Skip to main content

ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள எடப்பாடி தினகரனை தேடி...

Published on 14/03/2019 | Edited on 14/03/2019

"தமிழகத்தின் தேர்தல் களம் இந்தியாவின் வைர மார்க்கெட்டை அசைத்துப் பார்த்துள்ளது' என்கிறார்கள் வைர வியாபாரிகள்.

வைரத்தில் பலவகை உண்டு. இதில் "ப்ளஸ் பதினொன்று, மைனஸ் 15' வகை வைரக் கற்கள். வெறும் 5.2 கிராம் ஒரு கேரட் என வைர வியாபாரிகளால் அழைக்கப்படுகிறது. ஒரு கேரட் ப்ளஸ் பதினொன்று மைனஸ் பதினைந்து வகை நல்ல வைரத்தின் விலை இரண்டு லட்ச ரூபாய். அதாவது நமது அன்றாட சமையல் அறையில் பயன்படுத்தும் உப்புக்கல் அளவு வைரத்தின் விலை இரண்டு லட்ச ரூபாய்.

diamond-sasi


இந்தியாவின் வைர மார்க்கெட்டின் தலைநகரான குஜராத் மாநிலம் சூரத் நகரில் திடீரென ப்ளஸ் பதினொன்று ரக வைரம் அதிகமாக இறங்கியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளால் திடீரென இந்த வைரம் அதிக அளவில் விற்கப்படுகிறது. சூரத் நகரில் சட்ட விரோதமாக கணக்கு இல்லாமல் வியாபாரம் செய்யும் தரகர்களால் இந்த வைரம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் வைர மார்க்கெட்டையே சீர்குலைத்துள்ளது. ஏற்கனவே ஐரோப்பிய யூனியன் நாடுகளில் நிலவும் பொருளாதார சிக்கல்களால் சர்வதேச அளவில் விலைகுறைந்து வந்த வைர வியாபாரம் தமிழக அரசியல்வாதிகளின் அதிக அளவு விற்பனையால் முப்பது சதவிகிதம் வரை விலை குறைந்துவிட்டது என வைர மார்க்கெட் நிலவரங்களை சுட்டிக்காட்டி பேசுகிறார்கள் வியாபாரிகள்.
sasi
இதுபற்றி நம்மிடம் பேசிய அகில இந்திய வைர வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் தினேஷ்பாய், "வைரம் என்பது மிக விலை உயர்ந்த பொருள். அதை எளிதில் பணமாக்கலாம். அதை பாதுகாப்பதற்கு சிறிய இடம் போதும் என்பதால் அரசியல்வாதிகள் தங்களது கறுப்புப் பணத்தை வைரமாக மாற்றி வைத்திருப்பது வழக்கம். மோடி அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பல அரசியல்வாதிகள் தங்கள் கறுப்புப் பணத்தை வைரமாக்கினர். அதுபோல வாங்கிக் குவித்தவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது சட்டவிரோதமாக விற்க முன் வந்துள்ளனர் என தரகர்கள் சொன்னதாக செய்திகள் வருகின்றன'' என்கிறார்.

தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றால் யார் என வைர மார்க்கெட்டில் கேட்டோம். "எல்லாம் சசிகலாதான். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சென்னையில் உள்ள பிரபல வைர வியாபாரி ஒருவர் மூலமாக சசிகலா வைரத்தை வாங்கினார். (இதுபற்றி நக்கீரன் வைர வியாபாரியின் பெயருடன் செய்தி வெளியிட்டது). அந்த வைர வியாபாரிக்கும் சசிகலாவுக்கும் உள்ள தொடர்பை அறிந்த வருமானவரித்துறை அவரது ஆழ்வார்பேட்டை கடையில் ரெய்டு நடத்தியது. அவர் மூலம் வாங்கிய வைரத்தை மட்டுமல்லாது ஏற்கனவே வாங்கிக் குவித்த வைரங்களையும் சசிகலா தரப்பு தற்போது தேர்தல் நேரத்தில் விற்க முன்வந்துள்ளது'' என்கிறார்கள் தமிழகத்தைச் சேர்ந்த வைர வியாபாரிகள்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி கொண்டு வரும்போது ஜெ. உடல் நலமில்லாமல் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்தச் சூழ்நிலையிலும் போயஸ் கார்டனின் கறுப்புப் பணத்தை வைரமாக்கினார் சசிகலா. அப்படி வாங்கிய வைரத்தை இப்போது ஏன் விற்க வேண்டும் என சசிகலா வகையறாக்களை கேட்டோம்.
ttv
"தமிழக அரசியலில் சசிகலாவுக்கு எதிர்காலம் வேண்டுமென்றால் எடப்பாடி தோற்க வேண்டும். 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் டி.டி.வி. கட்சி ஜெயிக்க வேண்டும். அப்படி ஜெயித்தால் தான் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள எடப்பாடி தினகரனை தேடி ஓடிவருவார். அப்படி ஒரு நிலை வந்தால்தான் சசிகலா மறுபடியும் பொதுச் செயலாளராக வருவார். அ.தி.மு.க. அணிகள் ஒன்றுபடும் என சசிகலாவின் உறவினர்கள் அட்வைஸ் செய்துள்ளனர். அதனால் இதுவரை காட்டி வந்த கெடுபிடியைத் தளர்த்திய சசிகலா, தினகரனுக்கு தேர்தல் செலவுக்கு பணம் கொடுக்க முடிவு செய்துள்ளார். சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளுக்கு தலா 100 கோடி ரூபாய் செலவு செய்ய எடப்பாடி தயாராகியுள்ளார். அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் அ.ம.மு.க.வும் 18 தொகுதிகளில் செலவு செய்து ஜெயிக்க வேண்டும் என்பதுதான் சசி வியூகம்'' என்கிறார்கள் மன்னார்குடி சொந்தங்கள்.

சசிகலாவின் கணவர் நடராஜன் உலகம் முழுவதும் நண்பர்களை திரட்டி வைத்துவிட்டுத் தான் இறந்திருக்கிறார். சசிகலாவும் வைகுண்ட ராஜன் போன்ற பிரபலங்களிடமும் பெயர் தெரியாத பல தொழிலதிபர்களிடமும் நூற்றுக்கணக்கான கோடிகளை கொடுத்து வைத்திருக்கிறார். சமீபத்தில் வைகுண்டராஜனின் கார்னெட் மணல் பிஸினசுக்கு ஒரு அரசு உத்தரவு மூலம் மூடுவிழா நடத்திவிட்டது மத்திய அரசு. புதுக்கோட்டை ரத்தினசபாபதி போன்ற சிறிய ஆட்களைக் கூட சசிகலா ஆதரவுக்கு எதிர்ப்பு என வருமான வரித்துறை மூலம் நசுக்குகிறது.

இந்த தாக்குதலை முறியடிக்க மோடியின் சொந்த ஊரான குஜராத்திலேயே பணம் திரட்ட சசிகலா முடிவு செய்தார். பல்வேறு நபர்களிடம் இருந்து திரட்டப்பட்ட ப்ளஸ் 11 வகை வைரங்களை குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள தரகர்கள் மூலமாக விற்றார். அந்தத் தொகையில் மூவாயிரம் கோடி ரூபாயை தினகரனுக்கு வழங்கியுள்ளார் சசிகலா. இந்த விற்பனையில் ஆழ்வார்பேட்டை வைர வியாபாரி புரோக்கராக பல நூறு கோடிகளை கமிஷனாக பார்த்துள்ளார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது வைரமாக மாறிய நோட்டுகள் மறுபடியும் வைரத்திலிருந்து நோட்டுகளாக அவதாரம் எடுத்துள்ளன. தமிழகம் முழுவதும் முதல் ரவுண்ட் பிரச்சாரம் முடித்துள்ள தினகரன். இரண்டாவது ரவுண்ட் போகும்போது பண விநியோகம் தொடங்கும் என்கிறார்கள் சசிகலா உறவினர்கள். இந்தத் தகவல்களை அகில இந்திய வைர வியாபாரிகள் சங்க தலைவர் பாபுபாய் குஜராத்தி மறுக்கிறார். வைர வியாபாரமே ரகசியம் நிறைந்தது. எந்த வைர வியாபாரி இதை ஒத்துக் கொள்வார் என நம்மை கேட்கிறார்கள் வைர வியாபாரத்தில் கொடிகட்டி பறப்பவர்கள். தேர்தல் நேர அரசியல் வியாபாரத்தில் எதுவும் சாத்தியம்தான் என்பதே யதார்த்த நிலவரம்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.