளித்த மணிப்பூர் மக்கள்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Opposition to Amit Shah who went to Manipur to campaign after 11 months

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. மெய்தி - குக்கி சமூகத்தினருக்கு இடையே நடந்த இந்த மோதல் கொலை, தீவைப்பு, ஆயுதத் திருட்டுச் சம்பவங்ள் எனப் பூதாகரமாக மாறியது. அதுமட்டுமல்லாமல், வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயரிழந்தனர். 

இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை. இந்த வன்முறையை ஆளும் மத்திய, மாநில பாஜக அரசு கண்டுக்கொள்ளாத காரணத்தால், இதுவரை அங்கு அமைதியான சூழல் ஏற்படவில்லை. இந்தியாவில் இப்படி ஒரு கொடூர வன்முறை நடந்த பின்னரும் பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை. மேலும், அங்குள்ள பாஜக அரசும் இதுவரை கலைக்கப்படவில்லை என எதர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக மணிப்பூர் சென்ற மத்திய பாஜக அமைச்சர அமித்ஷாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மணிப்பூரில், `இன்னர் மணிப்பூர்’, `அவுட்டர் மணிப்பூர்’ என இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளது. அங்கு, வரும் ஏப்ரல் 19 மற்றும் 26ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு  நடைபெற இருக்கிறது. இதையொட்டி, கலவரம் நடைபெற்ற சமயத்தில் கூட செல்லாத மத்திய அமைச்சர் அமித்ஷா 11 மாதங்கள் கழித்து தேர்தல் பரப்புரைக்குச் சென்றார்.

அவருக்கு, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாலை மார்க்கமாக சென்ற அமித்ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாலைகளில் டயர்களுக்கு தீவைக்கப்பட்டது. பல இடங்களில் பாஜக வாகனங்களைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய பாஜக வாக்கு சேகரிக்க மட்டும் மணிப்பூர் செல்வாதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பினர்.

இதனிடையே, மணிப்பூர் தலைநகரில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் அமித்ஷா பங்கேற்றார். ஆனால், அவர் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற முந்தைய நாட்களிலும் மணிப்பூரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லமால் ஆயுதம் ஏந்திய இருப்பிரிவினருக்குள் ஏற்பட்ட கலவரத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டதாகவும், உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் இப்படியான அசாதரண சூழல் உள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் ஓட்டிற்காக அமித்ஷா பிரச்சாரம் நடத்திச் சென்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கின்றனர். இந்த முறை மணிப்பூரில் நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகளை இணைத்து `மணிப்பூர் ஜனநாயகக் கூட்டணி'யை உருவாக்கியிருக்கிறது பா.ஜ.க. இந்தியா கூட்டணிக்காக காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 10 கட்சிகள் இணைந்துள்ளது. இந்த முறை பாஜக அரசின் மேலிருக்கும் அதிருப்தியால் இரண்டு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியே வெல்ல வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் சொல்லப்படுகிறது.

மணிப்பூரில் பிரச்சாரம் செய்ய வந்த அமித்ஷவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Next Story

மகளிர் வாக்குகளை ஈர்க்கும் திமுக! தேர்தல் வியூக வகுப்பாளர்கள் கணிப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 Election strategists prediction on Clean sweep victory in the election

அ.தி.மு.கவின் வாக்கு வங்கியில் முக்கியமான பகுதியினர் பெண்கள். அந்த வாக்கு வங்கியை இலக்காக வைத்து, தி.மு.க தொடர்ச்சியாக வேலை செய்து வருவது இந்தத் தேர்தலில் வெளிப்படையாகத் தெரிகின்றது. 2024 தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில், முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசிய மூன்று முக்கியமான விஷயங்கள்,  மகளிர் உரிமைத் தொகை, பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், புதுமைப்பெண் திட்டம் ஆகியவை. இத்துடன் காலை உணவுத் திட்டம். இவை அனைத்தும் பெண் வாக்காளர்களின் மனங்களை ஒட்டுமொத்தமாக கவரும் நோக்கத்திலானவை என்பது வெளிப் படையான உண்மை !

முந்தைய தலைமுறைக்கு முன்னர் பெண்கள் படிப்பதும், படித்து முடித்து விட்டாலும் வேலைக்கு செல்வது என்பதும் அவ்வளவு எளிதானதாக இல்லை. இதனால் பாலின சமத்துவத்தை நிலை நிறுத்துவதற்கு கல்வியும், பொருளாதார விடுதலையும் முக்கியமானதாக பேசப்பட்டது. டாக்டர் பட்டமே பெண் பெற்றிருந்தாலும் வேலைக்கு சென்று பொருள் ஈட்டவில்லை எனில், அந்தப் பட்டம் வெறும் திருமண பத்திரிக்கையில் பெயருடன் இணைத்துக் கொள்வதற்கு மட்டுமே பயன்படும். உலகம் முழுவதும் பெண்கள் முன்னேற்றம் என்பது பல மடங்கு இந்தியாவை விட உயர்ந்திருப்பதற்கு காரணம், அங்கெல்லாம் குடும்பக் கட்டுப்பாடுகள் இல்லை என்பதுதான்.

திராவிட இயக்கங்களின் மிக முக்கியமான இலக்கு பெண் உரிமையும், சமத்துவமும் தான். பெரியார், பெண் உரிமைகளுக்கு எனத் தனித் தீர்மானங்களையும் நிறைவேற்றி இருக்கிறார். 1929 ஆம் ஆண்டு முதல் சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தான் ‘பெண்களுக்கு சொத்தில் சம உரிமை’ எனும் தீர்மானம். பெரியார் உயிருடன் இருக்கும் வரை, அந்தச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், 1989 ஆம் ஆண்டு கலைஞரால் தமிழ் நாட்டில் பெரியார் கண்ட கனவு சட்டமாக்கப்பட்டது.

 Election strategists prediction on Clean sweep victory in the election

இந்த வரலாற்றில், முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் உரிமைத் தொகை திட்டம் மூலம், பெண் பொருளாதாரச் சுதந்திரத்தை மேலும் வலுப்படுத்தினார். மகளிருக்கு இலவச பேருந்து பயணம், பெண்களின் உயர் கல்விக்கு மாதம் 1000 ரூபாய் இவையும் பெண்களைக் கவரும் திட்டங்கள். இத்திட்டங்களின் மூலம் 1 கோடியே 6 இலட்சம் குடும்பங்கள் பயன் பெறுகின்றனர். இது உளவியல் ரீதியாக பெண்களுக்குப்  பெரும் பலத்தைக் கொடுக்கிறது இந்தத் திட்டங்கள்.

கலைஞர் கொண்டு வந்த மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தைத்தான், ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு 50000 ஆகவும், தாலிக்கு தங்கம் என்றும் அறிவித்தார்.  இதே திட்டத்தைதான், இன்றைய கால வளர்ச்சிக்கு ஏற்ப முதலமைச்சர் ஸ்டாலின், ‘புதுமைப் பெண் திட்டம்’ ஆக மாற்றி, தாலிக்குத் தங்கம் என்பதைவிட, உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 என்ற முற்போக்கான திட்டமாகக் கொண்டுவந்தார். இது இளம் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தால் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை 29 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இந்தியாவிலேயே பெண்கள் உயர்கல்வி சேர்க்கையில் 48.6% பெற்று பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலாவதாக உள்ளது. இன்னும் 5 வருடங்களில் புதுமைப் பெண் திட்டம் மூலமாகத் தமிழ்நாடு மிக பெரிய அளவில் முன்னேறி இருக்கும்.

தாலிக்குத் தங்கம் தராமல் இருப்பதைத் தங்களுக்குச் சாதகம் ஆக்கிக் கொள்ள முடியுமா என்று இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வினர் முயலுகின்றனர். ஆனால் பெண் பிள்ளைகள் கல்வி பயில வேண்டும் என்பதைத்தான் தாய்மார்கள் விரும்புகின்றனர். 1921-இல் பெண்களுக்கும் வாக்குரிமை அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தது நீதிக்கட்சி. அப்போது தொடங்கி, பெண்கள் உரிமையில் இரண்டு திராவிடக் கட்சிகளும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. அதில், எம்.ஜி.ஆர் என்கிற ஆளுமை பிம்பமும், ஜெயலலிதா என்கிற பெண் ஆளுமைப் பிம்பமும் அ.தி.மு.கவிற்குப் பெண்கள் வாக்கு வங்கியை உருவாக்கித் திடப்படுத்தியது.

 Election strategists prediction on Clean sweep victory in the election

இப்போது அந்த வாக்கு வங்கியைத் தனக்கானதாக மாற்ற ஸ்டாலின் முயன்றுள்ளார். அதில் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் கணிசமாக வெற்றி பெறவும் செய்தார். 2024 இல் இன்னும் பெரிய அளவில் பெண்கள் தி.மு.கவிற்கு வாக்கு அளிப்பார்கள் என்று கணிக்கின்றனர். காங்கிரஸ் கட்சியின் ஏழைப் பெண்களுக்கு ஆண்டிற்கு 1 இலட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டம், மத்திய வேலைவாய்ப்பில் 50 சதவிகிதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு ஆகியவையும் பெண் வாக்காளர்களைக் கவர்ந்திருப்பதாகவே சில புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் 3 கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து 724 பெண் வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண்களே இம்முறை 10 லட்சத்து 89 ஆயிரத்து 394 பேர் அதிகமாக இருக்கிறார்கள். அதனால், இந்த முறை பெண்கள் அளிக்கும் வாக்குகள், தமிழ்நாட்டில் தி.மு.க.வின் வெற்றியை  க்ளின் ஸ்வீப் செய்ய உதவும் என்கிறார்கள் தேர்தல் வியூக வகுப்பாளர்கள்.