Skip to main content

வெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 16/09/2019 | Edited on 16/09/2019

முதல்வர் எடப்பாடியின் வெளிநாடு பயணம் மூலமாக எட்டாயிரம் கோடி முதலீடுகள் வந்துள்ளன, அவரது பயணம் பெரும் வெற்றி' என ஜெ., ஜெயிலிலிருந்து திரும்பி வந்தபோது அளித்த வரவேற்பை போல பிரம்மாண்டமான வரவேற்பை அ.தி.மு.க.வினர் அளித்தது போல காட்சிகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. உண்மையில் எடப்பாடி முதலீடுகளை கொண்டு வந்தார் என நிரூபிப்பாரேயானால் அவருக்கு பாராட்டு விழா நடத்த தயார்' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சொல்ல, "ஸ்டாலின் எப்பவுமே என்னை எதிர்க்கத்தான் செய்வார்' என முதலமைச்சர் எடப்பாடி பதில் சொன்னார். இந்நிலையில் எடப்பாடி, வெளிநாடுகளில் முதலீட்டு ஒப்பந்தம் செய்து கொண்ட கம்பெனிகள் எவை என நக்கீரன் ஆய்வில் இறங்கியது.
 

eps



அந்த பட்டியலில் முதலில் வந்தது, ரீ வேச்சூர் எல்எல்சி (REVATURE -LLC) என்கிற கம்பெனி. இது ஒரு வேலைவாய்ப்பு வழங்கும் கம்பெனி. இந்த கம்பெனி மூலம் தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தமிழகத்தில் இயங்கும் சர்வதேச கம்பெனிகளுக்கு புதிய வேலைவாய்ப்புகளுக்கு தகுதியான நபர்களை தரவும்... ஆயிரம் கோடி ரூபாய் டாலர்களில் முதலீடு செய்யப்போவதாக செப்டம்பர் 3-ம் தேதி நியூயார்க் நகரில் நடந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி முன்னிலையில், தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த கம்பெனி எப்படிப்பட்ட கம்பெனி என இணைய தளங்களில் தேடினோம். இது ஒரு வேலைவாய்ப்பு அளிக்கும் கம்பெனி என்பதால் இந்த கம்பெனி பற்றி என்ன விமர்சனம் வந்துள்ளது என ஆராய்ந்தோம்.

 

admk



இது ஒரு ஊழல் கம்பெனி. இந்த கம்பெனி பற்றி கூகுளில் ஏராளமான விமர்சனங்கள் வந்துள்ளன. அதை பரிசோதித்து பாருங்கள். இவர்கள் ஒரு வேலை என சொல்வார்கள். இன்னொரு வேலை செய்ய வைப்பார்கள். நீங்கள் அவர்கள் சொல்லும் வேலையை செய்யாமல் போனால் உங்களுக்கு 20,000 டாலர் அபராதம் விதிக்கப்படுகிறது. இது ஒரு ஏமாற்று வேலை என்கிறது. இந்த அமெரிக்க கம்பெனியுடன் எடப்பாடி எப்படி ஒப்பந்தம் செய்தார் என்பது ஒரு தனிக்கதை. எடப்பாடியின் ஆல் இன் ஆல் செயலாளராக இருப்பவர் விஜயகுமார் ஐ.ஏ.எஸ். விஜயகுமாருக்கு நெருக்கமானவர் தகவல் தொழில்நுட்பத் துறையில் முதன்மைச் செயலாளராக இருக்கும் சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ். இவரது சொந்த வெப்சைட்டை பாருங்கள். ரீ வேச்சூர் (Revature) பற்றி தெரியும்'' என்றார்கள்.

 

admk



www.santhoshbabu.org/family என்கிற அவரது இணையதள பக்கத்திற்கு சென்றோம். "எனது மகன் நிதின் சந்தோஷ் ஒரு பி.இ. பட்டதாரி. தகவல் தொழில் நுட்பத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற அவர், ரீவேச்சூர் டெக்னாலஜி கம்பெனியில் சோதனைப் பொறியாளராக வேலை பார்க்கிறார்'' என சந்தோஷ் பாபு குறிப்பிட்டுள்ளார். அவரது மகன் வேலை, செய்யும் கம்பெனி. அதுவும் ஊழல் கம்பெனி என அமெரிக்கர்கள் விமர்சனம் செய்யும் கம்பெனியுடன் சந்தோஷ்பாபு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம் முன்னிலையில் ஆயிரம் கோடி முதலீடு ஒப்பந்தம் போட்டிருக்கிறார் என சொல்லி சிரிக்கிறார்கள் தொழிலதிபர்கள்.

 

admk



அடுத்த நிறுவனம் அக்வில் சிஸ்டம்ஸ் (AQUILL SYSTEMS) என்கிற கம்பெனி. அது எப்படிப்பட்ட கம்பெனி என ஆராய்ந்தோம். www.glass door.co.in என்கிற விமர்சன வெப்சைட்டில் இந்த கம்பெனியில் ஒரேயொரு ஆள்தான் வேலை செய்கிறார். அவரே முதலாளி, அவரே தொழிலாளி. வெறும் லெட்டர் பேடு கம்பெனி என்கிற விமர்சனம் காணப்படுகிறது. இது லெட்டர் பேடு கம்பெனி என்றால்... 50,000 கோடி ரூபாய் தமிழகத்தில் முதலீடு செய்ய எடப்பாடி ஒப்பந்தம் போட்ட மேற்கு வங்கத்தில் இயங்கும் கம்பெனியான ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் கம்பெனி யார் அமெரிக்காவுக்கு வந்தாலும் ஓர் ஒப்பந்தம் போடும். கடந்த மாதம் அமெரிக்காவுக்கு வந்த இலங்கை அமைச்சர்களிடம் ஒன்றரை லட்சம் கோடியில் ஹால்டியா கம்பெனி ஒரு ஒப்பந்த அறிவிப்பில் கையெழுத்திட்டது.

ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கான ரூபாய் முதலீடு செய்ய இது பிரிட்டீஷ் பெட்ரோலியம் போல மிகப்பெரிய நிறுவனம் அல்ல. எல்லாம் ஏமாற்று வேலை என்கிறார்கள் அமெரிக்க தொழிலதிபர்கள். மற்றொரு கம்பெனி Jean Martin என்கிற கம்பெனி. இது ஏற்கனவே சென்னையில் இயங்குகிறது. சென்னை சிறுசேரியில் தமிழக அரசு கொடுத்துள்ள வாடகை கட்டிடத்தில் வெறும் 50 பேர் வேலை செய்யக்கூடிய கம்பெனி. அடுத்து Jugo Health என்கிற கம்பெனி. இதுவும் சென்னையில் இயங்கக்கூடிய கம்பெனி. பக்கவாதம் வந்து கை, கால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கென இந்த நிறுவனம் ஒரு கருவி மூலம் சிகிச்சை அளிக்கிறது. ஒருமுறை இந்த கருவியில் சிகிச்சை பெற்றால் நரம்பு நீட்டமடையும். அதற்கு ஒரு நோயாளிக்கு நூறு ரூபாய் கட்டணத்தை சென்னையில் உள்ள அலுவலகத்தில் வசூல் செய்யக் கூடிய கம்பெனி.


மொத்தம் 200 தொழிலதிபர்களை நியூயார்க் நகரில் எடப்பாடி சந்தித்தார். பதினோரு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதில் பதினோரு கம்பெனிகள் பங்கேற்றன. 2,000 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் பெற்றார் எடப்பாடி என தமிழக அரசு அறிவித்துள்ள நியூயார்க் நகர தொழிலதிபர் சந்திப்பில் இடம்பெற்ற கம்பெனிகள் தான் இவை.

இந்த கம்பெனிகள் எல்லாம் தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலாளர் சந்தோஷ்பாபு, முதல்வரின் உதவியாளர் கிரிதரன், முதல்வரின் செயலாளர் விஜயகுமார் ஐ.ஏ.எஸ். ஆகியோருக்கு நெருக்கமானவை. அமெரிக்கா சென்ற முதல்வர், முதலீட்டை ஈர்த்தார் என்பதை பறைசாற்ற இம்மூவரும் தங்களுக்கு நெருக்கமான சென்னையைச் சேர்ந்த கம்பெனிகளின் அமெரிக்க பிரதிநிதிகளை வரவழைத்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் கோட்சூட் போட்டு எடப்பாடியுடன் நிற்க வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுக்க வைத்துள்ளார்கள்'' என சொல்லும் தொழிலதிபர்கள், "இந்த கம்பெனிகளுடன் தமிழக அரசு ஒப்பந்தம் போட்டது என்றால் அதன் இன்னொரு பிரதி அவர்களிடம் தர வேண்டும்.

நியூயார்க் நகரில் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்பில் போடப்பட்ட ஒப்பந்தத்தை அப்படியே மூட்டையாக கட்டிக்கொண்டு சென்னைக்கு கொண்டு வந்துவிட்டார்கள். இத்தனைக்கும் பத்து வருடத்திற்குள் ஒப்பந்தம் போட்ட கம்பெனிகள் தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம். பத்து வருடத்தில் சம்பந்தப்பட்ட கம்பெனிகள் முதலீடு செய்யாவிட்டால் தமிழக அரசு கேள்வி கேட்க முடியாது. அப்படிப்பட்ட பல்லில்லாத ஒப்பந்தத்தில் எந்த பயனும் இல்லை. அதை தூக்கிக் கொண்டு வந்து விட்டார்கள்'' என்கிறார்கள் தொழிலதிபர்கள்.

உண்மையில் தமிழகத்தில் முதலீடு செய்ய வருபவர்களிடம் லஞ்சம் பெறுவதற்கென்று தனியாக ஒரு அலுவலகம் நடத்திக் கொண்டிருக்கிறது செல்வாக்குமிக்க அமைச்சர் வட்டாரம். அதை மூடினாலே தமிழகத்தில் தொழில் வளரும் என்கிறார்கள் முதலீட்டாளர்கள். "இல்லை... இல்லை லண்டன் கிங்ஸ் மருத்துவமனையில் உள்ளதைப் போல் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கொண்டு வருவேன். அந்த மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் திறப்பேன். இது என் பயணத்திற்கு கிடைத்த வெற்றி' என்கிறார் முதல்வர் எடப்பாடி. இது மட்டுமல்ல அமெரிக்கா பாணியில் கால்நடை பண்ணை அமைப்பது உட்பட எதுவுமே நடக்காது என அவநம்பிக்கையை விதைக்கிறார்கள் தொழில்துறை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். இந்த வெளிநாட்டு விசிட்டும் அதில் நடைபெற்ற அனைத்தும் கோட் சூட் கோல்மால் என்கிறார்கள் கோட்டை தரப்பினர்.

Next Story

'இனி அந்த வேட்டியைக் கூட கட்ட முடியாது'- கடம்பூர் ராஜூ பேச்சு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'We can't even build that dhoti anymore' - Kadambur Raju's speech

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதிமுக பெயர், கொடி, சின்னம் லெட்டர் பேடை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் ஓபிஎஸ்க்கு நிரந்தர தடை விதித்துள்ளது நீதிமன்றம். இந்நிலையில் தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில், 'இதற்கு முன்பாவது இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்பொழுது நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

துரோகம் பண்ணியவர்கள் இனி அந்த வேட்டியைக்கூட கட்ட முடியாது. பல்வேறு சோதனைகளுக்கு பிறகு இரண்டு கோடிக்கு மேற்பட்ட தொண்டர்களை அதிமுக சேர்த்துள்ளது.  நாள் முழுவதும் சோதனை தான். ஒன்று நீதிமன்றம் அல்லது தேர்தல் கமிஷன். இப்படி இத்தனை குழப்பங்களையும் சந்தித்து சவால்களை சந்தித்து அத்தனையும் சாதனைகளாக மாற்றியுள்ளோம். இன்று அதிமுகவை பழைய ஒழுங்கோடு இன்னும் சொல்லப்போனால் முன்பு இருந்ததை விட  நல்ல முறைக்கு கொண்டுவந்துள்ளார் எடப்பாடி. இன்றைக்கும் இந்த தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டதா? இல்லை சேருமா? இதுதான் இன்றைக்கு பட்டிமன்றம், விவாதம் போய்க்கொண்டிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் கூட பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்று தெளிவாக கட்சியின் பொதுச் செயலாளர் சொல்லிவிட்டார். இந்த கருத்து ஒவ்வொரு அதிமுக தொண்டர்களுடைய கருத்து தான்'' என்றார்.

Next Story

அ.தி.மு.க. கூட்டணி; தே.மு.தி.க.வுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்கீடு? 

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
ADMK Alliance; Allotment of additional seats for DMDk

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன்படி, அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க. இரண்டு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அ.தி.மு.க, தேமுதிக இடையே மார்ச் 16 ஆம் தேதி 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, அ.தி.மு.க. கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. அப்போது 4 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்திருந்திருந்தது.

அதே சமயம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் இன்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADMK Alliance; Allotment of additional seats for DMDk

இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் பாமக இடம் பெறாததால், தே.மு.தி.க.விற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் பா.ம.க. இல்லாததால் தற்போது 6 முதல் 7 மக்களவைத் தொகுதிகளைக் கேட்க உள்ளதாகவும் தேமுதிக சார்பாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிட ஒதுக்கக் கோரும் சில தொகுதிகளில் தே.மு.தி.க.வும் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்ததால் அ.தி.மு.க. - பா.ம.க. - பா.ஜ.க. கூட்டணியை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.