Skip to main content

தூய்மைப் பணியாளர்களுக்குப் பாத பூஜை செய்வதும் திட்டுவதும் ஒரே நோயின் இருவேறு அறிகுறிகள் - மருத்துவர் ஷாலினி பேச்சு!

Published on 21/04/2020 | Edited on 21/04/2020


உலக நாடுகளை கரோனா ஆட்டிப்படைத்து வருகின்றது. வல்லரசு நாடுகள் கூட அதன் ஆதிக்கத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி வரும் சூழ்நிலையில், இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றும் சில துறையினருக்குப் போதுமான ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக மனநல மருத்துவர் ஷாலினியிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு, 
 

 

 

n


இந்தக் கரோனா காலத்தில் மூன்று துறைகளில் பணியாற்றுபவரின் பணிகள் மெச்சத்தகுந்த வகையில் இருக்கிறது. மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள். இவர்கள் இந்தக் கடினமான காலத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். கோவையில் சில தினங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட இடத்தில் தூய்மைப் பணியாளர்களுக்குப் பாத அபிஷேகம் செய்து ரூபாய் நோட்டுகளால் ஆன மாலை அணிவித்துப் பாராட்டு தெரிவித்தார்கள். இது ஒருபுறம் இருக்க சில தினங்களுக்கு முன் வெளியான வீடியோ ஒன்றில் ஒரு பெரியவர் தூய்மைப் பணியாளர்களை அவமரியாதை செய்யும் விதத்தில் பேசியுள்ளார். இந்த இரண்டு சம்பவங்களையும் நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

இரண்டுமே ஒரு நோயின் இருவேறு அறிகுறிகள். வேலைக்குத் தேவைப்படுவதால் காலில் விழுந்து இப்ப எதுவும் பிரச்சனை பண்ணாதீங்க என்று போங்கு காட்டுவதும், என்னால் தான் நீ பிழைக்கிறாய் என்ற பேசுவதும் ஒரே மனநிலையில் இருக்கின்ற இருவர் பேசுவதைப் போலத்தான். இதில் ஒன்றும் அவர் நல்லவர், இவர் கெட்டவர் என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களை இவர்கள் இருவரும் சமமானவர்களாகப் பார்க்கவில்லை. கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்த வேண்டும், இல்லை என்றால் காலில் விழ வேண்டும் என்ற மனநிலையின் வெளிப்பாடாகவே இதைப் பார்க்க வேண்டும். சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகாலம் கழித்தும் நாம் அவர்களைச் சமமாக நடத்தவில்லை என்றால் நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்று பார்க்க வேண்டும். அவர்களை நாம் சமமாகவே பார்க்கவில்லையே? 

 

http://onelink.to/nknapp


பிரதமர் மோடியே அவர்களின் கால்களைக் கழுவி அவர்கள் மரியாதைக்குரியவர்கள் என்று கூறினாரே?

மோடி புகைப்படத்துக்காகப் பல்வேறு விஷயங்கள் செய்யுவார். அவர் என்ன தினங்தோறும் ராட்டையா சுற்றுகிறார். சிலர் நான் எவ்வளவு நல்லவன் பார்த்தியா என்ற என்ற மனநிலையில் இதைச் செய்கிறார்கள். அன்றாடம் அதே மனநிலையில் அவர்களை மதிக்கிறார்களா என்றால் அது இல்லை. அவர்களை மற்ற மனிதர்களைப் போல் கூட மதிப்பதில்லை. புகைப்படத்திற்காக போஸ் கொடுப்பதில் என்ன நன்மை வந்துவிடப்போகிறது. உள்ளார்ந்து அவர்களைத் தீண்டத்தகாதவர்களாகத்தான் இன்றுவரை நினைத்து வந்திருக்கிறோம். அந்த தாத்தா அவர்களைத் திட்டினாரே அது என்ன சொல்ல வருகிறது என்றால், நீ என் மூலம் பிழைப்பவன், நான் உன்னை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டலாம் என்பதன் மனநிலையின் வெளிப்பாடு. அதை அப்படித்தான் பார்க்க வேண்டியுள்ளது.

தூய்மைப் பணியாளர்களை மரியாதைக் குறைவாக நடத்தும் இந்த அணுகுமுறை மாற்றப்பட வேண்டும். அவர்கள் இல்லை என்றால் சமூகமே ஸ்தம்பித்து போய்விடும். நம்முடைய வீட்டில் செப்டி டேங்க் அடைத்து கொண்டால் எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் நாம் என்ன செய்ய முடியும். அவர்கள் வந்தால்தான் அதனை க்ளியர் செய்ய முடியும். அப்படி என்றால் அவர்களை நாம் எப்படி மதிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்கிறோமா என்று பார்க்க வேண்டும். வெளிநாடுகளில் எல்லாம் இப்படி இல்லையே. பாராக் ஒபாமா சாலையில் வரும்போது ஒரு தூய்மைப் பணியாளர் தூய்மை செய்துவிட்டு தெரு ஓரத்தில நிற்கும் போது, அவரைத் தட்டி கொடுத்துவிட்டு செல்கிறாரே, அவருக்கு நான் அமெரிக்க அதிபர் என்ற மனநிலை தோன்றவில்லையே. இந்தியா ஒரு ஆன்மிக நாடு என்று சொல்கிறார்கள், ஆனால் இதில் மட்டும் பாகுபாட்டைக் காட்டுவார்கள். அதுதான் எப்படி என்று தெரியவில்லை. இந்த எண்ணம் மாற்றறப்பட வேண்டிய ஒன்று.

 

Next Story

பாதுகாப்பு தேடி காவல்நிலையம் சென்றால் அங்கே அவர்களுக்கே பாதுகாப்பில்லை - மருத்துவர் ஷாலினி வேதனை!

Published on 12/03/2021 | Edited on 12/03/2021

 

kl;


சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் மருத்துவர் ஷாலினி அவர்கள் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்தார். இதுதொடர்பாரக அவர் பேசியதாவது, "பலரும் இங்கே செந்தமிழில் பேசினார்கள், என்னால் அப்படி எல்லாம் பேச முடியாது. எனக்குத் தெரிந்த சென்னை தமிழில்தான் பேசுவேன். ‘நடுவுல கொஞ்சம் அறிவியலைக் காணோம்’ என்றதும் இவர்கள் எதைப் பற்றி பேசப் போகிறார்கள் என்று நீங்கள் சற்று குழம்பி கூட போக வாய்ப்பிருக்கிறது. என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கும்போது அன்றாடம் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றி நீங்கள் பேசினால் நன்றாக இருக்கும் என்று கூறி என்னை அழைத்தார்கள். அப்போது நீங்கள் ‘நடுவுல கொஞ்சம் அறிவியலைக் காணோம்’ என்ற தலைப்பையே வைத்துக்கொள்ளுங்கள் என்று அவர்களிடம் கூறினேன். அதற்கும் பெண்களுடைய தற்போதைய நிலைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதை நாம் பேச வேண்டும். அதற்கு முன் பெண்களுடைய தற்போதைய நிலை என்னவாக இருக்கிறது என்பதைப் பற்றியும் நாம் பேச வேண்டும். இங்கே பேசியவர்கள் பலரும் கூறினார்கள் பெண்கள் படிக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள் என்று. நான் தற்போது ஒன்று கூற விரும்புகிறேன். உலகில் கர்ப்பமாக இருக்கும் எந்தப் பெண்ணும் 5 மாதம் ஆனவுடன் மருத்துவரிடம் சென்று தனக்கு எந்த குழந்தை பிறக்கும் என்று தெரிந்துகொள்ளலாம். அதற்கு தடை ஏதும் இல்லை. ஆனால் இந்தியாவில் அப்படி  மருத்துவர் பதில் கூறினார் அவர் சிறைக்குச் செல்ல வேண்டும். 

 

ஏனென்றால் பெண் குழந்தைகளுக்கு சமூகத்தில் காட்டப்படும் பாகுபாடு. பெண் குழந்தைகளை சமூகம் சுமை என்று நினைக்கிறது. பெண் குழந்தைகள் செலவு வைப்பார்கள் என்ற எண்ணம் எல்லாம் சமூகத்தில் புரையோடி இருக்கிறது. அவர்கள் படித்தாலும் சம்பாதித்து யாரோ ஒருவருக்கு கொடுக்க போகிறது. அதற்கு நாம் எதற்கு செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகம் மக்கள் மனதில் இருக்கிறது. இந்த முதலீடு திரும்ப கிடைக்கப் பெறாது என்று நினைக்கிறார்கள். சரி, பெண்கள் படித்து வேலை செய்யும் இடங்களில் ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்தால் அங்கும் நம்மால் இருக்க முடியவதில்லை. மீ டூ தொல்லைகள் தொடர்கிறது. அதைப் பற்றி வெளியே சொன்னால், ‘தற்போது ஏன் கூறுகிறீர்கள்’ என்று கேட்கிறார்கள், எப்போது ஒரு பிரச்சனையைப் பற்றி சொல்ல வேண்டும் என்று தெரியாமல் பெண்கள் குழம்பிப் போய் உள்ளார்கள். அதற்குக் கூட அவர்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது. உடனே சொன்னாலும் பிரச்சனை, லேட்டா சொன்னாலும் பிரச்சனை. போலீஸ்காரர்களிடம் சொல்லலாம் என்று பார்த்தால் போலீஸ்கார அம்மாவுக்கே பிரச்சனை. இப்போது இதை எங்கே போய் சொல்வது. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். ஏன் நாம் இந்த மாதிரியான இக்கட்டான நிலையில் இருக்கிறோம், நமக்கு என்ன பிரச்சனை என்று பார்க்க வேண்டும். நாம் அறிவியலை இடையில் மறந்துவிட்டோம் என்பது மட்டுமே காரணமாக இருக்கும். அது எப்போதிலிருந்து காணாமல் போய்விட்டது என்று பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் எல்லா மனித குலங்களும் அறிவியல் ரீதியாகத்தான் யோசிக்கிறார்கள். பிறகு அதில் மாற்றங்கள் வந்துவிடுகிறது. ஆனால், அது பெண்களுக்கு எதிராக இருக்கக் கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.

 

 

Next Story

'மக்கள் பண்பு கொண்ட தலைவர்தான் தேவை... 56 இன்ச் மார்பு இல்லை" - மருத்துவர் ஷாலினி!

Published on 06/02/2021 | Edited on 06/02/2021

 

fhj


அரசியல் தலைவர்கள் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்வதும், மக்களைச் சந்திப்பதும் வாடிக்கையான ஒன்றாக இருந்தாலும், தற்போது அரசியல்வாதிகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் பொதுமக்களால் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு தமிழகம் வந்த ராகுல்காந்தி, தமிழகத்தில் சில மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார். மேலும் யூடியூப் சேனல் வைத்திருக்கும்  நபர்களுடன் பிரியாணி சமைத்து உண்டார். இந்த பிரச்சாரம் பலரால் பாராட்டப்பட்டாலும், சிலர் விமர்சனமும் செய்கிறார்கள். அரசியல்வாதிகளின் இந்தப் போக்கு ஆரோக்கியமானதா, அவர்கள் இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது குறித்து பல்வேறு கேள்விகளை மனநல மருத்துவர் ஷாலினியிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,

 

எப்போதுமே தேர்தல் வரும் நேரத்தில் இந்த மாதிரியான சிந்தனைகள் எல்லோருக்கும் வருவதுண்டு. பாஜக மோசமான கட்சி என்றால் அதற்காக காங்கிரஸை ஆதரிக்க முடியுமா? காங்கிரஸ் நல்ல கட்சியா என்ற கேள்வி சிலரால் எழுப்பப்படுகிறது. மேலும் பாஜக இந்துத்துவா என்றால் காங்கிரஸ் மென்மையான இந்துத்துவா என்று சொல்லப்பட்டு வருகிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

 

அப்படி என்றால் அதையும் எதிர்க்க வேண்டும்தான். நாம் ஒன்றும் காங்கிரஸ் கட்சியிடம் சரணாகதி அடையப் போவதில்லை. முடிந்தால் காங்கிரஸ் கட்சியை நம்முடைய கோட்பாடுகளுக்கு கொண்டு வர முயற்சிப்போம். எரியிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்று பார்க்கிற நிலைமையில் நாம் இருக்கிறோம். எந்தக் கொள்ளி நமக்கு பாதுகாப்பாக இருக்கிறது, நம் வாழ்க்கை தரத்தைப் பாதுகாப்பதாக இருக்கிறது என்பதைப் பார்த்து நாம் அந்த கொள்ளியை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டியதுதான். சர்வாதிகார தன்மையில் இருக்கிறவர்களை நம்பி நாம் பயணிக்க முடியாது. அடுத்த முறை மாறிவிடுவார்கள் என்று நாம் யாரையும் நம்ப முடியாது. தொடர்ச்சியாக அவர்களின் செயல்பாடு மதத்தை நோக்கியதாக இருக்கும்போது அவர்களை மக்கள் எப்படி பார்ப்பார்கள். 

 

இருக்கிற கொள்ளியில் பெட்டர் கொள்ளியை நாம் தேர்தெடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது நமக்கு ஏற்படுகிறது. ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். எனவே மக்கள்தான் நம்மை யார் வழிநடத்த வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். எங்களுக்கு வேண்டியது பெண்கள் உரிமையைப் பாதுகாக்க வேண்டிய ஒரு நபர். அந்த வகையில் ராகுல் காந்தி டிக் வாங்குகிறார். ஒரு சின்ன பெண் அவருடன் புகைப்படம் எடுக்க அவரின் வண்டியில் ஏறும்போது அந்தக் குழந்கையின் உயரத்துக்கு குனிந்து, அந்த பெண்ணின் ஆடையை சரி செய்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். இந்த மாதிரியான மக்கள் பண்பு கொண்ட ஒருவர்தான் வேண்டும். 56 இன்ச் மார்பு எல்லாம் எங்களுக்கு வேண்டாம்.

 

அந்த ராகுல் காந்தியையே ஒரு குழந்தை என்ற குற்றச்சாட்டைத்தானே பாஜக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது?

 

பாஜக மட்டுமல்ல, வெளிநாட்டில் கூட இந்த மாதிரியான நடவடிக்கைகள் தொடர்கிறது. அதாவது ஒருவரை இவர் இப்படிதான், இவருக்கு ஒன்றும் தெரியாது, அவருடைய அறிவு இவ்வளவுதான் என்று அவரது மதிப்பை குலைக்கும் நோக்கில் எதிராளிகள் செயல்படுபவாா்கள். அதுவே பெண்ணாக இருந்தால் அவரின் கற்பு நெறியைப் பற்றி தவறாகப் பேசுவார்கள். இது இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் சிலர் இந்த மாதிரியானடிவேலைகளை செய்து வருகிறார்கள். எனவே மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். மறுபடியும் தவறானவர்களைத் தேர்வு செய்யக் கூடாது. ராகுலுக்கு என்ன டெஸ்ட் வைத்து அவரை தோற்றுப் போய்விட்டார் என்று கூறுகிறார்கள்? அதில் எதுவும் உண்மையல்ல. சொல்லப்போனால் அவர் முன்னேறிக் கொண்டுதான் வருகிறார். தான் தோல்வி அடையவே இல்லை என்று சொல்லும் நபர்தான் மீசையில் மண் ஒட்டவில்லை என்று பொய் சொல்கிறார். நாம் சொல்வதைக் கேட்கும் மனிதர்களை சற்று உயர்த்தி விடுவதுதான் நம்முடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு உதவியாக இருக்கும். 

 

ராகுல் காந்தி மட்டும் காங்கிரஸ் இல்லை. கட்சியில் அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும். அப்படி இருக்கையில் நாம் அவரை எப்படி நம்ம முடியும்? 

 

ராகுல் காந்தி மட்டும் காங்கிரஸ் இல்லை, உண்மைதான். ஆனால் ராகுல் காந்தி நம்மை பயன்படுத்திக் கொள்ளவில்லை. நாம்தான் அவரை பயன்படுத்திக் கொள்கிறோம். அவருக்கு இடமே இல்லை என்றாலும் நாம்தான் ஒரு இடத்தை ஏற்படுத்திக் தர விரும்புகிறோம். இந்தப் பையனுக்கு மனித பண்பு நம்மை ஆள்பவர்களை விட அதிகம் இருக்கிறது என்று மனதில் தோன்றுகிறது. இரக்க சுபாவம் இருக்கிறது, இவருக்கு நாம் ஒரு பொறுப்பை கொடுத்தால் அவர் நம்மைப் பாதுகாப்பார் என்ற எண்ணம் தோன்றுகிறது. எனவே நம்முடைய பாதுகாப்பை சார்ந்தே அவரின் மீது நம்பிக்கை பிறக்கிறது.