Skip to main content

"அதிமுகவை தூக்கி சுமக்க வேண்டாம்!"  -தமிழக பாஜக டெல்லிக்கு மெசேஜ்!

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

 

கேட்டது கிடைக்கவில்லையெனில் அதிமுகவை தூக்கிச் சுமக்க வேண்டாம் என பாஜகவின் தேசிய தலைமைக்கு மெசேஜ் தந்திருக்கிறார்கள் தமிழக பாஜகவினர் ! 

 

 bjp


     

மூன்றாண்டுகளாக முடங்கி கிடக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு. தேர்தலை எதிர்கொள்வதில் அதிமுக, திமுக கட்சிகளின் கூட்டணிகள் பரபரப்பாக இயங்கத் துவங்கியுள்ளன. விருப்ப மனுவை பெறுவதில் இந்த கட்சிகளிடம் வேகம் கூடியுள்ளது.

 

admk

தேர்தல் தேதியே அறிவிக்கப்படாத சூழலில், ஆளும் கட்சிக் கூட்டணியும் எதிர்க்கட்சி கூட்டணியும் இந்தளவுக்கு பரபரப்பை ஏற்படுத்துவதால், உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா? என்கிற சந்தேகமும் தமிழக வாக்காளர்கள் மத்தியில் எதிரொலிக்கவே செய்கின்றன. 


 

Narasimhan bjp



இந்த நிலையில், கடந்த வாரம் டெல்லி சென்ற தமிழக பாஜக பிரமுகரும், முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன், பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் சந்தோஷை சந்தித்தார். தமிழக அரசியல் குறித்து சுமார் 40 நிமிடங்கள் இருவரும் ஆலோசித்தனர். குறிப்பாக, உள்ளாட்சித் தேர்தல் பற்றி விலாவாரியாக கேட்டறிந்தார் சந்தோஷ்.


 

 

அப்போது, பல புள்ளிவிபரங்களுடன் சுட்டிக்காட்டி பேசிய நரசிம்மன், ‘’ உள்ளாட்சி தேர்தல்தான் பாஜகவை தமிழகத்தில் காலூன்ற வைக்கும். பாஜகவின் அரசியல் தமிழக மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளாட்சித் தேர்தலில் எந்த சமரசத்துக்கும் இடம் தந்து விடக்கூடாது. குறிப்பாக, குறைந்தபட்சம் 4 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு பாஜக போட்டியிட வேண்டும். மேலும், உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள 1 லட்சத்து 50 ஆயிரம்  பதவிகளில் 35 சதவீத இடங்களில் பாஜக போட்டியிடுவது அவசியம். அதனால், அதிமுக கூட்டணியில் இடங்களை பகிர்ந்துகொள்வது  தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்த 35 சதவீத இடங்களை கேட்டுப்பெற வேண்டும். இதற்கும் குறைவான இடங்களில் போட்டியிடுவது மத்திய ஆளும் கட்சியான பாஜகவின் வலிமையை பலகீனப்படுத்தும். அதனால், 4 மாநகராட்சி மேயர் பதவிகள் மற்றும் 35 சதவீத இடங்களை பெறுவதில் அதிமுக தலைமையிடம் கறாராக இருக்க வேண்டும். கேட்டது கிடைக்கவில்லையெனில் தனித்து போட்டியிடவும் பாஜக தயங்கக்கூடாது. பாஜகவை அதிமுக தூக்கி சுமப்பதாக அக்கட்சியினர் சொல்லி வருகிறார்கள். பாஜகவை அதிமுக சுமப்பதாக சொல்வது தவறு. பாஜகதான் அதிமுகவை தூக்கிச் சுமக்கிறது. அதனால், கேட்டது கிடைக்காது போனால் அதிமுகவை தூக்கி சுமப்பதை தவிர்க்க வேண்டும் ‘’ என விவரித்திருக்கிறார் நரசிம்மன். 


   

 

அவருடைய கருத்தினை உற்று கவனித்து கொண்ட சந்தோஷ், நரசிம்மனை பாராட்டியதுடன், " இந்த தகவல்களை தேசிய தலைமைக்கு தெரியப்படுத்துவேன் " என கூறியுள்ளார் மிக அழுத்தமாக! நரசிம்மனின் கருத்துக்களை போலவே தமிழக பாஜகவின் மாநில நிர்வாகிகள் பலரும் டெல்லிக்கு தகவல்களை பாஸ் பண்ணி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.