Skip to main content

குடிகாரர்களை திருத்தும் வீரபத்திர அய்யனார்!!!

Published on 20/08/2019 | Edited on 20/08/2019

 

மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு. ஆனால் அரசாங்கமே அந்த கேட்டை செய்வதால் மனிதர்கள் நிரந்தர குடிகாரர்களாக மாறி விடுவதால் லட்சக் கணக்கான குடும்பங்கள் சீரழிகின்றன. இது ஒருபக்கம். குடியினால் குடல் வெந்து நோய்களுக்கு ஆளாகி குடும்பத்தலைவர்கள் இறந்துபோவதால் விதவையான பெண்களின் எண்ணிக்கை பெருகி கொண்டே போகிறது. பல கிராமங்கள் விதவைகள் மட்டுமே வாழும் கிராமங்களாக மாறி வருகின்றன. அதோடு புத்தகப் பைகளுடன் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் சிலர் போதைக்கு ஆளாகி சீரழிகிறார்கள். மாணவிகளும் ஆங்காங்கே சிலர் இந்த விஷயத்தில் மாட்டிக்கொள்கின்றனர். கோவில் திருவிழா குடும்பவிசேஷங்கள் என எல்லா நிகழ்ச்சிகளிலும் மது விருந்துதான் களைகட்டிவருகிறது. 

 

Vikravandi



நண்பர்கள், மாமன், மச்சான் என்ற உறவுகள் கூட கூடிகுடிக்கிறார்கள். இப்படி மதுவுக்கு அடிமையாகி நோய்வாய்பட்டு இறப்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். உதாரணமாக நோய் வாய்ப்பட்டு இறப்பது, வயோதிகத்தால் இறப்பது, குடும்பப் பிரச்சினை என இவைகளால் இறப்பவர்களை விட மிக அதிக அளவில் மதுவினால் இறக்கிறார்கள். இதை உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. 

 

Vikravandi


மேலும் 2016ல் எய்ட்சால் 1.8 சதவீதம் பேர்களும் சாலை விபத்தில் 2.5 சதவீதம் பேர்களும், கலவரத்தினால் 0.8 சதவீதம் பேர்களும் இறக்கிறார்கள். ஆனால் மதுவினால் மட்டும் 5.3 சதவீதம் பேர்கள் இறக்கிறார்கள். மேலும் 2016ல் உலக அளவில் மதுவினால் 30 லட்சம் பேர்களும் இறந்துள்ளனர் என புள்ளிவிபரம் தெரிவிக்கின்றன.‘

 

Vikravandi

    
மதுக்கடை மூலம் அரசுக்கு ஆண்டு வருமானம் சராசரியாக 27 ஆயிரம் கோடி ரூபாய். 2008-09 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி வருவாய், 2016-17ல் 16 ஆயிரம் கோடி வருவாய், 2018ல் 28 ஆயிரம் கோடி என வருவாய் அதிகரித்தப்படியே உள்ளது. இதன் மூலம் குடிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு ராக்கெட் வேகத்தில் உயர்ந்துகொண்டே உள்ளன. தமிழகத்தில் 2.5 கோடி பேர் மதுப்பிரியர்கள். இதில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் அடுத்து 30 வயதுக்குட்பட்டவர்கள் தான் அதிகம் என்கிறது புள்ளிவிபரம் ஒன்று.
 

மதுவால் குடும்ப சீரழிவும், பள்ளி கல்லூரி பிள்ளைகளின் படிப்பும் பாழாகி வருகிறது. பல திறமைகள் உள்ள மனிதர்கள், மதுவினால் அழிந்துபோவதால் மனித வளம் உழைப்பு பாழாகிறது. இப்படி மது அரக்கணின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி வரும் தமிழக மக்களை காப்பாற்ற பல நல்ல மனிதர்கள் தங்கள் உயிரைகொடுத்தும் போராடி வருகிறார்கள். மது இல்லா தமிழகத்தை உருவாக்க மதுவுக்கு எதிராக பலர் பல இயக்கங்களை உருவாக்கி ஒரு பக்கம் போராடி வரும் நிலையில், தெய்வமும் தன் பங்கிற்க்காக போராடி வருகிறது.


 

ஆம். தீராத மது போதைக்கு அடிமையானவர்களை மீட்டு வருகிறார் கொஞ்சிகுப்பம் அய்யனார், வீரபத்திரன் ஆகிய தெய்வங்கள். கொஞ்சிக்குப்பம் கிராமத்தில் அய்யனார், விநாயகர், மாரியம்மன் ஆகிய தெய்வங்கள் உள்ளன. இதில் பூரணி பொற்க்கலையோடு அய்யனார் நடுநாயகமாக வீற்றிருக்கிறார். ஊருக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையோரம் இக்கோயிலில் உள்ளது. 

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஆலய பூசாரி ஒருவர், குடிபோதைக்கு அடிமையான ஒருவருக்கு அய்யனாரின் அனுமதியோடு வீரபத்திரசாமி முன்பு அமரவைத்து, இனி குடிக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய சொல்லி, சாமி முன்பு உள்ள சிகப்புநிற கயிரை அவரது வலது கையில் கட்டிவிட்டார். அப்போது முதல் அந்த மனிதர் குடிப்பதையே மறந்துபோனாராம். இந்த செய்தி மக்கள் மத்தியில் பரவியது. அப்போது முதல் கொஞ்சிகுப்பம் அய்யனார், வீரபத்திரன் சாமிகள் புகழ் பரவ ஆரம்பித்தது. 


 

இது பற்றி கோயில் பரம்பரை அறங்காவலர் பெரியவர் செல்வராசுவிடம் கேட்டோம். ஒரு காலத்தில் கொஞ்சிமரங்கள் சூழ்ந்த வனக்காடாக இருந்துள்ளது இப்பகுதி. அந்த காட்டை திருத்தி எங்கள் முன்னோர்கள் இங்கு குடி வந்தார்கள். அதனால் ஊருக்கு கொஞ்சிகுப்பம் என்ற பெயர் உருவாகியுள்ளது. காலப்போக்கில் எனது தந்தை அழகப்படையாச்சி இக்கோயிலையும் இங்குள்ள விநாயகர், அய்யனார், வீரபத்திரன் மற்றும் பரிவார தெய்வங்களாக துர்க்கை, மாரியம்மன், முருகன் ஆகிய தெய்வங்களை உருவாக்கினார். அதை ஊர் மக்கள் வழிபட்டனர், காலப்போக்கில் வெளியூரில் இருந்தும் வந்து வழிபட ஆரம்பித்தனர். அறநிலையதுறையின் பராமரிப்பில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இருந்தும் பரம்பரை தர்மகர்த்தாவாக எங்கள் குடும்பத்தினர் இருந்து வந்தனர். இப்போது நான் இருந்து வருகிறேன். இங்கு வரும் பக்தர்களுக்கு தினசரி மதியம் அன்னதானமும் வழங்கப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்துவழிபட்டு செல்கிறார்கள் என்கிறார் பெரியவர் செல்வராசு பெருமையடன். 



கோயில் பூசாரி பார்த்தசாரதி நம்மிடம், இக்கோயில் தெய்வங்கள் மிகுந்த சக்தி மிக்கவை. அய்யனாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் கேட்பது கிடைக்கும். நினைத்தது நடக்கம். மதுபோதைக்கு அடிமையாகி மீண்டு வர முடியாதவர்கள், அதில் இருந்து மீண்டுவர இங்குள்ள அய்யனாரின் முன்பு வணங்கி பின்பு 50 ரூபாய் பணம் கட்டி ரசீது வாங்கி சென்று வீரபத்திரசாமிக்கு அர்ச்சனை செய்து வணங்கிய பின்பு அவர் முன்னாடி உட்கார வேண்டும். அப்போது மது பிரியர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும். ஆகாயம், பூமாதேவி, வீரபத்திரசாமி சாட்சியாகவும் என்னை பெற்ற தாய், தந்தை மீது சத்தியம் செய்கிறேன். இனிமேல் எப்போதும் குடிக்கமாட்டேன் என்று மூன்று முறை உறுதிமொழி எடுத்து சத்தியம் செய்வார்கள். அதன் பிறகு அவர்கள் கையில் வீரபத்திரசாமியன் சிகப்பு கயிறு கட்டப்படும். இப்படி கட்டிய பிறகு பெரும்பாலும் யாரும் குடிக்கமாட்டார்கள். அதையும் மீறி குடிப்பவர்கள் உடல்நிலை பாதிக்கப்படும். சில ஆயிரம் முதல் பல லட்சம் வரை செலவு செய்ய நேரிடுகிறது. இதை அனுபவபூர்வமாக பார்த்தவர்கள், அனுபவித்தவர்கள் மீண்டும் குடிப்பதில்லை.

 

சாமி கயிறு கட்டிய பிறகு மீண்டும் மீண்டும் குடிப்பவர்கள் மரணத்தை சந்திக்கிறார்கள். எனவே இங்கு வந்து கயிறு கட்டிய பிறகு மதுவை மறந்து நல்ல முறையில் வாழ்கிறார்கள். இப்படி பல ஆயிரம் பேர்கள் பயன் பெற்றுள்ளனர். அந்த குடும்பங்கள் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்கின்றன. இதன் பலனை அறிந்தவர்கள் மற்றவர்களிடம் சொல்ல தினசரி சுமார் 200 பேர்களுக்கு மேல் கயிறு கட்ட இங்கு வந்த வண்ணம் உள்ளனர். 
 



காலை முதல் மாலை வரை எல்லா நாட்களிலுமே கோயில் திறந்திருக்கும். மேலும் மது பழக்கத்தை தடுப்பதோடு இங்குள்ள தெய்வங்களை வந்து வணங்குகிறவர்களில் திருமண தடை, குழந்தைப்பேறு, திருடுபோன பொருட்களை கண்டுபிடித்து தருவது என அனைத்து குறைகளையும் நிவர்த்தி ஆகின்றன. 
உதாரணமாக அன்னவல்லி கிராமத்தை சேர்ந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகியும் குழந்தையே இல்லை. இங்குவந்து வேண்டுதல் செய்த பிறகு குழந்தை பிறந்துள்ளது. நெய்வேலி டவுன்சிப் பகுதியை சேர்ந்த என்எல்சி ஊழியர் வீட்டில் 45 பவுன் திருடுபோனது. இங்கு வந்த பிறகு சில நாட்களுக்குள் அந்த நகைகள் கண்டுபிடிக்கப்பட்டு அந்த குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது. பல்வேறு ஆண், பெண்களுக்கு திருமணதடை நீங்கி திருமணம் நடந்துள்ளது. எனவே எங்கள் கொஞ்ச்சிகுப்பம் அய்யனார், வீரபத்திரன்சாமிகளின் பெருமைகள் தமிழக அளவில் பரவியுள்ளது என்பதற்க்கு உதாரணம் தினசரி சென்னை உட்பட பல மாவட்ட மக்கள் இந்த ஆலயத்திற்கு வந்துவழிபட்டு செல்வதே சாட்சி என்கிறார் பூசாரி பார்த்தசாரதி. 
 

அமைவிடம்:- மதுவுக்கு அடிமையானவர்கள் மீட்கும் அய்யனார் வீரன் ஆலயம் விக்கிரவாண்டி. தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பண்ருட்டிக்கு தெற்கே 11 கிலோ மீட்டரிலும், வடலூருக்கு வடக்கே 13 கிலோ மீட்டரிலும் சாலையை ஒட்டியே அமைந்துள்ளது இந்த கோயில். மதுவினால் உடல்நிலை பாதிப்பதோடு இறப்பதும் குடும்பங்கள் சீரழிவதும் பல குற்றங்கள் நடப்பதும் மதுவினால் தான் மனிதனால் மாற்ற முடியாத அந்த பழக்கத்தை தெய்வம் மாற்றுகிறது என்று மெய்சிலிர்போடு பேசுகிறார்கள் மக்கள்.

 

 

Next Story

பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
PMK Ramdas campaign supporting the candidate

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இத்தகைய சூழலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதற்கிடையே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - செளமியா அன்புமணி, விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ்  காஞ்சிபுரம் - ஜோதி வெங்கடேஷ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து கோவடி கிராமத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு நல்ல வேட்பாளரான முரளி சங்கர் நிறைய படித்துள்ளார். 6 மொழிகளில் சரளமாக பேசுவார். மக்களை பற்றி சிந்திக்க கூடியவர். மக்களுக்காக பாடுபடக்கூடியவர். சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார்” எனத் தெரிவித்தார். 

Next Story

முதல்வர் காட்டிய கறார்; ஓரங்கட்டப்பட்ட சீனியர் - யார் இந்த முரசொலி?

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Thanjavur Parliamentary Constituency Candidate murasoli Details

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி முதற்கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதிப் பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அந்த வகையில், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக, 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை, அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கடந்த மார்ச் 20 ஆம் தேதி வெளியிட்டார். அந்த வேட்பாளர் பட்டியலில் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கப்பாண்டியன், டி.ஆர். பாலு போன்ற திமுகவின் முக்கிய புள்ளிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதுமுக வேட்பாளர்கள் 11 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை மேடையில் வெளியிட்ட மு.க. ஸ்டாலின், தஞ்சையில் முரசொலி என்ற வேட்பாளரை அறிமுகப்படுத்திவிட்டு, 'முரசொலியே அங்கே நிற்கிறது' என அழுத்தமாக கூறினார். அப்போதே அனைவரது கவனத்தையும் புதுமுக வேட்பாளர் முரசொலி பெற்றார். இந்த நிலையில், தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக அறிமுகமான முரசொலி, 9 முறை தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு அதில் 6 முறை எம்.பியாக தஞ்சையில் வெற்றிபெற்ற சீனியரான பழநிமாணிக்கத்தை ரேஸில் வீழ்த்தி வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

போட்டியிடும் தொகுதி மக்களுக்கே ஆச்சரியம் கொடுத்துள்ளார் புதுமுக வேட்பாளர் முரசொலி. தலைமை எப்படி அவரை தேர்ந்தெடுத்தது என்பது குறித்து தஞ்சை திமுகவினர் வட்டாரத்தில் பேசுகையில், பல தகவல்கள் கிடைத்தது. முன்னதாக தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு பழநிமாணிக்கம், முரசொலி, ராதிகா மணிமாறன், அஞ்சுகம் பூபதி, கலைவாணி மோகன் உள்ளிட்ட 24 பேர் விருப்ப மனுவை திமுக தலைமையிடம் தாக்கல் செய்திருந்தனர். ஆனால், நேர்காணலில் திமுக தலைமை முரசொலி மற்றும் ராதிகா மணிமாறனிடம்  மட்டும் எவ்வளவு பணம் தேர்தலுக்கு செலவு செய்வீர்கள் எனக் கேட்டு விவரம் பெற்றுள்ளனர். ஆனால், சீனியர் சிட்டிங் எம்.பி. பழநிமாணிக்கத்திடம் எதுவும் கேட்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதுவே, சிட்டிங் எம்.பி. பழநிமாணிக்கத்திற்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்காது எனப் பேசுபொருளை உண்டாக்கியுள்ளது.

இப்படியிருக்கையில், முரசொலியோ தலைமையிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் முன்னே தொகுதிக்கு உட்பட்ட சில எம்.எல்.ஏக்களை சந்தித்து சீட் கிடைத்தால் ஆதரவு வேண்டும் என ஆசி பெற்றுள்ளார். இதனால், முரசொலி தான் தஞ்சை வேட்பாளர் என திமுகவினர் பரவலாகப் பேசியுள்ளனர். இந்த செய்தி அறிந்த சிட்டிங் எம்.பி. பழநிமாணிக்கம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் முகாமிட்டு மீண்டும் தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தியுள்ளார். ஆனால், அவரை அழைத்துப் பேசிய திமுக தலைமை, இந்த முறை உங்களுக்கு சீட் இல்லை. கட்சி அறிவிக்கும் நபரை வெற்றிபெறச் செய்யுங்கள் என்று வெளிப்படையாக சொல்லியுள்ளது. அப்போது, இந்த ஒரு முறை மட்டும் என தஞ்சை சிட்டிங் எம்.பி. பேச்சை ஆரம்பிக்க, கட்சியின் தலைமையோ ஸ்ட்ரிக்டாக புதுமுகம் தான் இந்த முறை என சொல்லியதாகக் கூறுகின்றனர். இந்த நிலையில், திமுக தலைமை புதுமுகமான முரசொலியை வேட்பாளராக அறிமுகப்படுத்தியுள்ளதாக தஞ்சாவூர் திமுகவைச் சேர்ந்தவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

தஞ்சை தொகுதிக்குள் பெரிதாக அறிமுகம் இல்லாத முரசொலி, வேட்பாளராக இடம் பிடிப்பதற்கு அவருடைய அமைதியான சுபாவம் தான் முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகிறது. மத்திய மாவட்டச் செயலாளர் எம்.எல்.ஏ. துரை. சந்திரசேகரனின் நெருங்கிய ஆதரவாளர் முரசொலி. திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தென்னங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். இவருடையது பாரம்பரியமான தி.மு.க குடும்பம். முன்பே வடக்கு ஒன்றியச் செயலாளருக்கான உள்கட்சித் தேர்தலில் பழநிமாணிக்கம் தரப்பை எதிர்த்து முரசொலியை ஒன்றியச் செயலாளர் ஆக்கினார் சந்திரசேகரன். அதன் பிறகு கட்சிப்பணிகளை செய்து வந்த முரசொலி, ஒன்றியச் செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு, இரண்டு இடங்களில் 50 அடி உயர கொடிக் கம்பத்தில் தி.மு.க கொடி ஏற்றும் நிகழ்வை விமரிசையாக நடத்தினார்.

அப்போது உதயநிதி ஸ்டாலின் முரசொலியை வெகுவாகப் பாராட்டினார். அமைச்சர் அன்பில் மகேஸ், மேயர் சண். ராமநாதன் ஆகியோரின் சிபாரிசும் அவருக்கு கிடைக்க வேட்பாளர் ரேஸில் வெற்றி பெற முக்கிய காரணமாக திமுகவினர் கூறுகின்றனர். அதிலும் மேயர் ராமநாதன், முரசொலிக்காக தனிப்பட்ட முறையில் உதயநிதியிடம் பேசியதாகச் சொல்லப்படுகிறது. டி.ஆர். பாலு ஆதரவும் இருந்தது இவருக்கான ப்ளஸ் பாயிண்ட். தென்னங்குடி கிராமத்தைச் சேர்ந்த முரசொலி எளிமையாவர், அமைதியான சுபாவம் கொண்டவர் எல்லோரிடமும் அன்பாகப் பழகக் கூடியவர் என்கின்றனர் திமுகவைச் சேர்ந்தவர்கள். அந்த பண்பே முரசொலி சத்தமில்லாமல் சாத்தித்துள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். துரை. சந்திரசேகரன் ஆதரவாளரான முரசொலிக்கு சீட் கிடைத்திருப்பதன் மூலம் சந்திரசேகரனின் கை தஞ்சையில் ஓங்கியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

புதுமுகமாக இருந்தாலும் தஞ்சை தொகுதியில் தி.மு.க-விற்கு பெரும்பான்மையான ஆதரவு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சாதாரண பொறுப்பில் இருப்பவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்பதை நிரூபிக்கும் விதமாக புதியவரான முரசொலிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த முறை பழநிமாணிக்கத்திற்கு வயது அதிகம் ஆகிவிட்டது என்றும், 6 முறை ஒரே தொகுதியில் எம்.பியாக வென்ற ஒருவருக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கினால், அந்த மாவட்டத்தில் பணியாற்றும் புதியவர்கள் சோர்ந்து போய்விடுவார்கள் என்பதும் தான் அக்கட்சியினர் கூறும் காரணமாக இருக்கிறது. ஆனால், சீட் கிடைக்காதவர்கள், அதிருப்தியில் உள்ளடி வேலை செய்யக்கூடும், தொகுதிக்கு புதிய முகம் உள்ளிட்டவை முரசொலிக்கு சவாலாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனிடையே, முரசொலியின் ஆதரவாளர்கள் தஞ்சையில் தடபுடலாக தேர்தல் பணிகளைச் செய்து வருகின்றனர்.