Skip to main content

இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை மறுப்பவர்கள் முட்டையை எப்படி அனுமதிப்பார்கள் - மருத்துவர் ஷாலினி கேள்வி!

Published on 19/02/2020 | Edited on 19/02/2020

சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகள் சிலவற்றில் காலை உணவு வழங்கும் திட்டத்தை தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று சில நாட்களுக்கு முன் தொடங்கியது. காலை உணவாக அவர்கள் வழங்கும் உணவில் இஞ்சி, பூண்டு, வெங்காயம் முதலியவை இருக்காது என்றும், அதில் கிடைக்கும் சத்துக்களை வேறு காய்கறிகளை கொண்டு சரிசெய்வோம் என்று அந்த அமைப்பினர் தெரிவித்திருந்தார்கள். இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில் இதுகுறித்து மருத்துவர் ஷாலினியிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 
 

d



அக்‌ஷயபாத்ரா என்ற திட்டம் ஸ்கான் என்ற என்ஜிஓ நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு உணவு வழங்குகிறார்கள். அது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் என்பதால் மாணவர்களுக்கு அதனை இலவசமாக வழங்கி வருகிறார்கள். தமிழகத்தில் அரசே மதிய உணவு திட்டத்தை நடத்திவருகின்ற சூழ்நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள 24 பள்ளிகளில் காலை உணவு வழங்கும் இந்த திட்டத்தை இந்த தனியார் தொண்டு நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்கான இடத்தை தற்போது தமிழக அரசு அவர்களுக்கு வழங்கியுள்ளது ஒருபுறம் அரசியலோடு பார்க்கப்படுகிறது என்றால், அங்கு வழங்கப்படும் உணவில் இஞ்சி, பூண்டு, வெங்காயம் முதலியவற்றை தவிர்த்துவிட்டு வழங்குவதாக கூறப்படுகிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

நீங்கள் கூறுகின்ற நிறுவனம் பல ஊர்களில் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவினை அளிப்பதாக கூறுகிறீர்கள். அது உண்மையும் கூட இருக்கலாம். ஏனென்றால் தமிழகம் போல அங்கே மதிய உணவு திட்டம் உள்ளிட்ட எந்த திட்டமும் அங்கே இல்லை. ஆனால் தமிழகத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே இதே மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு கொடுக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். முதலில் அப்போது கொண்டு வரப்பட்டதே காலை உணவு கொடுக்கும் திட்டம்தான். நூறு வருடத்துக்கு முன்பு கண்டுபிடித்ததை தற்போது அவர்கள் செய்கிறார்கள் என்றால் அதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அவர்கள் நிலம் கேட்கிறார்கள், சென்னை மாநகராட்சிக்குள் கேட்கிறார்கள், அதை வைத்து எதிர்காலத்தில் அவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது. காலை உணவாக நம்முடைய வீடுகளில் அசைவ உணவை யாரும் செய்யமாட்டார்கள் என்பதால் அவர்கள் வழங்கும் காலை உணவில் எந்த பிரச்சனையும் எழப்போவதில்லை. ஆனால் நாங்கள் இஞ்சி, பூண்டு, வெங்காயம் சாப்பிட மாட்டோம், நீங்களும் சாப்பிடக்கூடாது என்று சொல்வதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த மூன்றையும் உயர்சாதியினர் என்று சொல்லப்படுபவர்கள் சாப்பிடுவதில்லை. 

அதனால் அதனை குழந்தைகள் மீது திணிக்கிறார்களோ என்ற அச்ச உணர்வு இயல்பாகவே நமக்கு எழுகின்றது. இவர்களுக்கு அந்த உணர்வு என்பது சமண மதத்தில் இருந்து வந்தது. அவர்கள் தான் பூமிக்கு அடியில் இருக்கும் உணவை சாப்பிட மாட்டார்கள். மேலும் உணவை இயந்திரமாக பிரித்து ஒரு இயந்திரம், இரண்டு இயந்திரம் என்று பிரித்து வைத்து சாப்பிடுவார்கள். கேரட், பீட்ரூட்  முதலிய காய்கறிகளை கூட அவர்கள் சாப்பிட மாட்டார்கள். எனவே நாங்கள் இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை சாப்பிடாமல் இருந்தால் இவர்கள் சொல்லும் உணவை சாப்பிடலாம். இந்த குறிப்பிட மூன்று காய்கறிகளில் வைட்டமின்கள் அதிகம் இருப்பதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அதை தரமாட்டேன் என்று சொல்வதை நாம் எப்படி ஏற்றுக்கொள்வது. அதில் உள்ள சத்துக்களை வேறு விதமாக தருவோம் என்று சொல்கிறார்கள். அப்படி எல்லாம் தர முடியாது. ஒவ்வொன்றுக்கும் தனிதனியான தன்மைகள் இருக்கின்றது. சத்துக்கள் அடங்கி இருக்கின்றது. எனவே இதற்கு பதில் அது என்பது சரியான முறையாக இருக்காது.

காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு அவர்கள் உணவினை தருகிறார்கள். அதை உதவி மனப்பான்மையோடு நாம் ஏற்றுக்கொள்வதில் என்ன சிரமம் இருக்க போகின்றது?

இவர்கள் இதோடு அதனை நிறுத்திக்கொண்டால் நாம் கவலைப்பட போவதில்லை. ஆனால் அவர்களின் உள் உணர்வு வேறாக இருக்குமோ என்று நாம் சந்தேகப்பட வேண்டிய தன்மை ஏற்படுகிறது. காலையில் தொடங்குவதாகக் கூறிக்கொண்டு மதிய உணவையும் இவர்கள் வழங்கினால் அதில் ஏற்படும் பிரச்சனைகளால்தான் நாங்கள் முன்கூட்டியே அதுப்பற்றி பேசி வருகிறோம். நான்தான் காலை உணவை நன்றாக போட்டேனே, மதிய உணவை போடமாட்டேனா என்று கூறிக்கொண்டு மதிய உணவை இவர்கள் போட ஆரம்பித்தார்கள் என்றால், அது விபரீதத்தில் கொண்டு போய் விடும். அவர்கள் இஞ்சி, பூண்டை அனுமதிக்காதவர்கள் முட்டையை மாணவர்களுக்கு வழங்க அனுமதிப்பார்களா என்ற கேள்வி இயல்பாகவே அனைவருக்கும் எழும். இதனால் நம் குறைந்தைகளுக்கு சத்துக்கள் குறைந்து விடும். ஒரு வீட்டில் சமயலறை என்பதுதான் பவரான ஒரு இடம். அந்த இடத்தில் சமைப்பவர்களுக்குத்தான பவர் அதிகம். அதை போல தமிழக குழந்தைகளுக்கு அவர்கள் சமைக்க ஆரம்பித்தால் அவர்களுக்கு அதிக அதிகாரம் இயற்கையாகவே வந்துவிடும். அவர்கள் கொடுக்கும் உணவில் எங்கே சந்தேகம் வருகிறது என்றால் நமக்கு பிடித்த உணவை வழங்காமல் அவர்கள் சாப்பிடும் உணவை நமக்கு திணிக்க பார்ப்பதே காரணமாக இருக்கிறது. நீங்கள் நல்லவர்கள், தியாகிகள் என்றால் அடுத்தவர்களுக்கு பிடித்த உணவை வழங்காமல் உங்களுக்கு பிடித்த உணவை ஏன் வழங்குகிறீர்கள். 

 

 

Next Story

மனிதாபிமான அடிப்படையில் செய்த உதவி; எதிர்பாராத விதமாக நடந்த சோகம்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Airborne tragedy in gaza by america

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். 

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது. 

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. 30க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை 22,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 57,614 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் ஒரு பத்திரிகையாளரின் குடும்பமே உயிரிழந்தது. அதனை அவரே செய்தி சேகரிப்பின் நேரலையில் கூறியது பலரையும் கலங்க வைத்தது. 

இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பின் கடைசி நபரை கொல்லும் வரை தங்களின் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்திருந்தார். அதன் காரணமாக காசாவை சுற்றி வளைத்த இஸ்ரேலிய படை தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்த போர் குறித்து ஐ.நா கூறுகையில், ‘இஸ்ரேல் - காசா இடையே நடைபெறும் போரினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஒருபுறம் இருக்க, பட்டினியால் ஏற்படும் உயிரிழப்புகள் நடப்பது கொடுமையாக இருக்கிறது. காசா பகுதியில் 4இல் ஒருவர் பசியால் வாடுகிறார்கள்’ என்று கூறி கவலை தெரிவித்தது. இதனைக் கருத்தில் கொண்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு, காசா மக்களுக்கு வான்வழி உணவு மற்றும் உதவி பொருட்கள் வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது. 

Airborne tragedy in gaza by america

அந்த வகையில், நேற்று (09-03-24) காசாவின் வடக்கு பகுதியில் உள்ள ஷாதி என்ற இடத்தில் உள்ள மக்களுக்கு பாராசூட் மூலம் உணவுப் பொருட்களை அமெரிக்கா விநியோகம் செய்து கொண்டிருந்தது. அப்போது, ஒரு பாராசூட் விரியாமல் திடீரென பழுதானது. இதனால் அந்த பாராசூட், உணவுப் பொருட்களுடன் மக்கள் கூடியிருந்த பகுதியில் விழுந்தது. இந்த விபத்தில் பரிதாபமாக 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். 

இந்த சம்பவம் குறித்து காசா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இது குறித்து, காசா செய்தித் தொடர்புத்துறை கூறுகையில், ‘இந்த திட்டத்தை பற்றி முன்கூட்டியே எச்சரித்தும் அமெரிக்க அரசு அலட்சியமாக செயல்பட்டுள்ளது. மனிதாபிமான உதவிகள் என்ற பெயரில் எங்கள் மக்களை மேலும் கொல்லாதீர்கள்’ என்று தெரிவித்துள்ளது. 

Next Story

சென்னை - புனே ரயில் பயணம்; 40 பயணிகளுக்கு உடல்நலக் குறைவு

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

Chennai - Pune Train Travel; 40 passengers fell ill

 

சென்னை - புனே ரயிலில் பயணம் செய்த பயணிகளில் 40 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னையிலிருந்து புனேவுக்கு பாரத் கவுரவ் என்ற சுற்றுலா ரயில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது ரயிலில் பயணித்த பயணிகளுக்கு ரயில்வே சார்பில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. அதன்படி ரயிலில் வழங்கப்பட்ட இரவு உணவை சாப்பிட்ட 40 பயணிகளுக்கு ஒரே நேரத்தில் ஒவ்வாமை பாதிப்பு காரணமாக வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

 

ஒரே நேரத்தில் 40 பேருக்கும் உணவு ஒவ்வாமை ஏற்பட்டது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரயில் பூனே சென்றவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.