Skip to main content

தூசி படியும் ஊழல் வழக்குகள்! ஆனந்தத்தில் முன்னாள் அமைச்சர்கள்!

Published on 03/01/2023 | Edited on 03/01/2023

 

Dusty corruption cases! Ex-ministers in joy!

 

தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. அதேபோல், கடந்த 2 வருடமாக பல்வேறு ஊழல் வழக்குகள் அ.தி.மு.க. மாஜி அமைச்சர்கள் மீது பதிவு செய்யப்பட்டது. ஆனால், ஒரு ஊழல் வழக்கில் கூட அ.தி.மு.க. மாஜிகள் கைது செய்யப்படவில்லை. அவர்கள் மீதான குற்றச்சாட்டில் குற்றப்பத்திரிகை கூட கடந்த 2 வருடமாக தாக்கல் செய்யவில்லை என்ற அதிர்ச்சி தகவல் லஞ்ச ஒழிப்புத்துறையிலிருந்து வெளியாகியுள்ளது.

 

தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி சீரியஸாக பேசினார். கரப்ஷன், கமிஷன் இது தான் அ.தி.மு.க. என ஸ்டாலின் வர்ணித்தார். ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைகள் சரியாக இல்லாததால் அ.தி.மு.க.வினர், தி.மு.க. ஆட்சியை கமிஷன், கரப்ஷன் என தி.மு.க.வினர் விமர்சித்த அதே பாணியில் விமர்சித்து வருகிறார்கள்.

 

அ.தி.மு.க. ஆட்சியின் போது அறப்போர் இயக்கம், அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக சென்னை, கோவை மாநகராட்சிகளில் நடைபெற்ற டெண்டர்களில் ஊழல் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டது. அந்த குற்றச்சாட்டை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி அ.தி.மு.க. ஆட்சியின்போதே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்பொழுது லஞ்ச ஒழிப்புத்துறையில் டி.ஐ.ஜி.யாக இருந்த ராதிகா, எஸ்.பி.யாக இருந்த பொன்னி மற்றும் சண்முகம் ஆகியோருக்கு இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கச் சொல்லி உத்தரவு போட்டது. 

 

Dusty corruption cases! Ex-ministers in joy!
கந்தசாமி ஐ.பி.எஸ்.

 

குற்றச்சாட்டுகளை விசாரித்த எஸ்.பி. பொன்னி, அமைச்சர் வேலுமணி மீது வழக்கு தொடர எந்த முகாந்திரமும் இல்லை என அறிக்கை அளித்தார். அதன்பிறகு ஆட்சிக்கு வந்த தி.மு.க., மாநகராட்சிகளில் டெண்டர் விடுவதில் எஸ்.பி.வேலுமணி, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக டெண்டர் எடுத்து பலகோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார் என வழக்கைப் பதிவு செய்தது.

 

சமீபத்தில் இந்த வழக்கை எதிர்த்து வேலுமணி தாக்கல் செய்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் வேலுமணியை சரியாக விசாரிக்கவில்லையென அந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அவரை விடுவித்தது. அத்துடன், அ.தி.மு.க. ஆட்சியில் குற்றமற்றவர் என லஞ்ச ஒழிப்புத்துறை சொன்ன அதே அமைச்சர் தி.மு.க. ஆட்சி வந்தவுடன் குற்றவாளியாகிறார். ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கேற்றவாறு லஞ்ச ஒழிப்புத்துறை மாறி மாறி செயல்படுவதை உயர் நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது என தீர்ப்பளித்தது. இது லஞ்ச ஒழிப்பத்துறைக்கு ஒரு பெரிய அடியாக பார்க்கப்படுகிறது. 


வேலுமணிக்கு ஆதரவாக செயல்பட்ட ராதிகா, தி.மு.க. ஆட்சி வந்தபிறகும் ஓராண்டு காலத்திற்கு லஞ்ச ஒழிப்புத் துறையில் பணிபுரிந்தார். அவரை மாற்றச் சொல்லி லஞ்ச ஒழிப்புத்துறை தலைவரான கந்தசாமி, டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பிறகே ராதிகா மற்றும் வேலுமணிக்கு ஆதரவாக செயல்பட்ட பொன்னி ஆகியோர் மாற்றப்பட்டனர். ஆனால் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்ட சண்முகம் என்கிறவர் இன்றளவிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியாக தொடர்கிறார். வருகிற மார்ச் மாதம் கந்தசாமி ஓய்வு பெறுகிறார். அவரது பதவிக்கு யாரை போடுவது? என்கிற ரேஸ் காவல்துறையில் வலுவாகி உள்ளது.


சி.பி.ஐ. அதிகாரியாக இருக்கும்போது லஞ்ச ஒழிப்புத்துறை தலைவர் கந்தசாமி, அமித்ஷாவை கைது செய்தார். அந்த நடவடிக்கைதான் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அவருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை தலைவர் பதவியைப் பெற்றுத் தந்தது. தற்பொழுது அவரது இடத்தைப் பிடிக்க கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்ட காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் தயாராகி வருகிறார்கள்.


இதற்கிடையே, லஞ்ச ஒழிப்புத்துறையில் தமிழகம் முழுவதும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. காஞ்சிபுரத்தில் பத்திரப்பதிவு துறையில் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது. அங்கு அதிகாரியாக இருக்கக்கூடிய ராஜவேலு என்பவர் காஞ்சிபுரத்தில் கடந்த 15 வருடங்களாகப் பணியாற்றிவரும் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ஒருவர் மூலம் மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் பழிவாங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கன்னியாகுமரியில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.யாக இருப்பவர், இன்னொரு சமூகத்தைச் சேர்ந்த டாஸ்மாக் மண்டல மேலாளர் ஒருவர் வீட்டுக்கு ரெய்டு செல்கிறார். அங்கு ஒன்றும் கிடைக்கவில்லை. அவரது மண்டல மேலாளரின் டிரைவர் வீட்டில் லட்சக்கணக்கான பணத்தை கைப்பற்றுகிறார். அந்தப் பணம் டிரைவரின் மகனின் பொறியியல் பட்டப்படிப்புக்கு கட்ட வைத்திருந்த பணம். அதை மண்டல மேலாளரின் பணம் என வாக்குமூலம் அளிக்க லஞ்ச ஒழிப்புத்துறை சொல்கிறது. அவரும் வாக்குமூலம் அளித்தார். ஆனால் வாக்குமூலம் அளித்தால் பணத்தை திருப்பித் தந்துவிடுகிறோம் என லஞ்ச ஒழிப்புத்துறை சொன்னதை செய்யவில்லை. அதனால் மகனுக்கு பீஸ் கட்ட வைத்த பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை பொய்யாக பறித்துக் கொண்டார்கள் என அவர் கலெக்டரிடம் புகார் கொடுத்தார். புகாருக்குள்ளான லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. கன்னியாகுமரியிலிருந்து தேனிக்கு மாற்றப்பட்டார்.


இப்படி லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஊழல் புகார்கள் அணிவகுக்க அ.தி.மு.க. மாஜி அமைச்சர்கள் எந்த கவலையும் இல்லாமல் ஜாலியாக சுற்றித் திரிகிறார்கள் என வருத்தப்படுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்