Skip to main content

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு..? -ரஜினி அரசியல் குறித்து மருத்துவர் ஷாலினி!

Published on 05/12/2020 | Edited on 05/12/2020
v

 

விரைவில் அரசியலுக்கு வருவேன் என்ற நடிகர் ரஜினியின் அறிவிப்பு என்பது தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. அவரின் வருகையை ஆதரித்து சிலரும், அதனை எதிர்த்து பலரும் தங்களின் கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். "நான் என் உடல்நிலையை கூட பொருட்படுத்தாமல் மக்களுக்கு சேவை செய்ய நிச்சயம் அரசியல் கட்சி துவங்குவேன், அதில் என் உயிரே போனாலும் கூட பரவாயில்லை" என்று சில தின தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக நம்முடைய கேள்விகளை மருத்துவர் ஷாலினியிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட ரஜினியின் அரசியல் வருகை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய கட்சியை வரும் ஜனவரி மாதம் துவங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கட்சிக்கு பொறுப்பாளர்களையும் தற்போது நியமித்துள்ளார். அதையும் தாண்டி இப்போது இல்லை என்றால் எப்போதும் அரசியல் மாற்றம் நிகழாது, அதனை நிகழ்த்திக்காட்ட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். தன்னை மருத்துவர்கள் இந்த கரோனா காலகட்டத்தில் வெளியே செல்லக்கூடாது என்று கூறியிருந்தாலும் பரவாயில்லை, தமிழக மக்களுக்காக என்னுடைய உயிரையும் இழக்க துணிந்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். ரஜினியின் இந்த அறிவிப்பை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? 

 

இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களையும் போல அவருக்கும் அரசியல் செய்வதற்கும், கட்சி ஆரம்பிக்கவும் எல்லா உரிமையும் இருக்கிறது. அந்த தார்மீக அடிப்படை உரிமைகளை நாம் கேள்வி கேட்கவில்லை. ஆனால் ஒருவர் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்றால் ஒரு குறிபிட்ட தோராயமாக நாற்பது அல்லது ஐம்பது வயதில் கட்சி ஆரம்பித்தால் மீதி இருக்கின்ற முப்பது ஆண்டுகளில் நாம் நினைப்பதை மக்கள் முன் வைக்கலாம், செய்ய முயற்சிக்கலாம். ஆனால் அவர் நேரடியாக அரசியல் களத்திற்குள் இறங்குவேன் என்கிறார். அவரே உடல்நிலை பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருகிறார். இந்த கரோனா காலகட்டத்தில் அவர் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. இருந்தும் அவர் மாஸ்க் கூட மூக்குக்கு கீழே அணிந்து கொண்டு பேசுகிறார். அவரே பாதுகாப்பாக இருந்துதான் தன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் அவர் நம்மை காப்பாற்ற வருகிறேன் என்கிறார். இருக்கிற கொஞ்ச காலத்தில் அவர் நமக்கு சேவை செய்ய போகிறார் என்ற நம்பிக்கையை எல்லாம் எனக்கு கிடையாது. 

 

ரஜினி கட்சி ஆரம்பிக்க போகிறேன் என்று நான் குழந்தையாக இருப்பது முதல் கூறிவருகிறார். நான் எப்படி வருவேன், எங்கே வருவேன் என்று தெரியாது ஆனால் வர வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக வருவேன் என்று தொடர்ந்து கூறி வருகிறார். அதை நாம் பல வருடமாக தொடர்ந்து கேட்டு வருகிறோம். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன் உள்ளிட்ட பல டயலாக்குகளை எல்லாம் தொடர்ந்து நாம் கேட்டு வருகிறோம். அவர் மனசுக்குள் இன்னும் நிறைய தயக்கங்கள் இருக்கிறது. மற்ற தலைவர்கள் முதுமையில் அரசியல் செய்யவில்லையா என்று நீங்கள் கேட்கிறீர்கள். அவர்கள் எல்லோருக்கும் கடைசி கட்ட ஆட்சியில் உடல்நிலை சரியில்லாமல் போனது, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை கூட சிலருக்கு செய்யப்பட்டது. எம்ஜிஆர் அந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு எத்தனை ஆண்டுகள் இருந்தார் என்பது நம் அனைவருக்கும் தெரியுமே? இவர்கள் யாரும் பதவிக்கு வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அரசியலுக்கு வரவில்லையே? 30 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் அரசியலுக்கு வந்துவிட்டார்களே? பல முறை ஆட்சி செய்த பிறகு தானே அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

 

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல உடம்பில் பாதிப்பு வந்து இந்த கரோனா காலக்கட்டத்தில் வெளியே வரக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் இவர் ஏன் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறுகிறார். அப்படி வருவதாக இருந்தால் 25 ஆண்டுகளுக்கு முன்பே அவர் வந்திருக்கலாமே? அப்படி வந்திருந்தால் எங்களுக்கு நிறைய செய்திருக்கலாமே? அப்போது ஏன் வரவில்லை. இப்போது வர வேண்டிய அவசியம் என்ன வந்தது. அவருக்கு கட்சி ஆரம்பிக்க வேண்டும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அறவே இல்லை. இந்த இரண்டு வருடங்களில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் நன்றாக தெரியும். அடிக்கடி மாற்றி மாற்றி பேசி வருகிறார். அவருக்கே ஒரு கிளியர் மைண்ட் செட் இல்லை. தொடர்ச்சியாக கருத்துகளை மாற்றி பேசுகிறார். இந்த நிலையில் அவர் அரசியலுக்கு வந்து என்ன செய்துவிட முடியும்" என்றார்.

 

 

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார். 

Next Story

கோவை தி.மு.க. வேட்பாளர் ரஜினியின் மருமகன்?

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Coimbatore DMK Candidate Rajini's son-in-law?

தற்பொழுது வரை கூட்டணியும், யாருக்கு எங்கு சீட் என்பதும் முடிவாகாத நிலையில் பரபரப்பின் உச்சத்தில் இருக்கின்றது கோவை நாடாளுமன்றத் தொகுதி. தி.மு.க. கூட்டணியில் நடிகர் கமலஹாசன் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என அனேகம் பேர் எதிர்பார்த்த நிலையில், கோவையை மீண்டும் ஏன் கூட்டணிக்கே தள்ளிவிட வேண்டும்? தி.மு.க.வே போட்டியிட வேண்டும். அதுவும் ரஜினியின் குடும்பத்தாரே போட்டியிட வேண்டும் எனத் தலைமைக்கு தகவலைப் பகிர்ந்து வருகின்றனர் துவக்க கால தி.மு.க.வினர்.

"பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் உள்ளிட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய கோவை நாடாளுமன்றத் தொகுதியில், கோவை தெற்கு தவிர மீதமுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளையும் தன்வசமாக்கி வைத்திருக்கின்றது அ.தி.மு.க. தி.மு.க.வைப் பொறுத்தவரை உட்கட்சிக் குழப்பம், கோஷ்டி அரசியல் ஆகியவற்றால் இங்கு பலவீனமாகக் காட்சியளிக்கிறது. கோவை மாவட்டம் ஒரு காலத்தில் கொங்கு சமுதாயத்தினரின் ஆதிக்கமுள்ள பகுதியாக இருந்துவந்தது. காலபோக்கில் கொஞ்சங் கொஞ்சமாக மாறி, தற்போது தெலுங்கு மொழி பேசும் அருந்ததியர் உள்ளிட்ட போயர், நாயக்கர் போன்ற சமுதாயத்தினர் அதிகமுள்ள பகுதியாக மாறிவிடடது. அந்த உண்மையை அறிந்த ஜெயலலிதா, கொங்கு சமுதாயத்தினருக்கு மட்டுமின்றி, தேவர், நாயக்கர், செட்டியார் போன்ற சமூகத்தினருக்கும் வாய்ப்புகளை வழங்கி, தொடர்ந்து வெற்றிபெற்று கோவை மாவட்டத்தை அ.தி.மு.க.வின் கோட்டையாக மாற்றினார். தி.மு.க.வை பொறுத்தவரையோ, முழுக்க முழுக்க குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி, கட்சிப் பொறுப்பு முதல் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புவரை அனைத்தையும் அவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து வழங்கி வருவதால் மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் தி.மு.க.வின் மீது அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.

நடந்து முடிந்த அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் வெளியான முடிவுகளே இதற்கு சாட்சி. இப்பொழுது கூட கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. போட்டியிட்டு, கண்டுகொள்ளப்படாத மாற்று சமுதாயத்தினரையும் அரவணைத்து தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை வழங்கினால் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதோடு, இத்தொகுதியில் அ.தி.மு.க.வின் ஆதிக்கத்தை ஒழித்துக்கட்டி தி.மு.க. வளர வாய்ப்புள்ளது'' என்கிறார் ராமநாதபுரத்தை சேர்ந்த உடன் பிறப்பு ஒருவர்.

Coimbatore DMK Candidate Rajini's son-in-law?

பொங்கலூர் பழனிச்சாமி தி.மு.க.வின் மாவட்டச் செயலாளராக வருவதற்கு முன்புவரை வணங்காமுடி மு.ம.சண்முகசுந்தரம், கோவைத் தென்றல் மு.இராமநாதன், சி.டி.தண்டபாணி, இரா.மோகன், கா.ரா.சுப்பையன், அவினாசி இளங்கோ, போடிபட்டி தம்பு உள்ளிட்ட மாற்று சமுதாயத்தினர் தி.மு.க.வில் கோலோச்சி வந்தனர். அப்போது கோவை மாவட்டத்தில் தி.மு.க. அசைக்கமுடியாத சக்தியாக இருந்தது. 1996 தேர்தலில் மேட்டுப்பாளையம் தொகுதியில் செட்டுக்காரர் சமுதாயத்தை சேர்ந்த ப.அருண்குமாரும், சூலூர் தொகுதியில் தேவர் சமுதாயத்தை சேர்ந்த சூலூர் பொன்முடியும், அவினாசி தொகுதியில் தேவேந்திரகுல சமுதாயத்தை சேர்ந்த இளங்கோவும், உடுமலை தொகுதியில் போடிபட்டி தம்பு போன்றோர்களும் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று, சட்டமன்ற உறுப்பினர்களானார்கள். அதற்கு அடுத்து வந்த 2001 தேர்தலில் இவர்களுக்கு சீட் கொடுக்க மறுத்த பொங்கலூர் பழனிசாமி, தன்னுடைய சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து சீட் கொடுத்ததால் அந்தத் தேர்தலில் தி.மு.க. படுதோல்வியடைந்தது. தற்பொழுது வரை அத்தோல்வியிலிருந்து மீள முடியவில்லை என்கிறது தேர்தல் வரலாறு.

இது இப்படியிருக்க, "பல்லடம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சூலூர் நகரின் முன்னாள் பேரூராட்சித் தலைவருமான பொன்முடியின் குடும்ப வாரிசும், ரஜினியின் மருமகனுமான விசாகன் வணாங்காமுடிக்கு கோவை நாடாளுமன்றத் தொகுதியில் சீட் கொடுக்கும் பட்சத்தில் பிற சமுதாயத்தை அரவணைத்தது போலவும் ஆயிற்று, வெற்றியும் நிச்சயம்'' என்கிற ரீதியில் தலைமைக்கு தகவலை பகிர்ந்து வருகின்றனர் சூலூர்வாசிகள்.

சூலூரைச் சேர்ந்த உடன்பிறப்பு ஒருவரே, "கோவை மாவட்டத்தில் தி.மு.க. அசைக்க முடியாத சக்தியாக இருந்தது என்றால் அது சூலூரில் தான். அன்றைய காலகட்டத்தில் அண்ணாவும், பெரியாரும் சந்தித்துக்கொண்ட இடமும் இதுதான். சூலூரில் திராவிட பாரம்பரியத்தை வளர்த்தெடுத்தவர் சூலூர் சுப்பிரமணியன். தேவர் சமுதாயத்தை சேர்ந்த இவரின் அரசியல் வாரிசாக இருந்தவர், 2012ல் காலமான தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்முடி. வியாபார வாரிசாக இருந்தவர் வணங்காமுடி. சூலூர் பேரூராட்சியின் கட்டடம் அமையவும், சூலூருக்கு நீர் கிடைக்கக் காரணமானவரும் பொன்முடியே. அவர் உயிரோடு இருந்த வரை சூலூர் தி.மு.க. உயிர்ப்போடு இருந்தது. தீவிர திராவிட இயக்க குடும்பமான பொன்முடியின் குடும்பம் அவரது மறைவிற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அரசியலிலிருந்து விலகியது. அவரது மறைவு தி.மு.க.விற்கு பலவீனத்தை ஏற்படுத்தியது. அவர் இருக்கும்வரை தி.மு.க.வுக்கு ஆதரவாக இருந்த தேவர் சமுதாயத்தினர், அவர் இறந்த பிறகு ஒதுங்கிக் கொண்டனர்.

பொன்முடியின் தம்பியான வணங்காமுடியின் மகன் தான் விசாகன். இந்த விசாகனைத்தான் நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா திருமணம் முடித்துள்ளார். சமீபத்தில் சவுந்தர்யா-விசாகன் தம்பதியினரின் குழந்தைக்கு காது குத்து விழா, சூலூரிலுள்ள விசாகனின் குல தெய்வம் கோவிலில் நடைபெற்றபோது, சூலூருக்கு நடிகர் ரஜினி வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தனது மகளைப் பார்ப்பதற்காக நினைத்த போதெல்லாம் இங்கு வருகை தருவது ரஜினியின் வழக்கம். தி.மு.க. பாரம்பரியத்தோடு, நடிகர் ரஜினியின் மருமகன் என்ற பெருமையையும் கொண்டுள்ள விசாகனை கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராகக் களமிறக்க வேண்டுமென்பது எங்களது விருப்பம். அவர் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சுலபமாக இருக்கும். மேலும், தேவர், நாயக்கர், செட்டியார், அருந்ததியர் போன்ற மாற்று சமுதாயத்தினருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும். இதில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களும் தேர்தல் பணியாற்றுவார்கள். ஆகையால் தி.மு.க. தலைமை கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக விசாகனை நிறுத்த வேண்டும் என்பது எங்களது விருப்பம். இதனைக் கடிதமாகவும், செய்தியாகவும் தலைமைக்கு சேர்த்துள்ளோம்'' என்கிறார் அவர்.

ஆக, கூட்டணியில் கமலுக்கு கோவை கிடைக்குமா? இல்லை தி.மு.க.வே இங்கு போட்டியிட முடிவெடுத்து, தி.மு.க. பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த ரஜினியின் மருமகனை களமிறக்குமா? என்பதுதான் கோவை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடையே எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள மில்லியன் டாலர் கேள்வி!