Skip to main content

துரை வைகோவுக்கு கட்சிப் பொறுப்பு! -மறுமலர்ச்சியினர் தீர்மானம்!  

Published on 31/07/2019 | Edited on 31/07/2019

 

வாரிசு அரசியலை அறவே வெறுத்து வருபவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. அதனால், தன் குடும்பத்தினர் யாரையும் கட்சிப் பணியில் ஈடுபடுத்துவதில்லை. ஆனாலும், சில மாதங்களுக்கு முன் வேறு கோணத்தில்,  பா.ஜ.க. தலைவர் தமிழிசை ’வாரிசு அரசியல் எதிர்ப்பு நாடகம் அன்று.. அரசியல் வாரிசுகளுக்கு வெண்சாமரம் வீச்சு இன்று..’ என ட்விட்டரில்,  திமுக ஆதரவு நிலை எடுத்த வைகோவை சீண்டினார்.
 

மதிமுகவில் துரை வையாபுரியின் பெயரில் வாட்ஸ்-ஆப் குழு ஒன்று உருவானதைத் தொடர்ந்து, மதிமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பிலோ, துணை பொதுச்செயலாளர் பொறுப்பிலோ அவர் நியமிக்கப்படலாம் என்று தகவல் பரவியது.  

 

mdmk


 

அந்தத் தகவல் செய்தியாக வெளிவர, ஆவேசமான வைகோ “எத்தனையோ ஈட்டிகள் பாய்ந்து என் இதயம் மரத்துப் போய்விட்டது. இனிமேலும் காயப்படுவதற்கு என்ன இருக்கிறது?” என்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். 


 

அப்போது  “இந்த இயக்கத்தில் மற்றவர்கள் பதவிக்கு வர வேண்டும் என்று விரும்புபவன் நான். அமைச்சர்களாக்கி மகிழ்ந்தவன் நான். மற்றவர்களை எம்.பி.க்கள் ஆக்கியவன் நான்.  தடா சட்டத்தின்கீழ், சிறையில் ஓராண்டு காலம் கைவிலங்கு பூட்டப்பட்டுக் கிடந்த என் தம்பி ரவிச்சந்திரனுக்குக் கட்சியில் நான் எந்தப் பதவியும் கொடுக்கவில்லை.  எல்லா வகையிலும் எனக்கு பக்கபலமாக இருக்கிறார் என் மகன். அவரை நான் அரசியலுக்குக் கொண்டு வரவில்லை. பதவி அரசியலை அவர் விரும்பியதில்லை.  நானும் விரும்பவில்லை. எல்லோரையும் போலத்தான்,  அவரும் வாட்ஸ்-ஆப்பில் தன் நண்பர்கள் குழுவில் இருக்கிறார். அதை வைத்து,  அடுத்த கட்ட வாரிசு என்றெல்லாம் எழுதுவது வேதனையாக இருக்கிறது.  அந்த எண்ணம் எங்கள் குடும்பத்தில் எவருக்கும் இல்லை. எல்லாத் துன்பங்களும், துயரங்களும் என்னோடு போகட்டும். இந்த இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்வதற்கு எத்தனையோ இளைஞர்கள், ஆற்றல் உள்ளவர்கள் இயக்கத்திற்காகப் பாடுபட்டவர்கள் இருக்கிறார்கள்.” குமுறலை வெளிப்படுத்தினார்.  

 

mdmk


 

பொதுச்செயலாளர் வைகோ மனநிலை இப்படியிருக்கும்போது, கடந்த 28-ஆம் தேதி, ராஜபாளையம் மேற்கு ஒன்றியம் சார்பில், தேவதானத்தில்  நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில், கீழ்க்கண்டவாறு 4-வது தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றனர். 


 

‘இயக்கத்தின் வளர்சிக்காகவும், தமிழர் நலனுக்காகவும், கழகத்தின் வளர்ச்சிப் பணிகளை மேலும் துரிதப்படுத்தவும், திரு. துரை வைகோ அவர்களுக்கு கட்சியில் பதவி வழங்கி பணியாற்றுவதற்கு அனுமதி வழங்குமாறு,   பொதுச் செயலாளர் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகள் மற்றும் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், உயர்நிலைக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் அனைவரையும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.’ 
 

அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்த ராஜபாளையம் மதிமுக ஒன்றிய செயலாளர் வேல்முருகனைத் தொடர்புகொண்டோம். 

 

mdmk


 

“அந்தத் தீர்மானம் தனிநபராக நிறைவேற்றியது அல்ல. 60 கிளைகளில் இருந்து கிளைச்செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் ஒன்றுகூடி ஒருமனதாகக் குரல் எழுப்பி நிறைவேற்றிய தீர்மானம் அது. தவிர்க்கவே முடியாத நிலையில்தான், தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானோம். இன்னும் வேகமாகக் கட்சியை வளர்க்க வேண்டும், கட்சியும் வேகமாக செயல்படவேண்டும்  என்ற ஆர்வத்தில்,   துரை வைகோ கட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள் தொண்டர்கள். ஆனாலும், இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றியதால், கட்சி மேல்மட்டத்தின் கோபத்துக்கு ஆளானோம். திட்டும் வாங்கினோம்.” என்றார் பரிதவிப்புடன். 
 

தன்னைப் போலவே,  தான் கடைப்பிடித்துவரும்  கொள்கையில்  மதிமுக தொண்டர்களும் உறுதியாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை கொண்டவராக இருக்கிறார் வைகோ. தொண்டர்களோ, கட்சியில் ‘மறுமலர்ச்சி’ காணத் துடிக்கிறார்கள். 

 

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.  

Next Story

“மத்தியில் நல்லாட்சி அமைய துரை வைகோவுக்கு வாக்களியுங்கள்” - அமைச்சர் கே.என்.நேரு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vote for Durai Vaiko for good governance in Madhya Pradesh Minister KN Nehru

திருச்சி பாராளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் துரைவைகோ, நேற்று காலை ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட சித்தாநத்தத்தில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்.  தொடர்ந்து சமுத்திரம், மறவனுார், கண்ணுடையான்பட்டி, முத்தப்புடையான்பட்டி, மொண்டிப்பட்டி, பெரியப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், மாலை ஸ்ரீரங்கம் மேலுார், மூலத்தோப்பு, வடக்குவாசல், கீழவாசல், அம்பேத்கர்நகர், நெல்சன் ரோடு மற்றும் அந்தநல்லுார் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளிலும் நேற்று வீதி, வீதியாக ஓட்டு சேகரித்தார்.

அமைச்சர் கே.என்.நேரு, பொதுமக்களிடையே ஓட்டு சேகரித்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசுகையில்,‘‘துரை வைகோ எம்பியாக வெற்றி பெற்றால் மத்திய அரசில் இருந்து அனைத்து நன்மைகளும் திருச்சிக்கு கிடைக்கும். இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் மணப்பாறை சிப்காட் உணவுப்பூங்கா, பாதுகாப்பு தளவாட தொழிற்சாலை அமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்போதுள்ள மத்திய அரசு உதவ மறுப்பதால் இத்திட்டங்கள் செயல்படுத்த முடியவில்லை. ஐஎன்டிஐஏ கூட்டணி வெற்றி பெற்றால், இந்த திட்டங்கள் நமக்கு வந்து சேரும். பாஜ அரசு 100 நாள் வேலை திட்டத்தை 30 நாளாக குறைத்துவிட்டது. எனவே, மத்தியில் நல்லாட்சி அமைய துரை வைகோ வெற்றி பெற, தீப்பெட்டி சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும்’’, என்றார்.

பிரச்சாரத்தில் வேட்பாளர் துரை வைகோ பேசுகையில்,‘‘இந்த தேர்தல் டில்லியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும், வரக்கூடாது என்பதை நிர்ணயிக்கும் தேர்தல். ஸ்ரீரங்கத்துக்கு உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். நான் வெற்றி பெற்றால், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பான அனுபவத்தை தரும் வகையிலான திட்டங்களை செயல்படுத்துவேன். கடந்த 3 ஆண்டுகளில் ஸ்ரீரங்கம் நகரத்துக்கு தேவையான புதிய பஸ் நிலையம், புதிய சாலைகள், ரூ.138 கோடி செலவில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், காவிரியின் குறுக்கே புதிய பாலம் திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்.

மத்திய அரசு தமிழகத்திற்கு உரிய நிதியை முழுமையாக வழங்காததால் மேலும் பல திட்டங்களைச் செயல்படுத்தவில்லை. இந்நிலையில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ராகுல் காந்தி பிரதமர் ஆனால்  தமிழகத்திற்கு உரிய நிதி கிடைக்கும். அதன்மூலம் ஸ்ரீரங்கம் உட்பட தமிழகத்திற்கான நிதியை பெற்று திட்டங்களை செயல்படுத்தலாம். கல்விக் கடன், பயிர்க்கடன் ரத்து என பல்வேறு வாக்குறுதிகளை இந்தியா கூட்டணி வாக்குறுதிகளாக அளித்துள்ளது. எளிய மக்கள் எளிதில் அணுகும் எளிமையான எம்பியாக, தொகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எம்பியாக, ஸ்ரீரங்கம் பகுதி மக்களின் குரலாக லோக்சபாவில் ஒலித்து சிறந்த எம்பியாக செயல்படுவேன். அதற்கு எனக்கு ‘தீப்பெட்டி’ சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்’’ என்றார்.

பிரச்சாரத்தில், திமுக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன், எம்.எல்.ஏ பழனியாண்டி, மேயர் அன்பழகன், பகுதி செயலாளர் ராம்குமார், மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன் உள்ளிட்ட திமுக, மதிமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.