Skip to main content

"அதிமுகவை தூக்கி சுமக்க வேண்டாம்!"  -தமிழக பாஜக டெல்லிக்கு மெசேஜ்!

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

 

கேட்டது கிடைக்கவில்லையெனில் அதிமுகவை தூக்கிச் சுமக்க வேண்டாம் என பாஜகவின் தேசிய தலைமைக்கு மெசேஜ் தந்திருக்கிறார்கள் தமிழக பாஜகவினர் ! 

 

 bjp


     

மூன்றாண்டுகளாக முடங்கி கிடக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு. தேர்தலை எதிர்கொள்வதில் அதிமுக, திமுக கட்சிகளின் கூட்டணிகள் பரபரப்பாக இயங்கத் துவங்கியுள்ளன. விருப்ப மனுவை பெறுவதில் இந்த கட்சிகளிடம் வேகம் கூடியுள்ளது.

 

admk

தேர்தல் தேதியே அறிவிக்கப்படாத சூழலில், ஆளும் கட்சிக் கூட்டணியும் எதிர்க்கட்சி கூட்டணியும் இந்தளவுக்கு பரபரப்பை ஏற்படுத்துவதால், உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா? என்கிற சந்தேகமும் தமிழக வாக்காளர்கள் மத்தியில் எதிரொலிக்கவே செய்கின்றன. 


 

Narasimhan bjp



இந்த நிலையில், கடந்த வாரம் டெல்லி சென்ற தமிழக பாஜக பிரமுகரும், முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன், பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் சந்தோஷை சந்தித்தார். தமிழக அரசியல் குறித்து சுமார் 40 நிமிடங்கள் இருவரும் ஆலோசித்தனர். குறிப்பாக, உள்ளாட்சித் தேர்தல் பற்றி விலாவாரியாக கேட்டறிந்தார் சந்தோஷ்.


 

 

அப்போது, பல புள்ளிவிபரங்களுடன் சுட்டிக்காட்டி பேசிய நரசிம்மன், ‘’ உள்ளாட்சி தேர்தல்தான் பாஜகவை தமிழகத்தில் காலூன்ற வைக்கும். பாஜகவின் அரசியல் தமிழக மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளாட்சித் தேர்தலில் எந்த சமரசத்துக்கும் இடம் தந்து விடக்கூடாது. குறிப்பாக, குறைந்தபட்சம் 4 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு பாஜக போட்டியிட வேண்டும். மேலும், உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள 1 லட்சத்து 50 ஆயிரம்  பதவிகளில் 35 சதவீத இடங்களில் பாஜக போட்டியிடுவது அவசியம். அதனால், அதிமுக கூட்டணியில் இடங்களை பகிர்ந்துகொள்வது  தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்த 35 சதவீத இடங்களை கேட்டுப்பெற வேண்டும். இதற்கும் குறைவான இடங்களில் போட்டியிடுவது மத்திய ஆளும் கட்சியான பாஜகவின் வலிமையை பலகீனப்படுத்தும். அதனால், 4 மாநகராட்சி மேயர் பதவிகள் மற்றும் 35 சதவீத இடங்களை பெறுவதில் அதிமுக தலைமையிடம் கறாராக இருக்க வேண்டும். கேட்டது கிடைக்கவில்லையெனில் தனித்து போட்டியிடவும் பாஜக தயங்கக்கூடாது. பாஜகவை அதிமுக தூக்கி சுமப்பதாக அக்கட்சியினர் சொல்லி வருகிறார்கள். பாஜகவை அதிமுக சுமப்பதாக சொல்வது தவறு. பாஜகதான் அதிமுகவை தூக்கிச் சுமக்கிறது. அதனால், கேட்டது கிடைக்காது போனால் அதிமுகவை தூக்கி சுமப்பதை தவிர்க்க வேண்டும் ‘’ என விவரித்திருக்கிறார் நரசிம்மன். 


   

 

அவருடைய கருத்தினை உற்று கவனித்து கொண்ட சந்தோஷ், நரசிம்மனை பாராட்டியதுடன், " இந்த தகவல்களை தேசிய தலைமைக்கு தெரியப்படுத்துவேன் " என கூறியுள்ளார் மிக அழுத்தமாக! நரசிம்மனின் கருத்துக்களை போலவே தமிழக பாஜகவின் மாநில நிர்வாகிகள் பலரும் டெல்லிக்கு தகவல்களை பாஸ் பண்ணி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.