Skip to main content

ஸ்டான்லி மருத்துவமனை குடல் அறுவைச் சிகிச்சை மையத்தின் கதை! - டாக்டர் ஆர்.சுரேந்திரன்

Published on 10/08/2019 | Edited on 10/08/2019

டாக்டர் கோபுராஜ் ஒருநாள் என்னிடம், ஒரு கட்டுரை எழுதச் சொன்னபோது, எதைப்பற்றி எழுதுவது  என்ற சிந்தனைகூட இல்லை. ஆனால், தீடீரென்று எனக்குள் ஒரு உந்துதல் ஏற்பட்டது. “நாம் ஏன் ஸ்டான்லி மருத்துவமனையில் இருக்கும் இரைப்பை குடல் அறுவைச்சிகிச்சை  டிபார்ட்மெண்ட்டை பற்றிஎழுதக்கூடாது” என்று நினைத்தேன். அப்படி எழுதினால் காற்றில் உலவும் பல கட்டுக்கதைகளையும்,  தவறான கருத்துகளையும்  போக்குவதற்கு உதவும்  என்று நினைத்தேன்.  எனவே, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அந்த டிபார்ட்மெண்ட்எப்படி பிறந்தது என்ற  வியப்பூட்டும் நிகழ்வுகளை எனது இதயத்தின் ஆழத்திலிருந்துஎழுதத் தயாரானேன். இந்த  உண்மைகளில் சிலவற்றை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் என் நண்பர்களும், மதுரை மருத்துவமனையில்  பணிபுரியும் எனது நண்பர்கள் சிலரும் நேரில் அறிந்திருக்கிறார்கள்.
 

dr.surendhiran

டாக்டர் ஆர்.சுரேந்திரன்



1994ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எனக்கு புரமோஷன் கொடுத்து மதுரை மருத்துவகல்லூரியில்  பணி நியமனம் கொடுத்தார்கள். எனது சீனியாரிட்டிக்கு அண்ணாநகரில்உள்ள புறநோயாளிகள்  மருத்துவப்பிரிவில் பணியமர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சிறப்பு மருத்துவப் பிரிவில்  துறைத் தலைவராக நியமிக்கப்பட்டேன். வயதில்இளையவனான என்னை சீனியர் பேராசிரியர்கள்  பலர் விரும்பவில்லை. அன்றையடிஎம்இ டாக்டர் செம்பொன் டேவிட், டீன் டாக்டர் ராஜப்பா, சர்ஜரி  டிபார்ட்மெண்ட்தலைவர் டாக்டர் சத்தியவான், பெருங்குடல் அறுவைச்சிகிச்சை நிபுணர் டாக்டர் சிவலிங்கம் ஆகியோர் ஒரே வகுப்பு மாணவர்கள் என்பதால், புதிய டிபார்ட்மெண்ட் உருவாக்கப்படுவதை அனுமதிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். ஆனால்,  பேராசிரியர் வேங்கடசாமி, சங்கர நேத்ராலயாவின் டாக்டர் பத்ரிநாத் ஆகியோர் இந்த முயற்சியை  வரவேற்றார்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்பை வழங்க தயாரானேன்.

நான் மதுரையில் இருந்த 6 மாதங்களில் ஒரு நோயாளியைக் கூட பார்க்கவோ, அறுவைச்சிகிச்சை  செய்யவோ அனுமதிக்கவில்லை. நான் சோர்வடைந்தேன். ஒவ்வொரு வாரமும் சென்னைக்கு வந்து  சுகாதாரத்துறை செயலாளரை சந்திப்பதைவழக்கமாக கொண்டிருந்தேன். அவரும் இந்த  பிரச்சனைக்கு தீர்வு காண்பதில்அக்கறை செலுத்தவே இல்லை.

மதுரை டிஆர்ஓ என்னை மதுரை அருகே உள்ள திருமோகூர் கோவிலுக்கு செல்லும்படி கூறினார். நான்எனது நண்பரும் இதய அறுவைச்சிகிச்சை நிபுணருமான டாக்டர் சிவக்குமாருடன்  சென்றேன். அதன்பிறகு நான் சுகாதாரத்துறை செயலாளரை சந்தித்தபோது திருநெல்வேலிக்கு  மாற்றினால்  போகிறீர்களா?  என்று கேட்டார்.  நான் சரி  என்றேன்.  உடனே அவர், எது உங்கள்  சொந்த ஊருக்கு  அருகில் இருக்கிற மருத்துவக்கல்லூரி என்று  கேட்டார்.  சேலம்  என்றேன்.  எந்த யோசனையும்  செய்யாமல் எஸ்ஜிஇ  டிபார்ட்மெண்ட்டையும்,  என்னையும்  சேலத்துக்கு  மாற்றினார்.

இந்தச் சமயத்தில் அண்ணாநகரில் உள்ள புறநோயாளிகள் மருத்துவமனையில் இருந்த எனது நண்பர் சேலம்  செல்ல  விரும்பினார்.  இதையடுத்து  நான் மதுரை மருத்துவமனைக்கு  சென்றேன். அங்கு  ரத்த வாந்தி  எடுத்து சாகிறவர்களை  பார்த்தேன். முடிந்தால்  அந்த  சிக்கல்களுக்கு தீர்வுகாண  உறுதியேற்றேன்.  அண்ணாநகர் மருத்துவமனையில்  நான் இருந்தது  சில காலம்தான். பிறகு 1995ல்  நான் ஸ்டான்லி மருத்துவமனைக்கு  மாற்றப்பட்டேன். அங்கு,  ஈரல்  மாற்று பிரிவை தொடங்க விரும்புவதை  சொன்னபோது  எனது சகாக்கள்  ஜோக் என்றே  நினைத்தார்கள்.

இதற்கு நிறைய செலவாகும் என்றார்கள். அப்போது வடசென்னை எம்.பி. குப்புசாமியின்  மனைவிக்கு உணவுக்குழாயில் ஏற்பட்ட புற்றுநோய்க்கு அறுவைச்சிகிச்சை செய்தேன். அவர்,  தனது தொகுதி வளர்ச்சி நிதியை ஈரல் மாற்று துறைக்குகொடுத்தார். ஆனால், அந்த நிதியும்  எங்களிடமிருந்து பறிக்கப்பட்டது. நானும் எனது நண்பர்களும் ஒவ்வொரு இடமாக ஓடியும்  பலனில்லை.

 

stanley hospital



இதையடுத்து அதிகமாக உயிரிழப்பு ஏற்படும் இரைப்பை குடல் இயல் பிரிவைதொடங்கி, அதில்  ஈரல் மற்றும் கணையம் அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்வதுஎன்று முடிவெடுத்தோம்.  அதிகமாக உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும் ஒரு வார்டை சிரமப்பட்டு பெற்றோம். அந்தத் துறைக்கென்று  நர்சுகள் இல்லை. அதற்குப் பதிலாக ஒப்பந்த அடிப்படையில் நர்சுகளை எடுக்கும்படி கூறினார். உடனே, நர்சுகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தை தொடங்கியது. இதில் தனியார்  மருத்துவமனை ஆதரவாளர்களும் இருந்தார்கள்.

தமிழகம் முழுவதும் பரவிய இந்த ஸ்டிரைக் ஒரு வாரம் நீடித்தது. இந்த நிலையில் நர்சுகள் சங்கத்தின் தலைவருடைய மருமகன் விமான நிலையத்தில் ரத்தவாந்தி எடுத்து, அபாயகட்டத்தில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். பழைய சிகிச்சை முறைகள் அனைத்தும்  முயற்சிக்கப்பட்டு  தோற்றவுடன்,  நான்  மதியம் 2 மணிக்கு வந்தேன். அறுவைச் சிகிச்சை  செய்தேன். அவர் குணமடைந்தார். நர்சுகள் சங்கத் தலைவர் என்னிடம் வந்தார்.  நன்றி சொல்லி  அழுதார். நான், அவரிடம் சொன்னேன்… “சிஸ்டர்,  நீங்கள்  உங்கள்  மருமகனை  பற்றி  சிந்திக்கிறீர்கள். நான் தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மருமகன்களை  பற்றி நினைக்கிறேன்.”

நர்சுகள் போராட்டம் முடிவுக்கு வந்தது. அரசு விருப்பப்படி ஒப்பந்த நர்சுகளை வைத்து இரைப்பை குடல் அறுவைச்சிகிச்சை பிரிவை தொடங்கினோம். அறுவைச் சிகிச்சை செய்யும்  நபர்களிடம் குறைந்தபட்ச பராமரிப்பு செலவுக்கு பணம் பெற்று அவர்களுக்கு சம்பளமாக  கொடுத்தோம். அது நல்லபடியாக செயல்பட்டது. பின்னர் சில ஆண்டுகளில் தமிழகத்தின் பிற  மருத்துவமனைகளிலும் சில மாறுதல்களுடன் இந்தப் பிரிவு தொடங்கப்பட்டது.

2000மாவது ஆண்டு இந்தப் பிரிவுக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் கிடைத்தது. இந்தியாவிலேயே முதலாவது இது. அதன்பிறகு இந்த குறைபாடுகளால் இறப்பவர்கள் எண்ணிக்கை குறைந்தது. பலர்  நன்றி சொன்னார்கள். வருமானமும் உபரியாகியது. 80 லட்சம் ரூபாய்  கிடைத்தது.  அதைக்கொண்டு நவீன உபகரணங்களை வாங்கினோம். இந்தத்  துறையில்  பயிற்சிபெற  மருத்துவர்கள் விரும்பினார்கள். கூடுதல் நேரம் தங்கிகூடுதல் பங்களிப்பு செய்யத்  தயாரானவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள் என்றுநிபந்தனை விதித்தேன். இதையடுத்து  பல திறமையான இளம் டாக்டர்கள் கிடைத்தார்கள்.

ஒரு நாள்  அப்போலோவுக்கு  வரும்படி நிதித்துறை செயலாளர்  என்னிடம் கூறினார்.  நான் அவரை  ஸ்டான்லி மருத்துவமனைக்கு வரும்படி கூறினேன். ஒரு அரசு விடுமுறைநாளில் அவர் ஸ்டான்லி  வந்தார்.  எங்கள் டிபார்ட்மெண்ட்டையும் வேலை பார்க்கும் விதத்தையும் பார்த்து அசந்துபோனார்.  அதன்பிறகு  தேவையான  நிதியை ஒதுக்கினார். நாங்கள் கேட்டதைக் காட்டிலும்  இருமடங்கு நிதி கிடைத்தது. அதுமட்டுமின்றி புதிய கட்டிடமும் கிடைத்தது. அந்தக் கட்டிடத்தை  நவீனப்படுத்தவும் நிதி கிடைத்தது.

மருத்துவத்துறை கட்டிடத்தை திறப்புவிழாவுக்கு தயார்செய்யும் மும்முரத்தில் இருந்தோம். புதிய  டீன் ஒருவர் எங்களுடன் இணைந்தார். ஆனால் நிதி விஷயத்திலேயே ஆர்வமாக  இருந்தார்.  எனினும், நிதி நிர்வாகம் முழுவதும் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் பொறுப்பில் மாற்றப்பட்டதை அறிந்ததும் அவர் விரக்தி அடைந்தார். அதைத்தொடர்ந்து கட்டிடத்தை எங்களிடமிருந்து பறிக்க முயற்சித்தார். எல்லா வழிகளும் அடைக்கப்பட்ட நிலையில் முதல்வர் கலைஞரின் இல்லத்துக்கு இரவு 8 மணிக்கு போன் செய்தேன். அடுத்த நாள் காலை நான் ஜப்பானுக்கு போகவேண்டும் என்பதால் அவசரமாக போன் செய்தேன். முதல்வரின் மனைவி போனை எடுத்தார். அடுத்தநாள் காலை முதல்வரை சந்திக்க வரும்படி கூறினார். செல்வாக்கு மிகுந்த அந்த புதிய டீன் மாற்றப்பட்டார். பல அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

திரு.சன்வத்ரம் ஐஏஎஸ் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார். இவர்தான் தொடக்கத்தில் என்னை அப்போலோவுக்கு ஆலோசனை நடத்த வரும்படி அழைத்தவர். நான் மறுக்கவே ஸ்டான்லியில் வந்து சந்தித்து நிதி ஒதுக்கீடுக்கு உதவியவர். அரசியல் காரணங்களுக்காக அவர் பொறுப்பில்லாமல் இருந்தார். அவர் என்னை வந்து சந்தித்தார். சில நாட்களிலேயே அவர் இந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார். அவர் வந்தபிறகு கட்டிடத்தை வேகமாக சீரமைத்தோம். இந்தக் கட்டிடத்தை முதல்வர் கலைஞர் வந்து திறந்துவைத்தால் பெரிய அளவுக்கு ஒத்துழைப்புக் கிடைக்கும் என்று நினைத்தோம். ஆனால், முதல்வரைச் சந்திக்க அனுமதி பெறமுடியவில்லை. கட்டிடத்தை விரைவாக திறக்க சுகாதாரத்துறை அமைச்சர் விரும்பினார். அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. நான் திருப்பதி சென்றேன். கடவுள்தான் உதவவேண்டும் என்று நினைத்தேன். அடுத்தநாள் அப்போலோவுக்கு சென்று லிப்ட் அருகே காத்திருந்தேன். லிப்ட் வந்தது. உள்ளே இருந்து முதல்வர் கலைஞரும் அமைச்சர்களும் வந்தார்கள். முதல்வருக்கு வாழ்த்துச் சொன்னேன். இரண்டு மாதங்களாக அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றேன். உடனே அடுத்த நாள் காலை 9 மணிக்கு வந்து சந்திக்கும்படி கூறினார். போனேன். மருத்துவமனைக் கட்டிட திறப்புவிழாவுக்கு வரவேண்டும் என்று கேட்டேன்.

“பொதுவாக, பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளுக்காகத்தான் டாக்டர்கள் வருவார்கள். அதெல்லாம் உங்களுக்கு வேண்டாமா?” என்று நகைச்சுவையாக கேட்டார். உடனே நான், “ஸார், நீங்கள் இந்த கட்டிடத்தை திறந்துவைத்தால், அதுவே பாரத ரத்னா விருது பெற்ற மகிழ்ச்சியை எனக்கு கொடுக்கும்” என்றேன். பிறகு அவர் ஆலோசனை நடத்தி திறப்புவிழாவுக்கு வந்தார். திறந்துவைத்த பிறகு ஹிண்டு போட்டோகிராபரை அழைத்து அவருக்கு அருகில் நிற்கவைத்து போட்டோ எடுக்கச் சொன்னார். நான் உயரத்தில் பறப்பதுபோல உணர்ந்தேன்.

எல்லாம் நல்லபடியாக முடிந்தது. ஆனால், எப்போது ஈரல் மாற்று அறுவைச் சிகிச்சையை தொடங்கப்போகிறேன் என்று தெரியவில்லை. இதற்கிடையில் மாதத்துக்கு ஒரு முறை 50 சீனியர் டாக்டர்களுக்கு எங்களது டிபார்ட்மெண்ட் குறித்து விரிவுரை நிகழ்த்தும்படி பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்சும், ஷீலா பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்சும் கூறியிருந்தார்கள். ஒரு முறை விரிவுரை முடிந்ததும் 2009 ஜனவரி 28 ஆம் தேதி டாக்டர்களுடன் காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு டாக்டர் கேட்டார்… “டிபார்ட்மெண்ட் நன்றாக வந்திருக்கிறது. ஆனால், எப்போது முதல் அறுவைச் சிகிச்சையை தொடங்குவீர்கள்?” என்று கேட்டார். அவர் வாயை மூடவில்லை. அதற்குள் எனது போன் ஒலித்தது. அரசு மருத்துவமனையிலிருந்து டாக்டர் பேசினார். தங்களிடம் மூளைச்சாவு அடைந்த ஒரு நோயாளி இருப்பதாகவும், அவரிடமிருந்து ஈரலை எடுத்துக்கொள்ள முடியுமா? என்று என்று கேட்டார்.

நானும் எனது சகாக்களும் ஆச்சரியமடைந்தோம். அன்று காலை 11 மணிக்கே அறுவைச் சிகிச்சையை தொடங்கினோம். அடுத்தநாள் மதியம் வரை இது நீடித்தது. எல்லோரும் சோர்வடைந்தோம். நோயாளி கண் விழிக்கும்வரை ஓய்வெடுத்தோம். அரசு மருத்துவமனை ஒன்றில் இந்தியாவிலேயே முதன்முதல் ஈரல் மாற்று சிகிச்சையை நடத்தியிருக்கிறோம். எனது அறைக்கு போகும்போது அங்கே ஒரு சாமியார் நின்றுகொண்டிருந்தார். கையில் ஒரு மாலையும், பிரசாதமும் வைத்திருந்தார். அவர் 6 மணிநேரம் காத்திருப்பதாக எனது செயலாளர் சொன்னார். எனக்கு மாலை அணிவித்து பிரசாதம் கொடுத்த அவர், உப்பிலியப்பன் கோவிலில் இருந்து வருவதாகவும், அந்த கோவிலின் கும்பாபிஷேகத்துக்கு என்னை அழைக்க வந்திருப்பதாகவும் கூறினார். அவரை இதற்கு முன்போ பின்போ பார்த்ததே இல்லை. எங்கள் முதல் அறுவைச்சிகிச்சை வெற்றிபெற்றது. 10 ஆண்டுகள் முடிந்த நிலையிலும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29 ஆம் தேதி அந்தப் பெண் எனக்கு போன் செய்து, “நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன். உங்களுக்கும் உங்கள் குழுவுக்கும் நன்றி” என்று கூறுகிறார்.

இனி, ஸ்டெம் செல் அல்லது குருத்தணு திட்டம் குறித்து கொஞ்சம் சொல்லலாம் என்று நினைக்கிறேன். 2007 ஆம் ஆண்டு, நான் ஒரு கூட்டத்துக்கு போயிருந்தேன். அங்குதான் ஈரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு பதிலாக ஸ்டெம் செல் சிகிச்சைக்கு மாறலாம் என்ற விவாதம் இடம்பெற்றது. எங்களுடைய முயற்சிகள் வீணாக நாங்கள் விரும்பவில்லை. ஸ்டெம் செல் ஆய்வுக்கூடங்கள் பலவற்றை ஆய்வு செய்தோம். பேராசிரியர் ரோஸி வெண்ணிலா ஆஸ்திரேலியாவுக்குச் சென்று சில ஆய்வுக்கூடங்களை பார்த்து வந்தார். அந்த அடிப்படையில் 20 கோடி ரூபாயில் ஒரு திட்டத்தை உருவாக்கி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு அனுப்பினோம். ஒரு பதிலும் வரவில்லை.

இந்தச் சமயத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்பழகனும், கனிமொழி எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி.யும் 5 கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்தார்கள். ஆனால், அந்த நிதியை ஒதுக்க லகானி ஐ.ஏ.எஸ். மறுத்துவிட்டார். ஆனாலும், கருப்பையா பாண்டியனால் அந்த நிதியை நாங்கள் பெறமுடிந்தது. ஆனாலும், லேப் கட்டும் பணி நகரவே இல்லை. இந்த நிலையில்தான் நான் முதல்வர் கலைஞரை சந்தித்தேன். அவரிடம் விவரத்தை தெரிவித்தேன். அவர் உடனே அப்போதைய தலைமைச் செயலாளர் ஸ்ரீபதியை அழைத்து கவனிக்கச் சொன்னார். அவர், நான்கு மணிநேரம் ஆய்வு செய்தார். அந்தச் சமயத்தில் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி காலியாக இருந்தது. அதை ஏற்கும்படி என்னை முதல்வர் கலைஞர் கேட்டார். நான் அதில் விருப்பமில்லை என்றேன். ஸ்டான்லியிலேயே நிறைய வேலை பாக்கியிருக்கிறது என்றேன். உடனே அவர்… “வி.சி. போஸ்ட் வேண்டாம் என்கிறீர்கள். பத்மஸ்ரீ விருது வேண்டாம் என்கிறீர்கள். உங்களுக்கு என்னதான் வேண்டும்?” என்று கேட்டார்.

நான் அவரிடம், டெல்லி அரசு திட்டமிட்டுள்ள ஐஎல்பிஎஸ் திட்டம் குறித்து கூறினேன். 3 ஏக்கர் நிலத்தையும் 350 கோடி ரூபாயையும் அது ஒதுக்கியிருப்பதை குறிப்பிட்டேன். அதைக்கேட்ட முதல்வர், இடத்தை தேர்வு செய்துவிட்டு வாங்க, 450 கோடி ரூபாய் தருகிறேன் என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி, அவருடைய உதவியாளர் சண்முகநாதனை அழைத்து, இரண்டு மணி நேரத்தில் நிதி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களின் மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டார். நான் ஸ்டான்லி மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் பொதுப்பணித்துறை இடத்தை அடையாளம் காட்டினேன். அப்படித்தான் பழைய மத்திய சிறையின் 8 ஏக்கர் நிலம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கிடைத்தது. ஆனால், முதல்வர் தருவதாக சொன்ன 450 கோடி ரூபாய் பல காரணங்களால் கிடைக்கவில்லை.

நான் பணி ஓய்வு பெறுவதற்கு சில மாதங்கள் முன் சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வந்து ஸ்டான்லியிலேயே தொடர்ந்து பணிபுரியும்படி கேட்டார். நான் மறுத்தேன். எனக்கு பணி நீடிப்புக் கொடுத்தால் பலருடைய பொறாமைக்கு ஆளாவேன் என்றேன். துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினும் என்னை பணியில் நீடிக்கும்படி கேட்டார். நான் மீண்டும் மறுத்தேன். முதல்வர் சொன்னால் கேட்பீர்கள். நான் சொன்னால் கேட்கமாட்டீர்களா என்று கேட்டார். மற்றவர்களுடைய பொறாமைக்கு நடுவே நான் பதவி நீடிப்பு பெற விரும்பவில்லை என்பதைத் தவிர வேறு காரணம் எதுவுமில்லை. 36 ஈரல் மாற்று அறுவைச் சிகிச்சையையும், ஸ்டெம் செல் லேப் கட்டுமானப் பணியையும் மனநிறைவோடு செய்திருக்கிறேன். அதுபோதும் என்பதே எனது எண்ணமாக இருந்தது.

தமிழில் – ஆதனூர் சோழன்

 

 

Next Story

நிழற்குடையில் வசித்த ஐஸ் வியாபாரி- கோட்டாட்சியர் முயற்சியால் கிடைத்த வீடு; குவியும் பாராட்டுகள்

Published on 26/01/2024 | Edited on 26/01/2024
An ice dealer who lived in Nilukudai - a house obtained through the efforts of Kotatsiyar; Accumulations abound


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை முருகன் கோயில் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஒரு நிழற்குடையில் தவளைக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 60 வயது முதியவரான சுப்பிரமணியன் தனது சற்று மனநலம் பாதிக்கப்பட்ட 25 வயது மாற்றுத்திறனாளி பெண்ணுடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வந்து தங்கியுள்ளார். சுப்பிரமணியன் பகலில் சைக்கிளில் கிராமம் கிராமமாகச் சென்று ஐஸ் வியாபாரம் செய்து அதில் கிடைத்த வருமானத்தில்தான் மாற்றுத்திறனாளி மகளுடன் வசித்து வந்தார்.

பகலில் மாற்றுத்திறனாளி பெண் மட்டுமே அங்கிருந்தார். கரோனா காலத்தில் அந்த ஊர் கிராம நிர்வாக அலுவலராக இருந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநிலச் செயலாளர் அரங்க.வீரபாண்டியன் ஆய்வு மேற்கொண்ட போது நிழற்குடையில் தங்கி இருந்த இவர்களுக்கும் உணவு வழங்கியதோடு அவர்களுக்கு என்று தனி வீடு கட்டிக் கொடுக்க நினைத்தார். இதையறிந்த ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி மாற்றுத்திறனாளி பெண்ணின் தேவைகளை பூர்த்தி செய்து வந்தார்.

இந்நிலையில் தான் கந்தர்வக் கோட்டையில் நடந்த சமாபந்திக்கு வந்த புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசனிடம், பேருந்து நிழற்குடையில் வயதான தந்தையுடன் வசிக்கும் மாற்றுத்திறனாளி பெண் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார். அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். மனைப்பட்டா கொடுத்தால் உடனே வீடு கட்டிக் கொடுக்கிறேன் என்று கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன் கோரிக்கை வைக்க உடனே அந்த நிழற்குடைக்குச் சென்று மாற்றுத்திறனாளி பெண்ணை சந்தித்து விபரங்களை கேட்டறிந்த கோட்டாட்சியர், உடனே வீட்டுமனைக்கு இடம் தேர்வு செய்ய வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து கொத்தகம் கிராமத்தில் இடம் தேர்வு செய்து மனைப்பட்டா வழங்கியதுடன் அவர்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான சைக்கிள் ஆகியவற்றைப் பெற்றுக் கொடுத்ததுடன் உதவித் தொகைக்கும் விண்ணப்பித்துள்ளார். அதே நேரத்தில் மனைப்பட்டா கிடைத்தவுடன் கோட்டாட்சியரிடம் சொன்னது போல வீடு கட்டத் தயாரான கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன், தனது சொந்த செலவில் ரெடிமேட் கான்கிரீட் சுவர் அமைத்து ஆஸ்பெட்டாஸ் சீட்டில் அழகிய வீடு கட்டி மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிப்பறை வசதிகளையும் செய்தார். கூடுதல் செலவினங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்ணின் தேவையறிந்து அவருக்கான உதவிகளை இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி செய்தார்.

இந்தநிலையில் கோட்டாட்சியர் முருகேசனை தொடர்பு கொண்ட கிராம நிரவாக அலுவலர் வீரபாண்டியன், உங்களிடம் கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றி வீடு கட்டி முழுமை அடைந்துள்ளது சார் குடியரசு தினத்தில் நீங்கள் வந்து வீட்டை மாற்றுத்திறனாளி பெண்ணிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அன்புக் கோரிக்கை வைக்க கொத்தகம் சென்ற கோட்டாட்சியர் வீட்டை திறந்து வைத்து குடியேற்றி வைத்து கிராம நிர்வாக அலுவலரையும்  இணைந்து செயல்பட்ட இளநிலை உதவியாளர் பரமேஸ்வரியையும் பாராட்டினார்.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு முதியவர் சுப்பிரமணியனுக்கு ஒரு விபத்தில் கை உடைந்ததால் ஐஸ் வியாபாரம் செய்ய முடியாமல் தவித்து வருவதால் அவர் பெட்டிக்கடை வைக்க உதவி செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என்றார். யாரேனும் உதவும் நல் உள்ளங்கள் மாற்றுத்திறனாளி பெண்ணை வைத்துக் கொண்டு உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வருமானமின்றி உள்ள சுப்பிரமணியனுக்கு உதவிகள் செய்ய நினைத்தால் உதவலாம்.

இதனைப் பார்த்த கிராம மக்கள் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் தொடர்ந்து உதவிகள் செய்து வரும் கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன், ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி மற்றும் உதவிய உள்ளங்களை பாராட்டி வருகின்றனர்.

Next Story

தமிழகத்திலும் அதிகரிக்கும் தெருநாய்க் கடி சம்பவங்கள்

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

nn

 

அண்மையில் சென்னையில் தெருநாய் கடித்து 10 பள்ளி மாணவர்கள் உட்பட 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் ஈரோட்டிலும் சிவகங்கையில் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

அண்மையில் சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் தெரு நாய்கள் குழந்தைகளை கடிப்பது, சாலையில் செல்வோரை கடிப்பது தொடர்பான செய்திகளும், வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் இதுபோன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அண்மையில் சில நாட்களுக்கு முன்பு சென்னை திருவொற்றியூரின் பரபரப்பான சாலை ஒன்றில் 10 பள்ளி மாணவர்கள் உட்பட 29 பேரை தெரு நாய் கடித்துக் குதறியது. அந்த தெருநாயை அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் அடித்தே கொலை செய்தனர்.

 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் புஞ்சம்புளியம்பட்டி பகுதியில் வீட்டில் புகுந்த நாய் ஒன்று 65 வயது மதிக்கத்தக்க பெண்ணை கடித்துக் குதறியது. பின்னர் வெளியே வந்த அந்த நாய், கண்ணில் பட்டவர்களை எல்லாம் கடித்துக் குதறியது. இதில் பாதிக்கப்பட்ட 65 வயது பெண் உட்பட ஏழு பேர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சிவகங்கையில் காரைக்குடி கல்லூரி சாலையில் வெறிநாய் ஒன்று விரட்டி விரட்டி கடித்ததில் பெண் உட்பட ஐந்து பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்படியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தெரு நாய்க் கடி காரணமாக பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.