Skip to main content

பெண் அர்ச்சகர்கள் ஏன் வரக் கூடாது..? - மனநல மருத்துவர் ஷாலினி கேள்வி!

Published on 21/11/2019 | Edited on 22/11/2019


சிதம்பரம் நடராஜர் கோயிலில் சில தினங்களுக்கு முன்பு பெண் ஒருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை மனநல மருத்துவர் ஷாலினியிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோயிலில் லதா என்ற பெண் தன்னுடைய மகனின் பிறந்த நாளை முன்னிட்டு அர்ச்சனை செய்ய சென்றுள்ளார். அங்கு அர்ச்சகர் ஒருவர் அவருடன் வாக்குவாதம் செய்து அவரை அறைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தை எப்படி பார்க்கிறீர்கள்? 

இந்த சம்பவத்தில் அவருடைய ஆதிக்க தன்மைதான் வெளிப்பட்டுள்ளது. அந்த அம்மா ஒரு நம்பிக்கையின் பெயரில் தன்னுடைய மகனுக்காக அர்ச்சனை செய்ய வந்துள்ளார்கள். அந்த வேலையை செய்யத்தானே இவர் இருக்கிறார். அவர் மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்து இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் அவரிடம் விவாதம் செய்துள்ளார். அந்த அம்மா அர்ச்சனை செய்தால் தன் மகன் நன்றாக இருப்பார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கோயிலுக்கு சென்றுள்ளார். அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு இருக்கிறது. நீதிமன்றமே நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படும்போது அந்த அம்மாவுக்கு அந்த நம்பிக்கை இருக்கத்தானே செய்யும். அதை நாம் குறை சொல்ல முடியாதே? பெரிய பதவியில் இருப்பவர்களை பொதுமக்கள் கேள்வி கேட்கும்போது கூட, அவர்கள் அதுகுறித்து விளக்கமாக சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கும் இந்த காலத்தில் நீ என்ன கேள்வி கேட்பது, நான் என்ன உனக்கு பதில் சொல்வது என்பதை போன்று அவருடைய பதில் இருக்கிறது. அதுவும் திமிராக நீ என் செயினை பிடுங்கினாய் என்று சொல்வேன் என்று அவர் கூறுகிறார் என்றால், அவருக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும். தங்களை யாரும் கேள்வியே கேட்கக்கூடாது என்று நினைப்பது எல்லாம் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.

 

n




சர்ச்சைக்குள்ளான தீட்சகர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அவரை வேலையில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளார்கள். 5000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்கள். அவரை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்துள்ளார்கள். இது போதும் என்று நினைக்கிறீர்களா?

இல்லை, நிச்சயமாக இது போதாது. அவர்களுடைய வேலையை செய்ய சொன்னால் அவர்கள் அடிப்பார்கள் என்றால், இதை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியாது. நம்முடைய கோயில்களில், நம் மன்னர்கள் கட்டிய கோயில்களில், நம் உழைப்பால் உருவான அந்த கோயில்களில் இவர்கள் அதிகாரம் செலுத்துவார்கள் என்றால், அதை எப்படி கடந்து போக முடியும். அவ்வளவு எளிதாக இதனை பார்க்க முடியாது. இவர்களுடைய வேலை என்ன, வரும் பக்கதர்களுக்கு அர்ச்சனை செய்வது தானே? அதற்காகத்தானே இவர்கள் பணியில் இருக்கிறார்கள், அதை தவிர இவர்களுக்கு வேறு பணி ஏதாவது இருக்கிறதா? இவர்கள் ஏன் அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள். இப்போது அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் எதிர்காலத்தில் நாம் யாரும் கோயிலுக்கு செல்ல முடியாத நிலையை அவர்கள் உண்டாக்குவார்கள். அவர்கள் கோயில்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுவார்கள்.

இவர்கள் யார்? எங்கே இருந்து வந்தார்கள், வந்தவர்களை இருக்கட்டுமே என்று அனுமதித்தால் நம்மிடமே அவர்கள் வித்தைகளை காட்டினால் நாம் அதை எவ்வாறு அனுமதிப்பது. இதனை ஒரளவு குறைக்க வேண்டும் என்றால் பெண் பூசாரிகளை நியமிக்க வேண்டும். தற்போது சிறு தெய்வ கோயில்களில் மட்டும் இருக்கும் அவர்களை தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பணி அமர்த்த வேண்டும். மேல்மருவத்தூரில் இருக்கிறதே என்கிறார்கள், அப்படி என்றால் ஏன் மீனாட்சி அம்மன் கோயிலில் இல்லை, ஏன் காமட்சி அம்மன் கோயிலில் இல்லை, ஏன் விசாலாட்சி அம்மன் கோயிலில் இல்லை, எல்லா கோயில்களிலும் இருக்க வேண்டிய தானே? ஆகம விதிப்படி பெண்கள் பூசாரியாக இருக்க கூடாது என்றால் எங்களுக்கு ஆதாரத்தை காட்டுங்கள். ஆகம விதி எல்லாம் மனிதன் உருவாக்கிது  தானே, அதில் அப்டேட் செய்யுங்கள், அதை மாற்றுங்கள். அதுதான் இந்த மாதிரியான செயல்களுக்கு அடிப்படையாக உள்ளது. 

இந்து மதத்தில் நாம் இத்தகைய மாற்றங்களை கேட்கும்போது, கிருஸ்துவ மதத்தில் பெண்கள் போப் ஆக முடியுமா என்ற கேள்வி எழுகிறதே? 

அதை பற்றியும் நாம் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். பல இடங்களில் அவர்கள் பிஷப் ஆக இருக்கிறார்கள். முக்கிய பொறுப்புகளுக்கு வந்துள்ளார்கள். சமணம், பௌத்தம், இந்து மதங்களை தவிர மற்ற மதங்களில் பெண்கள் உயர் பொறுப்புக்களுக்கு வந்துள்ளார்கள். இங்கேதான் இன்னமும் பிற்போக்குதனம் உச்சத்தில் இருக்கிறது. அதையெல்லாம் களைய வேண்டும் என்று நாம் எடுக்கும் முயற்சியை இந்த மாதிரியான ஆட்கள் கெடுக்க முயற்சிக்கிறார்கள். நூறு வருடங்களுக்கு முன்பு பெண்கள் மருத்துவர்கள் ஆக முடியாது. 200 வருடங்களுக்கு முன்பு பெண்கள் செவிலியராக கூட ஆக முடியாது. அதே நிலைமையில் பெண்களை வைத்திருக்கலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள். காலம் மாறிவிட்டது, அதனால் மாற வேண்டியது இவர்கள்தான், அவ்வாறு மாறுவது தான் இவர்கள் அனைவருக்கும் நல்லது. 

 

 

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.