Skip to main content

சட்டமன்றத்தில் நடக்கும் சிரிப்புசேட்டைகள்! - துரைமுருகன் பகிர்கிறார்

Published on 04/07/2018 | Edited on 04/07/2018

நடந்துகொண்டிருக்கும் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குவதற்குமுன், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சேலம் எட்டு வழி சாலை, கவர்னர் உரிமை மீறல் என பல பிரச்சனைகளால் பரபரப்பாக, நெருப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பரபரப்பாக இருக்கிறதோ இல்லையோ கலகலப்பாக இருப்பது தெரிகிறது. கலகலப்புக்கு முக்கிய காரணமாக இருக்கும் திமுக முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகனிடம் கேட்டோம்... என்ன நடக்கிறது சட்டமன்றத்தில்?

 

duraimurugan



" 'சினிமாவுக்கு வந்திருந்தால் ஜெயலலிதாவுடன் நடித்திருப்பேன்' என்று நான் கூறியதாகப் பேசப்பட்டது. அன்று சட்டமன்றத்தில் கிராமியப் பாடல்களையெல்லாம் அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று பேசிய போது 'இவ்வளவு சொல்றீங்களே நீங்க நடிப்பிங்களா?' என்று கேட்டார் ஒருவர். நான் நடிச்சிருக்கேனு சொன்னேன். அதோட விட்டிருக்கலாம். ஓ.பி.எஸ். எழுந்து, அம்மாவே சொல்லிருக்காங்க 'துரைமுருகன் அரசியலுக்கு வராம சினிமாவுக்கு வந்திருந்தா சிவாஜியே இருந்திருக்க மாட்டாரு'னு. இல்லைங்களா?னு கேட்டாரு. நான் இல்லைனா சொல்ல முடியும்? ஆமா சொன்னாங்கனு சொன்னேன். அவ்வளவுதான் சொன்னேன். ஆனா டிவில 'நான் ஜெயலலிதாவோட நடித்திருப்பேன்'னு போட்டாங்க.

 

 


ஜெயலலிதா இருக்கும்போது சட்டமன்றத்தில் ஒரு நாள் மிக ஆக்ரோசமாக பேசிக்கொண்டிருந்தேன், சிவாஜி கணேசன் ‘மனோகரா’வில் பேசியதுபோல. பேசி முடிந்தும் அனைவரும் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது 'துரைமுருகன் ஒன் மினிட்'னு ஜெயலலிதா சொன்னாங்க. நான் 'மேடம்'னு சொன்னேன். அப்போது அவங்க சொன்னாங்க, "அதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்டவசமாகவோ நீங்க சினிமால இல்ல, இல்லைனா சிவாஜி சாரை மிஞ்சியிருப்பீங்க"(Fortunatly or Unfortunatly you were not there in cinema, otherwise sivaji ganesan sir wouldn't be there) என்று சிரித்துக்கொண்டே கூறினார். இதைத்தான் ஓ.பி.எஸ் சொன்னார்.

  duraimurugan laughs



நான் சட்டமன்றத்தில் பலரை கிண்டல் செய்திருக்கிறேன். கலகலப்பாக பேசும்போது யாரும் கோபப்பட மாட்டார்கள், அதை ஜாலியாக எடுத்துக்கொள்வார்கள். நான் சட்டமன்றத்திற்குச் செல்லவில்லையென்றால் அனைவரும் கேட்பார்கள், 'அண்ணே போர் அடிக்குதுனே நீங்க வாங்க'னு.

 

 


இரண்டு நாட்களுக்கு முன் கூட சட்டசபையில் அமைச்சர் ஒருவர் எங்களுக்கு பதில் கூற ஆவேசமாக எழுந்தார். உடனடியாக சபாநாயகர் 'அமைதியாக உட்காருங்கள், இல்லையென்றால் சட்டக்குறிப்பிலிருந்து நீக்கி விடுவேன்' என்று கூறினார். உடனடியாக நான் மூக்கறுப்பு ஆகிவிட்டது என்பதை உணர்த்தும் வகையில் சைகையில் காட்டினேன். (செய்து காட்டுகிறார்) உடனடியாக அனைவரும் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். நான் கிண்டல் செய்தவரும் கூட 'ஏன்னே' என்று சிரித்தார். எல்லாரிடமும் நான் நன்றாக பேசுவேன், எல்லாரிடமும் நான் நன்றாகப் பழகுவேன்.

  duraimurugan nose cut



எடப்பாடி பழனிசாமி, 'அம்மா அவர்கள் கூறியதை நிவர்த்தி செய்துவிட்டோம். நான் சொன்னதில் இதையெல்லாம் செய்திருக்கிறேன்' என்று பெருமையாகச் சொன்னார். அதற்கு நான் 'அம்மா சொன்னதை நிவர்த்தி செய்துவிட்டீர்கள் சரி, நீங்களும் சொன்னதை செய்துவிட்டேன் என்று சொல்கிறீர்கள். நடுவில் ஓபிஎஸ் இருந்தாரே, அவர் ஒன்றுமே சொல்லவில்லையா, அவரைப்பற்றியும் எதாவது சொல்லுங்களேன்'னு சொன்னேன். 'மூட்டி விடுறீங்களா, இந்த முறை ஒன்றும் நடக்காது' என்று சொன்னார். அதற்கு, 'போனமுறை நடந்துவிட்டதா?'னு கேட்டேன்" 

என்கிறார் சிரித்துக்கொண்டே. 

 

தொகுப்பு : கமல்குமார்

 

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்