Skip to main content

விடியற்காலையிலே எழுந்து நடந்து வரணும்... எங்க வாழ்க்கை குப்பையா இருக்கு... தூய்மை பணியாளர்களின்  சோகம்!

Published on 07/04/2020 | Edited on 07/04/2020

தமிழகத்தில் குப்பைகளை அகற்றுபவர்கள் இனி துப்புரவுப் பணியாளர்கள் என்று அழைக்கப்பட மாட்டார்கள். அதற்குப் பதிலாக தூய்மைப் பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என்று அறிவித்தார் முதல்வர். "பேரு வெச்சியே... சோறு வெச்சியா' என்பதற்கிணங்க தூய்மைப் பணியாளர்கள் என பேர் வைத்தால் போதுமா…எங்களது வாழ்க்கையிலும் சுகாதாரமும் ஆரோக்கியமும் வேண்டாமா என கேள்வியெழுப்புகிறார்கள் தூய்மைப் பணியாளர்கள்.


  cleaning work



தமிழகம் முழுவதுமுள்ள தூய்மை பணியாளர்களின் எண்ணிக்கை 1,25,586. இதில் சென்னையில் மட்டும் 15 மண்டலம் 200 வார்டுகளில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 19,575 பேர். முச்சக்கர வாகனத்தில் வந்து தூய்மை பணி செய்பவர்கள் 5,400 பேர், பேட்டரி சைக்கிளில் பணியில் ஈடுபடுபவர்கள் 434 பேர். மீதமுள்ளவர்கள் இதர பணிகளில் ஈடுபடுகிறவர்கள். நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 5,100 டன் குப்பை சென்னையில் நீக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது.

தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய மூன்று மண்டலங்களை ஏற்கனவே அரசு தனியாரிடம் டென்டர் விட்டிருந்த நிலையில், மேலும் 1, 2, 3, 7, 11, 12, 14, 15 ஆகிய 8 மண்டலங்களையும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கம்பெனிக்கு ஒப்பந்தம் மூலம் தற்போது கொடுத்துள்ளது. கரோனா வந்ததையடுத்து அந்த கம்பெனி துப்புரவுப் பணிகளைச் செய்யாமல் நிறுத்திவைத்துள்ளது. வேறுவழியில்லாமல் வழக்கம்போலவே அரசுப் பணியாளர்களும் அரசு ஒப்பந்தப் பணியாளர்களும்தான், இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

cleaning work



இதில் அரசுப் பணியாளர்களைக் காட்டலும் ஒப்பந்த ஊழியர்களே அதிகமானோர் பணிபுரிகின்றனர். ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச சம்பளமான ரூ.15 ஆயிரம் வழங்கப்படாமல் ஒருநாள் கூலியாக ரூ 270 என மாதம் 8100 ரூபாய்தான் இவர்கள் சம்பளம். பி.எப். பிடித்தம், ஈ.எஸ்.ஐ. பிடித்தம் போக மாதம் 6,000தான் கையில் சம்பளமாக வழங்கப்படுகிறது. இருந்தபோதும் தற்போதுள்ள சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அரசுப் பணியாளர்களாக மாற்றுங்கள் என்றும், ஊதியத்தை உயர்த்திக்கொடுங்கள் என்றும் போராட்டத்தில் ஈடுபடாமல், மக்கள் நலன் கருதி தன்னுடைய உயிருக்கு என்ன நடந்தாலும், மற்றவர்களுக்கு எந்த நோயும் வந்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் பணியாற்றும் இவர்களுக்கு இந்த அரசு என்ன பாதுகாப்பு செய்துள்ளது என்று பார்த்தால் பெரிய கேள்விக்குறியே மிஞ்சுகிறது.
 

nakkheeran app



எழும்பூர் மருத்துவமனை பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் அருகிலுள்ள மருத்துவர் குடியிருப்பில் சற்று இளைப் பாறிக் கொண்டு இருந்தனர். அவர்களிடம் சென்று பேசியபோது, “என்ன தம்பி செய்யறது சுனாமி குடியிருப்பில் இருந்து நடந்தே எக்மோருக்கு 6 மணிக்கெல்லாம் வரணும். இல்லனா கத்துவாங்க, இப்போதான் பஸ்ஸே வரதில்லையே, அதனால விடியற்காலையிலேயே எழுந்து நடந்து வரணும்.'' என்றார். பாதுகாப்பாக பணிபுரிய முகக்கவசம், கைகழுவ பயன்படுத்தும் கிருமிநாசினி, சோப், கையுறைகள் கொடுக்கிறார்களா என்று கேட்டதற்கு, ""ஆரம்பத்தில் முகக்கவசம் மட்டும்தான் கொடுத்தார்கள், அதுவும் இரண்டு நாளுக்குமேல் வரல, நாங்களே வாங்கிட்டு வருவோம். இல்லையென்றால் துணியால் மூடிக்கொள்வோம்'' என்றார்.

 

speech



அதேபோல அண்ணாநகரிலுள்ள மணிக் கூண்டு சாலையில் கையில் எந்த கையுறையோ, முகக்கவசமோ இல்லாமல் தூய்மை செய்துகொண்டிருந்தார் ஒருவர். அவரிடம் மெல்ல பேச்சுக்கொடுத்ததும் தன் பெயர் பி.ராஜ்குமார் என்றார். உங்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் எதுவும் தரலயா என்று கேட்டதுமே, "போங்க சார் கரோனா வந்ததிலிருந்து குப்பை அள்ளினுதான் இருக்கோம், ஆனா எங்களுக்கு ஒரு மருத்துவ செக்கப்கூட செய்யல, அவங்களுக்கு என். 95 மாஸ்க், எங்களுக்கு நார்மல் மாஸ்க். அதையாவது ஒழுங்கா தராங்களா? இல்லையே. ஒரு டம்ளர் கபசுரக் குடிநீர்கூட கொடுக்கல. முன்னெச்சரிக்கை நடவடிக்கையா அதையாவது கொடுக்கச் சொல்லுங்க சார்'' என்றார்.

இதுதொடர்பாக பேசிய சமூக ஆர்வலர் பே.பெலிக்ஸ், "இங்கே கோவில்கள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன, மருத்துவமனையிலும், சாலை ஓர குப்பைகளையும் அகற்றி கிருமிநாசினி தெளித்து வரும் இவர்களே நிஜ தெய்வங்கள். பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தி வீசும் இந்த குப்பைகளை தரம்பிரித்து அகற்றும் பணியில் ஈடுபடும்போது பொதுவாகவே நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் இவர்களுக்கு கரோனா நேரத்தில் மட்டுமல்லாது எப்போதுமே கையுறை, முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்புகளை வழங்கவேண்டும்'' என கேட்டுக்கொண்டார்.
 

சென்னை கார்ப்பரேஷன் ஹெல்த் செகரட்டரி செந்தில்நாதனோ இதுதொடர்பாக பேச மறுத்துவிட்டார். அரசு அனைவருக்கும் மாஸ்க், கைகழுவ கிருமிநாசினி கொடுப்பதாகச் சொல்கிறது. ஆனால் அவர்களுக்குச் சென்று சேர்வதில்லை. இதற்கான டெண்டர் அமைச்சர் வேலுமணியின் மச்சான் கையில் உள்ளது. மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கண்டும் காணாமல் செல்கிறார். அதனால்தான் அனைவருக்கும் இந்த பாதுகாப்பு சாதனங்கள் கிடைப்பதில்லை என்கிறார்கள் மாநகராட்சி முக்கிய அதிகாரிகள்.

அழுக்கு சென்னையை, அழகு சென்னையாக மாற்றும் இந்த தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களது ஆரோக்கியத்தையும் மேம்படுத்த இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?
 

படங்கள்: ஸ்டாலின்
 

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.