Skip to main content

ஓபிஎஸ்ஸிடம் நேரடியாக மோதிய எடப்பாடி!

Published on 03/06/2019 | Edited on 03/06/2019

பெரும்பான்மை பலத்துடன் இரண்டாவது  முறை பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பு விழா நடந்த ஜனாதிபதி மாளிகை முன்புற பந்தலில் ஒரு முக்கியமான நபரை எதிர் பார்த்து காத்துக் கிடந்தார்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் எதிர்பார்த்தது,  ஓ.பி.எஸ்.ஸின் மகன் ரவீந்திரநாத் குமார். அ.தி.மு.கவின் ஒரே எம்.பி.யான தேனி தொகுதியின் ரவீந்திரநாத்குமார் மத்திய அமைச்சராக பதவியேற்க, காலை 10 மணிக்கே பிரதமர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்ததாக பரவிய செய்தி, அந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருந்தது. பா.ஜ.க. வட்டாரத்திலும் இதற்கு சாதகமான பதில் வந்து கொண்டிருந்தது. 

 

ops son



ஓ.பி.எஸ். தனது முதல்வர் பதவி பறிபோனதும், சசிகலா என்ற ஒற்றைக் குடும்பத்தின் கையில் சிக்கியுள்ள கட்சியை மீட்க தர்மயுத்தம் நடத்துவதாக சொன்னார். பின்னர், எடப்பாடியுடன் இணைந்தார். அடுத்து நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தனது மகனுக்கு சீட் வாங்கினார். தேனி தொகுதி வெற்றிக்காக எல்லா வேலைகளும் செய்யப்பட்டன. மகன் வெற்றி பெற்றதும் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கித் தருகிறார். இதுதான் சசி குடும்ப ஆதிக்கத்திற்கு பதிலாக நடத்திய தர்ம யுத்தத்தின் நோக்கம் என ஓ.பி.எஸ்.ஸின் தர்ம யுத்தத்தின் போது அவருடன் நின்று அரசியல் நடத்தியவர்கள், குறிப்பாக மைத்ரேயனுக்கு நெருக்கமான வட்டாரங்களில் கோபமாகவே எதிரொலித்தது.

 

ops



ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவியா என முதல்வர் எடப்பாடி வீட்டில் கூடிய கட்சிக்காரர்களும் கலவரமடைந்தனர். அதை யெல்லாம் மீறி ரவீந்திரநாத் குமாரின் பெயரை பா.ஜ.க.வின் மேலிடம் எப்படி அமைச்சர் பதவிக்கு முன்மொழிந்தது என ஆச்சரியப்பட்டார்கள். பாராளுமன்றத் தேர்தல் முடிந்ததும் பா.ஜ.க. மக்களவையில் பெரும்பான்மையை பெற்றாலும் மாநிலங்களவையில் மெஜாரிட்டி பெற கால அவகாசம் தேவைப்படுகிறது.

 

minister



கடந்த முறை, முஸ்லிம் சமுதாயம் தொடர்பான முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் அ.தி.மு.க.வின் கடுமையான எதிர்ப்பால் நிறைவேற்ற முடியவில்லை. எனவே அ.தி.மு.க.வின் தற்போதைய ராஜ்யசபா உறுப்பினர்கள் பா.ஜ.க. அரசுக்குத் தேவைப்படுகிறார்கள். 15 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. இணைந்துள்ளது. எனவே தமிழகத்தில் தோல்வியடைந்திருந்தாலும், வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் அதிகாரமற்றவர்கள் என வெளிக்காட்ட அ.தி.மு.கவுக்கு அமைச்சர் பதவி தர பா.ஜ.க. விரும்புகிறது என டெல்லியில்  அமித்ஷா தரப்பிலிருந்து செய்தி வந்தது.

 

eps



துணை சபாநாயகராக இருந்த தம்பிதுரை, பா.ஜ.க.விலிருந்து அ.தி.மு.க.வுக்கு வந்த மைத்ரேயன், கிருஷ்ணகிரி தொகுதியில் நின்று தோற்றுப் போன கே.பி.முனுசாமி, மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், பா.ம.க.வை சேர்ந்த அன்புமணி என பல தரப்பிலிருந்தும் அமைச்சர் பதவிக் கோரிக்கைகள் வலுத்தன. ஓ.பி.எஸ். ஏற்கனவே தனது மகனின் அமைச்சர் பதவிக்காக வாரணாசியில் நரேந்திரமோடி வேட்புமனு தாக்கல் செய்யும் போதே போய் பேசினார். அப்போதே  இ.பி.எஸ்., இதனை மோப்பம் பிடித்து, தங்கமணி, வேலுமணி மற்றும் இந்தி தெரிந்த வழக்கறிஞரான உறவினர் ஒருவரை வாரணாசிக்கே அனுப்பி வைத்தார். 

 

vaithiyalingam



தேர்தல் முடிந்ததும் ஓ.பி.எஸ்.சின் மகன் மட்டுமே தேனியில் வெற்றி பெற, அ.தி.மு.க.விற்கு இடம் தருகிறோம் என சொன்ன அமித்ஷாவின் வார்த்தையைத் தனது குடும்ப உறுப்பினர்கள் சகிதமாக உடும்பு பிடியாகப் பிடித்துக் கொண்டார். ஓ.பி.எஸ்.சின் இந்த மூவ் எடப்பாடியை பெருமளவு டென்ஷன் ஆக்கியது. டெல்லியில் மோடியும் அமித்ஷாவும் தேர்தல் முடிவுகள் வந்ததும் மூன்றுமுறை அமர்ந்து பேசினார்கள். அதே சமயத்தில், மூன்று முறையும் தமிழகத்தில் இ.பி.எஸ். வீட்டில் கூட்டம் நடந்தது. ஓ.பி.எஸ். டெல்லியில் மகனுக்காக லாபி செய்தார். ஓ.பி.எஸ்.சின் முயற்சியை தடுக்க இ.பி.எஸ். மற்றும் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பியூஷ் கோயலின் உதவியை நாடினார்கள். 

 

eps



அவரோ, "தமிழகத்தில் பா.ஜ.க.வின் ஐந்து வேட்பாளர்களும் தோற்றதற்கு, நாங்கள் அ.தி.முக.வுடன் கூட்டணி வைத்ததுதான் காரணம். தனித்து போட்டியிட்டிருந்தால் கன்னியாகுமரி, கோவை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம். தேர்தல் காலத்தில் கொங்கு மண்டலத்தில் வானதி சீனிவாசனுக்காக ஒரு தொகுதி கேட்டு இ.பி.எஸ்.சிடம் பேசினேன். அவர் தென்சென்னை, திருப்பூர் ஆகிய தொகுதிகளை எங்களுக்கு தர மறுத்து விட்டார். இப்பொழுது பெரிய தோல்வியை சந்தித்துவிட்டு ஓ.பி.எஸ். மகனுக்கு மந்திரி பதவி தரக்கூடாது என என்னை பேசச் சொல்கிறீர்கள். என்னால் முடியாது'' என கோபமாக மறுத்து விட்டார். ஓ.பி.எஸ். தனது முயற்சியை விடாமல் தொடர்ந்தார். 


ஓ.பி.எஸ்.ஸை ஏற்கனவே புறக்கணித்து டென்ஷனாக்கியிருந்த நிர்மலா சீதாராமனை தொடர்பு கொண்டார்கள். அவரும் "நத்திங் டூயிங்' என கோபமாக மறுத்துவிட்டார். வேறு வழியின்றி, நேரடியாக ஓ.பி.எஸ்.சிடமே மோத தயாரானார் இ.பி.எஸ். அதற்காக மோடியின் பதவியேற்பு விழாவிற்கு மூன்று நாள் பயணமாக டெல்லிக்குச் சென்று, ஓ.பி.எஸ். மகனின் மந்திரி பதவி முயற்சிகளை முறியடிக்க திட்டமிட்டிருந்த எடப்பாடி பல வியூகங்களை வகுத்தார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.