Skip to main content

சர்க்காரியா கமிஷனுக்கு பயந்து காவிரியை விட்டுக்கொடுத்ததா திமுக? - துரைமுருகன் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

Published on 02/07/2018 | Edited on 02/07/2018

பரபரப்பான சூழலிலும் கலகலப்பாக அரசியல் களம் இருக்கிறது என்றால் அங்கே முன்னாள் அமைச்சர் துரைமுருகன் இருக்கிறார் என்பது உறுதி. கலைஞர் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவிவகித்த துரைமுருகனுக்கு காவிரி விவகாரம் உள்பட தமிழக நதிநீர் பிரச்சினைகள் அனைத்தும் அத்துப்படி. பல்வேறு கேள்விகளுடன் அவரை சந்தித்தது நக்கீரன்.


 

duraimurugan



ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாநில உரிமைகளை மீறுவதாக தி.மு.க. குற்றம்சாட்டுகிறது. ஆனால், எந்த உரிமையையும் மீறவில்லை. என்னை பணிசெய்ய விடாமல் தடுத்தால், ஏழாண்டு சிறைத்தண்டனை என ஆளுநர் சொல்கிறாரே?

முதல்வர், தலைமைச்செயலாளர், ஆளுநர் என ஒவ்வொருவருக்குமான அதிகாரங்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆளுநர் என்பவர் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கில் சீர்கேடுகள் இருக்கும்போதோ, சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி பெரும்பான்மை இழக்கும்போதோ மத்திய அரசுக்கு தெரிவிக்கும் ஏஜெண்ட் மட்டுமே. அதேபோல், அமைச்சரவை, சட்டசபை கூடுவது தொடர்பான தகவல்களை அவருக்கு தெரியப்படுத்தலாம் அவ்வளவுதான். ஆனால், கலெக்டர், தாசில்தார், வருவாய் அதிகாரிகளின் நிர்வாக விவகாரங்களில் ஆய்வு என்ற பெயரில் ஆளுநர் தலையிடுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த இடத்திலும் அதிகாரம் அளிக்கப்படவில்லை. அது முதல்வர், அமைச்சர்களின் வேலை. இதையெல்லாம் தட்டிக்கேட்க ஆளுங்கட்சிக்கு சொரணை இல்லை. மாநில சுயாட்சியை நிலைநாட்ட விரும்புவதால் எதிர்க்கட்சியாக நாங்கள் கேட்கிறோம்.

 

 


காவிரி நீரை மீட்டு விட்டதாக மாநிலம் முழுவதும் ஆளும்கட்சி சார்பில் வெற்றி விழா நடத்தப்படுகிறதே?

காவிரி விவகாரத்தின் கடைசி அறிக்கையை கெஜட்டில் போட்டதைத் தவிர ஒரு துரும்பைக்கூட போடாதவர் கள்தான் அ.தி.மு.க. ஆட்சி யாளர்கள். கர்நாடகத்தில் காவிரிக்கு குறுக்காக அணைகள் கட்டப்பட்டபோது அதுதொடர் பாக அம்மாநில முதல்வரும், பொதுப்பணித்துறை அமைச்சரு மான வீரேந்திர பாட்டிலை முதல்முதலாக நேரில் சந்தித்தவர் 1967-ல் அண்ணா அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கலைஞர். இருவருக்குமான தொடர் பேச்சுவார்த்தை பயனற்றுப் போனபோது, இந்த விவகாரத்தை மத்திய அரசு கவனத்திற்கு கொண்டு சென்றவரும் கலைஞர் தான். அப்போது மத்திய அமைச்சர் கே.எல்.ராவ் இங்கு வந்து பார்வையிட்டு, நீரின் மொத்த கொள்ளளவு குறித்த ஆய்வை நடத்தியபோது கலைஞர்தான் முதல்வர். பிறகு, அதிலும் சரியான நகர்வுகள் இல்லாததால் வழக்கு தொடர்ந்த கலைஞர், அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியை தலையிடச் சொன்னார். ஆனால், அவரோ கர்நாடக தேர்தலைக் கருத்தில் கொண்டு, அவகாசம் கேட்டு வழக்கை வாபஸ் வாங்குமாறு கூறி நம்பிக்கையும் அளித்தார். அப்போதும்கூட, சர்வகட்சிகளி டம் ஆலோசித்து மீண்டும் வழக்கு தொடரலாம் என்ற நிபந்தனையோடு வழக்கை வாபஸ் வாங்கினோம். அதைத் தொடர்ந்து காவிரி நடுவர் மன்றத்தை வி.பி.சிங்கிடம் வாதாடிப் பெற்று, அதற்கான இடைக்கால தீர்ப்பு மற்றும் இறுதித் தீர்ப்பையும் பெற்றுத் தந்தவர் கலைஞர். இவை யெல்லாம் தி.மு.க.வின் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற் கான தார்மீக உரிமையை இழந்ததுதான் அ.தி.மு.க. பெற்ற வெற்றி.

 

duraimurugan



சர்க்காரியா கமிஷனுக்கு பயந்துதான் காவிரி தொடர்பான வழக்கை தி.மு.க. வாபஸ் வாங்கியதாக குற்றம்சாட்டுகிறார்களே?

காவிரி தொடர்பான வழக்கை தி.மு.க. வாபஸ் பெற்றது. 1972ஆம் ஆண்டில்! ஆனால் 1976ஆம் ஆண்டுதான் சர்க்காரியா கமிஷனே அமைக்கப்பட்டது. இரண்டுக்கும் என்ன தொடர்பிருக்கிறது? இதே குற்றச்சாட்டை ஜெயலலிதா சட்டசபையில் முன் வைத்தபோது, இப்போது அ.தி.மு.க.வில் எம்.பி.யாக இருக்கும் அப்போது காங்கிரஸ்காரர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் எழுந்து அதன் தவறை விளக்கினார். அதற்கு ஜெயலலிதா, ‘மன்னிக்கவும்.. வாய்குளறி சொல்லிட்டேன். நானும் மனுஷிதானே’ என்றார். இதற்குப் பிறகும் சர்க்காரியா கமிஷனுக்கு நாங்கள் பயந்துபோனோம் என்று குற்றம் சாட்டினால் எப்படி?

சட்டசபையில் இருந்து அடிக்கடி தி.மு.க. வெளிநடப்பு செய்வதாக குற்றம்சாட்டப் படுகிறதே?

ஒரு கருத்தை சட்டசபையில் பதிவுசெய்கிறோம். ஆனால், அதை பேச அனுமதிக்காமல், பேசினால் அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டால் வெளிநடப்பு செய்கிறோம். வெளிநடப்பு செய்வது என்பது ஜனநாயகத்தின் முறை. அதேசமயம், அங்கு நீக்கப்படும் எங்கள் கருத்துகளை மக்கள் மத்தியில் பதிவுசெய்துவிட்டு, மீண்டும் அவைக்கு திரும்புகிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது?

 

 


மக்கள்விரோத அரசு என்ற விமர்சனங்களையும் கடந்து ஆட்சி நடத்துவது எடப்பாடியின் வெற்றி இல்லையா?

ஆட்சி நடக்கிறது என்று சொல்வதையே நான் மறுக்கிறேன். இவர்கள் மத்திய அரசின் பினாமிகள். மோடி வா என்றால் வருவதும், போ என்றால் போவதும்தான் இவர்களது வேலை. சேலம் இரும்பு ஆலையை தமிழகத்திற்கு தர மறுத்தபோது, பிரதமர் இந்திரா காந்தி உடனான கூட்டத்தில் கலைஞர் கலந்துகொள்ள வில்லை. அப்போது, இந்திராவே கலைஞரை அழைத்து, "என்னை நம்பி கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்' என உறுதியளித்த கம்பீர வரலாறு தி.மு.க.வுக்கு இருக்கிறது. நேராக நிற்காதவர்கள்தானே இவர்கள்.

சமீபத்தில் எப்போது கலைஞரை சந்தித்தீர்கள்?

இரண்டு நாட்களுக்கு முன்னர்கூட சந்தித்தேன். அவருக்கென்ன.. நலமுடன் இருக்கிறார். சில சமயங்களில் தான் சோர்ந்து போய் விடுகிறார். ஒண்ணேகால் வருடம் ஒரே அறையில் இருந்தால் யாருக்குதான் சோர்வாகாது? கடற்கரைப் பக்கம் அழைத்துச் சென்று பாருங்கள் ஜாலியாக இருப்பார் என்று கூட நான் சொல்லியிருக்கிறேன்.


தொகுப்பு : ச.ப.மதிவாணன்


 

 

Next Story

பா.ம.க பரப்புரையில் திடீர் எண்ட்ரி கொடுத்த அமைச்சர் துரைமுருகன்; அடுத்தடுத்து நடந்த சுவாரஸ்ய சம்பவம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Minister Durai Murugan who made a sudden entry in the BMC lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன. 

அதில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பா.ம.க, த.மா.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதே போல், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட், இந்தியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், அரசியல் களம் மிகவும் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே, பிரச்சாரக் களத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இந்த நிலையில், பா.ஜ.க தலைமையிலான பா.ம.க கட்சிக்கு, வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வள்ளிமலை பகுதியில் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியை ஒதிக்கியுள்ளது. இந்த மக்களவைத் தொகுதியில், பா.ம.க வேட்பாளராக பாலு களமிறங்கி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், பா.ம.க வேட்பாளர் பாலு பிரச்சாரம் செய்த போது, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவ்வழியே வந்த போது அங்கு சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பா.ம.க வேட்பாளர் பாலு, அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று (15-04-24) தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அதே தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சனை ஆதரித்து பரப்புரை செய்து முடித்துவிட்டு, பா.ம.க வேட்பாளர் பரப்புரை செய்த அந்த வழியாக வந்தார். அப்போது, அமைச்சர் துரைமுருகனை பார்த்த பா.ம.க வேட்பாளர் பாலு, “எனக்கு முருகன் அருள் கிடைத்திருக்கிறது. அண்ணன் துரைமுருகனின் அன்பான ஆசிர்வாதமும், அருளும் என்னை வெற்றிபெற வைக்க வேண்டும். என்று கூறிவர், உங்கள் வாழ்த்தை நான் அடிபணிந்து ஏற்றுக்கொள்கிறேன் எனக் கூறினார். 

மேலும், நான் நிச்சயமாக வெற்றி பெற்று விடுவேன். இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றதும், உங்களை நேரில் வந்து சந்தித்து என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பேசினார். அதற்கு அமைச்சர் துரைமுருகனும், முகம் சுளிக்காமல் சிரித்துக்கொண்டே சென்றார். இதனால், அப்பகுதியில் கலகலப்பான சூழல் ஏற்பட்டது. 

Next Story

"ஊருக்குள் வரக் கூடாது அங்கேயே நில்லுங்கள்” - அமைச்சருக்கு எதிர்ப்பு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kanikapuram area People  struggle against Minister Durai Murugan

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இராமாபுரம் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் நேற்று அமைச்சர் துரைமுருகன் தனது மகன் கதிர் ஆனந்த் அவர்களுக்கு வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது அமைச்சர் உட்பட அரசியல்வாதிகள் வருவதை கண்ட அப்பகுதி மக்கள் சாலையை வழிமறித்து ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்தனர்.

அப்போது ஒரே சமூகத்தினர் உள்ள ஊரில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு சாலையில் மரக்கட்டைகளும்,  இருசக்கர வாகனத்தை நிறுத்தி ஊருக்குள் நுழைய விடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து நுழைய முயற்சித்த கட்சியினரை ஊருக்குள் வராதே, என்ன செய்தார் எம்.பி. 5 ஆண்டுகளில் சாலை கூட சரியாக போடவில்லை. எங்கள் ஓட்டு உங்களுக்கு இல்லை என எதிர்ப்பை தெரிவித்து ஊருக்குள் வர விடாமல் தடுத்தனர்.  இதனால் அங்கு வாக்குவாதம் ஆகி பரபரப்பாகியது மேலும் அத்துமீறி நுழைந்தால் வாகனத்தின் மீது மது பாட்டிலும், கற்களையும் வீசி கண்ணாடியை உடைப்போம். அசிங்கப்படாமல் போய்விடுங்கள் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிக்காமல் வந்த வழியே திரும்பிச் சென்றனர். தனது சமூகத்தைச் சேர்ந்த நபர்களிடம் வாக்கு சேகரிக்க வந்த அமைச்சர் துரைமுருகனை அதே சமூகத்தினர் விரட்டியடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.