Skip to main content

வெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 16/09/2019 | Edited on 16/09/2019

முதல்வர் எடப்பாடியின் வெளிநாடு பயணம் மூலமாக எட்டாயிரம் கோடி முதலீடுகள் வந்துள்ளன, அவரது பயணம் பெரும் வெற்றி' என ஜெ., ஜெயிலிலிருந்து திரும்பி வந்தபோது அளித்த வரவேற்பை போல பிரம்மாண்டமான வரவேற்பை அ.தி.மு.க.வினர் அளித்தது போல காட்சிகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. உண்மையில் எடப்பாடி முதலீடுகளை கொண்டு வந்தார் என நிரூபிப்பாரேயானால் அவருக்கு பாராட்டு விழா நடத்த தயார்' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சொல்ல, "ஸ்டாலின் எப்பவுமே என்னை எதிர்க்கத்தான் செய்வார்' என முதலமைச்சர் எடப்பாடி பதில் சொன்னார். இந்நிலையில் எடப்பாடி, வெளிநாடுகளில் முதலீட்டு ஒப்பந்தம் செய்து கொண்ட கம்பெனிகள் எவை என நக்கீரன் ஆய்வில் இறங்கியது.
 

eps



அந்த பட்டியலில் முதலில் வந்தது, ரீ வேச்சூர் எல்எல்சி (REVATURE -LLC) என்கிற கம்பெனி. இது ஒரு வேலைவாய்ப்பு வழங்கும் கம்பெனி. இந்த கம்பெனி மூலம் தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தமிழகத்தில் இயங்கும் சர்வதேச கம்பெனிகளுக்கு புதிய வேலைவாய்ப்புகளுக்கு தகுதியான நபர்களை தரவும்... ஆயிரம் கோடி ரூபாய் டாலர்களில் முதலீடு செய்யப்போவதாக செப்டம்பர் 3-ம் தேதி நியூயார்க் நகரில் நடந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி முன்னிலையில், தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த கம்பெனி எப்படிப்பட்ட கம்பெனி என இணைய தளங்களில் தேடினோம். இது ஒரு வேலைவாய்ப்பு அளிக்கும் கம்பெனி என்பதால் இந்த கம்பெனி பற்றி என்ன விமர்சனம் வந்துள்ளது என ஆராய்ந்தோம்.

 

admk



இது ஒரு ஊழல் கம்பெனி. இந்த கம்பெனி பற்றி கூகுளில் ஏராளமான விமர்சனங்கள் வந்துள்ளன. அதை பரிசோதித்து பாருங்கள். இவர்கள் ஒரு வேலை என சொல்வார்கள். இன்னொரு வேலை செய்ய வைப்பார்கள். நீங்கள் அவர்கள் சொல்லும் வேலையை செய்யாமல் போனால் உங்களுக்கு 20,000 டாலர் அபராதம் விதிக்கப்படுகிறது. இது ஒரு ஏமாற்று வேலை என்கிறது. இந்த அமெரிக்க கம்பெனியுடன் எடப்பாடி எப்படி ஒப்பந்தம் செய்தார் என்பது ஒரு தனிக்கதை. எடப்பாடியின் ஆல் இன் ஆல் செயலாளராக இருப்பவர் விஜயகுமார் ஐ.ஏ.எஸ். விஜயகுமாருக்கு நெருக்கமானவர் தகவல் தொழில்நுட்பத் துறையில் முதன்மைச் செயலாளராக இருக்கும் சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ். இவரது சொந்த வெப்சைட்டை பாருங்கள். ரீ வேச்சூர் (Revature) பற்றி தெரியும்'' என்றார்கள்.

 

admk



www.santhoshbabu.org/family என்கிற அவரது இணையதள பக்கத்திற்கு சென்றோம். "எனது மகன் நிதின் சந்தோஷ் ஒரு பி.இ. பட்டதாரி. தகவல் தொழில் நுட்பத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற அவர், ரீவேச்சூர் டெக்னாலஜி கம்பெனியில் சோதனைப் பொறியாளராக வேலை பார்க்கிறார்'' என சந்தோஷ் பாபு குறிப்பிட்டுள்ளார். அவரது மகன் வேலை, செய்யும் கம்பெனி. அதுவும் ஊழல் கம்பெனி என அமெரிக்கர்கள் விமர்சனம் செய்யும் கம்பெனியுடன் சந்தோஷ்பாபு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம் முன்னிலையில் ஆயிரம் கோடி முதலீடு ஒப்பந்தம் போட்டிருக்கிறார் என சொல்லி சிரிக்கிறார்கள் தொழிலதிபர்கள்.

 

admk



அடுத்த நிறுவனம் அக்வில் சிஸ்டம்ஸ் (AQUILL SYSTEMS) என்கிற கம்பெனி. அது எப்படிப்பட்ட கம்பெனி என ஆராய்ந்தோம். www.glass door.co.in என்கிற விமர்சன வெப்சைட்டில் இந்த கம்பெனியில் ஒரேயொரு ஆள்தான் வேலை செய்கிறார். அவரே முதலாளி, அவரே தொழிலாளி. வெறும் லெட்டர் பேடு கம்பெனி என்கிற விமர்சனம் காணப்படுகிறது. இது லெட்டர் பேடு கம்பெனி என்றால்... 50,000 கோடி ரூபாய் தமிழகத்தில் முதலீடு செய்ய எடப்பாடி ஒப்பந்தம் போட்ட மேற்கு வங்கத்தில் இயங்கும் கம்பெனியான ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் கம்பெனி யார் அமெரிக்காவுக்கு வந்தாலும் ஓர் ஒப்பந்தம் போடும். கடந்த மாதம் அமெரிக்காவுக்கு வந்த இலங்கை அமைச்சர்களிடம் ஒன்றரை லட்சம் கோடியில் ஹால்டியா கம்பெனி ஒரு ஒப்பந்த அறிவிப்பில் கையெழுத்திட்டது.

ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கான ரூபாய் முதலீடு செய்ய இது பிரிட்டீஷ் பெட்ரோலியம் போல மிகப்பெரிய நிறுவனம் அல்ல. எல்லாம் ஏமாற்று வேலை என்கிறார்கள் அமெரிக்க தொழிலதிபர்கள். மற்றொரு கம்பெனி Jean Martin என்கிற கம்பெனி. இது ஏற்கனவே சென்னையில் இயங்குகிறது. சென்னை சிறுசேரியில் தமிழக அரசு கொடுத்துள்ள வாடகை கட்டிடத்தில் வெறும் 50 பேர் வேலை செய்யக்கூடிய கம்பெனி. அடுத்து Jugo Health என்கிற கம்பெனி. இதுவும் சென்னையில் இயங்கக்கூடிய கம்பெனி. பக்கவாதம் வந்து கை, கால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கென இந்த நிறுவனம் ஒரு கருவி மூலம் சிகிச்சை அளிக்கிறது. ஒருமுறை இந்த கருவியில் சிகிச்சை பெற்றால் நரம்பு நீட்டமடையும். அதற்கு ஒரு நோயாளிக்கு நூறு ரூபாய் கட்டணத்தை சென்னையில் உள்ள அலுவலகத்தில் வசூல் செய்யக் கூடிய கம்பெனி.


மொத்தம் 200 தொழிலதிபர்களை நியூயார்க் நகரில் எடப்பாடி சந்தித்தார். பதினோரு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதில் பதினோரு கம்பெனிகள் பங்கேற்றன. 2,000 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் பெற்றார் எடப்பாடி என தமிழக அரசு அறிவித்துள்ள நியூயார்க் நகர தொழிலதிபர் சந்திப்பில் இடம்பெற்ற கம்பெனிகள் தான் இவை.

இந்த கம்பெனிகள் எல்லாம் தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலாளர் சந்தோஷ்பாபு, முதல்வரின் உதவியாளர் கிரிதரன், முதல்வரின் செயலாளர் விஜயகுமார் ஐ.ஏ.எஸ். ஆகியோருக்கு நெருக்கமானவை. அமெரிக்கா சென்ற முதல்வர், முதலீட்டை ஈர்த்தார் என்பதை பறைசாற்ற இம்மூவரும் தங்களுக்கு நெருக்கமான சென்னையைச் சேர்ந்த கம்பெனிகளின் அமெரிக்க பிரதிநிதிகளை வரவழைத்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் கோட்சூட் போட்டு எடப்பாடியுடன் நிற்க வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுக்க வைத்துள்ளார்கள்'' என சொல்லும் தொழிலதிபர்கள், "இந்த கம்பெனிகளுடன் தமிழக அரசு ஒப்பந்தம் போட்டது என்றால் அதன் இன்னொரு பிரதி அவர்களிடம் தர வேண்டும்.

நியூயார்க் நகரில் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்பில் போடப்பட்ட ஒப்பந்தத்தை அப்படியே மூட்டையாக கட்டிக்கொண்டு சென்னைக்கு கொண்டு வந்துவிட்டார்கள். இத்தனைக்கும் பத்து வருடத்திற்குள் ஒப்பந்தம் போட்ட கம்பெனிகள் தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம். பத்து வருடத்தில் சம்பந்தப்பட்ட கம்பெனிகள் முதலீடு செய்யாவிட்டால் தமிழக அரசு கேள்வி கேட்க முடியாது. அப்படிப்பட்ட பல்லில்லாத ஒப்பந்தத்தில் எந்த பயனும் இல்லை. அதை தூக்கிக் கொண்டு வந்து விட்டார்கள்'' என்கிறார்கள் தொழிலதிபர்கள்.

உண்மையில் தமிழகத்தில் முதலீடு செய்ய வருபவர்களிடம் லஞ்சம் பெறுவதற்கென்று தனியாக ஒரு அலுவலகம் நடத்திக் கொண்டிருக்கிறது செல்வாக்குமிக்க அமைச்சர் வட்டாரம். அதை மூடினாலே தமிழகத்தில் தொழில் வளரும் என்கிறார்கள் முதலீட்டாளர்கள். "இல்லை... இல்லை லண்டன் கிங்ஸ் மருத்துவமனையில் உள்ளதைப் போல் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கொண்டு வருவேன். அந்த மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் திறப்பேன். இது என் பயணத்திற்கு கிடைத்த வெற்றி' என்கிறார் முதல்வர் எடப்பாடி. இது மட்டுமல்ல அமெரிக்கா பாணியில் கால்நடை பண்ணை அமைப்பது உட்பட எதுவுமே நடக்காது என அவநம்பிக்கையை விதைக்கிறார்கள் தொழில்துறை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். இந்த வெளிநாட்டு விசிட்டும் அதில் நடைபெற்ற அனைத்தும் கோட் சூட் கோல்மால் என்கிறார்கள் கோட்டை தரப்பினர்.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.