Skip to main content

மேக்கப் போட்டு டான்ஸ் ஆடத்தான் வேல் யாத்திரையா..? -மருத்துவர் ஷாலினி கேள்வி!

Published on 26/11/2020 | Edited on 26/11/2020
jk

 

 

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர் தேர்தல் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதிமுக, பாஜக கூட்டணி தற்போது உறுதியாகியுள்ளது. தமிழகம் வந்த அமித்ஷா இதனை உறுதி செய்துள்ளார். இதற்கிடையே தமிழக பாஜகவினரும் மாநிலம் முழுவதும் வேல் யாத்திரை செய்கிறார்கள். இதற்கு தமிழக அரசு தரப்பில் தடை விதிக்கப்பட்டாலும் வேல் யாத்திரை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இது பற்றி நாம் பல்வேறு கேள்விகளை மனநல மருத்துவர் ஷாலினி அவர்களிடம் முன் வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

தமிழகத்தில் பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்தாலும் தொடர்ந்து எல்லா மாவட்டங்களிலும் வேல் யாத்திரை நடத்துகிறார்கள். அதில் அதிகப்படியான மக்கள் கலந்துகொள்வதாக பாஜகவினர் தொடர்ந்து கூறி வருகிறார்கள். அதையும் தாண்டி தற்போது அமித்ஷா தமிழகம் வந்து அதிமுக கூட்டணியை உறுதி செய்துவிட்டு போய் இருக்கிறார். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? 

 

எனக்கு இவர்கள் செய்வதை பார்த்தால் ஒன்றுதான் நினைக்க தோன்றுகிறது. இங்கிருப்பவர்கள் அமித்ஷா மற்றும் பாஜகவினரை மிஸ் லீட் செய்வதாகத்தான் தோன்றுகிறது. அவர்கள் இந்த வேல் யாத்திரை என்பதை எப்படி செயல்படுத்துகிறார் என்பதை பார்க்க வேண்டும். அவர்கள் காரின் மேல் பகுதியை மட்டும் திறந்துவிட்டு தங்களுடைய தரிசனத்தை மக்களுக்கு காட்டிகொண்டு ஆரம்பத்தில் சென்றனர். அதுவே தவறாகத்தான் இருந்தது. கொற்றவையின் மகனான நிஜ முருகன் தான் வேலை கையில் வைத்திருக்க வேண்டும். முருகன் என்று பெயர் இருப்பதால் மட்டும் வேலை கையில் வைத்திருக்கக்கூடாது. யாராவது சாமியின் ஆயுதத்தை கையில் வைத்துக்கொண்டு சுத்துவதை பார்த்துள்ளீர்களா? நான் சங்கு சக்கரத்தை கையில் வைத்து சுத்தினால் என்னை பற்றி என்ன நினைப்பீர்கள். எனவே அவரை ஒரு ஆயுதமாக வைத்து இதை பாஜகவினர் செய்கிறார்கள். இது மக்கள் மனதில் எடுபடவில்லை என்பதையே நிஜ சூழ்நிலை நமக்கு காட்டுகிறது. 

 

பாஜகவின் வேல் யாத்திரையில் பெருவாரியான மக்கள் கூடுகிறார்கள், கைது செய்யப்படுகிறார்கள் என்று பாஜகவினர் கூறுகிறார்களே? 

 

இதெல்லாம் தமிழக பாஜக டெல்லி பாஜகவுக்கு சொல்ல விரும்புகின்ற செய்தி. அதற்காகத்தான் தமிழக பாஜகவினர் இதனை தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். ஆனால் உண்மையில் நடப்பது என்ன. பொதுமக்கள் அந்த போராட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. ஏன் கலந்து கொள்ளவில்லை என்றால், இப்படி செல்வதனால் ஏழாவதாக முருகனுக்கு வீடா கட்டப்போகிறார்கள் என்ற தெளிவு அனைத்து மக்களுக்கும் இருக்கிறது. எதாவது பயன் இருந்தால் தானே மக்கள் அதனை நோக்கி செல்வார்கள். கடவுளிடம் செல்வதே நாம் நினைப்பதை பெற வேண்டி வேண்டுதல் செய்யத்தானே? அப்படி இருக்கையில் தேவையில்லாத வேலைகளுக்கு சென்று அவர்கள் நேரத்தை எப்படி விரயமாக்க விரும்புவார்கள். 

 

அதையும் தாண்டி வேல் யாத்திரை செல்ல வேண்டும் என்றால் அலகு குத்த வேண்டும், அல்லது காவடி எடுக்க வேண்டும், செருப்பு போடாதவாறு செல்ல வேண்டும். இது எதையுமே அவர்கள் கடைபிடிக்கவில்லை. அதனால் அது பொதுமக்கள் மத்தியில் செல்லுபடியாகவில்லை. எனவே பெண்களை அழைத்துவந்து இடுப்பு தெரிய டான்ஸ் ஆடவிட்டு கூட்டம் சேர்க்கிறார்கள். முருகனுக்கு காவடி எடுக்கிறார்கள் என்றால் பக்தி ஆட்டம் வேண்டுமானால் ஆடுவார்கள், இந்த மாதிரி குத்தாட்டம் எல்லாமா ஆடுவார்கள். இதை பொதுமக்கள் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்கள். எதற்காக இவர்கள் இந்த நாடகத்தை போடுகிறார்கள் என்று அவர்கள் அனைவருக்கும் தெரியும். 

 

பக்தியில் இருக்கும் பெண்களை நீங்கள் கொச்சைபடுத்துவது போல் இருக்கிறதே?

பக்தியில் பெண்கள் எப்படி நடனமாடுவார்கள் என்று நீங்கள் பார்த்ததே இல்லையா? தூரமாக உடுக்கை சத்தம் கேட்டதும் தலைமுடியை விரித்து போட்டுக்கொண்டு ஆடுவார்கள். ஆனால் இவர்கள் செய்வது என்ன. வரிசையாக நின்று கொண்டு நடன பயிற்சி எடுத்துக்கொண்டு ஆடுவது போல் குத்துப்பாடலுக்கு டான்ஸ் ஆடுகிறார்கள். இதை எப்படி பக்தியில் ஆடுகிறார்கள் என்று நாம் சொல்ல முடியும். 

 

அவர்கள் அவர்களுக்கு தெரிந்த வழிமுறையில் பக்தியை வெளிப்படுத்துகிறார்கள். இதை நீங்கள் எப்படி தவறு என்று சொல்ல முடியும்?

 

அவர்களுக்கு தெரிந்த வழிமுறையில் வெளிப்படுத்தட்டும். ஆனால் இது நிஜ பக்தி இல்லை. எந்த ஊரில் மேக்கப் போட்டு சாமியாடுகிறார்கள். இவர்கள் செய்வது எங்களுக்கு பிடிக்கவில்லை. எங்களை ஏமாற்றாதீர்கள், நாங்கள் ஏமாளிகள் இல்லை என்று கூறுகிறோம். ஆனால் அவர்கள் தொடர்ந்து உண்மையான பக்தி உள்ளவர்களை அவமானப்படுத்துகிறார்கள். அதைத்தான் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்கிறோம். பக்தி என்ற போர்வையில் செருப்புடன் சென்று பக்தி உடையவர்களின் மனதினை காயப்படுத்தாதீர்கள் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

 

 

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.