Skip to main content

ஆட்சியை கலைக்கும் முடிவில் எடப்பாடி பழனிச்சாமி?

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

தேர்தல் களத்தின் கடைசிநேர கவனிப்புகளால் இடைத்தேர்தல் தொகுதிகளில் 12-ல் வெற்றி பெறலாம் என்ற கணக்கு எடப்பாடி மனதில் ஓடினாலும், அதற்கு மாறான கணக்கு களும் உள்ளன. அதன் விளைவுதான், தினகரன் அணியில் உள்ள 3 எம்.எல்.ஏ.க்களுக்கான நோட்டீஸ் என்கிறது கோட்டை வட்டாரம்.  தமிழக சட்டமன்றத்தில் அ.தி.மு.க.வின் தற்போதைய பலம் 114. தேர்தல் முடிவுகள் மே 23-ல் அறிவிக்கப்பட்ட பிறகு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 இடங்கள் தேவை. அந்த வகையில், 22 தொகுதி இடைத்தேர்தலில் 4 தொகுதி களை ஜெயித்தால் போதுமானது. ஆனால், அ.தி.மு.க.வின் இரட்டை இலையில் வெற்றி பெற்ற தோழமைக் கட்சி எம்.எல்.ஏ.க்களான தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் மற்றும் தினகரன் ஆதரவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகிய 6 எம்.எல்.ஏ.க்கள் எதிராக நின்றால் எடப்பாடிக்கு 10 எம்.எல்.ஏ.க்கள் தேவை.

 

mla

இதில் தனியரசு, அ.தி.மு.க. அணியில் இருக்கிறார். தினகரன் பக்கம் காற்றடிக்கும் கருணாசும்கூட சட்டமன்றத்தில் எடப்பாடியை ஆதரிக்கத் தயார். பா.ஜ.க. கூட்டணியை ஏற்க முடியாமல் தி.மு.க. அணியை ஆதரித்த தமீமுன் அன்சாரியும் நடவடிக்கையைத் தவிர்க்கும் வகையில் எடப்பாடியுடன் சமாதானமாகிவிட்டார். இந்நிலையில்,  தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான அஸ்திரத்தை ஏவுவதற்கு முன்பு சபாநாயகர் தனபாலிடம் எடப்பாடி கலந்தாலோசித்தது பற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க. சீனியர்கள், ""ஏற்கனவே அந்த மூவர் மீது கொறடா புகார் கொடுத்திருந் தாலும், தற்போது தேர்தல் ஆணையத்தில் முறைப்படி அ.ம.மு.க.வை தினகரன் பதிவு செய்திருப்பதால் புதிதாக புகார் கொடுப்பதுதான் சரியானது'' என சொல்லியிருக்கிறார் தனபால். 

 

dhanapal

இதனையடுத்து சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்திடமும் கொறடா ராஜேந்திரனிடமும் விவாதித்து, புதிய புகார் தரப்பட்டு, சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. விரைவில் விளக்க நோட்டீஸ் அனுப்புவார் சபாநாயகர். மூவரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்பது எடப்பாடியின் நோக்கமாக இல்லை. "பதவியை பறித்துவிடுவோம்' என மிரட்டுவதுடன், "கொறடாவுக்கு எதிராக செயல்படமாட்டோம்' என எழுத்துப்பூர்வமாக அவர்களைப் பணியவைத்து தனது பிடியில் வைத்துக் கொள்வதுதான் எடப்பாடியின் திட்டம்'' என்கின்றனர். 

இதுகுறித்து எம்.எல்.ஏ. கலைச்செல்வனிடம் கேட்டபோது, "தினகரனின் ஆதரவாளர்களாக நாங்கள் இருந்தது உண்மைதான். ஆனால் நான் அ.தி.மு.க. உறுப்பினர்தான். அ.ம.மு.க.வின் உறுப்பினராக நான் இல்லை. எடப்பாடி ஆட்சிக்கு எதிராக நான் செயல்படப் போவதுமில்லை. இதுவரை நடந்துகொள்ளவும் இல்லை. அப்படியிருக்க, எனது எம்.எல்.ஏ. பதவியை எப்படி பறிக்க முடியும்? இதே சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி தனது ஆட்சிக்கான பெரும்பான்மையை நிரூபிக்க நடத்திய வாக்கெடுப்பில், கொறடாவின் உத்தரவை மீறி, ஓ.பி.எஸ்., செம்மலை, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடிக்கு எதிராக கை தூக்கினார்கள். அவர்களது பதவியைத்தானே முதலில் பறித்திருக்க வேண்டும்? ஆனால், அவர்களில் இருவர் கேபினெட்டில் இருக்கிறார்கள். சபாநாயகரிடமிருந்து நோட்டீஸ் வந்தால் சரியான விளக்கத்தை தருவேன். எந்த சூழலிலும் எங்கள் பதவியை சபாநாயகரால் பறிக்க முடியாது''‘என்கிறார் உறுதியாக. 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை அந்த எம்.எல்.ஏ.க்களே விரும்பமாட்டார்கள் என்பதால் பிரச்சனைக்குரிய மூவரையும் அ.தி.மு.க. உறுப்பினராகவே செயல்பட அனுமதித்திருக்கிறார் தினகரன்.

உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "இடைத்தேர்தலில் தேவையான பெரும்பான்மைக்கு அதிகமான எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைத்ததும், தினகரன் ஆட்களை சட்டமன்றத்திலிருந்து அப்புறப்படுத்தி அவருக்கு அதிர்ச்சியைக் கொடுக்க நினைக்கிறார் எடப்பாடி. அந்த 3 இடங்களிலும் தனக்கு நம்பிக்கையான நபர்களை நிறுத்தி ஜெயிக்க வைக்க வேண்டுமென்பதே எடப்பாடியின் நோக்கம். இந்த மூவரையும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களாக தொடர அனுமதித்தால் பெரும்பான்மைக்கு 4 இடைத்தேர்தல் தொகுதிகள் வேண்டும். அதுவே, மூவரது பதவியைப் பறித்தால் பெரும்பான்மைக்கு 3 இடங்களே போதுமானது. 

 

eps

அதேசமயம், 22 தொகுதிகளையும் தி.மு.க. ஜெயித்து ஆட்சி மாற்றத்துக்கு வழி உருவானால், தனக்கே பெரும்பான்மை இருப்பதாகச் சொல்லி, அதனை நிரூபிக்க கவர்னரிடம் வாய்ப்பு கேட்பார் முதல்வர். காரணம், இடைத்தேர்தலில் முழுமையாக தி.மு.க. ஜெயித்தாலும் காங்கிரசின் 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன்தான் அது ஆட்சியமைக்க முடியும். கூட்டணி ஆட்சிக்கு தி.மு.க. ஒப்புக்கொள்ளாது. அந்த சமயத்தில், "கூட்டணி ஆட்சியில் பங்கு தருகிறோம்' என அ.தி.மு.க. தரப்பில் தூண்டில் போட்டு, 50 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத காங்கிரசை இழுக்க எடப்பாடி முயற்சிப்பார். பெரும்பான் மையையும் நிரூபிப்பார் எடப்பாடி. ஒருவேளை காங்கிரஸ் ஒப்புக்கொள்ளாது போனால், கர்நாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதாக சட்டமன்றத்தைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமலே ஆட்சியை கலைத்த எடியூரப்பா பாணியில் தனது கேபினெட்டை கலைக்கும் யோசனையும் எடப்பாடியிடம் இருக்கிறது''‘என்கிறார்கள்.   

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.