ADVERTISEMENT

எனக்கு வந்த கரோனா வைரஸ் எல்லாருக்கும் வரட்டும் என பரப்பிய நபர்? யாருக்கு பரப்பினார்கள்... வெளிவந்த தகவல்!

01:17 PM Mar 26, 2020 | Anonymous (not verified)

நாளுக்கு நாள் பூதாகரமாகி மக்களை மிரட்டி வரும் கரோனாவை சமாளிக்க உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒரு அரிய யோசனையை வழங்கியுள்ளது. அது பரிசோதனை செய்வது மட்டுமே. எவ்வளவு அதிகமாக பரிசோதனை செய்கிறோமோ அவ்வளவு நாம் புதிய நோயாளிகள் உருவாவதைத் தவிர்க்க வேண்டும்.

யாருக்கு ஜலதோஷம், இருமல் வந்தாலும் அவர்களுக்கு கரோனா இருக்கிறதா? என சோதனை செய்யுங்கள். ஏனெனில் கரோனா நோய் அதன் ஆரம்ப அறிகுறிகளான இருமல், தும்மல் போன்றவை இருக்கும்போதே கண்டுபிடித்து விட வேண்டும். பத்தாயிரம் கரோனா நோயாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால் சுமார் பத்து கோடி பேரை பரிசோதனை செய்வது அவசியம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

ADVERTISEMENT



கேரள மாநிலத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையை உண்மை என நிரூபிக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

காசர்கோடு மாவட்டத்தில் வளைகுடா நாட்டிலிருந்து கரோனா நோயோடு திரும்பிய ஒருவர் எனக்கு வந்தது அனைவருக்கும் வரட்டும் என அந்த மாவட்டத்தில் உள்ள 500 பேருக்கு அந்த நோயைப் பரப்பினார். அதனால்தான் தென்மாநிலங்களிலேயே அதிக எண்ணிக்கையுடன் 95 கரோனா நோயாளிகள் கேரளாவில் உருவாகினார்கள்.

ADVERTISEMENT



சீனாவில் மக்கள் இயற்கையாகவே ஒருவரை விட்டு ஒருவர் தள்ளி வசிக்கிறார்கள். சீனாவை விட 2.6 சதவிகிதம் அதிக மக்கள்தொகை அடர்த்திகொண்ட இந்தியாவில் சீனாவை விட அதிக வேகத்தில் கரோனா வைரஸ் பரவும் என்கிறார்கள் சர்வதேச சுகாதார வல்லுநர்கள். சீனா உலக சுகாதார நிறுவனம் சொன்ன பரிசோதனைகளை அப்படியே கடைப்பிடித்தது. 80 ஆயிரம் கரோனா நோயாளிகளைக் கண்டுபிடிக்க சீனாவின் ஒட்டு மொத்த ஜனத்தொகையையே கரோனா சோதனைக்கு உட்படுத்தியது. ஒருவரையும் வீட்டைவிட்டு வெளியே விடவில்லை. அவசரமாக வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு இன்று கேரளாவில் ஒவ்வொரு வீட்டிற்கு முன்பும் கை கழுவ சோப்பும் தண்ணீரும் பொது மக்களே வைத்திருப்பதுபோல சீன மக்கள் தானாக முன்வந்து வைத்திருந்தார்கள். கேரள மக்கள் கரோனா சிகிச்சைக்குச் சென்றுவிட்டு வந்த நர்சை நரேந்திரமோடி சொன்னது மாதிரி, கை தட்டி குடும்பத்தினர் எப்படி வரவேற்கிறார்களோ அதுபோல சீன மக்கள் கொரோனாவை எதிர்த்துப் போராடுவதைத் தேசத்திற்குச் செய்யும் மதிப்பிற்குரிய சேவையாகவே கருதினார்கள்.



கேரளாவில் அரசு தடையை மீறி பிரார்த்தனை கூட்டம் நடத்திய பாதிரியார் கைது செய்யப்பட்டார். அது போல சீன அரசும் போலீசையும் ராணுவத்தையும் ஏவி கரோனா வியாதிக்கு விதிக்கப்பட்ட தடைகளை மீறியவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வும் நடந்தது.

சோதனையில் மட்டுமல்ல மருத்துவ சிகிச்சையிலும் சீனா சிறந்து விளங்கியது. இன்று 80,000 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சீனாவில் தற்பொழுது புதிதாக யாருக்கும் கரோனா வரவில்லை. ஏற்கனவே கரோனாவால் பாதிக்கப்பட்ட சில ஆயிரம் பேர் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சையில் இருக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் சீன மருத்துவர்கள் பயன்படுத்திய கியூபா தயாரிப்பு மருந்துகளே.



அதைக் கேள்விப்பட்ட சீனாவிற்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட இத்தாலியில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த டாக்டர்களும் நர்சுகளும், இத்தாலி அரசுக்கு எடுத்துச் சொல்ல, இத்தாலி அரசும் கியூபாவிற்கான பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவுடன் சேர்ந்து ஏற்படுத்தியதை மறந்து உடனடியாக மருத்துகளை அனுப்புமாறு கோரிக்கை வைத்தது.

கியூபா நாடு மனிதாபிமான அடிப்படையில் கரோனாவிற்கு சிகிச்சையளிக்க கியூபா கண்டுபிடித்த மருந்துகளோடு மருத்துவர்கள் அடங்கிய குழுவையும் இத்தாலிக்கு அனுப்பி வைத்தது.



இத்தாலியில், கியூபா மருந்துகள் வெற்றிபெற்றதை தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள நாடுகள் கியூபாவிடம் மருத்துவ உதவி கேட்டு கோரிக்கை வைத்து காத்துக்கிடக்கின்றன. மொத்தம் 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருத்துவ உதவிகளை அமெரிக்காவின் மூக்குக்கு கீழே இருக்கும் சின்னஞ்சிறு நாடான கியூபா செய்துவருவது உலகத்தையே ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

இந்தியாவை ஆளும் பா.ஜ.க.வைப் போன்ற வலதுசாரி அரசான பிரேசில் அரசும் கம்யூனிஸ்ட் கியூபாவிடம் மருத்துவ உதவி கேட்க, கியூபா மறுக்காமல் செய்திருக்கிறது. இத்தனைக்கும் அமெரிக்க கடலில் தத்தளித்த ஒரு கப்பலில் இருந்த கரோனா பாதித்தவர்கள் 30 பேருக்கு சிகிச்சை அளித்த கியூபாவில் அதில் ஒருவர் மட்டுமே இறந்திருக்கிறார்.

கியூபாவை போல மற்றொரு கம்யூனிஸ்ட் நாடான வியட்நாமிலும் கியூபா மருந்துகள் உபயோகப் படுத்தப்படுகின்றன. பக்கத்தில் உள்ள சீனாவிலிருந்து வியட்நாமுக்கு கரோனா பரவினாலும் சாவு எண்ணிக்கை ஒன்று மட்டுமே என்கிறார்கள் இடதுசாரி தலைவர்கள். சீனாவையும் கியூபாவையும் கரோனா விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனம் பாராட்டுகிறது. இந்தியாவில் கரோனாவை எதிர்த்துப் போராடுவதில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் கேரளாவை, மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசும் பிரதமர் நரேந்திரமோடி, ஜனாதிபதி ஆகியோர் பாராட்டுகிறார்கள். இதுபற்றி கேரள பத்திரிகையாளர்களைக் கேட்டோம்.


"கேரளாவில் கரோனா என்பது இப்பொழுதுதான் வந்தது. கடந்த ஆண்டின் இறுதியில் நிஃபா என்கிற வைரஸ் கேரளாவை தாக்கியது. அதை கேரளா வெற்றிகரமாக எதிர் கொண்டது. அந்த சிகிச்சையின் போது லினி புதுசெரி என்கிற நர்ஸ் மரணமடைந்தார். அவரது படத்துடன் சர்வதேச ஊடகமான பி.பி.சி.யும் டைம்ஸ் நாளிதழும் பெரிய ஸ்டோரிகள் வெளியிட்டன. அத்துடன் கேரளாவின் பெண் சுகாதார அமைச்சரான ஷைலஜா சர்வதேச சமூகத்தின் பாராட்டுகளைப் பெற்றார். கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 95 பேரின் நடவடிக்கைகள் மிகவும் சரியாக கண்காணிக்கப் பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். திருமணங்கள் கூட நடத்தாத அளவிற்கு மக்களின் நட மாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


கேரளாவின் மக்கள் படித்தவர்கள் அத்துடன் கேரளாவை சேர்ந்த நர்சுகள் இல்லாத மருத்துவமனைகள் உலகில் இல்லை எனச் சொல்லும் அளவிற்கு நிறைந்துள்ளனர். அவர்கள் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு சொல்வதற்கு முன்பே கொரோனாவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டார்கள். சுகாதாரத்தில் நாட்டம் மிக்க கேரள மக்கள் கொரோனாவை எதிர்த்துப் போராடும் கேரள அரசுக்கு உதவ ஆரம்பித்து விட்டார்கள். கேரள அரசு மருத்துவமனைகள், அப்பல்லோ மருத்துவமனைகள் போல அதிக வசதிகள் கொண்டவை. இவையெல்லாம் கொரோனாவை ஒழித்த முதல் இந்திய மாநிலம் என்கிற பெருமையை கேரளாவிற்குப் பெற்றுத்தரும் என்கிறார்கள்.

கேரளாவில் பரிசோதனைகள் வேகமாக உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதலின்படி நடப்பதால் ஒரேநாளில் 28 பேருக்கு கரோனா வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கரோனா வைரஸ் மூன்று விதத்தில் பரவும். முதலாவது வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்கள் மூலம் வருவது. இரண்டாவது, அவர்கள் உள்நாட்டினரோடு பழகுவதால் ஏற்படுவது. இரண்டாவது கட்டதை முதல் கட்டத்தோடு பொருத்தினால், ரூட் மேப் கிடைத்துவிடும். அதன்மூலம் வெளிநாட்டிலிருந்து வந்த நபர், யார் யாருக்கு பரப்பினார் என தெரிந்துவிடும். அடுத்த கட்டத்தில் நோயைப் பெற்றுக் கொண்ட ஒருவர் வேறொருவருக்கு பரப்பினால் அந்த நபர் எப்படி நோயைப் பெற்றார் என தெரியாது. இந்த நபர்தான் ஆபத்தானவர். இவர் யாருக்கு நோயை பரப்புவார் என தெரியாது. துரதிருஷ்டவசமாக கேரளாவில் மூன்றாவது கட் டத்தை கொரோனா தொற்று எட்டியுள்ளது.

கேரளா போலவே தினமும் வெளிப்படையான மருத்துவ அறிக்கைகளை தரும் தெலுங்கானாவில் 30 பேர் கர்நாடகாவில் 26 பேர் ஆந்திராவில் ஆறு பேரை கொரோனா தாக்கியுள்ளது. இந்தியாவில் அதிகம் பாதித்தவர்களை கொண்ட மாநிலமாக கேரளமும் மகாராஷ்டிரமும் திகழ்ந்து இந்தியா முழுவதும் 500 பேர் எண்ணிக்கையை தொடும் கரோனா வைரஸ் நோய் தொற்று மேலும் பரவாமல் தடுக்க 20-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளன.

தமிழகத்தில் தற்பொழுது நகர்ப்புறங்களில் மட்டும் பரவியுள்ள கரோனா கிராமப் புறங்களுக்கு செல்லாமல் தடுக்க மாவட்ட எல்லை மூடல்களை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஜக்கி வாசுதேவின் ஆசிரமம் போன்ற உயர் அதிகார பீடத்தை கூட மாவட்ட கலெக்டர் போய் மூட வைக்கும் அளவிற்கு அரசு நடவடிக்கைகள் உள்ளன.

ஆனால் கரோனா ஒழிப்பில் கேரளா போன்ற மாநிலங்களில் துடிப்புடன் செயல்படும் உள்ளாட்சித் துறை தமிழகத்தை பொறுத்தவரை செயல்படாத துறையாகவே கரோனா வைரஸ் சிகிச்சையில் செயல்படுகிறது.

தமிழகம் முழுவதும் கரோனா பாதித்தவர்கள் அரசு கணக்குப்படி 9 பேர். அவர்கள் அனைவரும் தமிழகத்துக்கு வெளியில் இருந்து வந்தவர்கள் என சொல்லும் தமிழக அரசு, அவர்கள் யாருக்கு கரோனாவை பரப்பினார்கள் என்கிற விஷயத்தில் சரியான கணக்கை சொல்வதில்லை என்கிறார்கள் டாக்டர்கள்.

மொத்தம் 500 கரோனா சோதனை கருவிகள்தான் தமிழகத்தில் இருக்கிறது என்கிறார் சுகாதாரத் துறையை சேர்ந்த உயரதிகாரி ஒருவர்.

POCORA என்கிற குஜராத் அகமதாபாத்தைச் சேர்ந்த நிறுவனம் தயாரிக்கும் சோதனைக் கருவிகள் தரமானது (WHO)என உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது. அந்த நிறுவனத்திடமிருந்து கருவிகள் வாங்க தமிழக அரசும் மத்திய அரசும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள். கரோனாவை அழிக்கும் முயற்சியின் முதல் படியே அதை கண்டுபிடிப்பது தான். இல்லையென்றால் அது பரவுவதை தடுக்கவே முடியாது என எச்சரிக்கிறார்கள் தலைசிறந்த மருத்துவர்கள். வரும் முன் காக்க வேண்டிய முயற்சிகள் மேலும் தீவிரமடைய வேண்டிய கட்டத்தில் தமிழகம் இருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT